Showing posts with label அளவோடு கவலைப்படு. Show all posts
Showing posts with label அளவோடு கவலைப்படு. Show all posts

நேற்று, இன்று, நாளை! அளவோடு கவலைப்படு!



ஒரு எழுத்தாளனாக, அல்லது பதிவராக அடையாளம் காட்டப்படுவதை விட ஒரு வாசகனாகவே என்னை மிகவும் சந்தோஷத்தோடு உணருகிறேன். பரந்த தளங்களில், பலதரப்பட்ட எழுத்துக்களை வாசிப்பது சிறு வயதிலிருந்தே எனக்குப்பழக்கமாகி இருக்கிறது, என்னுடைய சுவாசமாகவே இருக்கிறது என்று வேண்டுமானால் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்!

ஏனென்றால், அதில் எந்தப் பொய்யும், மிகைப்படுத்துதலும் இல்லை. உண்மை மிக எளிமையாகத் தான் இருக்கும் கண் முன்னாலேயே தான் இருக்கும். ஆனால், நம்முடைய கவனம் தான் சிதறி வேறெங்கோ போய் விடுகிறது! நாம் அதைக் கவனிக்கவில்லையே என்பதற்காக, உண்மை நம்மோடு கோபித்துக் கொண்டு எங்கோ போய்விடுவதில்லை! நாம் அதை அறிந்துகொள்வதற்காக, புரிந்துகொள்வதற்காக உரிய தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையோடு காத்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்!

புவனேஸ்வரி விஷயமாக நான்கு பதிவுகளை எழுத நேர்ந்ததில் சில விஷயங்கள் என்னுடைய குருவி மண்டைக்கும் புரிய வந்திருக்கிறது. பராக்குப் பார்ப்பது என்பது, எந்த வயதிலும் மனிதனை விடுவதில்லை என்பதும் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதில் இருந்து விடுபடுவது உண்மையிலேயே மிகக் கடினமானது தான் என்பதும் ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களைத் தொட்டு பேசிய விஷயங்கள்தான்! ஞானத்தைப் பற்றி கதையளப்பதென்பதுவேறு, உண்மையிலேயே ஞானம் வாய்க்கப் பெறுவது வேறுதான் இல்லையா?

இரண்டு மாதங்களுக்கு முன்னாலும், ஏறத்தாழ இதே மாதிரி நிலைமை வந்தது. போகும் திசை மறந்து போச்சு! என்ற தலைப்பில் இதை எழுதியபோது ஒரு நண்பர் சொல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்றார். சென்றபதிவில் திரு கௌதமன் மிகவும் வெளிப்படையாகவே, சேற்றை எடுத்துப் பூசிக் கொண்ட கதையாக, வலைத்தரம் தாழ்ந்து விட்டது என்றும் சொல்லியிருந்தார். உண்மைதான்!

சொல்ல வந்த விஷயத்தை, வீரியம் குறையாமல், நறுக்கென்று வசிப்பவர் மனதில் தைக்கிற மாதிரியும் சுருக்கமாகவும் பதிவு எழுதும் கலை எனக்குக் கை வரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி நாலு வரியோ, நாற்பது வரியோ சொல்லவந்ததை நச்சென்று எழுதும் கலையை முழுதும் அறிந்தவராக,அதைக் கடைப்பிடிக்கும் வலைப்பதிவராக திரு.ராஜநாயகம் ஒருவரைத் தான் சொல்ல முடிகிறது!

புவனேஸ்வரி என்பது ஒரு பெயர்ச் சொல்! வினையான தொகையுமாகி கொஞ்சம் அதிகமாகவே நிறையப்பேருடைய அடிவயிற்றைக் கலக்கிவிட்டுப் போன ஒன்று! இரண்டு வருடங்களுக்கு முன்னால் கன்னட பிரசாத், இன்றைக்கு புவனேஸ்வரி,நாளை இன்னொன்று வேறு பெயரில் வரும், அவ்வளவுதான்!

இதுக்கெல்லாம் இவ்வளவு அலட்டிக் கொள்ளலாமா என்று கேட்டால், அலட்டிக் கொள்வது நல்லது என்றே இங்கே ஒருத்தர் ஒன்றரை வருடத்திற்கு முன்னாலேயே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

இங்கே கீதையில் கண்ணன் "மா ஸுச:" என்று எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறான் அதனால் கவலைப்படாமல் தொலைகாட்சி முன்னால் உட்கார்ந்து கொண்டு அவர்கள் எதையெல்லாம் கொண்டாடச் சொல்கிறார்களோ அதைக் கொண்டாடிவிட்டுப் போய்விடவேண்டியது தானே என்பவர்களுக்காக, ஒரு சேதி!

கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார். ராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!

கவலைப்படுவதா? அது மிக மோசமாயிற்றே என்று தான் நமக்குத் தோன்றும். கவலைப் படுவதால் என்ன ஆகிவிடப்போகியாது என்று வேதாந்தமும் கூடப் பேசுவோம். கவலைப் படவேண்டிய தருணங்கள் வரும்போது அதை முரட்டுத்தனமாக எதிர்ப்பதிலோ, அல்லது அந்தச் சூழ்நிலையை விட்டு ஓடிவிடுவதிலோ தான் நம்முடைய கவனம் இருக்கும். ஆனால், இந்த மனப்பான்மை மிகவும் காலாவதியாகிப் போனது என்கிறார் ராபர்ட் ரோசென்.


