கனிமொழி அப்டேட்ஸ்! திகார் திகில் வாழ்க்கை!





 
கலில் கொடும் வெயில்... இரவில் கடும் குளிர் என மிரட்டுகிறது, திகார் கிளைமேட். இரண்டு நாட்கள் தங்கி இருந்ததிலேயே, பனியால் உதடுகள் வெடித்துவிட்டன.  வெயிலும் குளிரும் மாறி மாறி விரட்டி மிரட்டும் வித்தியாச​மான சீதோஷ்ணத்தை, தாக்குப் பிடிப்பது சிரமம்.

ப்படி ஒரு கிளைமேட் நிலவும் திகாரில், கனிமொழி 150 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் சட்டப் போராட்டங்களாலும், அவரை இன்னமும் மீட்க முடியவில்லை. 'தீபாவளிக்காவது ஜாமீன் கிடைக்க வேண்டுமே?’ என்று ஏக்கத்துடன் பேசுகிறார் அவரது ஆதரவு தி.மு.க. தொண்டர்!

உயர்ந்த மதில் சுவர்கள், திரும்பிய திசை எங்கும் கண்காணிப்பு கோபுரங்கள், 'இப்படி ஒரு உலகமா?’ என்று கேட்கிற அளவுக்கு இயல்பைத் தொலைத்த சூழ்நிலைகொண்ட திகார் 6-வது எண் சிறையில் 8-வது வார்டில் இருக்கிறார் கனிமொழி.



கைது செய்யப்பட்டதும் கருணாநிதி வந்தார்; அழகிரி வந்தார்; ஸ்டாலின் வந்தார்; தி.மு.க-வின் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்தார்கள். தனக்காக இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று அவரே கசிந்து உருகும் அளவுக்குத் திகாரிலும் பாட்டியாலாவிலும் தி.மு.க-வினர் கூட்டம் அலை மோதியது.

ஆனால்... இன்று?

''தி.மு.க-வின் எம்.பி-க்கள்கூட அதிகமாக இங்கே எட்டிப் பார்ப்பது கிடையாது. ஹெலன் டேவிட்சன், ஜெயதுரை, வசந்தி ஸ்டான்லி, டி.கே.எஸ். இளங்கோவன் மட்டும்தான் 10 நாட்களுக்கு ஒரு தடவை வருவாங்க. டி.ஆர். பாலு எப்போதாவது வருவார்.  

மத்திய அமைச்சராக இருப்பதால், அழகிரியால் சிறைக்கு வர முடியாது.  ஆனால், அண்ணன் என்கிற உறவு முறையை வைத்து அவர், ஆகஸ்ட் மாதம் சிறைக்கு வந்து பார்த்தார். அதன் பிறகு என்ன நடந்ததோ... அவரும் வருவதே இல்லை. 

 குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிலர் மட்டும்தான் கனிமொழியைப் பார்க்க வருகிறார்கள்'' என்கிறார்கள் சிறையில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகள்.

கைதிகளைப் பார்க்க வரும் பலரும் தவிப்போடு காத்திருப்பதும், சந்தித்து விட்டுத் திரும்பும்போது தேம்பியபடிச் செல்வதும் அன்றாடக் காட்சிகள். கண்காணிப்புக் கோபுரத்தில் இருப்பவர்கள், அந்தக் கதறலையும் கண்காணிக்கிறார்கள்.

கனிமொழியே  சிறை அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? திகார் சென்றிருந்த நமக்கு அதற்கு நிகரான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரை அன்றாடம் நெருங்கிக் கவனிப்பவர்கள், நம்மிடம் விவரித்தார்கள்.

