செவ்வாய்க் கிழமைக் கலாய்த்தல்கள்....!



"எப்பவுமே சீரியசாவே பேசிக்கிட்டிருந்தா எப்பூடி? கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும்  இல்லையா?" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் "வாங்க அண்ணாச்சி! என்ன  இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம்?" என்றேன்.

அண்ணாச்சி என்னுடைய வரவேற்பையோ, அதில் தொனித்த பயத்தையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மனிதர், ஒரு நாற்காலியில் சௌகரியமாக சாய்ந்து கொண்டபடியே, தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து "புள்ளி விவரம் பேசுவதற்கு" தயாராகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.  'இன்னைக்கு கிளிஞ்சது கிருஷ்ணகிரி மட்டுமில்லே...நானுந்தேன்' என்று மனதுக்குள் முனகிக் கொண்டு, "அண்ணாச்சி! என்ன சாப்பிடறீங்க? காபி? டீ ?" என்று உபசாரம் செய்தேன்.

அண்ணாச்சி என் உபசாரங்களுக்கெல்லாம்  அசருகிற ஆளாக இல்லை! "நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே! பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா?" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான்  சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை "நச்சென்று புள்ளிவிவரங்களுடன்" என் தலையில் குட்டிச் சொல்லாமல்  இன்றைக்கு விடப்போவதில்லை! அப்புறம் எதற்காக நான் வேறு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?

வங்கிகளைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்து சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு  டயர் டூ காபிடலாக, அடுத்து வரும் வருடங்களில் இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கும் செய்தி, பேஸ் ரேட்  என்று ஒவ்வொரு வங்கியும் தான் நிர்ணயிக்கும்  அடிப்படை வட்டி விகிதத்தைப் பற்றி,  நடந்து முடிந்த ஊதிய ஒப்பந்தம், அனைவருக்கும் பென்ஷன் இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. இதை விலாவரியாகச் சொல்வது கொஞ்சம் போரடிக்கும்! அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா? விலாவாரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு பால பாடமாகத் தெரிந்து கொள்ள மட்டும் இங்கே!
 
முடிந்தால் கட்டுரையின் கீழே கொடுத்திருக்கும் வேறு பதிவுகளுக்கும் போய்ப் பார்க்கலாம்!



கொஞ்சம் சுருக்கமாக ஆனால் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, அரசாங்கங்களும் வங்கிகளும் எப்படி உன்னாலே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே என்னாலே எப்படி நீ கெட்டாய் என்று ஒன்றை ஒன்று தாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்கிற வேலையை இந்தப் படம் ஒன்றே அநேகமாகச் சொல்லி விடும்! சொன்னது புரியவில்லை என்றால், பின்னூட்டத்தில் வரலாம், கேட்கலாம்!
  
******


"வடகொரியாவுக்குப் போகவேணாம்! அது ஆபத்தான பயணம்னு" சொல்றதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லே! எங்களிடம் முன்னாள் அதிபர்கள், (அதாவது வேலை வெட்டி இல்லாதவர்கள்) எண்ணிக்கை கம்மியாத்தான் இருக்கிறார்கள் என்று டிவிட்டியிருக்கிறார் இந்தப் புண்ணியவான்!

இவர் மெய்யாலுமே, அமெரிக்க ராஜாங்கத் துறையில், ஸ்டேட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யறவராம்! இதைப் பாத்தவுடனேயே ஒரு யோசனை வந்தது!


"தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

வெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பது தான்.

இந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே!"

இப்படி இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்!அமெரிக்காவிலோ, முன்னாள் பஞ்சம்! பேசாமல்  இந்த முன்னாள், முடிந்தால் இந்நாள்களையும் டெபுடேஷனில் அனுப்பி வைத்தால் என்ன! மன்மோகன் சிங் மனசு வச்சா, நடக்காமலேயா போயிடும்?!



****** 


ஆனாலும் இது கொஞ்சம் ஓவர், லொள்ளு தான் என்று பதிவைப் பற்றிச் சொல்பவர்களுக்காக! இது கொஞ்சம் ஒரிஜினல் லொள்ளு!
 
******


வெறும்  பதினாலு சென்ட் கொடுத்தால், இப்படிப் பிராண்டும், கடிக்கும் பூனையை நீங்கள் தடுக்கலாம்! இப்படிச் சொல்கிற இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கல்லறைக்குப் போகிற நாள், நேரம் வரும் வரை, ஏமாற்றிக் கொண்டே இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிடம் இப்படிக் கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது கூடப் புரியும்!

விடுதலை, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வது, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது!

என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



4 comments:

  1. நீங்க என்னா எப்ப பாரு தேசிய நீரோட்டத்திலேயே இருக்கீக...கொஞ்சம் கீழ இறங்கி வந்து அய்யா,அம்மா வெல்லாம் கலாய்ந்தாதான் நாங்க கருத்து சொல்லுவோம் :)

    ReplyDelete
  2. எங்களுக்கு இந்திய இறையாண்மைதான்
    முக்க்க்கியம் :) கருத்து சொன்னா கேட்டுக்கோணும்... யோசிச்சு கேள்வி கேட்கக்கூடாது ‘இறையாண்மை’னா இன்னாபான்னு :)!!

    ReplyDelete
  3. இன்னும் ஸ்வீட் வரலை...அட்லீஸ்ட் ஆந்திரா ஊறுகாயாவது ஒரு டப்பா அனுப்பவும் :)

    மிக்க தோழமையுடன்
    மரா

    ReplyDelete
  4. அன்பின் மரா! மயில்ராவணன் என்று நீட்டி முழக்குவதைவிட இந்த சுருக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது, மரா மரா மரா என்று சொல், ராம நாமம் தானே வந்து நிற்கும் என்று வால்மீகிக்கு உபதேசம் செய்யப்பட்டதும் இந்த நேரத்தில் ஏனோ நினைவுக்கு வருகிறது!

    அப்புறம் அந்த "அய்யா, அம்மா"ன்னு கூவி சீட்டுக்காகப் பிச்சை கேட்கும் நிலைமைக்குத் தாழ்ந்து போய்விடாததால், அய்யா, அம்மா, அய்யாவுக்கு வேணுங்கப்பட்டவங்க, அவங்களுக்கு வேணுங்கப்பட்டவங்கன்னு பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! பிரச்சினையின் ஊற்றுக் கண்ணாக, ஆணிவேராக இருப்பது எது என்று சொல்கிறேன், அவ்வளவு தான்!

    "இறையாண்மை" குடும்பத் திரைப்படத் தயாரிப்பில் வரப்போகும் இன்னொரு படம் என்று சொல்லுங்கள்! அந்த "இன்னாபா" இல்லாமலேயே போய்விடும்!

    ஸ்வீட் நானே நேரில் கொண்டு வந்து தருகிறேன்! ஊறுகாய்?? ஊட்டுக்கு ஊறுகாய் தொட்டுக்கறதெல்லாம் தெரியுமா??

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!