Showing posts with label ஒரு இந்தியக்கனவு. Show all posts
Showing posts with label ஒரு இந்தியக்கனவு. Show all posts

மண்டேன்னா ஒண்ணு!வாசிக்க நினைக்கும் புத்தகம்!





மண்டேன்னா ஒண்ணு என்ற தலைப்பில் இங்கே எழுதிக் கொண்டிருந்தது இடையில் விடுபட்டுப் போனது. முக்கியமான அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பித்தால் என்ன என்று சில வாரங்களாகவே ஒரு யோசனை! ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் அரசியல் பேசும் போது, ஒரு மையக் கருத்தை முன்வைத்தே பேசிக் கொண்டிருப்பதை நண்பர்களில் ஒரு சிலர் நினைவு வைத்திருக்கக் கூடும்

இந்த தேசத்தைப் பீடித்திருக்கிற மிகப்பெரிய ரோகம் ஊழல் தான் ! ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது எது என்று பார்த்தால் இப்போதுள்ள தேர்தல் முறையே! இப்போது மிகவும் அவசரமானதும் அவசியமானதும் தேர்தல் சீர்திருத்தங்களே என்ற ஒரு மையக் கருத்தை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் பல பதிவர்களிடம் தொடர்ந்து என்னுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு வருவதை உங்களில் பலர் நினைவு வைத்திருக்கக் கூடும்.

 

நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! ஐம்பத்து நான்கே வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரி, நேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீது, காங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர்.   

Patriots and partisans இது சென்ற நவம்பரில் வெளியான இவரது புத்தகம், இந்த ஜனவரிக்குள் நான் படிக்க உத்தேசித்திருக்கும் புத்தகங்களுள் ஒன்று. இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி திரு ராமசந்திர குஹாவின் பேட்டிகள் சில தளங்களில் வெளியான விமரிசனங்களைப் படித்த பிறகு ப்ளிப்கார்டில் ஆர்டர் செய்து விட வேண்டியதுதான் என்ற எண்ணம் இன்னும் கொஞ்சம் வலுப்பட்டது இந்தப் புத்தகத்தில் வலதுசாரி-இடதுசாரி இரண்டு தரப்புக்கும் நடுவில் நின்று திரு குஹா, இந்திய அரசியல், வரலாற்றைக் குறித்த  தன்னுடைய  கண்ணோட்டம் விமரிசனத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஹிந்து மதம், மரபுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத அல்லது சட்டை செய்யாமல் எழுதுவதால் இவரைப் பற்றிய ஒரு நெகடிவ் இமேஜ், அவநம்பிக்கை பிஜேபி மாதிரியான  வலதுசாரி களிடம்  இருப்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

வலதுசாரி, இடதுசாரி வரட்டுத்தனத்தைக் கண்டிக்கிற மாதிரி புத்தகம் தொடங்குகிறது. ஹிந்துத்துவா என்று கிளம்பும் வெறிக் கூச்சலையும் கண்டிக்கிறார், இடதுசாரி அதி தீவீர வாதத்தையும் கண்டிக்கிறார். காங்கிரஸ் கட்சி கூஜாக்களின் கட்சியாக மாறிப்போய்விட்டது என்றும் சொல்கிறார்.

தன்னை  ஒரு வலதுசாரியாகவோ இடதுசாரியாகவோ  முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல்,ஒரு லிபரலாக, தன்னுடைய கருத்தை நேர்மையாகவும்  மிக வெளிப்படையாகவும் எல்லாத் தளங்களிலும் பதிவு செய்து வருகிற திரு குஹா மாதிரியான சிந்தனையாளர்களை, நாம் மறுக்கலாம், நிராகரிக்கலாம் ஆனால் முற்றிலுமாகப் புறக்கணித்து விட முடியாது.

தி டெலிகிராப்
நாளிதழில் சென்ற வருடம் நவம்பரில் வெளியான திரு ராமச்சந்திர குஹாவின் கட்டுரையில் 2009 பொதுத் தேர்தல்களின் போது முன் வைத்த சில கருத்துக்களை மறுபடியும் முன்வைப்பது போல, ஒரு நான்கு விஷயங்களை, இந்திய அரசியல் மேம்பட உதவும் என்று சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு எழுதி வைத்த குறிப்புக்கள் என்னுடைய யோசனையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக, இன்னமும் ஒரு முழுமையான வடிவத்தை எட்டவில்லை

சுருக்கமாக, இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது இதுதான்:

முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி
ருப்பதில் இருந்து வெளிவர, விடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள், அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து  விடுபட வேண்டும்

இரண்டாவதாக,பிஜேபி ஆர்எஸ்எஸ்சை நம்பியிருப்பதில் இருந்து அல்லது பிடியிலிருந்து விடுபட்டுத் தன்னை வலதுசாரி மையமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஜிஹாதிகள் மாதிரி ஆகிவிடாமல், ஜெர்மனியில் கிறிஸ்டியன் டெமாக்ரட்டுக்களைப் போல மிதவாதக் கட்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் 

மூன்றாவதாக, இடதுசாரிகள் மாறிவரும் தொழில்நுட்பம், அவசியத்துகேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். காலாவதியாகிப்போன, ஜனநாயகத்துக்கு முரணான லெனின் ஸ்டாலினிசத்தையே நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடது, வலது என்று பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.உதிரிக் குழுக்களாக சிதறுண்டு போயிருக்கும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகளை வன்முறை தீவீரவாதத்தைக் கைவிடும்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும்.

நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்திமர் (மிடில் கிளாஸ்) தங்களுக்கென்று ஒரு புதிய கட்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

இந்த நான்கும் நடந்தால் என்று சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே இது நடக்கக் கூடியதுதானா  தானா என்ற சந்தேகம், கேள்வியாக எழுவதைப் பார்த்தேன் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு எப்படிப்படுகிறது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!