சில நேரங்களில் ஜெயகாந்தன்........!



மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியம், ஜெயகாந்தனைப் பற்றிய தனது கருத்துக்களை, ஜேகே என்ற ஆளுமையைக்  கண்டு பிரமித்த தருணங்களைத் தொடராக முப்பத்தாறு மடல்கள் எழுதி முடித்து விட்டார்.   திண்ணை இதழில் அவர் எழுதியதை, மின்தமிழிலும் பகிர்ந்து கொண்டு வந்த அனுபவத் தொடரின் கடைசிப் பகுதி ஜெயகாந்தனுடைய சுந்தர காண்டம் நூலைப் பற்றிய ஒரு அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது!

இங்கே அதைப் படிக்க

ஜெயகாந்தன் என்ற பெயருக்கும், சர்ச்சைகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருப்பதை, சுதந்திரமான அடிமைகள் என்று அவர் ஒரு கூட்டத்தில் பேசப் போக, இங்கேயிருக்கும் பெண்ணீய வாதிகள் எல்லாம் மல்லுக் கட்ட ஆரம்பித்ததையும் இந்தப் பக்கங்களில் பேசியிருக்கிறேன்.

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி எழுதி முடித்ததும், ஜெயகாந்தனை இந்த இழையில் எப்படிப் பிளந்து கட்டுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! இதில் எழுதிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நான் பெரிதும் மதிப்பவர்கள்! விஷயம் தெரிந்தவர்கள்! சிலர் நல்ல எழுத்தாளர்களும் கூட! நிலவைப் போல தேய்வதும் வளர்வதுமான இரு பக்கங்கள் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளருக்கும் இருப்பதை, அல்லது சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தலைப்பிட்டு அவரே கதை எழுதிய மாதிரி, சில நேரங்களில் ஜெயகாந்தன் மிகப் பெரிய ஆளுமை! சில நேரங்களில் எக்சென்ட்ரிக்! 


இப்படி முரண்பட்ட மனிதராக அவரை விமரிசிக்கும் போது, அவர் எழுத்தை நேசிக்கும் வாசகன் என்ற வகையில் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது!
 


இத்தனை கரடுமுரடான விஷயங்களையும் மீறி ஜெயகாந்தனுடைய எழுத்துக்கள், இன்னமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அக்னிப் பிரவேசம் என்ற சிறுகதையை விரித்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற புதினத்தைப் படைத்தார். எல்லோரும் கொண்டாடினார்கள்! அதையே கங்கை எங்கே போகிறாள் என்று அதன் அடுத்த பகுதியாக அவர் எழுதியதை ஜீரணிக்க முடியாத வாசகர்கள் இங்கே ஏராளம்!

ஜெய ஜெய சங்கர என்று அவர் எழுதியபோது கொஞ்சம் எதிர்ப்பு வந்தது. ஹர ஹர சங்கர என்று ஜெயேந்திரர் விவகாரத்தைத்  தொடர்ந்து எழுதிய போது ஜெயகாந்தனை நிறையப் பேர் கண்டு கொள்ளவே தயாராக இல்லை.. நான் திரும்ப எழுத வரும் வரை என் சிம்மாசனம் காலியாகவே இருக்கும் என்று அவர் சொன்னதை, வீண் ஜம்பம் என்றோ தற்பெருமை, கர்வம் என்றோ ஒதுக்கிவிட்டுப் போக முடியவில்லை!

இது எழுத்தாளர் "கடலோடி" திரு. K R A நரசய்யா சொன்னது:

சில நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. ஆம். ஜெயகாந்தன் மற்றவர்களைச் சாதாரணமாகப்  புண்படுத்தக் கூடியவர் தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடன் என்னுடைய அனுபவங்கள் நன்றாகவே இருந்தன. ராஜராஜன் விருது முதல் முதலாக  வழங்கப்பட்டது திரு சுத்தானந்த பாரதிக்கு!.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன் ஜெயகாந்தன் குடிலில் அவரைச் ச்ந்தித்தேன். “சுத்தானந்த பாரதிக்கு விருது தந்திருக்கிறார்கள்” என்றேன் “இவர்கள் சுப்பிரமணிய பாரதிக்கே கொடுப்பார்களே” என்றார்! பக்கலிலிருந்த கம்யூனிஸ்ட் அனுதாபி ஒருவர் என்னைப் பார்த்து “இவர் யார்?” என்றார். (ஜெயகாந்தன்) தனது குரலை உயர்த்தி வாயால் சொல்ல முடியாத ஒரு கெட்ட வார்த்தையால் அவரை விளித்து, “கடலோடி நரசய்யாவை யார் என்று கேட்கிறாயா?” என்றார்! நான் அதிர்ந்து விட்டேன்.


