மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் மஹாராஷ்ட்ரா! சரத் பவாருக்கும் அடி சறுக்கும்!

இந்தமாதத்துவக்கத்தில் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடி மருந்துகளுடன் ஒரு கார் பிடிப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாக பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங்கை ஒரு டம்மி இடத்துக்குப் பணிமாற்றம் செய்து பிரச்சினையை முடிக்க உத்தவ் தாக்ரே முயன்றது இன்னும் விபரீதமாகப் பயணிக்கத் தொடங்கி இருப்பது இப்போதைய அரசியல் பரிதாபம். இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதில், இப்போது NIA விசாரணை வளையத்துக்குள் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர்/ என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாசே மாதாமாதம் 100 கோடி ரூபாய் வசூலித்துத் தரவேண்டுமென உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நிர்பந்தம் செய்ததாக சொல்லியிருக்கிறார். போதாக்  குறைக்கு இந்தவிவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பரம் பீர் சிங் மனு தாக்கல் செய்திருக்கிறார். சரத் பவார் தனது கட்சி ஆசாமி அனில் தேஷ்முக்குக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  


முகநூலில் பிரகாஷ் ராமசுவாமி இந்தவிவகாரத்தின் பின்னணியை கடந்த மூன்று நாட்களாகப் பதிவிட்டு வருகிறார். வெறும் காசுபறிக்கும் வேலை, மஹா ஊழல் என்பதையும் தாண்டி இதன்பின்னால் ஒரு சதிவேலை இருப்பதாக ஒரு சந்தேகம் வலுவாக எழுந்திருக்கிறது.  

பாகம்-1

முதலில் சச்சின் வாஸே என்கிற சப்-இன்ஸ்பெக்டர் யார் என்று பார்ப்போம். சச்சின் வாஸே 70இல் கோலாபூரில் பிறந்தவர். மஹாராஷ்ட்ரா போலீஸில் அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர். ஆனால் மற்ற போலீஸ் மாதிரி தொப்பை, லத்தி மாதிரி இல்லாமல்.. ஒரு கை தேர்ந்த என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். 63 பேரை இதுவரை போட்டுத்தள்ளியவர்.

இந்த ஆள்.. ஒரு என்கவுன்டர் கேஸில் வசமாய் சிக்கிக் கொள்ள.. கோர்ட் இந்த ஆளை போலீஸ் ட்யூட்டியை விட்டே தூக்கியது. அது என்ன..? இது ஒரு 17 வருட முந்தைய கேஸ்.

நான் மும்பையில் வசித்து, பையை தூக்கிக்கொண்டு, தினமும் 7.52, 8.04, 8.32 என்று விநோதமான நேர ரயில் பிடித்து ஓடிய காலமது. அதாவது டிசம்பர் 2002 இரண்டாம் தேதி காட்கோபர் ஸ்டேஷனில் ஒரு பாம் வெடித்தது. வழக்கம்போல் இதற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று மய்யனார்கள், அமைதி காக்க சொன்னார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்பார்கள். இந்த தர்க்கம்லாம் அப்போது புரியவே புரியாது. இப்போது.. ஹீரோ சச்சின் வேஸேவிடம் இந்த பாம் ப்ளாஸ்ட் கேஸ் வருகிறது. நான்கு பேரை போலீஸ் போடாவில் (POTA) வில் கைது செய்ய..அதில் ஒருவர்தான் 27 வயதான யூனுஸ். இவர் துபாய் சாப்ட்வேர் என்ஜினீயர். தங்களின் வாப்பா அம்மியை பார்க்க மும்பை வந்தவரை, 25 Dec 2002 இல்..போலீஸ் கைது செய்தது. இப்போது இந்த வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. கடைசியாக யூனுஸை ஜனவரி 6 2003 இல் பார்த்ததாக சாட்சிகள் கிடைத்தது.

வாஸேவின் டீம் அடித்த அடியில் ரத்தம் கக்கி யூனுஸ் லாக்அப்பிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது.ஆனால், போலீஸ் தரப்பு, யூனுஸ் தப்பி விட்டார். அவரை துரத்தி சென்ற போலீஸ் வேன், ஏரி ஒன்றில் விழுந்து விட்டது என்று வாஸே, கோர்ட்டில் சத்தியம் அடித்து.. நஹி மாலும் பாய் சாப் என்று சொல்ல, கோர்ட் இதை நம்ப முடியாத சமயத்தில்.. யூனுஸின் தந்தை, ஹேபியஸ் கார்பஸ் ஒன்றை கோர்ட்டில் போட்டு யூனுஸை தேட...

