முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு! அதனைக் கழுவுங்கள்!

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!

அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம். நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப் பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான், என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்! 

நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக
, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!


இந்தமாதிரி நினைத்துப்பழகிப்பாருங்கள்! உங்களை மாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்!.

சண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும்! ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறை முகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிச் சொல்வதே கூட வியப்பாக இருக்கும்!

தடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம்! நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா?

"அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,


' அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

முயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்!"

1958
ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி
, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்"  என்ற
ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து
, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.

அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 




இது ஏற்கெனெவே இரண்டு தரம் மீள்பதிவாக இந்தப்பக்கங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் தான்! சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல்
என்ற தென் கோரிய இயக்கத்தைப் பற்றி இந்தப்பக்கங்களில் சொல்ல முனைந்தபோது, தமிழ் வலைப் பதிவுகளில் தேவையற்ற சச்சரவுகள், தடித்த வார்த்தைகள், சாதி முதலானவற்றை வைத்து இழிவுபடுத்திப் பேசுதல் என்று ஒரு தொடர் சங்கிலியாகவே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் வருந்தி, எழுதிய வார்த்தைகள் தான்! இன்னும் எத்தனை முறை இதை மீள்பதிவாக, மறுபடியும் எனக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வருமோ தெரியவில்லை!

ஆல் இன் ஆல் வலைப்பதிவர் ராஜனுடைய திருமணச் செய்தியைத் தொடர்ந்து வந்த பதிவுகளில்  பதிவர்கள், பின்னூட்டக் கும்முகிற அனானிகள் என்று கொஞ்சம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு, அனுபவம் உள்ள பதிவர்களும் சரி, தனிப்பட்ட முறையில் பேசும்போது பொறுப்பாகவும் நேர்மையாகவும் பேசுகிற இளம் பதிவர்களானாலும் சரி, பிரச்சினையை முடித்துக் கொள்ளத் தெரியாமல்  வளர்த்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு ஸ்ரீ அன்னையின் இந்த  வார்த்தைகளை மறுபடி படித்துப் பார்க்கத் தோன்றியது. நம்முடைய முதுகைப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்களாக, முதுகில் இருக்கும் ஆயிரம்பொதி அழுக்கைக் களையத் தெரியாதவர்களாக, அடுத்தவர்களுடைய அழுக்கைக் குற்றம் சொல்லிப் பேசிக் கொண்டே இருக்கிறோமே  என்ற விசனமும் எழுந்தது.

எப்போது முடித்துக் கொள்வது என்பதை முடிவு செய்யாமல், யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பது ஒரு யுத்த விதி! அதைத் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நடத்தப் படும் யுத்தம், தோல்வியையும் அவமானத்தையும் தருவதாக மட்டுமே இருக்கும்.

இது ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக நடத்தப் படும் போர்களுக்கு மட்டுமல்ல, வலைப்பதிவுகளில் அவ்வப்போது நடக்கும் அக்கப் போர்களுக்குமே கூட மிகவுமே பொருத்தமானது தான்!

காரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல! கொடும் விஷம்! இந்த விஷம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே.


முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.


இன்னொரு செய்தி இங்கே





2 comments:

  1. வெளியிடப்படாத சில கமெண்டுகளை பார்த்தால் நீங்களே காறிதுப்புவீர்கள் அவர்களை!

    நேருக்கு நேர் பேசத்தெரியாத கோழைகள்!

    ReplyDelete
  2. எவரையும் காறித் துப்பும் அளவுக்கு எனக்குத் தகுதி இருப்பதாக அல்லது அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப்பதிவை, மூன்றாவது முறையாக மீள் பதிவு செய்யவில்லை, வால்ஸ்! இரண்டு தரப்புடனும் பேசிய பிறகே, இந்தப் பதிவை கொஞ்சம் விரிவுபடுத்தி எழுதினேன். ஒரு சின்ன சந்து கிடைத்தால் போதும், சந்தில் சிந்து பாட நிறையப்பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுபடி நிரூபிக்கப்பட்டிருக்கிறது, சரி! அதனால் என்ன சாதித்தீர்கள் என்று கேட்டால், வெறுப்பை, கசப்பை விதைத்து, அதை அறுவடை செய்துகொண்டு வந்ததைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

    ஒரு பிரச்சினையை எப்படிக் கையாள்வது அல்லது எதிர்கொள்வது? இது அடிப்படையான கேள்வி! இந்தக் கேள்விக்கு உண்மையான விடையைத் தேடுவதற்கு, பிரச்சினையை நாம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதில் முதல்படியாக ஆரம்பிக்கிறது.

    இதில் நான் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை! என்ன விதைக்கிறோமோ, அதைத் தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்பதைத் தான், அழுத்தம் திருத்தமாக, நல்ல எண்ணங்களை விதைத்தல் என்ற இயக்கம் தமிழ் வலைப் பதிவர்களிடம் வளர வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோளை வைத்திருக்கிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!