''சிறையில் கனிமொழி படித்து உறங்க, சிமென்ட் பெஞ்ச் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதுகின்றன. அது தவறு.  அறையில் பெஞ்ச்சே கிடையாது. வெறும் தரை மட்டும்தான். உட்காருவதற்கான திண்டுகூட கிடையாது. உறங்குவது, உட்காருவது எல்லாமே தரையில்தான். ஆரம்பத்தில் தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாத காரணத்தால், மிகவும் தடுமாறினார், சிரமப்பட்டார் கனிமொழி. தரையில் அமரத் தயங்கி, அறைக்குள் பெரும்பாலான நேரம் நடந்தபடியே இருப்பார்.

அவர் கைதாகி உள்ளே சென்ற நேரம், கடுமையான புழுக்கம் நிலவி​யது. வியர்த்துக் கொட்டிய நிலையில் கனிமொழியைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தரை முழுக்கத் தண்ணீரைத் தெளித்து அறையின் புழுக்கத்தைக் குறைக்கப் போராடு வார். சில நேரங்களில் பெட்ஷீட்டை நனைத்து விரித்துக்கொள்வார். இப்போது, மழை பெய்யும்போது இன்னமும் சிரமப்படுகிறார். பூச்சிகள் நிறையவே வந்துவிடும். அதனை அத்தனை எளிதில் விரட்டிவிட முடியாது, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இப்போது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார்.

சாப்பாடு விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டார். சில நேரங்களில் வீட்டுச் சாப்பாடு, சிறை சாப்பாடு இரண்டையுமே தவிர்த்து விடுவார். சிறையில் அவருக்கான ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள் தான். எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தாலும், வைத்து எழுதுவதற்கான வசதி உள்ளே இல்லாததால் அவரால் எழுத முடிவது இல்லை. காலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்துவிடுவார், பகல் நேரத்தில் உறங்கவே மாட்டார்.

கொசுக்கடி, பூச்சி தொல்லையைக்கூட சமாளித்துக் கொள்ளும் கனிமொழி யால் தண்ணீர்ப் பிரச்னை​யைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனென்றால் ஸ்கின் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு, உள்ளே தண்ணீர் மோசமாக இருக்கிறது.

மொழிப் பிரச்னையால் பிற கைதிகளுடன் பேசுவது அவருக்குச் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உள்ளே இருக்கும் ஒரு சில தமிழ்க் கைதிகளுடன் அடிக்கடி உரையாடுவார். பெண் கைதிகளுடன் சேர்ந்து கைத்தொழில் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

சந்திக்க வருபவர்கள், பழங்கள், பலகாரங்கள் வாங்கி வந்தால், கனிவோடு தவிர்த்துவிடுவார். காரணம் பழங்களோ சாப்பாடோ வீணாகி விட்டால் அவற்றை அப்புறப்படுத்தக்கூட நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அதுவே கொசுப் பிரச்​னையைப் பெரிதாக்கி விடும் என்பதால்தான் அந்த எச்சரிக்கை!'' என்றார்கள்.  

அவருக்குக்கு சிறை அதிகாரிகள் மத்தியில் மிகுந்த மரியாதை. 'சீக்கிரமே ஜாமீன் வாங்கிட்டுக் கிளம்புங்க...என அவ்வளவு ஆறுதலாகப் பேசுவார்களாம்.

''சரியான சட்ட நடவடிக்கைகளை முன்​னெடுத்து இருந்தால், நிச்சயம் கனிமொழியை இந்​நேரம் ஜாமீனில் எடுத்து இருக்கலாம் எனப் பிரபல வழக்கறிஞர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.  

கலைஞர் டி.வி-க்காக வாங்கப்பட்ட 200 கோடிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதில் கனிமொழி உறுதியாக இருக்கிறார்.  தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கும் அது நன்றாகவே தெரியும் என்று நம்புகிறார்.  

ஆனால், இதில் வேறு யாரையும் சுட்டிக்காட்டித் தப்பித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை. 