கோர்ட் உத்தரவு பிறப்பித்து.. யூனுஸை தேட சொன்னதுல்.. மும்பை சிஐடி ப்ராஞ்ச்.. மொத்த கேஸ் கட்டையும் பிரித்து மேய்ந்ததில்.. அண்ணல் ச்ச்சின் வாஸேயின் கதை, கற்பனை, டைரக்‌ஷன் எல்லாம் வெளியில் வந்தது. வாஸேவை உடனடியாக வேலையிலிருந்து தூக்க கோர்ட் உத்தரவிட, என்கவுன்டர் போலீஸ்கார்.. உடனடியாக சாதாரண மனுஷன் ஆனார். அதோடு உடனடியாக, அவரை போலீஸ் கைது செய்தது.

மனுஷன் 2004 இல்.. பெயிலில் வந்தவர் பெயிலிலேயே இருந்தார். இப்போது சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பீடு கோர்ட்டில் 17 வருஷமாய் படு ஸ்பீடாய் இந்த கேஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்த கேப்பில், சச்சின் வாஸே சிவசேனா பார்ட்டியில் சேர்ந்து விட்டார்.. பார்ட்டிக்கு பணம் வசூல் பண்ணுவது, மிரட்டல் போன்ற குண்டாகர்தியில் மும்முரமாய் இருந்த போது.. சிவசேனா, ஒரு ஜனநாயக விபத்தொன்றில் ஆட்சியை பிடித்தது.#vase gate பாகம்1/5.   தொடரும்.

பாகம்-2

மார்ச் 2004 இல் சச்சின் வஸே கைதாகி, சஸ்பென்ட் ஆனவுடன், இவரை ஏறக்குறைய போலீஸ்துறை மறந்தேவிட்டது. 63 பேரை என்கவுன்டர் செய்த போலீஸ்.. கைதிலிருந்து தப்பிக்க, ஷிவசேனாவில் சேர்ந்து.. எங்கெல்லாம் அயோக்கியர்கள் இருக்கின்றார்களோ.. அவர்களிடம் பணம் பறித்து.. மும்பை அரசியல் வாதிகளான ஷிவசேனாவிற்கு.. வசூல் மன்னனாக இருந்தார். நடுவில் ஃபத்னாவிஸ் ஆட்சியை பிடிக்க.. உத்தவ் தாக்கரே.. ஃபத்னாவிஸிடம் சச்சின் வஸேவை போலீஸ் ஃபோர்ஸில் எடுத்துக்கொள்ள நிர்பந்திக்கப் பட்டது. 

நன்றாக கவனித்தீர்களேயானால்.. பத்னாவிஸ், ஒரு முடிவு எடுக்கு முன், அதன் back up papers மற்றும்.. அது அரசியல்ரீதியாக சரியானதா..? என்று ஆராய்ந்துதான் எடுப்பார். இல்லையென்றால்.. இந்த ஷிவசேனை சிறுத்தைகள், என்றோ ஃபத்னாவிஸின் ரத்தத்தை, குடித்திருக்கும். சமீபத்திய உதாரணம்.. மெட்ரோ ரயில், மற்றும் புல்லட் ரயில் பணத்தை பத்திரப்படுத்தியது. பத்னாவிஸிடம், கேட்டவுடன், மனுஷன், இப்போது அட்வேட் ஜெனரலிடம் பேசியதில், வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, இது தேவையில்லாத தலைவலி, இந்த ஆள் ஒண்ணும் யோக்கிய சிகாமணி இல்லை என்கிற போலீஸ் சர்டிபிகேட்டுடன் உத்தவ் தாக்கரேயின் விருப்பத்தை அரபிக்கடலில் தூக்கி எறிந்து விட்டார் பத்னாவிஸ். இப்படி 2018 இல் ரிஜக்ட் ஆன வஸேவின் அப்பாயின்மென்ட் ஆர்டர்.. உத்தவின் அகாடி அவதாரத்தில் உயிர் பெற்றது.

