உலக அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக என்று ஆரம்பித்தால் அபஸ்வரமாகி விடுமென்று பயந்தோ என்னவோ இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு புரட்சிகரமான அறிவிப்பை தி.மு. கழக அரசு இன்று ஆளுநர் உரையில் செய்துள்ளது.“வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்” என்று 1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் 4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.என இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது.
இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறதோ இல்லையோ, சட்டசபையின் முதல்கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்கிற மரபையும் சன் டிவி விளம்பரக்கூவல் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். Union Government (ஒன்றிய அரசு) என்று ஆளுநரைத் தனது உரையில் சொல்லவைத்து அற்பத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினைகள் நிறையவே எதிரொலித்து வருவது சிறப்பு மகிழ்ச்சி.
ஒரு விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆம், ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும். சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம். ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு
அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை. சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா? திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு?
நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால். மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும்.
சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா? காவல் துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும் ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி?
எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும். தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமன சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம்.கேட்பார்கள் என எதிர்பார்ப்போம். ஆக என்ன தெரிகின்றது?
தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள்.இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும்.இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்து விடலாம் என்று முகநூலில் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டேன்லி ராஜன். அத்துடன் விட்டாரா?
சகோதரர்கள் பேசிக்கொள்வதாக இங்கே ஒரு பகடி
"அங்க பாத்தியாண்ணே, ஒரு காலத்துல திமுகவுல பொருளாதாரம்னா நம்ம அப்பாவத்தான் கூப்பிடுவாக, டெல்லில அப்பா அமைச்சரால்லாம் இருந்தாக. அப்பாவுக்கு அப்புறம் நம்மளத்தானண்ணே சேர்த்திருக்கணும், என்ன விடுண்ணே வெறும் கேசட்டு கடைய இப்போ அம்பானி அளவுக்கு ஆக்கின உன் மூளைய விட இங்க யாருண்ணே வேணும், வேற எதுக்குண்ணே உனையெல்லாம் விலக்கி வச்சி இப்படி பண்றாங்க"
"தம்பி, அமெரிக்க மூளை எல்லா இடத்திலும் ஜெயிக்குமா? ஆப்கன் ஆப்ரிக்கான்னு அவனுக தலைய பிச்சிட்டு போறமாதிரி இங்கயும் ஓடபோறானுக பாரு... விமான பெட்ரோலை எவனாவது மண்ணெண்ணெய் ஜெனரெட்டர்க்கு பாவிப்பானா? முடியுமா? அவுக அதத்தான் பண்ணிட்டு இருக்காக "
பொருளாதாரப்புளி ஜெயரஞ்சனுக்கு இதிலே என்ன வேலையாம்?
ஆளுநர் உரை, பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி போட்டுச் சொன்னார்களா என்று நிதியமைச்சர் கேட்டார் அல்லவா! அதற்கு ஸ்டேன்லி ராஜன் பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!
கார்டூனிஸ்ட் அமரன் இதே விஷயத்தை இன்னமும் தெளிவாகப் படம் போட்டே சொல்லியிருக்கிறார்.
திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலிருந்தே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றியதே இல்லை என்பதை இதைவிடத்தெளிவாக சொல்லிவிட முடியுமா?
ஆட்சிக்கு வந்தே வெறும் 46 நாட்கள் தானே ஆகிறது! அதற்குள் மார்க் போடுவதா என்று கேட்கிறீர்களா? வந்தது போனதையெல்லாம் சிக்சர்களாக சாதனைப் பட்டியலில் திமுகவினர் சேர்த்துக்கொண்டே போவதில் கார்டூனிஸ்ட் அமரன் கொடுத்திருக்கிற பூஜ்யம் மார்க் சரிதான் என்று படுகிறது.