கனிமொழியை ஒரு தோழியாகத்தான் எனக்குத் தெரியும். பாட்டியாலா கோர்ட்டில் அவரை நான் சந்தித்தபோது முதலில் கேட்டது அந்த http://www.vikatan.com/images/rupee_symbol.png200 கோடி குறித்துத்தான். மெல்லிய சிரிப்போடு பேச்சைத் துவக்கிய கனி
' 200 கோடி வாங்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்கவைத்தவர்களுக்கும் இது தெளிவாகவே தெரியும். என்னை விசாரித்தவர்களுக்கும் இது தெரியும். ஆனால், யாரை நோக்கியும் விரல் காட்டும் நிலையில் நான் இல்லை. திகார் சிறையைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனாலும் கைதாவதில் இருந்து தப்பித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் அந்த பாரத்தை நான் தாங்கிக்கொண்டேன். நான் தப்பிக்க நினைத்து இருந்தால், அந்த இடத்தில் வேறு ஒரு மனிதரை நிச்சயம் நிறுத்தி இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் காரணம் ஆகவில்லை என்கிற மனநிறைவே எனக்குப் போதும் எனச் சொன்னார். 

எப்போதும் இல்லாத அளவுக்கு கனியின் பேச்சில் அப்படி ஒரு நிதானமும் பக்குவமும் இருந்தது. 'உடலுக்கு ஏதும் பிரச்னை இல்லையே?’ எனக் கேட்டேன். 'உடம்புதான் கொஞ்சம் டல்லா இருக்கு. ஆனா, எதையும் தாங்குற அளவுக்கு மனசு தில்லா இருக்கு. யார் நல்லவங்கன்னு இந்த வயசுலேயே அடையாளம் கண்டுக்கிட்டேன். இந்த நிமிஷம் வரை கட்சிக்கும் தலைவருக்கும் உண்மையான விசுவாசத்தோடு இருக்கேன். எதையும் பேசாமல் நான் அமைதியாக இருப்பதற்கும் என்கிட்டே இருக்கிற உண்மைதான் காரணம்என்று சொன்னார்.  

"எந்த நேரத்திலும் வெடித்து வெளியே வரக்கூடிய அளவுக்கு கனியிடம் நியாயமான மனக் குமுறல் இருக்கிறது. ஆனால், அதை வெளிக் காட்டாத அளவுக்குப் பக்குவமான அரசியல்வாதியாக திகார் வாழ்க்கை அவரை மாற்றிவிட்டது!''  
என்கிறார் அவரை சமீபத்தில் சந்தித்த பெண் பிரமுகர் ஒருவர்.

சரி, மொத்தத்தில் கனிமொழியின் தற்போதைய மனநிலை எப்படி இருக்கிறது? 24-ம் தேதி நிச்சயம் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடுமா? வெளியே வரும் வாய்ப்பு உறுதியானால், கனிமொழியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும்?

அடுத்த இதழில் 

_ டெல்லியில் இருந்து இரா.சரவணன் 

Disinformation என்பது இரண்டாம் உலகப் போர் முதல் பயன் படுத்தப்படும் மிகப் பெரிய ஆயுதம்! ஜூனியர் விகடனில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரையையே எடுத்துக் கொள்ளுங்களேன்! என்ன சொல்ல வருகிறார்கள்?  

எவர் தரப்பு நியாயங்களைப் பேசுகிறார்கள்?
 
இந்த ஒரு நபருக்கு மட்டும் தான் திஹார் சிறையில் திகில் வாழ்க்கையா?அங்கே இருக்கும் மற்றக் கைதிகளுக்கு இல்லையா?

"
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே பாளையங்கோட்டை சிறையினிலே" என்று சிறையில் இருந்ததையே மிகப் பெரிய தியாக சரித்திரமாக மாற்றிப் பேசுகிறவர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள்

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சில வரிகளைத் தடிமனாக்கி போட்டிருப்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்! இந்த செய்திக்குப் பின்னால் யாருக்கோ ஒரு மெசேஜ் இருக்கிறமாதிரி இல்லை

அவர் தன்னை நிரபராதி என்று நம்புகிறார்! தவறில்லை!ஆனால், "இதில் வேறு யாரையும் சுட்டிக்காட்டித் தப்பித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை." இதற்கு என்ன அர்த்தம்?

