புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒரு பிரார்த்தனையுடன்..!

Bonne Année 2011






புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.





எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!





இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 





உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!





ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!



இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!





கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!





ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 





ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?





மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --
ஸ்ரீ அரவிந்த அன்னையே!உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை, எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது!  தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். மேலே இருப்பது தான் அது! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


சென்ற வருடம் டிசம்பர் 31 அன்று எழுதிய அதே பிரார்த்தனைதான்! கடந்துபோன வருடத்தை, இப்போது திரும்பிப்பார்க்கிறபோது, இந்தப் பிரார்த்தனையின் அவசியம் இப்போதும் இருப்பதை உணர முடிகிறது.

"வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டுவ முழுதுந்தருவோய் நீ! " அருணகிரிநாதரின் இந்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் என்பதை அனுபவங்கள் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு, என்னுடைய மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவனது பெரும் கருணை, உங்களோடு என்றைக்கும் இருப்பதாக! எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறி வாழ்வில் உன்னதம் கைகூடத் திருவருள் கைகூட்டுக!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 

7 comments:

  1. எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று இன்புற பிரார்த்தனைகள். இனிய 2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    வேண்டத்தக்கது அறிவோய் நீ!
    பட்டியல் ஏதும் இல்லாமல் அவனே பார்த்துப் பார்த்து வளமெல்லாம் வந்து சேர்க்கட்டும்!

    ReplyDelete
  2. புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. திரு.ஜீவா, ஸ்ரீராம், நேசமித்திரன்!
    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி!
    பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு எல்லா வளங்களையும், அமைதியும் சேர்ப்பதாக அமைய நல்வால்ழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்//

    நானும் அதையே வேண்டிக்கிறேன். (தாமதமான) இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது தான் முக்கியம்! எப்போது சொன்னால் என்ன?

    இதயம் கனிந்த புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் கவிநயா அம்மா!

    ReplyDelete
  7. அட, பொங்கலை மறந்துட்டேனே. உங்களுக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!