வரலாற்றைப் பேசுதல்....! சுதந்திர தினச் சிந்தனைகளாக........

சுதந்திர தினச் சிந்தனைகளாக, நாடு விடுதலை அடைந்த தருணங்களில் இருந்து, பிரிவினை, பிரிவினை ஏற்படுத்திய ஆறாத ரணம், பிரிந்துபோன பிறகும் கூடத் தொடரும் விபரீதமான தொந்தரவுகள் என்று கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

சென்ற வருடக் கடைசியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் "இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு" என்ற புத்தகமும் ஒன்று. கிழக்கு வெளியீடு.

படிக்க ஆரம்பித்த தருணங்களில் முப்பது நாற்பது பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாத சலிப்பூட்டும் மொழிநடை, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது போல இருந்தது என்பதால், அந்த நேரத்தில் வெறுத்துப் போய் தூக்கி எறிந்து விட்டேன். இந்த நான்கு நாட்களில் பிரிவினை பற்றிக் கொஞ்சம் பேசலாமே என்று எழுத ஆரம்பித்த நேரத்தில் மறுபடி அதைத் தேடி எடுத்து படித்து முடித்தேன். இப்படி ஒரு அபத்தமான புத்தகத்தை இதுவரை படித்ததே இல்லை!  


ஆசிரியர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக, தெளிவில்லாமல் அப்படி ஒரு அபத்தம்!
 

புத்தகத்தில் பிரிவினைக்கான காரணமாக, "இது வெறும் அரசியல் வரலாறல்ல, மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப் பட்ட இரு தேசத்து மக்களின் சரித்திரமும் கூட!" என்று பின் அட்டையில் போட்டிருக்கிற ஒன்று, அந்த மதவெறி என்ற பேயாவது விரிவாக, தெளிவாகப் பேசப் பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  

சகட்டுமேனிக்கு காந்தி, நேரு, ஜின்னா,படேல், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர் எஸ் எஸ், இப்படி எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்கிற இந்தப் புத்தகத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கொஞ்சம் நல்லெண்ணம் படைத்தவராக, ஏதோ அவர் மட்டும் இந்த இரத்தக் களறியைத் தடுக்க முயன்றும் முடியாமல்  போனவராகச் சித்தரிக்கப் படுகிறார். 

அவர், இந்திய வைசிராயாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன்! 

இந்திய வரலாற்றை, ப்ரிடிஷ்காரர்களைவிடத் திரித்துப் பாடப் புத்தகங்களாகவும் ஆக்கி வைத்தார்கள் என்று இடதுசாரிகளைப் பற்றிக் குற்றம் சொல்வது உண்டு! அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி, இந்தப் புத்தகம் இருக்கிறது.இந்தப்புத்தகத்தில் ஆசிரியர் மருதன், பரபரப்புக்காக, shock value கூட்டி வாசகங்களை எடிட் செய்து சூடாக இன்றைய மனநிலைக்குத் தகுந்தபடி  ஆறிக் குளிர்ந்து போன நிலையில் கூட சூடான மிளகாய் பஜ்ஜி என்று கூவி விற்கிற மாதிரித் தான் இந்தப் புத்தகமும் இருக்கிறது.நேர விரையம், விலை கொடுத்து வாங்கின காசும் விரையம் என்பதைத் தவிர இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

184 பக்கங்களில் குழப்பிக் கொண்டே போகும் இந்தப் புத்தகத்தை விட, நீடூர் ஆன்லைன் காம் என்ற இந்த வலைப் பதிவின் ஒரே பக்கம் இன்னமும் அழுத்தமாக, பிரிவினை யாரால் தூண்டப்பட்டது என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!
 

"இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….

கி-பி எட்டாம் நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.

1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.

2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும். பொறாமையையும், குரோதத்தையும் ஏற்படுத்துதல்.

பிரிட்டிஷ் சதி

ஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:     “பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில்,  ”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில்,   “மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதியுள்ளார்.

கர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்:   “படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப் படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”

(இஸ்லாமும்,இந்தியக்கலாச்சாரமும்.by P.N.பாண்டே.நீரோட்டம் பதிப்பகம்,சென்னை) 

 


கே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகுஅமெரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.


இங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா!


இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.


சீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார். அது கீழே உள்ள சுட்டியில்!



Former External Affairs Minister K Natwar Singh on Tuesday regretted that India has not yet comprehensively analysed the reasons behind the 1962 war with China, saying such an exercise was "really necessary."

