தூண்டிற் புழுக்களும், மிஞ்சினால் கெஞ்சுவதும்....!



 "நான் அப்படியே சாப்பிடுவேன்" "ஐ யாம் எ காம்ப்ளான் பாய்"

இந்த மாதிரிக் குழந்தைகளை மையமாக வைத்து விளம்பரப் படங்கள் நிறைய வளர்ந்திருக்கின்றன
.குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப் பட்டவை என்றாலும், டார்கெட் ஆடியன்ஸ் நாம் எல்லோருமே தான். அதுவும் தவிர மார்க்கெட்டிங் துறையில், ஒரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி முடிவு, குழந்தைகள் எதை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் முக்கியமான பங்காற்றுவதாகத் தெரிவிக்கிறது. இந்த வலிமையான செக்மெண்டை கவர்வதற்காகவே இன்றைய விளம்பரங்களில் மிகப் பெரும் பாலானவை, குழந்தைகளைக் குறிவைத்து வெற்றி பெற்றவைகளாகவுமே இருப்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
நம்முடைய முடிவுகளை, தீர்மானங்களை, எண்ணங்களை, வேறு யாரோ தான் எப்போதுமே தீர்மானிக்கிறார்கள்!  
கொஞ்சம் நாசூக்காகச் சொல்வதானால், influences, influences all the way! இவைகள் இல்லாமல் நம்மால் சுதந்திரமாக முடிவு எடுக்கவே முடியாதா? அப்படி என்ன முடிவை நாம் சமீபத்தில் எடுத்திருக்கிறோம் என்று நமக்குள்ளேயே கேட்டுக் கொண்டு விடை தேடினோமேயானால், எப்போதுமே நாம் நமது முடிவுகளை அடுத்தவரைச் சார்ந்தே எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வரும்.

இந்த அடிப்படை உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க முனைந்து விட்டீர்கள் என்றால், முதலில் ஒரு சபாஷ்!

இந்தப் பதிவு உங்களுக்காகத் தான்! அடுத்தது என்ன என்பதைக் கொஞ்சம் பேசுவதற்காகத் தான்!


சரி! அப்படி எடுக்கப் படும் முடிவுகள் எல்லாமே, சிறந்தவை தானா? அல்லது, 'ஏதோ பத்துக்கு ஒண்ணு பழுதாகாம இருந்தாலே போதும்' ரகம் தானா?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால்
, முதலில்,

யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
?

அல்லது
, இதையே வேறு விதமாகச் சொல்வதானால்,

யாரைத் திருப்தி செய்ய
, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?


இந்த இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டு பிடிப்பதில் கூட அவ்வளவு சிரமம் இல்லை! அதில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விட்டீர்களேயானால், உங்களை வெல்ல யாருமே இல்லை!


யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
சந்தையில் பொருட்களை வாங்குவதில், பெரியவர்களை விட குழந்தைகள் எடுக்கும் முடிவே அதிகமாக இருக்கிறது என்பதை சர்வே எடுத்துத் தெரிந்து கொண்ட விளம்பர நிறுவனங்கள், தங்களுடைய பொருட்களை, குழந்தைகளை, இளம் வயதினரை மையமாகக் குறிவைத்தே விளம்பரம் செய்யப் பழகிக் கொண்டு விட்டன. இதை, உங்களுடைய வீட்டில், பல தருணங்களில், சொந்த அனுபவமாகவுமே பார்த்திருக்கலாம்!

இப்படியே, இந்தக் கேள்வியை இன்னமும் விரிவுபடுத்திப் பாருங்கள்! நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், யாராலேயோ தீர்மானிக்கப் படுகிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அதை உணர்வதே இல்லை, ஆனாலும் பழக்கப் பட்டுப் போய் விட்டது! கொஞ்சம் வேடிக்கையாக இல்லை?

ஆனால் அது தான் உண்மை! பிறர் சொல்வதை கேட்க வேண்டாம் என்பதற்காக இல்லைஎதையும் சுயமாக ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம் பாருங்கள், அதைச் சொல்
வது   தான் இது
 
மந்தைத்தனம் என்பது இது தான்! ஆறாவது அறிவு, பகுத்தறிவு என்பதெல்லாம் பெயருக்குத் தான்!
பகுத்தறிவு, இனமானம், சுய மரியாதை என்று சொல்பவர்களே இந்த மந்தைத் தனத்தில் இருந்து உங்களை விலக விட மாட்டார்கள்!

அதனால் தான் வறுமையே வெளியேறு! சிங்காரச் சென்னை மாதிரி வெற்று 
கோஷங்களில் பெரும்பாலான ஜனங்களை நீண்ட காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்க இங்குள்ள அரசியல் வாதிகளால் முடிகிறது. 

