"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்

நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்

நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:


ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில், ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

ஒன்றை விடுவதற்கோ, அல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையை, சத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை.

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “

The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளை, முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இந்த விஷயத்தை, முழு மொழிபெயர்ப்பாகவோ, விமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லை. இதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவு. என்னோடு, இதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம், அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போல, தட்டுத் தடுமாறி, குளறி, தடுக்கி விழுந்து, இப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாக, அதன் படிப்பினையாக, பிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலே, மனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.

உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடி, யானையைத் தடவி, யானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான். ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மை; ஆனாலும் முழுமையான உண்மை அல்ல. அதனால், சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், "நான் யார்" என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்" என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்" அல்ல என்பதை, கொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார், இங்கு என்ன செய்கிறேன், என்னுடைய உண்மையான கடமை எது" என்ற தேடல் தான்.

எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. கற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும், அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால், இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன், அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டு, ஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.

அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்து, வைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்தது. இவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலை] திருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.

தந்தையின் மரணம், இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகம், எதையும் எதிர்மறையாகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள், லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்" என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும், இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும், பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாது. குரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும், மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் இறங்கி விட முடியாது.

Forward, for ever forward!

At the end of the tunnel is the light…

At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு

பயணத்தின் முடிவில் வெளிச்சம்

போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது , ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன், தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.

நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும், நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவை. இன்றைய வலி, துயரம்,தோல்வி என்பதெல்லாம், உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்ல, தெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும். தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாக, இவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில், இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!