கனிமொழி அப்டேட்ஸ் மற்றும் இன்னபிற......!



கனிமொழி அப்டேட்ஸ்!

சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை வருகிற 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப் படுவது முடிந்த பிறகே இந்த மனுவை விசாரிக்க முடியும் என்று நீதிபதி திரு.சைனி தீர்ப்பளித்திருக்கிறார். தாத்தா கவலைப்பட்டது போல, பதினைந்து நிமிடங்கள் சிறைக்குள் இருந்தால் ஒரு பூ கூட வாடிவிடும் என்ற மாதிரியாக இல்லாமல், கனிமொழி நன்றாகத் தான்  இருக்கிறார் போல!

ஆக கனிமொழி சிறைவாசம் ஐந்துமாதங்களைத் தாண்டுகிறது! ஆ.ராசா எட்டு மாதங்களைத் தாண்டுகிறார்!
ன்னாச்சு மாறன் விவகாரம்?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மிக சாமர்த்தியமாக காசு பார்க்கும் வித்தையாக்கிக் காட்டிய கேடி பிரதர்ஸில் இளையவர் வீட்டில் சிபிஐ  சோதனை நடத்தியதாக ஒரு கண்துடைப்பை நடத்தினார்கள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்கள்!அப்புறம் மறந்தே போய் விட்டார்களோ

கேடி பிரதர்ஸின் சாமர்த்தியத்தை, தாத்தாவோடு சேர்ந்து இந்த தேசமே ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது! இந்த வாரம் பானாசீனாவுக்கு நீதிமன்றம் சூடு வைத்தால்,அதை முள்ளுமுனை நொறுங்காமல் அப்படியே கேடி பிரதர்சுக்கு   கைமாற்றிவிட காங்கிரஸ் ரெடி!

அதனால் தானோ என்னவோ, ஜூலை இறுதிக்குள் தாக்கல் செய்யப்படுவதாக சொல்லப்பட்ட மூன்றாவது குற்றப் பத்திரிகையை சிபிஐ, இன்னமும் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் போல!

ஆ.ராசா, பானா சீனாவையும், மன்மோகன் சிங்கையும் சாட்சிகளாகக் கூப்பிடுவது போல சந்திக்கு இழுத்து மிரட்டுகிறாரா? பதிலுக்கு நாங்களும் இன்னொரு குற்றச்சாட்டை, நம்பிக்கை மோசடி அது இது என்றெல்லாம் ஜாமீனில் விட முடியாத செக்ஷன்களாகப் போட்டு மிரட்டுவோமில்லையா?

வெட்டி உதார் தான் இது என்று இரண்டு தரப்புக்குமே தெரியும்! ஏமாற இளிச்சவாய் ஜனங்கள் இருக்கும்போது என்ன கவலை!


வாய்க் கொழுப்பு அரசியல்வாதிகளும்  உச்சநீதிமன்றம் சொல்லப் போவதும்...!


சுப்பிரமணியம் சுவாமி பானாசீனாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுமீது தீர்ப்பை உச்சநீதி மன்றம் என்றைக்கு வெளியிடப்போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை! அனேகமாக, இன்றைக்கு செவ்வாய்க் கிழமை வெளியாகலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் நேற்றைக்கு ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொண்டிருந்தார். 

ஆனால் இன்றைக்கும் தீர்ப்பு வராதாம்!

நீதிபதி லீவ் போட்டு, தீர்ப்பை எழுதிக் கொண்டிருப்பதாக சுவாமியின் இன்றைய ட்விட்டர்  செய்தி சொல்கிறது. பானா சீனாவுக்கு டென்ஷன் உச்ச கட்டத்துக்கு எகிறிக் கொண்டிருக்கிறதோ இல்லையோ, நம்மூர் நீதி மன்றங்களிலும் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு டென்ஷன் எகிறிக் கொண்டிருக்கிறது!

மாயாவதியும்.... மீரா குமாரும்....!


டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்த ஆண்டு இறுதிக்குள் பதவி இறங்குவது தவிர்க்க முடியாதது போலத்தான் தெரிகிறது.
 
திண்ணை காலியானால், யார் உட்கார்ந்து கொள்வது என்ற போட்டியில் இருந்த பிரணாப் முகர்ஜியும், பானாசீனாவும் ஒருத்தரை ஒருத்தர் நாக் அவுட் செய்து கொண்டதில் சால்வை அழகர் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை! ஏற்கெனெவே, இந்திரா இறந்தவுடன், அந்த நாற்காலியில் தான் உட்கார வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரணாபுக்கும் அந்த யோகம் (வேறென்ன? காண்டி வாரிசுகளுக்கு டம்மி, பிராக்சியாக இருப்பதுதான்!) இருக்காது போலத்தான் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. 

ஐமு கூட்டணிக் குழப்பத்தின் டம்மிப்பீசாக, காண்டி குடும்பத்தின் பிராக்சியாக மன்மோகன் ஏழு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடித்த மாதிரி வேறெவராலும் தாக்குப் பிடிக்க முடியாது என்று தான் தோன்றுகிறது!
 
''மன்மோகன் சிங் மீது மரியாதை வைத்துள்ள போதிலும், அவரது நிலைக்காகப் பரிதாபப்படுகிறேன்''  

என்று பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கூறி இருக்கிறார்! ஆனால், டம்மிப் பீசாக, காண்டி குடும்பத்தின் முகமூடியாக இருக்க சம்மதப்பட்டே மன்மோஹன் சிங் இத்தனை நாள் அந்த நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பது இப்போது அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அனுதாபம், பரிதாபம் எதற்காக?

மன்மோகன் சிங் இத்தனை நாள் தன்னை எல்லோரும் ரொம்ப நல்லவன்னே நம்பிட்டாங்கப்பா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்!இப்படி ஒரு விசித்திரமான ஆசாமியை எந்த ஊர் அரசியலிலும் பார்த்திருக்கவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம்!

சர்ச்சைகளில் அதிகம் சிக்காத ஏ. கே அந்தோணி பெயர் முதலில் அடிபட்டது! ஆனால், மனிதர் ஒரு வாரமாவது தாக்குப் பிடிப்பாரா என்பது சந்தேகம் தான்! இந்த ரேசில் இதுவரை இல்லாத, நாடாளு மன்ற சபாநாயகர் மீரா குமாரின் பெயர் சமீப காலமாக அடிபடத் துவங்கி இருக்கிறது. மாயாவதி வேறு கொஞ்சம் விசிறி விட்டிருக்கிறார்!

அப்பா ஜகஜீவன் ராம், நாடாளுமன்றத்தில் ரொம்ப கூலாக வருமான வரியா? கட்ட மறந்தே போய்விட்டது என்று சொன்னவர்! மகள் டம்மிப் பீசாகத்தான் பிரதமராக உட்கார வேண்டி இருக்கும் என்பதை ஒருவேளை மறந்துபோய் விட்டாரானால்....!!

4 comments:

  1. சுப்ரீம் கோர்ட்டும் சுப்பிரமணியம் சுவாமியும் இல்லா விட்டால் இந்த கேஸ் என்ன ஆகியிருக்கும்?!

    ReplyDelete
  2. வாருங்கள் ஸ்ரீராம்!

    சுப்ரீம் கோர்ட்டும், சுப்ரமணிய சுவாமியும் நிறைய தூசி தட்டியிருக்கிறார்கள். நிறையக் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.அதுவரை சரி!

    இப்படி யோசித்துப் பாருங்கள்!அதனால் என்ன ஆகிவிட்டது, ஆகிவிடும் என்று நம்புகிறீர்கள்?

