இன்றைக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.........!



தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறி, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமா அல்லது சினிமாக்காரர்களை ஒற்றியே ஜனங்களை மூளைச்சலவை செய்வதற்கு முன்னமேயே, செய்தித்தாட்கள், தங்களுடைய நல்ல இலக்கணங்களை சுத்தமாகவே மறந்து விட்டன.அதில், முக்கியமான ஒன்று நாளிதழில் வெளிவரும் தலையங்கம்!

செய்திகளைப் படிப்பதோடு, வாசகருடைய கவனத்தை முக்கியமான பிரச்சினைகளில் ஈர்ப்பதற்கும், நடப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையைத் தூண்டுவதற்கும் இந்தத்  தலையங்கங்கள் மிகவும் முக்கியமாகப் பயன் பட்டன.

1960 களில் தினத்தந்தி சகாப்தம் கொஞ்சம் உச்சத்துக்குப் போன போது, அக்கப்போர்களில் பிரதான கவனம் இருந்ததே தவிர உருப்படியான சிந்தனையைத் தூண்டுகிற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தமிழ் நாளிதழ்களில் தலையங்கம் எழுதுவதே குறைந்து போனது! ஒன்றிரண்டு வந்தாலும் அது ஏதோ ஒரு அரசியல் சார்பு நிலை எடுத்துக் கொண்டு, சப்பைக் கட்டு கட்டுகிற மாதிரி இருந்தனவே ஒழிய, குடிமைப்பண்பு (citizenship) வளர்வதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை! இன்றைய தினமலர் உள்பட, பெரும்பாலான பத்திரிகைகள், அப்படித்தான் வாலறுந்த நரிகளாக இருக்கின்றன.

அந்தவிதத்தில், ஒரு சமூகப்பொறுப்புடன்,நடப்பு விஷயங்களைத் தெளிவாக ஆராய்ந்து தலையங்கம் எழுதுகிற ஒரே நாளிதழ் தமிழில் தினமணி தான்! சர்குலேஷன் விழுந்து போனாலும் கூட, தன்னுடைய வீரியத்தைக் குறைத்துக் கொள்ளாத நாளிதழ் என்று தினமணியைப்  பார்க்க முடிகிறது. பதிவுகளைப் படிக்க வருகிறவர்கள் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை தினமணி நாளிதழின் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் பார்த்திருப்பீர்கள்!

இன்றைய தினமணி தலையங்கம், உங்கள் சிந்தனைக்காக....!




ரெப்போ விகிதத்தை நமது ரிசர்வ் வங்கி இப்போது 13-வது முறையாகக் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு கடந்த 12 முறை அதிகரிப்பாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத விலைவாசி 13-வது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கட்டுக்குள் வந்து விடும் என்கிற நம்பிக்கையா இல்லை கஜினி முகம்மது, ராபர்ட் ப்ரூஸ் பாணியில் மீண்டும் மீண்டும் முயற்சித்தால் பயனளித்து விடாதா என்கிற நப்பாசையா என்று தெரியவில்லை.

விலைவாசி ஜுரவேகத்தில் ஏறிக்கொண்டிருப்பதை ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய நிதி அமைச்சகமும் சரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அதற்காக, பயனளிக்காத முடிவுகளை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பது அசட்டுத்தனம் என்பதைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியவில்லை.

சமீபகாலமாக, சிறுசேமிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. வங்கி டெபாசிட்டுகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆர்வத்தை சிறு சேமிப்பில் காட்டுவதில்லை என்பது தெரிகிறது. சிறு சேமிப்பு தாரர்களுக்கு அதிக வட்டி விகிதம் தரும் அதேவேளையில், அவர்களுக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய சேவைகள் அனைத்துக்குமே வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. வங்கிகளில் சிறு சேமிப்பு வைத்துக் கொள்வது போன்று எரிச்சலூட்டும் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதுதான் சாமானியனின் எதார்த்த அனுபவம். இந்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தைப் பெயருக்கு உயர்த்துவதால் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடாது.

பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி விலைவாசி உயர்வுக்கான காரணமாகக் கருதும் காரணிகள் நியாயமானவையாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பதால், அவர்கள் சத்துள்ள உணவு முறைக்கு மாறியிருப்பதாகவும், அதற்குத் தகுந்தாற்போல உற்பத்திப் பெருக்கம் இல்லாமல் இருப்பதும்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பது பிரதமரின் கருத்து. நிதியமைச்சரும் இதையேதான் வேறு வார்த்தைகளில் கூறி வருகிறார்.

உணவுப் பொருள்களானாலும், ஏனைய தொழிற்சாலைத் தயாரிப்புப் பொருள்களானாலும் தட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உணவு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை புரிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கிடங்குகளில் தேங்கி வீணாகிவிடாதபடி உணவுப் பண்டங்களை விநியோகிக்க உச்ச நீதிமன்றம் கூறும் அளவுக்கு உற்பத்தி இருக்கிறது. ஆனாலும், அரிசி, கோதுமை, பருப்பு விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறையக் காணோம்.

சரி, காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி என்று எடுத்துக் கொண்டாலும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மூலகாரணம் உற்பத்திக் குறைவும், மக்களின் அதிகரித்த தேவையும்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பதப்படுத்தி வைப்பதற்கான வசதி பரவலாக இல்லாத நிலையில், செயற்கையாக இந்தப் பொருள்களின் விலைகளை அதிகரித்துவிட முடியாது என்கிற நிலையிலும் தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே போகிறது என்று சொன்னால் இடையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதும் அதைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த அரசுக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தே தவறுக்கு நமது நிர்வாகம் துணை போகிறது என்பதும்தான் காரணங்களாக இருக்க முடியும்.


மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. இதற்கு இரண்டு காரணங்கள். நகர்ப்புறங்களில் கூலி அல்லது சம்பளம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், கிராமப்புறங்களில் உற்பத்தி அதிகரிப்பால் வாங்கும் சக்தி அதிகரிக்காமல், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் காரணமாகப் பணப் புழக்கம் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது.

பொதுத்துறையில் தொழில் நிறுவனங்களை அமைப்பது, சாலைகள் அமைப்பது, அணைகள், மின் நிலையங்கள் ஏற்படுத்துவது, ஏன் வீடுகள் அலுவலகங்கள் கட்டுவது என்று அரசின் பணம் முதலீடு செய்யப்பட்டு, அதன் பயனாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்போது, பணப்புழக்கமும் ஏற்படும், உருப்படியான முதலீடாகவும் அந்த வரிப்பணம் பயன்படுத்தப் படும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்கிற பெயரில், ஆக்க பூர்வப் பயன் இல்லாமல் மக்கள் வரிப்பணம் விநியோகம் செய்யப் படுவதால் ஏற்பட்டிருக்கும் செயற்கையான வாங்கும் சக்தி, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணி என்பதைப் பிரதமரும், நிதியமைச்சகமும் சொல்லத் தயங்குகிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் அரசால் புழக்கத்தில் விடப்படும்போது பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரிக்கும் என்கிற அரிச்சுவடிப் பொருளாதாரப் பாடத்தை பொருளாதார நிபுணர்களான பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் படிக்கத் தவறி விட்டிருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை ஊன்றிக் கவனித்தால் இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. அதாவது, விலைவாசி உயர்வு நகர்ப் புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிகம் என்பதுதான் அது. ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதாலும், சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாலும் விலைவாசி உயர்வு எப்படிக் கட்டுக்குள் வரும் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒருபுறம் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அரசின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. போதாக் குறைக்கு, முதலீடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கோதுமைக்கும் கடுகுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைக் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலை உறுதித் திட்டமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
 
இதையெல்லாம் செய்துவிட்டு விலைவாசி குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்!!ஒரு குருட்டு மல்யுத்த வீரன் மறைந்து கொண்டிருக்கும் எதிரியுடன் இருட்டில் குத்துச்சண்டை போட்டால் எப்படி இருக்கும்? நமது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விலை வாசியைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!