பரம்பீர் சிங்தான் மும்பை போலீஸ் கமிஷனர். உதவாக்கரை சீஃப் மினிஸ்டர் பரம்பீரிடம்.. வழக்கமாய் சஸ்பென்ட் ஆன அதிகாரிகளை, ரிவ்யூ பண்ணுவீர்கள் தானே..? அப்படி, செய்யும்போது.. சச்சின் வஸே, மஹாராஷ்ட்ரா போலீஸுக்குள் சேர்ந்து இருக்க வேண்டும், என்கிற வாய்மொழி உத்தரவின் பேரில், ஜூன்5 2020 அன்று இரவு 10 மணிக்கு, ஒரு மீட்டிங் கூட்டப்பட்டது.

இரவு 11 மணிக்கு, ஒரு கமிட்டியை கூப்பிட்டு, வஸேவை போலீஸ் துறைக்குள் உள்ளே எடுக்க என்ன வழி..? என்று கேட்ட பத்தாவது நிமிடத்தில்.. எந்தெந்த போலீஸ் காரர்கள் வேண்டும் என்கிற லிஸ்ட் ரெடியாகி, கோவிட்-19 காரணம், போலீஸ் ஆசாமிகள் கிடைக்காத காரணத்தால் இவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கிறோம் என்கிற மஹாராஷ்ட்ர அரசு கஜெட் அறிவிப்பு இரவு 2 மணி, அதாவது ஜூன் 6 அதிகாலை கையெழுத்தாகி, 3 மணிக்கு ப்ரின்ட் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜூன் 6 அதிகாலை 4 மணிக்கு சச்சின் வஸே போலீஸில் மீண்டும் ஆர்ம்ஸ் டிவிஷனுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். பத்து மணிக்கு மும்பை போலீஸ் கமிஷனர் ஆபீஸில் ஆர்டர் வாங்கிகொள்ள அழைத்து.. க்ரைம்ப்ராஞ்சில், மீண்டும் பழைய பதவியில் வைத்து அதாவது க்ரைம் ப்ராஞ்சில் வைத்து அழகு பார்த்தனர் தாக்கரேக்கள்.

அவரிடம், உடனே, ஹ்ரிதிக்-கங்கணா ஃபேக் இமெயில் கேஸ், அர்னபின் டிஆர்பி கேஸ், அப்புறம் அன்வே நாயக் என்கிற கான்ட்ராக்டரின் தற்கொலை கேஸ் எல்லாவற்றையும் தரப்பட்டது.

அன்வே நாயக்கின் மனைவியை ஷரத் பவார் கொஞ்ச நாள் முன்னர் சந்தித்த பின்புலம் அதிகார மட்டத்தில் பேசப்பட்டது. அந்த நேரத்தில்தான், அர்னப் கோஸ்வாமி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேஸை, தோண்டி துருவி ஆராய்ந்து.. அது மும்பையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதியின் வீட்டிற்கு வழிகாட்டியது என்றவுடன், வெகுண்டெழுந்த சஞ்சய் ராவத்தும், தாக்கரேக்களும்.. தனிப்பட்ட வன்மத்தை காட்ட முடிவெடுத்தனர். ஏற்கெனவே, ஷரத் பவாருக்கு, அர்னாப் மீது மரண காண்டு. அப்போதுதான், ஒரு ஸ்வாமிஜியை, ஒரு கும்பல் அடித்தே கொன்றது. அதற்கு பின்னணியில் அன்னை மைனோ இருப்பதாய் அறிவித்த அர்னாபின் கார் மீது தாக்குதல் நடந்தது.

அகாடிகள் சேர்ந்தனர்.. அர்னப்பை நவம்பர் 4 2020 கைது பண்ண, பரம்பீர் சிங்கிற்கு உ தாக்கரே அரசு அனுமதி அளித்தது.. நான் சச்சின் வஸே.. மும்பை க்ரைம் ப்ராஞ்ச் சப்இன்ஸ்பெக்டர். உன்னை.. அர்னப் கோஸ்வாமியை கைது பண்ண வந்திருக்கிறேன்.. You have a right to remain silent...and that too to Arnab..

