சிறை மீட்க ஸ்டாலின் வருகிறார்....! ஜாமீன் அப்டேட்ஸ்!


கனிமொழி ஜாமீன்: தில்லியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தினமணி இன்றைய செய்திகளில் ......

அப்டேட் அப்டேட்டுன்னு சீரியசாகவே இருந்தா எப்படி? கொஞ்சம் சிரிக்கவும் வேண்டாமா? விகடன் உபயத்தில்....

புதுதில்லி, நவ.20: கடந்த ஆறு மாத காலமாக திகார் சிறையில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு ஜாமீன் விடுதலை பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தார்.

கனிமொழி சார்பில் இப்போது வாதாடுபவர்களைவிடத் திறமை சாலியான வழக்கறிஞர்களை ஆஜராகச் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் வந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரைத் திங்கள்கிழமை சிறையில் சந்தித்துப் பேச உள்ளார் ஸ்டாலின்.


"2 ஜி அலைக்கற்றை' ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நவம்பர் 3-ம் தேதி நிராகரிக்கப்பட்டன.

கனிமொழியைச் சாதாரணப் பெண்மணி என்று கருத முடியாது என்றும், வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை தொடங்க உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி காரணம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கனிமொழிக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆதரவாக உள்ள விவகாரங்கள் குறித்து வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை தில்லி வந்தார். இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதாடினார். அப்போதும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

அதன் பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கேட்டு மூத்த வழக்கறிஞர் அல்டாப் அஹமது வாதாடியும் ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் 3-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணக்கு வந்தபோது அல்டாப் அஹமத் ஆஜரானார்,

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்' என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவித்த பின்னரும் ஜாமீன் பெற இயலாதது வழக்குரைஞர்களின் குறைபாடு என்று தி.மு.க. தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் கனிமொழிக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தி.முக.வுக்காக நீண்ட காலமாக வாதாடிவரும் வழக்குரைஞரான சண்முகசுந்தரம் போன்றவர்களை மாற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.


ராசாத்தி அம்மாள் தரப்புக்குப் பிடிக்காதவர் என்று கூறப்பட்டாலும் வழக்குரைஞர் சண்முகசுந்தரம் இல்லத் திருமணத்தில் கருணாநிதி சமீபத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு ஜாமீன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தத்தான் தில்லிக்கு ஸடாலின் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது பயண நோக்கம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஒரு தனியார் ஹோட்டலில் ஸ்டாலின் தங்கியிருக்கிறார்.

கட்சி சார்பில்லா வழக்குரைஞர்?

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 1-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தில் வருகிறது. ஓரிரு வாரங்களுக்கு பின்னர் நீதி மன்றம் கிறிஸ்துமஸ், புது வருடத்துக்காக விடுமுறை விடப்படும். அதற்கு முன்பே கனிமொழி ஜாமீன் பெற வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் "இன்று ஜாமீன் கிடைத்து விடும்; இன்று விடுதலை ஆகிவிடுவார் என்று தவறான தகவல்களை தி.மு.க வழக்குரைஞர்கள் கருணா நிதிக்குத் தெரிவித்து வருவது, அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆகையால் கனிமொழிக்காக வாதாடும் வழக்குரைஞர்கள், கட்சி சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவரைக் கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் வலியுறுத்தி வருகிறார் என்று தெரிகிறது.

கேடி பிரதர்ஸ் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை. கேடி ப்ரதர்சுக்கு இத்தாலியமம்மியின் ஆலோசகர் அஹமது படேலிடம் செல்வாக்கு நிரம்ப இருப்பது ஊரறிந்த ரகசியம். ஜூலை இறுதியில் தாக்கல் செய்யப்படவிருப்பதாக சொல்லப்பட்ட மூன்றாவது துணைக் குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.அதில் யார்யார் பெயரை சேர்ப்பது என்பதை விட, யார் யார் பெயரை விடுவது என்ற தலைவலியே சிபிஐக்குப் பெரிய தலைவலியாக இருக்கும் போல!

நாளை நாடாளுமன்றம் கூடவிருக்கும் தருணத்தில் சிதம்பரத்தின் மீதான நெருக்கடி முற்றிவருகிறது! டாக்டர் சுப்ரமணிய சுவாமி ஒருபுறமும், நாடாளு மன்றத்தில் சிதம்பரத்தைப் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதும் பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, சிபி ஐ, மறைந்த பிரமோத் மகாஜன் மீதும் குற்றம் சாட்டி ஒரு புதுக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சோதனையை நடத்தியிருக்கிறது. சிதம்பரத்தைக் காப்பாற்றக் கடைசி முயற்சி என இதை எதிர்க்கட்சியான பிஜேபி சாடி இருக்கிறது.

ஒருமாதம் நடைபெறவிருக்கும் இந்தநாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னால், ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு தாக்குப் பிடிக்குமா அல்லது இடைத்தேர்தலை சந்திக்கவேண்டி வருமா என்ற கேள்வியின் பின்னணியில் ஸ்டாலின் கனிமொழி ஜாமீன் பிரச்சினையில் டில்லிக்கு விசிட் அடித்திருப்பது, கொஞ்சம் வித்தியாசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.



No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!