ஜெயிக்கலாம் வாங்க!!

 
 
ஜெயிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் கொஞ்சம் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தது உண்டு ஜெயிப்பது அவ்வளவு கடினமானது ஒன்றும் அல்ல.என்ன, நம்மிடம் இருக்கும் பலம் எது, பலவீனம் எது என்பதில் நிறையத் தெளிவு வேண்டும்!பலவீனங்களைக் களைவது மிக முக்கியமான அடிப்படை என்றால், நம்முடைய பலம் வீணாகாமல் பயன் படுத்தப் படுவதும் மிக மிக முக்கியம். 


சில  மாதங்களாக சில பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வளிப்பதாக, எதிர் மறையாகப் போய்க் கொண்டிருப்பதையும் கவனித்துக் கொண்டிருக்கும் நேரம் இது.
 
ஒவ்வொரு அனுபவமும் ஒரு காரணத்துடனேயே நம்மைப் பக்குவப் படுத்துவதற்காகவே நமக்களிக்கப்படுவது என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னதை முந்தைய பதிவில் மறு நினைவூட்டிக் கொண்டிருந்தேனில்லையா? அதன் தொடர்ச்சியாக, என்னிடம் இருந்த குறை என்ன என்பதையும் கொஞ்சம் திரும்பிப்பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.அப்படி ஒரு சுயபரிசோதனை செய்து கொண்டதில் ஒரு விஷயம் தெளிவானது அதை, மூன்று வருடங்களுக்கு முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது என்னைப்போலவே இந்த அனுபவமும் தெளிவும் தேவைப்படுகிற எவருக்கோ ஒரு நாள் உதவுமே என்பதற்காக, மறுபடியும் மீள்பதிவாக....
 
 
 
நாளை முதல் குடிக்க மாட்டேன்! சத்தியமடி தங்கம்!.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும்,
ஊத்திக்கிறேன் கொஞ்சம்!

சாராயக் கடையில், குடிக்க வேண்டாமென்று கணவனிடம் கெஞ்சுவாள் ஒரு பெண். அவளுடைய கணவன், அவள் தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து "நாளையிலிருந்து குடிக்கவே மாட்டேன், ஆனால் இப்போதைக்கு மட்டும் கொஞ்சம்.........." என்று பேசுவதாக ஒருகாட்சி.
 

நீதி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாராய போதையில் இன்னொரு குடிகாரனைப் பார்த்துப் பாடும் இந்தப் பாடல் அந்த நாட்களில் மிகவும் பிரபலம்!  அந்த நாட்களில் ஒரு பாடல் பிரபலமாகவேண்டுமேன்றால், பாடல் வரிகளில் சொல்லியிருப்பது தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது.

கவிஞர் கண்ணதாசனுடைய இந்தப் பாடல் வரிகள் பிடித்துப் போனதற்குக் காரணம், நாம் எல்லோருமே சாராய போதை தேவைப் படாமலேயே, எதையும் நாளைக்கு, நாளைக்கு என்று தள்ளிப் போடுகிறவர்களாக இருப்பது தானோ என்று அவ்வப்போது தோன்றும்! 



குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்ற மாதிரி, இப்படித் தள்ளிப் போடுவதான சோம்பேறித்தனம் காரியத்தையே கெடுத்துவிடுவதாக, நம்முடைய வாழ்க்கையிலேயே பல தருணங்களில் பார்க்கமுடியும். 


Procrastination! எதையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தள்ளிக் கொண்டே போய், கடைசியில் எதையும் பார்க்க முடியாமலேயே போன அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! சொல்லப் போனால், என்னை என்னுடைய எதிராளிகள் எப்போதுமே தோற்கடித்ததில்லை! தோற்கடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் என்னுடைய இந்த பலவீனமே பல தருணங்களில் காலை வாரிவிட்டுக் கொண்டிருந்தது என்பது தான் உண்மை!

அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம் என்றோ, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ இப்போது செய்ய வேண்டிய காரியத்தைத் தள்ளிப் போடுவது, எவ்வளவு மோசமானது என்று தெரிந்துமே கூட நம்மால் அதிலிருந்து விடுபட முடியவில்லையே?!