ஞானபீட விருது அறிவிக்கப்பட்டவுடன் அவரிடம் நான் பேசியபோது சிட்டியைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். என்னுடன் வருவதாகச் சொன்னார். அடுத்து, டாக்டர் சுப்பிரமணியனுடன் எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடன் சிட்டியைப் பார்த்தார். அவரது நெகிழ்வு, சிட்டியின் மீது அவர் வைத்திருந்த மரியாதை இவை என்னை ஆச்சரியப்பட வைத்தன!

எப்படி  இவர்களைப் புரிந்து கொள்வது?

ஆஸ்கார் ஒயில்ட் ஒரு தடவை ஒரு நண்பரால் வினவப்பட்டார். 

“பெர்னார்ட் ஷாவைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?”

ஆஸ்கர் ஒயில்ட் சொன்னார் “பெர்னார்ட் ஷாவுக்கு விரோதிகள் கிடையாது!’

நண்பர் “ஆஹா!” என்றார்

ஆஸ்கர் ஒயில்ட்தொடர்ந்தார்: “ஆனால் அவர்கள் நண்பர்கள் தாம் அவரை வெறுக்கிறார்கள்!”
இது எப்படி இருக்கு? 


இது திரு ஹரி கிருஷ்ணன் எழுதியது:

சில தினங்களுக்கு முன்னால் தொலைபேசி உரையாடலில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் :


ஜெயகாந்தனை அவருடைய கருத்துத் தெளிவுக்காகவும், நடுவு
நிலைக்காகவும், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உண்மையாகப் பேசும் வெளிப் படையான தைரியத்துக்காகவும் பிரமிததுப் பிரேமித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களெல்லோரும் அவருடைய தற்போதைய போக்குகளைப் பிரமித்துப் பிரேமிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். 

இன்றைய நிலையில் ஜெயகாந்தனுடைய எல்லாச் சொற்களையும், எல்லாச் செயல்களையும் ஏற்றுக் கொள்வது என்பது, ஒரு காலத்தில் ஜெயகாந்தன் அனுசரித்த நேர்மைக்கே எதிரானது.  (கவனிக்கவும்.  எல்லா என்ற சொல்.  Not all does include, but some.  எல்லாத்தையும் ஏத்துக்க முடியவில்லை என்றால், சிலதுக்கு விலக்கு இருக்கிறது என்றல்லவா பொருள்.)
இன்றைக்குக் கருத்து மாறுபாடு கொள்வதனால், ஒட்டு மொத்த ஜெயகாந்தனுமே தப்பு என்று பொருளில்லை.  அவருடைய எழுத்தையும் அன்றைய கம்பீரத்தையும் மறுக்கவே முடியாது.  அவரை விட்டுவிட்டுத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாறு எழுதவே முடியாது.  இவற்றையெல்லாம் முன்னரேயே சொல்லியிருக்கிறேன்.  இப்போதும் சொல்கிறேன்.

இது முனைவர் நா.கண்ணன் எழுதியது:

அமெரிக்கன் கல்லூரியில் நாங்கள் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொண்டோம். “சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் வருக’ என்பது போஸ்டர். ஐயா வந்தவுடன் மேடையில் கேட்டார், ‘எவன் என்னை சிறுகதை மன்னன் என்று எழுதியது (திருவிளையாடல் சிவாஜியை கற்பனை செய்து கொள்க). எல்லாப் பேராசிரியர்களும், பிரின்சிபாலும் ஆடிப்போய்விட்டனர்! (பாவம் அவர் இயற்பியல் பேராசிரியர். ஏதோ தப்பு நடந்து விட்டது என்று பதறி விட்டார்).