Speaking at a discussion on his recent book 'My China Years -- 1956-88, he touched upon various phases of Sino-India relationship in the last 60 years and felt things would have been different had Rajiv Gandhi won the 1989 elections.

"Why 1962 happened. No serious analysis of it took place on our side," Singh said indirectly criticising Government's secretive policy in revealing details of the war.

About the war with China, he said "Mao-Tse Tung decided to teach India a lesson after they felt that we were encroaching on their land."

India missed an opportunity to resolve the issues with China in 1960 as the country "did not understand the power game", the former minister said, without elaborating on his observation.

On the border dispute, he said Tawang did not figure in the map of India in 1953.

திரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது? நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்?

அடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்
படத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்
 
இந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதிரி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன.  

இதைத் தான், நட்வர்  சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.


(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது,  "joint defence..! against whom?" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)


நாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.


எவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.


நேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊசிக் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்


தவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம்.  

அதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு "The efficacy of nonviolence is not entirely convincing" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.


ஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு!


வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா? பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல்! வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால்   பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா?


ஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது!


ஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புரியவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது?


இதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது?


இந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.


அங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்!


1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்!திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.


நேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை.  

சோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.


தன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.


தயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, "நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்!" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.


அப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை!. 


இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!  

ஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.


பிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

திரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய  இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான்! கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்!



 
 

4 comments:

  1. good recollection.

    but here no one want to change or aviod mistakes from past.

    now you see in maoist and kasmir.

    finally common man only suffering

    ReplyDelete
  2. வாருங்கள் திரு.பாலு!

    காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி எழுதுங்களேன் என்று நியோ பெரியாரிஸ்ட் என்ற பெயரில் ஒரு சக பதிவர், சில நாட்களுக்கு முன்னால் ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். சமீபகாலமாகக் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிற மாதிரி ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரச்சினையைக் கையாளுவது எப்படி என்பதில் நேரு மாதிரியே, இப்போதிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் ஒரு தெளிவான பார்வையோ செயல் திட்டமோ இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு வித்தாக இருப்பது இந்தியப் பிரிவினை, அப்போது, அதற்குப் பிறகு கையாண்ட விதங்கள் என்று கொஞ்சம் புரிந்துகொண்ட வந்தோமானால், இப்போது அங்கே நடந்துகொண்டிருப்பது என்ன என்பதும் புரியும்.

    முழுக் கதையையும் விவரித்துச் சொல்லப் போவதில்லை, முக்கியமான விஷயங்களை மட்டும் தொட்டுக் கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன்!

    பிரதமர்கள் ஐம்பதாயிரத்துக்கும் மேல் பாதுகாப்புப் படையினர் மத்தியில், குண்டு துளைக்காத மேடையில் இருந்து கொண்டு கொடியேற்றி வைத்து அறிவுரை சொல்ல முடியும்! அதற்கெல்லாம் வழியில்லாத சாமானிய மக்கள், இவர்கள் செய்கிற முட்டாள்தனங்களின் விளைவை அனுபவிக்கத் தானே முடியும்!

    சாமானியர்கள் எழுந்திருக்கும் நேரமும் வரும்!

    ReplyDelete
  3. If the Nehru dynasty was NOT holding the power somehow continuously(Indra,Rajiv, Sonia& Ragul),somebody might have revealed. the 1-blunders of Nehru,2-Naharwala fraud & Emergency impacts of Indira,3-Rajiv`s Bofors and NOW,the CWG scandal + 75 lac Crores in the Foreign Banks.

    ReplyDelete
  4. திரு வாசன்!

    காங்கிரஸ் அல்லாத ஆட்சியாளர்களும் இடையில் இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். இங்கே எனக்கு எவ்வளவு என்ற பேரம் தான் முந்துகிற மாதிரித் தெரிகிறதே தவிர, இந்த அவலங்களை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம், இதனால் பாதிக்கப் படுகிற ஜனங்களுக்கே இல்லை என்பது தான் கவலை தரும் விஷயம்!

    "அப்பனுக்குச் சாராயம்! பிள்ளைக்கு சத்துணவா?" என்று கேள்வி எழுப்பியவர்களே, ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்கிறார்கள் என்பதிப் பாருங்கள்!

    இலவசங்கள், சலுகைகள், ஒதுக்கீடு என்று ஜனங்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கிக் கொண்டு, பிளவுகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு போவதைத் தவிர காங்கிரசும் சரி, மற்ற கட்சிகளும் சரி வேறு உருப்படியான எதையும் இந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் செய்யவில்லை.

    கோளாறு, நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டிய தருணம் இது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!