தன்னுடைய  Just Enough Anxiety என்ற புத்தகத்தில், கவலைகள் நமக்குகூர்ந்து கவனிக்கும் ஆற்றலைத் தருகின்றன, கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்து மாற்றிக் கொள்வதற்கும், ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதற்கும், உண்மையிலேயே சிறந்த பலனைத் தருவதாகவும் ஆன கருவியாக ஆக முடியும் என்று சொல்கிறார்.  


கவலைகள் அளவுக்கு அதிகமாகும்போது பயம், குழப்பம் இவைகளோடு நம்பிக்கையை இழந்து விடுவதும் உண்மை  தான்! அதே நேரம், கவலைப்படாமல் அசட்டையாக இருந்து விடுவதும் கூட, ஒருவிதமான மந்தத்தன்மையுடன், போலியான அல்லது அசட்டுத் தனமான தைரியம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாதிரிக் கற்பனையில் மிதப்பதுமே கூட ஆபத்தானது தான்! ஒரு ரப்பர் பான்ட் இருக்கிறது, அதை ஒரு எல்லைக்கு மேல் இழுத்தால் பிய்ந்து விடும்! அந்த எல்லையை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் சும்மா இருந்து விட்டால் ரப்பர் பான்ட் நமக்கு எந்த விதத்திலுமே பயன்படாது போய்விடும் இல்லையா? அதே மாதிரி, பிய்ந்து விடுகிற நிலைக்கும், அதனுடைய எலாஸ்டிசிடியைப் பயன்படுத்தாமல் இருக்கிற நிலைக்கும் மத்தியில் இருக்கும் அதிகப்பயன்பாடு  அல்லது பயன்பாட்டு உச்ச நிலையைக் கண்டுகொள்வதில் தான், கவலைகள் மிக வலி.மையான கருவிகளாக, வெற்றியைத் தருபவையாக  நமக்குக் கிடைக்கின்றன என்கிறார் ஆசிரியர்.


நமக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வீணை, கிடார் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்திகள் போதுமான அளவுக்கு முறுக்கேற்றினால் தான்  தேவையான ஒலி கிடைக்கும். அளவுக்கு அதிகமாக முறுக்கினால், தந்தி அறுந்து விடும், அளவு குறைந்து போனாலோ தொய்ந்து போய் ஒளியே வராது என்பது போல, கவலைகளால் ஏற்படும் முறுக்குத் தன்மை கூட அவசியம் தான் என்பது இவருடைய வாதம்..

பாதுகாப்பின்மை, அசௌகரியம், குழப்பம், வலி இவைகளை அனுபவித்துப் புரிந்துகொள்வதில் நம்முடைய உச்சகட்டத் திறமையை வெளிப்படுத்தும் தருணங்களாக,தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியிருந்தாலும் சரி, 'போதுமான அளவுக்குக் கவலைப்படு' என்பது ஒரு வாழும் கலையாகவே ஆகிவிடும் என்று சொல்கிறார்.

கவலைப்படுவது என்பது, அதைப் பற்றி எவ்வளவு மோசமாகச் சொல்லப்பட்டபோதிலும், அதன் மோசமான விளைவுகள் உண்மையாக இருந்தபோதிலும் கூட, உண்மையான பிரச்சினை இல்லை! கவலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், என்ன செய்கிறோம் என்பதே உண்மையான பிரச்சினை என்கின்ற இந்த வலைப்பக்கங்களையும் படித்துப்பாருங்கள்!!

எவ்வளவு அருமையான உண்மை! இந்தப்பாடம் மட்டும் எனக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால்..........!

இப்போது கூட ஒன்றும் குறைந்து போய்விடவில்லை!  சுவாசம் உள்ளே இழுக்கிற ஒவ்வொரு தருணமும் பிறப்பாகவும், வெளிவிடுகிற நேரம் மரணமாகவும் இந்தியத் தத்துவ மரபு மிக அழகாக வாழ்க்கையைத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்திருக்கிறது. என்னுடைய தோல்விகளே எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்திருப்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்!

"வாழ்க்கை முழுவதுமே யோகம்" என்று ஸ்ரீ அரவிந்தரும் சொல்லியிருக்கிறார்!

ஒவ்வொரு தருணமும், ஒவ்வொரு விஷயமும் கற்றுக்கொடுப்பதாகவும், கற்றுக் கொள்வதாகவுமே அனுபவத்தில் உணர்கிறேன்!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:

சீன பூதம் அல்லது டிராகன் மறுபடி பரபரப்புச் செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பிரச்சினை என்னவென்றே தெரியாமல் நிறைய கருத்து கந்தசாமிகளும், ஏதோ ஒன்றைப் பூதாகாரமாக்கிக் காட்டுவதே பத்திரிகை தர்மம், தொழில் என்றிருப்பவர்களுக்குக் கொஞ்சம் தீனி கிடைத்திருக்கிறது. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், சீனர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள உருப்படியான விஷயங்களும் இருக்கிறது. அவற்றில் ஒன்று இதோ! 



நன்றி திரு. கௌதமன்!