சீக்கிரமாக வெளியே கொண்டுவர முடியவில்லையானால், வேறு யாரையோ சுட்டிக் காட்டித் தப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும்! அப்படித்தானே!

"கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் அந்த பாரத்தை நான் தாங்கிக் கொண்டேன். நான் தப்பிக்க நினைத்து இருந்தால், அந்த இடத்தில் வேறு ஒரு மனிதரை நிச்சயம் நிறுத்தி இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் காரணம் ஆகவில்லை என்கிற மனநிறைவே எனக்குப் போதும்"

இந்த வசனம் யாருக்கென்றாவது புரிகிறதா? புரியவில்லை என்றால் ஏதாவது துருப்பிடித்த உளியை எடுத்து ஓசை எழுப்பிப் பாருங்கள்!

"எந்த நேரத்திலும் வெடித்து வெளியே வரக்கூடிய அளவுக்கு கனியிடம் நியாயமான மனக் குமுறல் இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டாத அளவுக்குப் பக்குவமான அரசியல்வாதியாக திகார் வாழ்க்கை அவரை மாற்றிவிட்டது!"

திகாரில் இருந்தால் தான் பக்குவமே வரும் போல!இன்னொரு குடும்பத்து வாரிசுகளுக்கு ஒரு போட்டி குறைந்தது என்று நினைத்து விடாதீர்கள்,போட்டி இனிமேல்தான் உக்கிரமாக, பக்குவம் இப்போது தான் ஆகியிருக்கிறது என்று ஒரு அர்த்தம் தொனிக்கிறதா?

4 comments:

  1. ஊழல் செய்த தமிழக அரசியல்வாதிகளிடையே துரதிருஷ்டசாலி கனிமொழிதான் போலிருக்கிறது.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ராபின்!

    ஊழல் செய்த அரசியல்வாதிகள் எவரும், திமுக முதல், இரண்டாம் மற்றும் மருமகன் குடும்பத்தினரைப் போலஆட்டடம் ஆடியதுமில்லை,இப்போது புலம்பித்தள்ளுவதுபோலப் புலம்பியதுமில்லை என்ற ஒரே ஒரு அடிப்படையைப் பார்த்தீர்களானால், உங்களுடைய இந்த ஆதங்கத்துக்கு இடமே இருக்காது. தனிப்பட்ட முறையில் கனிமொழி என்ற நபர் மீது எனக்கு காழ்ப்புணர்வு அல்லது மரியாதை எதுவுமே கிடையாது.நேற்றைய நாட்களில் நடந்ததையும், இப்போது நடப்பதையும் ஒப்பீடு செய்து மட்டுமே என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.

    Artificial intelligence, Machine translation பற்றிய உங்கள் வலைப்பதிவுகளைப் பார்த்தேன்.

    ReplyDelete
  3. துருப்பிடித்த உளி.. இன்னும் புரியலியே?
    disinformation சரியே. நல்ல கட்டுரை.

    ReplyDelete
  4. உலகத்திலேயே, ஓடாத படத்துக்கு கதைவசனம் எழுதுவதற்கு ஐம்பது லட்சம் சம்பளம் வாங்க முடிந்த ஒரே திரைக்கதை வசனகர்த்தா கருணாநிதி என்பதும், அப்படி அவர் சமீபத்தில் கதை வசனம் எழுதி ஜனங்களை தலைதெறிக்க ஓட வைத்த ஒரு படத்தின் பெயர் உளியின் ஓசை என்பதும் தமிழ்நாட்டைத்தாண்டித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    ஆக, அப்பாதுரை சார் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்பது நன்றாகப் புரிகிறது! :-)))))

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!