என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பார்க்கலாமா? 


நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப் படும் பாடல்களில் ஒன்றான, "Work while you work, Play while you play" என்பது கூட வேலைசெய்யும்போது வேளையில் கவனம், விளையாடும்போது விளையாட்டில் கவனம் என்று நேரத்தின் அருமையைஉணர்த்துவதாகவே சொல்லிக் கொடுக்கப் படுவதுதான்!

நம்முடைய கல்விமுறையில் உள்ள கோளாறும், ஒருபகுதி ஆசிரியர்களின் திறமையின்மையும் சேர்ந்து நல்ல விஷயங்கள் எதுவுமே மனதில் தங்கிவிடாமல் செய்துகொண்டிருப்பதையும், விசனத்தோடு இங்கே பதிவு செய்தாகவேண்டியிருக்கிறது.
பழக்கம், வழக்கம் என்று சொல்வோமில்லையா! எந்த ஒரு செய்கையும் முதலில், அனுபவங்களாகவோ, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதாகவோ ஒரு தனிநபரிடம் இருந்து ஆரம்பிக்கும்! அப்படிப்  பயிற்சியின் முதிர்ச்சி என்றே பழக்கத்தைச் சொல்லலாம். 

வழக்கம் என்பது ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது. இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொண்டு, தள்ளிப் போடுவது என்பதான வழக்கம், சோம்பேறித்தனம் என்ற பழக்கமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் இருந்து, விடுவித்துக் கொள்வது தொடங்குகிறது.


உதாரணமாக, மாலை நேரமாகிவிட்டால், தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து, அதில் வரும் மெகா சீரியல்களில் கதாபாத்திரங்கள் மூசுமூசென்று அழுது வடிவதை, பார்த்துக் கொண்டிருப்பது நேரத்துக்குப் பிடித்த கேடு என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான செண்டிமெண்டை வைத்துப் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள், ஒரே சினிமாவைப் படங்களாகவும், க்ளிப்பிங்க்சாகவும், பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து கீறல் விழுந்த ரெகார்ட் போல ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. 

எந்த சானலை மாற்றினாலும், சற்று முன்னே பின்னே, ஏற்கெனெவே பார்த்த அதே காட்சிகள் தான் வரும் என்பதும், தலைப்பு மட்டுமே மாறியிருக்கும் என்பதும் தெரிகிறது. தெரிந்த பிறகும், அதற்குப் பின்னாலும் அதையே பார்த்துக் கொண்டிருந்தோமானால், அது முதலில் வழக்கமாக ஆகிறது. 

கவனிக்காமல் அப்படியே தொடர்ந்துகொண்டே இருந்தால் பழக்கமாகவும் ஆகி, நம்மை அடிமைப் படுத்தி விடுகிறது பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் தான் மனிதனுடைய தேக்கம் தொடங்குகிறது.


ஆக, நாம் வழக்கப் படுத்திக் கொண்டிருப்பதில் எது தேவையற்றது என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அவசரம், அவசியத்தை ஒட்டி எதை முதலில் செய்ய வேண்டும், அடுத்ததாக என்ன  என்பதை வரிசைப் படுத்தித் தீர்மானிப்பதுதான் அடுத்துச் செயல் படுவதற்கான முதல்படி. 

எந்த ஒரு காரியத்தையும் அப்புறம், அல்லது நாளைக்கு என்று தள்ளிப் போடாமல், அதனதன் முக்கியத்துவத்தை ஒட்டி உடனேயோ, அடுத்தோ செய்து முடித்து விட்டு, அதற்கு அப்புறம் மிஞ்சுகிற நேரத்தைப் பொழுது போக்குவதற்காக செலவிடுவோமேயானால் நம்முடைய வாழ்க்கையில் குறிப்பிட்டு உணரக்கூடிய நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும்.  


இது தான் நேர மேலாண்மை! கிடைத்திருக்கும் ஒவ்வொரு வினாடியையும்   பொன்னாக்குகிற வித்தையும் இது தான்! உண்மையான ரசவாதம்!