இங்கிருந்து சச்சின் வஸேவின் லீலைகள் படு வேகமடைந்தது..அடுத்த பாகங்களில்.. இன்னும் சில சஸ்பென்ஸுடன் பார்ப்போம். முடிந்தால் ஷேர் பண்ணுங்கள்.#vazegate பார்ட் 2/5.    தொடரும்

பாகம்-3

நீண்ட பதிவு.. முடிஞ்சளவு இன்டரெஸ்டிங்காக தந்திருக்கிறேன்.. முடிந்தால் ஷேர் பண்ணுங்க..

முகேஷ் அம்பானியின் வீடு, மும்பையின் மையப் பகுதியான கார்மைக்கேல் ரோடில் இருக்கிறது. அந்த வீட்டின் பெயர் ஆன்டில்லா.. அதைப்பற்றிய விவரம் தேவையில்லை. 24/7 செக்யூரிடி கார்டுகள் சுற்றி வரும் இந்த வீட்டு காம்பௌன்டின் அருகில், ஒரு சுபயோக சுபதினத்தில் அதாவது February 25 அன்று..தவறான திசையில், ஒரு ஸ்கார்ப்பியோ வெகுநேரமாய் நின்று கொண்டிருந்ததை கவனித்த செக்யூரிடி மேனேஜர்கள்.. போலீஸூக்கு ஃபோன் பண்ண.. போலீஸ் அந்த காரை துழாவியதில்..  20 ஜெலடின் குச்சிகள், மும்பை இந்தியன் கொடி, ஒரு கடிதம்.. இதில்.. இது ட்ரையிலர்தான்...முழுபடம் விரைவில் என்று.. ஜயிஷ் உல் ஹிந்த் என்கிற தீவிரவாத இயக்கம் பெயர் இருந்தது.. அதில் மொத்த அம்பானி குடும்பத்தை அழித்து விடுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது. முகேஷ் மற்றும் நீடா அம்பானிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதையெல்லாம் காமெராவில் பார்த்போது.. ஸ்கார்ப்பியோவின் பின்னால் ஒரு வெள்ளை இன்னோவாவும் ஒட்டிக்கொண்டே வந்தது. PPE சூட் போட்ட ஆசாமி ஸ்கார்ப்பியோவில் இருந்து போனதும் தெரிய வந்தது...

போலீஸ்.. இதையெல்லாம் கைப்பற்றி, இது யாராக இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்த போது, ஜெயிஷ் உல் ஹிந்த்.. ஆனால்.. அதே சாயந்திரம்.. அய்யா சாமி.. எங்களுக்கும் இந்த குண்டு வைத்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமில்லை என்று இந்த ஜெயிஷ் உல் ஹிந்த் அலறியபோது.. மத்திய அரசின் NIA களத்தில் இறங்க ஆரம்பித்தது..

இந்த ஸ்கார்ப்பியோ முதலில் யாருடையது என்று விசாரிக்க ஆரம்பித்தபோது.. இதன் சேஸிஸ் அழிக்கப்பட்டு இருந்தாலும் இதை ஃபாரென்ஸிக்கில் எளிதாய் கண்டுபிடித்துவிடலாம்.. இந்த ஸ்கார்பியோ தானேவில் வசிக்கும் சாம் என்கிற ஒரு இன்டீரியர் டிஸைனருடையது என்று கண்டுபிடித்தார்கள். தானே நவ்பாடாவில் வசிக்கும் இவரது வீட்டை போலீஸ் தட்டியபோது.. கதவைத்திறந்த சாம்..இந்த காரை இன்டீரியர் பண்ண மான்ஸுக் ஹிரேனிடம் தந்தேன்.. பில் 2.6 லட்சம். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால்.. கொஞ்ச நாள் நீ இந்த வண்டியை ஓட்டு, பின்னர் காசு தந்து திருப்பி வாங்கிக்கொள்கிறேன் என்றார். அதாவது மாப்பிள்ளை நானில்லை, ஆனால் அவர் சட்டை என்னோடது என்றார். இந்த ஸ்கார்ப்பியோவை இப்போ அவர் தான் வைத்திருக்கிறார் என்றார்.. இனி தேதி வாரியாக இந்த விஷயத்தை அலசுவோம்..