டாஸ்மாக் வழியாக உங்களிடமிருந்து பறிக்கப் பட்ட பணம், அங்கே இங்கே என்று போய்வந்த பிறகு, தேர்தல் வரும் நேரங்களில், வாரம் ஐந்து நாளைக்கு அவித்த முட்டை சத்துணவாக அறிவிக்கப் படுகிற விதம் புரிகிறதா? என்றைக்கும் இல்லாத திருநாளாக, அடுத்த வருடம் தேர்தல் வருகிறது என்பதற்காக, சீர்கேடடைந்த ரோடுகளை எல்லாம் வருகிற மார்ச் மாதத்திற்குள் செப்பனிடப் போவதாக அறிவிப்பும் வருகிறது!

ஆறாவது அறிவு, பகுத்து அறிவது என்பதெல்லாம், கொஞ்சம் சுயசிந்தனை, சுய முயற்சியோடு, எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கிக்  கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றறியேன் என்ற அளவோடு நின்று விடாமல், விடைகளையும் தேட முயற்சி செய்கிறவர்களுக்கு மட்டும்தான்!


அடுத்து, யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?  

இந்த கேள்வியோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் நம்முடைய உழைப்பு, முயற்சிகள் எந்த அளவுக்கு கடலில் கரைத்த பெருங் காயம் போல வீணாகிக்  கொண்டிருக்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியும். மறுபடியும், புள்ளிராசா வங்கியையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்! அங்கே எல்லோரையும் திருப்திப் படுத்தக் கடுமையாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரையும் திருப்திப்படுத்த முயன்று தோற்று, எல்லோருடைய எரிச்சல், வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது மட்டுமே அங்கே நடந்தது. வேலை செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று எவரையுமே திருப்திப் படுத்த முடியாமல், ஒரு தலைமை நிர்வாகி புலம்பினாரே, "எல்லாமே இங்கே கம்மி தான்! ஆனாலும் வாங்க யாருமே வர மாட்டேன் என்கிறார்களே" அந்தக் கதைதான்!

எல்லோருக்கும் எல்லாமும்! சோஷலிசம்! கேட்பதற்கும், பேசுவதற்கும் மிகவுமே நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில்....? 


கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகுமாம்!  

இது அனுபவத்தில் கண்டு சொன்னவர்கள் சொலவடை! கேள்வி கேட்காமல், ஆராய்ந்து பார்க்காமல், எவரோ எதற்காகவோ சொன்னதை அப்படியே நம்பிவிடுவதும் அப்படித்தான்!


ப்ரீத்திக்கு நான் காரண்டீ என்று அழகாகச் சிரித்துக் கொண்டு ஒரு பெண் சொல்வதை கேள்வி கேட்காமல் பார்ப்பவர் ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்கிற மாதிரித் தான் இங்கே எல்லாமும் இருக்கும்.  
விளம்பரம் என்ற அளவில் சரிதான்! விளம்பரத்தை நம்பி வாங்குகிறவர் அளவில் ....?
சொல்லப் பட்ட மாதிரியே இருந்துதானாக வேண்டும் என்பது இல்லையே!
சொல்லோ, பொருளோ,அரசியலோ, பதிவுகளில் படிக்கும் விஷயங்களோ எதுவானாலும் சோதித்துப் பாருங்கள்!
யார் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
யாரைத் திருப்தி செய்ய, இந்த அளவுக்குப் 'படாத பாடு' பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளோடு, இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்!
இவையெல்லாம் உண்மை தானா? நம்புகிறமாதிரிச் சொல்லப் படுபவை எல்லாமே நம்பத் தகுதியானவைதானா?
ஏன், எப்படி, எதற்கு, எதனால், எதற்காக இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்காதவர்களுக்கு வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றியும் இல்லை!

உங்களுக்குக் கிடைக்கிற யோசனைகள் கூட சமயங்களில்
யாரோ ஏதோ உள்நோக்கத்தோடு எதற்காகவோ போடுகிற 'இலவசங்கள்' தான்! இங்கே சிருஷ்டியில் எதுவுமே இலவசம் இல்லை! 


இலவசமாக வருவதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

தூண்டிலில் புழுவை வைப்பது மீனுக்கு இலவசம் தானா? மீன்கள் பேரில் கருணை கொண்டா புழுவை, சோளப் பொரியை  அள்ளித் தெளிக்கிறார்கள்?



வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அல்லது இலவசங்களே போதுமா? இந்த மாதிரி இலவசங்களாக வைக்கப் படும் புழுவிற்காக ஆசைப்பட்டுத் தன்னுடைய மொத்தத்தையும் இழந்து விடுகிற மீன்களாக ஆகிவிடப் போகிறோமா என்பதைக் கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

உங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


பதிவர் உண்மைத் தமிழனுடைய பதிவைப் படித்து விட்டு எழுந்த சிந்தனையில், ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன் பேசியிருந்தது தான் என்றாலும், கொஞ்சம் யோசித்துப் பார்ப்பதற்காக மீள்பதிவு! நடப்புச் செய்திகளோடு கொஞ்சம் அப்டேட் செய்யப் பட்டது.

