இந்தப் போலித்தனம் யாருக்காக... எதற்காக?

சிறுவயது முதலே நாளிதழ்களைப்  படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு சிந்திக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும்.  என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.



தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு  வருவதாக இருக்கிறது! அது தினமணி! திரு ஏ. என் சிவராமன் ஆசிரியராக இருந்த காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.



இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது  வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம்  தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலைல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப்  பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடன்  திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!



இந்தத் தலையங்கம் நேற்றைய தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை  உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!

போதுமே இந்தப் போலித்தனம்..!

இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும்  நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.

அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.

உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.

இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.  நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.

இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில்  நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?

ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?

தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?

ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!

இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

 
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

இப்போதாவது........  

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு

இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!  




 

2 comments:

  1. Miga Miga Sariyana Paarvai

    Nandri

    ReplyDelete
  2. வாடாமல்லி என்று புதிதாக வலைப்பதிவைத் தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    மிகச் சரியான பார்வை என்று வார்த்தையில் சொல்வது வேறு, அந்த சரியான பாதையில் சேர்ந்து வருவது, சேர்ந்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது வேறு!

    என்ன செய்யப் போகிறீர்கள்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!