ஜெயிக்கலாம் வாங்க....!


Self what ?

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பியிருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைத்தது.

தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பதென்பதென்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பதுபோலத் தான்! இப்படிப்பட்ட  மனோபாவம், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது.தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது. 

தன்னை மையப்படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப்போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா?

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்ததென்னவோ வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. தனித்தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல்படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று வரும்!

ஒவ்வொரு தனிமனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனிமனிதனும்!

இப்படி  இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப்பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

அப்புறம் என்ன! குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!




 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!