    இந்த வழக்கை சிபிஐ ஏகத்துக்கும் குழப்பி இருக்கிறது. ஏகப்பட்ட எஜமானர்களிடமிருந்து வருகிற உத்தரவுகளுக்கு ஏற்ப நிறைய சருக்கல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. கனிமொழிக்காக வாதாடிய வக்கீலிடம், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஒ பி சைனி ஊழல் என்பது மனித இனத்துக்கே எதிராகச் செய்யப்படுகிற மிகப்பெரிய குற்றம் என்று சொன்னதை இந்தப்பக்கங்களிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    சிபிஐயும் அப்படி நினைக்கிறதா, செயல்படுகிறதா, செயல்பட விடுவார்களா? வழக்கு எந்த அளவுக்கு நிற்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  3. // வழக்கு எந்த அளவுக்கு நிற்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன்!//

    உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லி விடப் போகிறேன்...! வேறு வழியில்லாமல் நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கு எப்படி முடிக்கப் பட வேண்டும் என்று 'பின்னணித் தலைமை' விரும்புகிறதோ அந்த திசையில் செல்லும். நான்கைந்து வருடங்கள் டைம் கொடுத்து நடத்தப் படும் சோதனைகள், வழக்கும் விசாரணையும் எந்தெந்த இடத்தில் வீக் ஆக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டு எடுத்து வைக்கும் அடிகள்...சி பி ஐ எப்படி இதை உருப்படாமல் அடிக்க வேண்டும் என்று இந்நேரம் திட்டமிட்டிருக்கும். இந்த அமைப்பே எதற்கு...ஆளும் கட்சியை எதிர்ப்பவர்களை மிரட்டத்தானே...92- ல் நடந்த வாச்ச்சாத்திக்கு இத்தனை வருடம் கழித்து இப்போது தீர்ப்பு. இன்னொரு வழக்கில் காலதாமதத்தாலேயே வழக்கு இல்லை என்று விடுவிப்பு...உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லி விடப் போகிறேன்...கொஞ்ச நாள் பொழுது போக நடத்தப் படும் இந்த நாடகம் உதவும். செய்தித் தாள்களுக்கு அவ்வப்போது விற்பனை அதிகரிக்கும். செய்திச் சேனல்களுக்கு 'பிரேக்கிங் நியூஸ்' கிடைத்து டி ஆர் பி ரேட் எகிறும்...அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு கொஞ்சம் அவல் கிடைக்கும்...வேறென்ன பயன் விளையப் போகிறது...நாம் நம் ஆற்றாமைகளைப் பதிவில் தீர்த்துக் கொள்ளலாம்! உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லி விடப் போகிறேன்...

    ReplyDelete
  4. இவ்வளவு அவநம்பிக்கை எதற்காக ஸ்ரீராம்?

    நேற்றைய நாட்கள் மாதிரியே இன்று விவகாரத்தை அமுக்கி ஊற்றி மூடி விட முடியாது! தவிர,காங்கிரஸ் கட்சி, இப்போது உளுத்துப் போன நெட்டிப் பொம்மை மாதிரித்தான் பலவீனமாக இருக்கிறது. கொஞ்சம் காங்கிரஸ் வாலாக்களைக் கவனித்துப் பாருங்கள்! திக் விஜய்சிங் , மனீஷ் திவாரி, அல்லது கபில் சிபல் மாதிரி ஓட்டை வாய்கள் மிக வீராப்பாக இருப்பதுபோல அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தாலும் உள்ளூர உதறல் அதிகமாக இருப்பது தெரிகிறதா?

    இப்போது பிரச்சினை, தகுந்த மாற்று ஒன்று இங்கே தயாராக இல்லை என்பது மட்டும் தான்!பிஜேபி ஒன்று தான் காங்கிரசை அகடக் கூடிய வலிமையோடு இருக்கிறது. ஆனால், அவர்களும் எடியூரப்பா மாதிரிப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு இன்னொரு ஊழல் கூடாரம்தான் என்று நினைக்கிற அளவுக்கு இருக்கிறார்கள்.மற்ற உதிரிக் கட்சிகள் எதுவும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை!

    மாறுதல் வரும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!