Time Management என்று இன்றைக்கு நிர்வாக இயலில் சொல்லப்படும் கோட்பாடு, மிக மிக எளிமையானது. எல்லோராலும் செலவே இல்லாமல் உடனடியாகக் கடைப் பிடிக்க முடிவதும்,வீணாகப் போய்க் கொண்டிருக்கிற நேரத்தைப் பயனுள்ளதாகவும், நிறைவானதாகவும் மாற்றக் கூடிய வல்லமை உடையது. 

இந்த ஒத்திப் போடுகிற அல்லது தள்ளிப் போடுகிற வழக்கம்எப்படி என்னென்ன விதங்களில் ஆரம்பிக்கிறது என்று பார்க்கும் போது சில காரணங்கள் இப்படித் தெரிகின்றன,

முதலில் நமக்கு நல்ல மூடு இருக்கும்போது, அப்புறம் சரியான நேரத்தில் செய்வது என்று காத்திருப்பதுபோல ஒரு பாவனையில் ஆரம்பிக்கிறது. உண்மையில், மூடு இல்லை என்பது நமக்கு இருக்கிற தயக்கம் அல்லது நாம் தயாராக இல்லை என்பது  மட்டுமே!


முடிவெடுப்பதில்  தயக்கம், எப்படி ஒரு சரியான தீர்மானம் அல்லது முடிவுக்கு வருவது என்பதில் தெளிவின்மை, போதிய அளவு திறமையை வளர்த்துக் கொள்ளாதது இப்படி.

அமைப்பு ரீதியிலான, தெளிவான திறமை, பார்வை, பயிற்சி இல்லாதது.

எதையும்  முழுமையாக, குறையே இல்லாமல் செய்யவேண்டும்-அது முடியாவிட்டால் செய்யாமலேயே இருந்துவிட வேண்டும் என்று தத்துவம் பேசிக் கொண்டு, என்னிடம் சரியான  பயிற்சியோ சாதனங்களோ எதுவுமில்லை, அதனால் இப்போதைக்கு நான் இதைச் செய்வதாக இல்லை என்கிற மனோபாவம்..தத்துவம் என்றால் முழுமையாகத் தெரிந்துகொள்வது. என்ன காரணமோ, தத்துவம் என்பது இங்கே  தூங்கி வழிகிற தன்மையைக் குறிப்பிடுவதாகவே ஆகிப்போனது!

இப்படி எதோ ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட வடிவங்களில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது வழக்கமாகி, முற்றிப் பின்பு பழக்கமாகவும் மாறிவிடுகிறது.

இந்த விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டால், மூன்றே படிகளில், சோம்பேறித்தனத்துக்கு  இடம் கொடுக்கும் வழக்கங்கள் எவை எவை என்று பார்த்துக் களைவதில் ஆரம்பித்து, ஒத்திப்போடுகிற அல்லது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமே என்பது அறவே இல்லாமல் பண்ணிவிட முடியும்!

என்னவென்று பார்க்கலாமா?


முதலாவதாக, சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்ளாமல் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது, நம்முடைய நேரம் என்னென்ன விதத்தில் செலவாகிறது, என்ன வரிசையில் செலவாகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான், தள்ளிப் போடுவது என்ற வியாதி நம்மிடத்தில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதையே புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ஆராய்ந்து சோதித்துப் பார்த்ததில், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப்போடுகிற நினைப்பு எதனால் எழுகிறது என்பதைக் கவனமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

மூன்றாவதாக, முதலிரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டால், நோய் நாடி நோய்முதல் நாடி என்று, நோய்க்கான அறி குறிகளும், எதனால் நோய் வந்தது என்பதும் தெரிந்துவிடுகிறது! அப்புறம் என்ன, நோயைக் களைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வதற்கு ஆரம்பித்து விடவேண்டியதுதான்!

ஆக மூன்றே படிகளில், ஒத்திப் போடும் கெட்ட பழக்கத்தைக் களைந்து விடலாம்! என்ன சொல்கிறீர்கள்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!