ஜனவரியில் ஒரு அரசியல் நவராத்திரி! ஒவ்வொரு நாளுமே அதிர்வேட்டுத்தான்!



வருகிற இந்த ஒன்பது நாட்கள்! ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, கூட்டணிக் கட்சிகளின் விரிசலில் அழுகிச் சிதையுமா அல்லது நீதிமன்றத்தீர்ப்புக்களில் கருகுமா என்ற கேள்விக்கு விடை தெரிய வரலாம் என்ற  பரபரப்புத் தொற்றிக் கொள்ள வைத்திருக்கும் நவ ராத்திரியாக, வருகிற ஒன்பது நாட்களும் இருக்கும்!

திருட்டுப் பூனைகளுக்கே ஒன்பது உயிர்கள் என்பார்கள்!
அப்படியானால், திருட்டு அரசியல் வியாதிகளுக்கு அதைவிடக் கூடத் தானே இருக்க வேண்டும்? அரசியல்வியாதிகள் மற்றவர்களை மாட்டி விட்டுத் தாங்கள் தப்பித்துக் கொள்கிற கலையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை! இங்கே மற்றத் துறைகள், அவர்களை மாட்டி விடுகிற அளவுக்கு நேர்மையானதாகவும், வலிமை, துணிச்சலோடு இருந்ததில்லை என்பது மட்டுமே இத்தனை நாட்கள் அவர்கள் தப்பித்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

கே ஜி பால கிருஷ்ணன் மாதிரி அரசுக்கு எல்லாவிதத்திலும் வளைந்து கொடுக்கிற மாதிரியான ஒரு தலைமை நீதிபதி இருந்திருந்தால், இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று வரிசையாக ஊழல் மந்திரிகள் என்று சிலரை மட்டும் தனிமைப்படுத்தி திஹாருக்குப் பெயரளவுக்கு அனுப்பி வைத்து மற்றவர்கள் எல்லாம் கறைபடாத கைகளுக்குச் சொந்தக் காரர்கள் என்று நாடகமாட வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

கூட்டணி தர்மம் என்றால் பெட்டிகளை மட்டும் பங்கு போட்டுக் கொள்வதல்ல! மாட்டிக் கொண்டால் , சிறைக்குப் போவதிலும் கூட்டாளியாக வேண்டுமே என்பது கூடத் தெரியாத மண்ணாந்தைகள் தான் நம்மை ஆள்கிற பொறுப்பில் இருக்கிறார்கள்!ஆ. ராசா, தெனாவெட்டாக, நான் என்ன குற்றம் செய்தேன்? பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சருக்கும் தெரிந்தே தானே செய்தேன்? வேண்டுமானால், அவர்களையும்சாட்சிகளாக இந்த வழக்கில் விசாரித்துப் பார்க்கலாமே என்று சொல்கிற அளவுக்கு இந்தக் கூட்டணிக் குழப்பம் பப்பரப்பா என்று பல்லை இளித்துக் கொண்டு அம்மணமாக இருக்கிறது.

ஊழல் இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அதை சட்ட ரீதியாக நிரூபிப்பது, அப்புறம் அதற்குத் தகுந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பது சாத்தியமே இல்லாத அளவுக்கு நம்முடைய நிர்வாகம், நீதித்துறை, அரசியல், ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று தங்களைப் பற்றி பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாமே சீரழிக்கப் பட்டிருக்கின்றன.  எமெர்ஜென்சி தருணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அன்றைய நீதிபதிகளில் வேறு எவருமே இல்லை.

ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமப்பத்திரிகைகள், ஒன்றிரண்டு, ஜனசங்கப் பத்திரிகைகள், இங்கே தமிழ்நாட்டில் துக்ளக் தவிர்த்து ஊடகங்கள் எதுவுமே எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவை அல்ல!


அரசு அதிகாரிகள் எவருக்குமே முதுகெலும்பு இருந்து, அமைச்சர் பெரு மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அதை விட அவர்கள் தான் ஊழல் செய்வது எப்படி என்பதை பல அமைச்சர்களுக்கும் கற்றுக் கொடுத்ததே என்பதும், ஊழலின் கூட்டாளிகளாகப் பல அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்! மீதமுள்ளவர்களில் பெரும்பாலோனோர், கோழைகளாகத் தலைவணங்கித் தவறு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நேரடியாகவோ மறை முகமாகவோ உடைந்தையாக இருந்தார்கள் என்பதை இங்கே அழுத்தமாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்!

இங்கே தமிழகத்தில் திமுக, அரசு இயந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிற கலையில் வேறெவரையும் விடத் தேர்ச்சி பெற்றிருந்தது கூட எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!ஆனால், அந்த சாமர்த்தியம் ஒன்று தான் கருணாநிதியை மிகப்பெரிய அரசியல் சாக்கியராகவும், வித்தகராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது, கட்சித் தொண்டர்களின் வலுவும் கட்டமைப்பும் எப்போதோ காணாமல் போய் விட்டது என்றால் ஒத்துக் கொள்வதற்குச் சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால் அது தானே உண்மை!