February 26 : இந்த ஸ்கார்ப்பியோ மன்ஸூக் ஹிரனுக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டு, மன்சூக்கை மும்பை ATS விசாரிக்க அழைத்துச்சென்றது.

இந்த மன்ஸூக்கிடம் விசாரித்ததில்.. ஆமாம் இந்த கார் சாம்மின் கார்தான்.. இந்த கார் காணாமல்போனது.. காணாமல் போன அன்று நான் ஒரு வேலையாக மும்பை க்ராஃபோர்ட் மார்கெட்டுக்கு போனேன்.. இது விக்டோரியா டெர்மினஸ் அருகில் இருக்கறது. கார் மக்கர் பண்ணியதால்..ரோடின் நடுவில் அதாவது Mulund-Airoli லிங்க் ரோடில் நிறுத்திவிட்டு ஓலாவில் போய் விட்டேன். பிஸினஸ் முடித்துவிட்டு வந்து பார்த்தால் இரவில் கார் காணவில்லை.. அதான் கார் காணவில்லை என்று ஒரு எப்ஐஆர் கூட பதிவு பண்ணினேன் என்றார். என்ஐஏ எப்ஐ ஆர் பற்றி விசாரிக்க ஆரம்பித்தது .. 🙂 இந்த எப்ஐஆரை பதிவு பண்ண வஸே தானே போலீஸை ப்ரஷர் பண்ணி உடனடியாய் வாங்கியதும் தெரிய வந்தது.

February 27:டெலிக்ராம் அக்கவுன்ட் ஒன்று.. ஜெயிஷ் உல் ஹிந்த்..என்று கூறிக்கொண்டு, மிகப்பெரிய தொகையை, மொனிரோ என்கிற க்ரிப்டோ கரன்ஸி மூலம் பணத்தை மாற்றச்சொல்லி.. மிரட்டல் விட்டது... அதே தினத்தில் மன்சுக், சச்சின் வஸேயுடன் டொயேடோ ப்ராடோ காரில் மும்பை ATS ஆபீஸில் நுழைவதை க்ரைம் ப்ராஞ்ச்சின் சிசிடிவி பதிவு செய்திருந்தது..

மார்ச்2: மன்ஸூக் ஹிரேன்...மஹா முதல்வர் உத்தவ்வுக்கும், அனில் தேஷ்முக்- மஹா உள்துறை மினிஸ்டருக்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்கும், தானே போலீஸ் சீப் விவேக் பான்ஸல்கருக்கும் கடிதம் எழுதினார்.. NIA என்னை டார்ச்சர் பண்ணுகிறது.. நான் ப்ராது கொடுத்தவன்.. என்னை குற்றவாளியாக NIA பார்க்கிறது என்றார்.மார்ச்4: டாவ்டே என்கிற காந்திவிலி க்ரைம் போலீஸ் ஒருவரிடம் இருந்து போன் வந்தது மன்சூக்குக்கு.. தானே கோட்பந்தர் ரோட்டில் வந்து மீட் பண்ணு என்று.. அதன் பின்னர் ஐந்து மணி நேரத்தில் மன்ஸூக் மாயமானார்.

மன்ஸூக்கின் உடல் கல்வா creek எனப்படும் அரபிக்கடல் பேக்வாட்டர் பகுதியில் கிடைத்தது. மனஸூக் தற்கொலை செய்துகொள்ள கல்வா க்ரீக்கில் குதித்திருக்கலாம் என்று மும்பை போலீஸ் உடனடி ஜோஸியம் சொல்லியது. ஆனால் தற்கொலை செய்து கொள்பவர், வாய் நிறைய துணி அடைக்கப்பட்டு, கோவிடுக்காக மாஸ்க் அணிந்தும், மண்டையில் அடிபட்டும் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்..? என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. NIA எழுப்பியது..

மார்ச்5: மஹாவின் முந்தைய முதல் மந்திரி பத்னாவிஸ் சட்டசபையிலேயே..வஸேயும் மன்ஸூக்கும் இந்த குண்டு வைத்ததில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார்.இருவரும் தொடர்பில் இருந்தார்கள் என்றார். 