மெதுவாக ஜெயகாந்தன் சொல்கிறார், “நான் சிறுகதை சக்கிரவர்த்தி’ என்று.


அப்பாடா! என்று இருந்தது. இது அவரின் நகை உணர்வா? இல்லை கர்வமா?

:-)

இது திரு வெங்கட் சாமிநாதன் என்ற பிரபல விமரிசகர் எழுதுவது:

ஒரு பெரிய பதவியில் இருப்பவரின் அந்தரங்க செ
லாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது எத்தனை பேரின் அனுபவத்தில் அல்லது தகவல் அறிவில் இருக்கிறதோ தெரியாது. அது சாதாரணமாகவே மற்றவர்களைத் துச்சமாக மதிப்பதாக, அப்படி நடத்துவதற்கான இடத்தில் இருப்பதாக, நினைத்துக் கொள்வது இயல்பு. அப்படி இருக்க, கருணாநிதியின் அந்தரங்க செயலாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


அதுவல்ல விஷயம். தான் எப்படி நடந்து கொண்டேன், எப்படி அவர்களையே தூக்கி எறிந்து பேசினேன் என்று ஒரு பொது மேடையில் சொல்லும் ஒருவரைப் பற்றி என்ன சொல்ல? அதைப் பார்த்துப் பெருமைப் படுவது, பாராட்டுவது என்பது நமக்கே உள்ள குணம். இது ஒருபுறம் இருக்க----

அத்தகைய   போர்க்குணம் மிக்க அந்த புரட்சி எழுத்தாளர்,  ‘எந்தக் கொம்பனாயிருந்தால் என்ன?” என்று அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் ஒரு சிறு கதை மன்னர், மன்னிக்கவும், சக்கரவர்த்தி,  இன்று என்னவாகியிருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்க்கலாம். இன்றைய நிலை எதுவும் பத்திரிகைகளுக்கோ பொது மக்களுக்குமோ  தெரியாத ரகசியமில்லை. 

அன்றைய வீராப்பும் சரி, இன்றைய வீழ்ச்சியும் சரி,  இரண்டுமே ஜெயகாந்தன் தானாக வரவழைத்துக் கொண்டது. இரண்டுமே பெருமைப் படும் விஷயங்கள் இல்லை.

இன்னொன்றும் தனியாக கமலா தேவி அம்மையாருக்குச் சொல்ல வேண்டும் நான். அவர் மிகவும் மன வேதனையோடு எழுதிருக்கிறார். அதற்கு நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் நெஞ்சு நோகச் செய்ததற்கு.


சில விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரியாது, நம் காதுகளுக்குக் கேட்காது இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


காசிக்குப் போகணும், கங்கையில் ஸ்னானம் செய்யவேண்டும் என்பது நம்மவர்களின் ஆயுள் கால லட்சியம். அது மிகவும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் கனவு தான்.


ஆனால் நான் நினைத்துக் கொள்வேன். அந்தக் கனவு அவர்களுக்கு கடைசி வரை கனவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது தான் அவர்கள் ஆத்மாவுக்கு சாந்தி தரும். அவர்களுக்கு அந்த கங்கை என்னும் இன்றைய சாககடையைக் காட்டி அந்தக் கனவு சிதைந்து விடக்கூடாது என்று நான் நினைத்துக் கொள்வேன். நம் நினைப்புகளில், கனவுகளில்,தான் கங்கை புனிதமானது. நிஜத்தில் அது சாக்கடை.

கமலா தேவி அம்மையாருக்கு சில விஷயங்கள் தெரியாது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குப் படுகிறது.


இந்த இழையைப் படித்ததும் "Ignorance is Bliss" என்று எதற்காகச் சொன்னார்கள் என்பது ஒரு மாதிரியாகப் புரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்!

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்திற்கு மிகவும் நன்றியுடன்! வலைப் பதிவுகளில் வெட்டி அக்கப் போர், கூகிள் பஸ் என்று வந்து பார்த்தால் வெறும் கும்மி, மொக்கை என்றே போய்க் கொண்டிருக்கும் நிலையில், மிக நல்ல விவாதங்களைத் தொடர்ந்து தரும் மின்தமிழ் கூகிள் வலைக் குழும உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! 




 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!