பொம்மை அசைவதே விந்தையாகத் திரைப்படங்கள் இருந்த காலத்தில் அடுத்த கட்டமாக, திரையில் பொம்மைகள் வசனம் பேசியது மிகப் பெரிய விந்தையாக இருந்ததில் ஆச்சரியமில்லை!அதை விட அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, அடுக்கு மொழி வசனங்கள், உவமானங்கள் என்று நிறைய அள்ளித் தெளித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடைசியில் ஒன்றுமே இல்லாத ஒன்றை வசனஜாலமாகக் காட்டி வெற்றி பெற்றவர் கருணாநிதி! அன்றைக்கு பொம்மைகள் பேசுவதே விந்தை என்றிருந்த காலத்து டெக்னிக் இன்றைக்கு எடுபடுமா? பெண்சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை என்று அடுத்தவன் காசைக் கரைத்து எடுக்கப்பட்ட படங்களில் பெருத்த ஓசை எழுப்பிக் கொண்டிருந்த உளி எந்த அளவுக்குத் துருப்பிடித்துக் காணாமலேயே போய்விட்டது என்பதைச் சொல்லுமே!

நவராத்திரி! அடுத்து வரும் இந்த ஒன்பது நாட்களுக்கும், எமெர்ஜென்சி, கருணாநிதி, உளியின் ஓசை, துருப்பிடித்துத் தேய்ந்து போன திராவிட இயக்கம் இவைகளுக்கெல்லாம் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு போன்ற மிக முக்கியமான வழக்குகளைக் கண்காணித்து வரும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருக்கும் இரண்டு நீதிபதிகளில் திரு. சிங்வியும், திரு அசோக் குமார் கங்குலியும் இடம் பெற்றிருக்கிறார்கள். நீதிபதி கங்குலி, வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி ஒய்வு பெறுகிறார். அவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக, இந்த பெஞ்சின் முன்னர் இருக்கும் சில முக்கியமான வழக்குகளில் ஏற்கெனெவே தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டு விட்டதை வருகிற ஒன்பது நாளைக்குள்  எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பது இப்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப. சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்ற டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் மனு மீதான தீர்ப்பும் ஒன்று! இதே வழக்கு, சிபி ஐ சிறப்பு நீதிமன்றத்திலும் பாரலலாக நடந்து அதன் மீது தீர்ப்பு வருகிற நாலாம் தேதி சொல்லப் படுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடாக வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுமா என்பதும் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முக்கியமான பரபரப்பில் ஒன்று 

இதுபோக பிரசாந்த்பூஷன், தொடுத்திருக்கும் சில மனுக்களின் மீதும் தீர்ப்பு தயாராக இருக்கிறது. இந்த தீர்ப்புக்கள் சாதாரமானவை அல்ல! குறிப்பிட்ட சிலமந்திரிகளுக்குப் பெரிய சிக்கலைக் கொடுக்கக் கூடியவை என்பதோடு, ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பத்தையே தலைகீழாகக் கவிழ்த்துவிடக் கூடியவை! அதனால் தான் திரு கங்குலி ஒய்வு பெறுவதற்கு முன்னால் வழங்க இருக்கும் தீர்ப்பு விவரங்களைக் குறித்தான முக்கியத்துவம் பரபரப்பாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

சில தளங்களில், கங்குலி ஒய்வு பெற்ற பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கைக் கண்காணிக்கும் பெஞ்சில் யார் இடம் பெறுவார்கள் என்பதை பற்றி மட்டுமே முக்கியமாக சொல்லிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு கங்குலி, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்; பேசியதில் இருந்து ஒன்றிரண்டு வரிகளைச் சொன்னால் இந்தப்பதிவில் முந்தைய பாராக்களில் சம்பந்தமில்லாத பழைய கதைகளைத்தொட்டுப் பேசிக் கொண்டிருந்தது ஏன் என்பது புரியும்!