****** 
மன்னிக்க  வேண்டுகிறேன்! கொஞ்சம் கண்டுக்காம  விட்டு விடவும் வேண்டுகிறேன்!



பாதிரிமார்கள் பாலியல் வக்கிரம், சில்மிஷங்கள் என்று  கொஞ்சம் அத்து மீறலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில், போப் ஆண்டவர் இங்கிலாந்து விஜயத்தில் இருக்கிறார். பாதிரி சில்மிஷங்கள், சிறுவர்களிடம் செக்ஸ் வக்கிரங்கள் என்று திருச்சபைப் பிரமுகர்கள் மாட்டிக் கொண்ட பிறகு, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி நாத்திகப் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமில்லாமல், பாதிரி சில்மிஷங்களில் பாதிக்கப் பட்டவர்களும் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

போப் விஜயத்தில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பணம் கொடுத்து வாங்க வேண்டிய டிக்கெட்டுக்கள் ஏராளமான எண்ணிக்கையில் விற்பனையாகாமல் தேங்கியிருக்கிற பரிதாபத்தோடு, அரசு வரிப்பணத்தில் இருந்து போப் விஜயத்துக்காகச் செலவு செய்வதா என்ற கேள்வியும் வலுவாக இங்கிலாந்தில் எழுந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.  
மனோன்மணீயம் நாடகக் காப்பியத்தில் வருகிற கெட்ட மந்திரி குடிலன் குணாதிசயமாகக் "கெஞ்சினால் மிஞ்சுவன்; மிஞ்சினால் கெஞ்சுவன்" என்றபடியே வாடிகனும், எதிர்ப்பு வலுக்கவும் "வருத்தம் தெரிவிக்கிற வேலையை" வேறு வழி  ல்லாமல்,வழக்கம் போல செய்திருக்கிறது.

1510 இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த மார்டின் லூதர்  ரோமா புரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்ட லூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக்கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல் ஒன்றைக் கேட்டார். 

அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது. இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது.

இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” என ரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.

இப்படிப் பதினாறாம் நூற்றாண்டில் கிறித்தவம் இரண்டாகப் பிளக்கும் அளவுக்கு வாடிகனின் செயல்பாடுகள் இருந்தன. அம்பலப் படுத்தப் பட்டு, அசிங்கப்பட்ட பிறகும் கூட வாடிகன் தன்னைத் திருத்திக் கொண்டதே இல்லை இப்போது கிளம்பியிருக்கும் பாதிரி சில்மிஷங்கள், பாலியல் குற்றச்சாட்டை வாடிகன் தீவீரமாக மறுத்துப் பார்த்தது. எதிர்ப்புக் குரல்கள் வலுக்க ஆரம்பித்தவுடன், இப்போது வருத்தம் தெரிவிக்கும் படலம் நடந்தேறியிருக்கிறது. அவ்வளவு தான்!

 


5 comments:

  1. சில சமயங்களில் சில பதிவுகளை படிக்கும் போதே இருக்கும் மன உளைச்சல் மேலும் அதிககமாகி இம்சிக்கும். முடிவில் ஒரு ஆறுதலும் தரும். .........

    ReplyDelete
  2. உண்மை இல்லாதவற்றை உண்மையாக நினைத்து ,நேசித்து பூஜித்து வாழும் மனித குலத்தில் இவைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். "இவைகள் அணைத்தும் பொய்களே " என்ற புத்தியில் பட்டவர்களின் பாடுதான் திண்டாட்டம்.
    அதனை நானும் தினசரி வாழ்கையில் அனுபவித்து வருகிறேன்.

    ReplyDelete
  3. வாருங்கள் மாணிக்கம்!

    நடப்பு நிகழ்வுகள் அயர்வைத் தருகிற மாதிரித் தான் இருக்கின்றன! அதற்காக, அப்படியே விட்டு விடவும் முடியாதே!

    ReplyDelete
  4. மாணிக்கம்!

    உண்மை என்று நீங்கள் சொல்கிற இடத்தில், பொருட்படுத்த வேண்டிய விஷயம் என்று வைத்துப் பாருங்கள்! எது பொருளோ, எது முக்கியமோ, அதை விட்டு விட்டு வேறெதிலோ நம்முடைய கவனத்தைச் சிதற அடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கே இருப்பதைக் கொள்ளை கொடுப்பதைத் தவிர்க்க முடியாது. இதை நீங்கள் மட்டுமே இல்லை, நானும் கூட நிறையத் தருணங்களில் பட்டு அனுபவித்திருக்கிறேன்.

    அந்த அனுபவம் தான், இந்தப் பதிவை எழுதத் தூண்டியிருக்கிறது.

    ReplyDelete
  5. இவிங்கள திருத்த முடியாது. இப்பதான் பாதிரியார்கள் கண்ணாலம் கட்டிக்கலாம்னு வாடிகன் சொல்லிருச்சே?!
    மொத்தத்தில் நல்ல பதிவு. ஒரு வட்டம் போட்டுக்கிட்டு ஆடுறீங்க ( எலக்கியம், பொய்தவம், மேலாண்மை, காங்கிரஸ் எதிர்ப்பு)ஆனால் சரியா செய்யுறீங்க. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!