"லஞ்சம் ஊழல் என்பது வெகு ஆழமாக வேரோடியிருக்கிறது.நம்முடைய சமூக அமைப்பில் துரதிர்ஷ்ட வசமாக ஊழல் செய்பவருக்குத்தான் வெற்றிகரமான வாழ்க்கை அந்தஸ்து கிடைத்து வருகிறது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வோம்.ஊழல் செய்பவர் சமுதாயத்துக்கு வெளியே இருந்து வருபவர் அல்ல. பெரும்பாலான தருணங்களில், அவர் ஒரு தலைவராகவோ, ஹீரோ மாதிரிக் கொண்டாடப்படுகிறவராகவோ இருக்கலாம். ஊழல் தடுப்புச் சட்டம் என்று இருக்கிறது. ஒரு நீதிபதியாக இருந்து அல்ல, என் மனதில் படுவதைச் சொல்கிறேன். அது ஊழலைப் பாதுகாக்கிற சட்டமாகவே இருக்கிறது. இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது, அதாவது ஊழல் குற்றச் சாட்டைஒருவர் மீது சுமத்த முன் அனுமதி பெறவேண்டும்!யார் இந்த முன் அனுமதியைத் தருவது? இப்படி ஒரு பாதுகாப்பு, தடுப்புச் சுவர் இல்லையானால், ஒன்றுமில்லாத குற்றச்சாட்டுக்களாக நீதிமன்றத்தில் குவியும் என்று ஒரு சாக்காகச் சொல்லப்படுகிறது. ஆக, ஊழலை அறவே அகற்றுவதில்  நாம் உண்மையானவர்களாக இல்லை."

பழைய நடப்பு, இப்போது நடந்துகொண்டிருப்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் என்னதான் நடக்கும் என்று கொஞ்சம் ஊகிக்க முடியுமா? கொஞ்சம் முயன்று தான் பார்ப்போமே!
2010 ஆம் வருடம்,வரிசையாக மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகிற வருடமாக இருந்தது என்றால் 2011 ஆம் ஆண்டோ, அந்த மெகா ஊழல்களுக்குப் பொறுப்பானவர்கள்  யார் என்பதை அடையாளம் காட்டியே ஆகவேண்டிய அவசியத்தை உண்டாக்கியது. வழக்கமாகப் பூசி மெழுகிவிட முடியாதபடி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே  தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டது.

அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பின் அடையாளமாகத் தொடங்கிய இயக்கம், சிறுபொறி பெரு நெருப்பாகிவிடும் என்று ஆளும் கட்சி பயந்தது. போராட்டத்தை திசைதிருப்ப, களங்கப் படுத்த எல்லாவகையிலும் முயன்றது. ஒரு லோக்பால் மசோதாக் கூட நாற்பத்துமூன்று ஆண்டுகளாக வெறுமே பேசிக் கொண்டே இருந்து, நிறைவேற்றமுடியாத கபடம் வெளிப்பட்டது.

ஊழலுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அதோ அவன், இல்லை இல்லை இதோ இவன் என்று எங்கெங்கோ கையைக் கட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது என்று, கூட்டணி தர்மத்தில் கையை வைக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது பாருங்கள், இங்கே தான், பழைய நினைப்புடா பேராண்டி என்று பராசக்தி வசனத்தை வைத்து மட்டுமே சிறந்த கதை வசனகர்த்தா வாகக் காலம் பூராவும் ஓட்ட முடியாது என்று ஆகியிருக்கிற யதார்த்தம் கண் முன்னே நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

ஒய்வு பெறப்போகும் நீதிபதி கங்குலி என்ன தீர்ப்பு எழுதுவார், அவரிடத்தில் வேறு யார் வருவார், அப்புறம் அந்த பெஞ்ச் முன்னால் உள்ள வழக்குகள் என்னவாகும் என்பதில் எல்லாம் விஷயமே இல்லை!
மண்ணுமோகன் சிங்  மரியாதை இழந்து, ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரட்டுமே அது வரை பொறுத்திருக்கலாம் என்று நினைத்தால் கூடக் காலம் அனுமதிக்காது போலத்தான் ஒரு வெளிச்சக் கீற்று 2012 இன் துவக்கத்திலேயே தெரிகிறது!

3 comments:

  1. அதே நேரத்தில் இந்த ஒன்பது நாட்கள் தாண்டிவிட்டால், ஊழலுக்கும் சற்றும் நேர்மையற்ற அரசியல் 'தலைவர்' களுக்கும் ஆயுசு கெட்டி போல தோன்றுகிறது!

    ReplyDelete
  2. வாருங்கள் திரு.பந்து!

    பதிவை அப்படி அனர்த்தப் படுத்திக் கொள்கிற மாதிரியாகவா முடித்திருக்கிறேன்?

    பாட்டிலை விட்டு வெளிக் கிளம்பிய பூதத்தை மறுபடி பாட்டிலுக்குள் அடைக்க முடியாது! அண்ணா ஹசாரே இயக்கம் ஒரு ஆரம்பம் தான்! நீதிமன்றங்களுடைய நேரடிக் கண்காணிப்பும் கூட, காலத்தின் கட்டாயம் தான்! ஒரு மாற்றத்திற்கான விதை விழுந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  3. நினைப்பில் நல்லதிருந்தால் அப்படியே நடக்கும்.. நானும் அப்படியே நடக்கும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!