மார்ச்6: மன்ஸூக்கின் குடும்பம், இந்த சாவை ஏற்க மறுத்து.. உடலை வாங்க மறுத்தது. மன்ஸூக் சொன்னது போல்.. அவரை டார்ச்சர் பண்ணி இருக்கிறார்கள் போலீஸ் என்றார்கள்.. அவர் தற்கொலை பண்ண சான்ஸே இல்லை என்றார்கள். மன்ஸூக்கின் போனின் கடைசி லொகேஷன், தனஞ்செய் காவ்டே என்கிற ஷிவசேனை நேதாவின் வீட்டருகில் இருந்ததாய் காட்டியது. தனஞ்செய்யும் மன்சூக்கும் 2017 கேஸ் ஒன்றில்.. மிரட்டி பணம் பறித்த  கூட்டாளிகள். NIA வஸேவை ரிமான்டிலெடுக்க கோரியது.

மஹா அரசு, ஆன்டிலா கேஸ், மன்சூக்கேஸ், திருடப்பட்ட ஸ்கார்ப்பியோ கேஸை மும்பை ATSக்கு மாற்றியது. இதெல்லாம் NIA க்கு வரும்.. வடிவேல் பீச் குதிரை மாதிரி..மார்ச்8: ஆன்டிலா கேஸை NIA கையிலெடுத்தது. இதைவிட சூப்பர் விஷயம் இதோ..

மார்ச்11: தில்லி போலீஸ், இந்தியன் முஜாஹிதீன் ஆசாமியின் திஹார் செல்லில் இருந்து, அம்பானி குடும்பத்துக்கு விட்ட மிரட்டல் மொபைலை பறிமுதல் செய்தது. இந்த செல்லில் இருந்துதான் ஜெய்ஷ் உல் ஹிந்த் டெலிக்ராம் அக்கவுன்டே உருவாக்கப்பட்டது. இந்த செல்லின் ஐபியை மாஸ்க் பண்ண தோர் எனும் ப்ரௌசரை உபயோகித்தனர் குற்றவாளிகள்.. TOR ப்ரௌசர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஹாக்கர்ஸ், தீவிரவாதிகள் உபயோகிக்கும் ப்ரோசர்.. உங்கள் ஐபி.. காரியர் எல்லாம் மாஸ்க் பண்ணலாம்..

செமல்ல..?  இன்னும் பல திருப்பங்களுடன் அடுத்த பாகம் விரைவில்.#vazegate பார்ட்-3/5.  தொடரும்....                  

பாகம்-4

மார்ச்14:  இந்த ஸ்கார்பியோ பின்னால்  ஒட்டிக்கொண்டே வந்த இன்னோவாவை, NIA பிடித்தனர். அது கிடைத்தது, மஹா க்ரைம் பிராஞ்ச்சில். அது போலீஸ் காராம்.. நம்ம வஸே உபயோகித்ததாம். சுத்தம். பாம் வைக்க போலீஸ் கார். என்ன நாடு இது..? என்று தோன்றுகிறது அல்லவா..? இப்போது சஞ்சய் ராவத் சொல்கிறார்.. வஸே ரொம்பவைம் திறமையான ஹானஸ்ட் ஆபீஸர்ன்னு. ஒத்தை செருப்பை கழட்டி கையில் எடுத்த பொதுஜனம்.. இப்படியான போலீஸை அடிப்பதா.? இல்லை இப்படியான அரசியல்வாதியை அடிப்பதா..? என்று கன்ஃபியூஷனில் அலைவதாக கேள்வி.

சிசிடிவி கேமரா படம் பிடித்ததில்.. மன்ஸூக்கை, வஸே பார்த்து பேசியதும்.. பிபிஈ கிட் போட்ட வஸே ஆன்டில்லியாவில் பாம் வைத்ததுமே தெள்ள தெளிவாக பதிவாகி இருக்கிறது. அடுத்த நாள் NIA வஸே பிபிஈ கிட்டின் உள்ளே அணிந்த ஷர்ட்டையும் கண்டுபிடித்து கைப்பற்றியது.ஐபிஎல் சூதாட்டத்திலும் வஸேக்கு பங்கு உண்டு என்கிறார் பிஜேபியின் ரானே. இதைத்தவிர வஸே வசிக்கும் சொஸைடியின் சிசிடிவி ரிகார்டிங்குகளும் காணாமல் போயிருக்கிறது. மார்ச்15: வஸேவின் க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸிலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில்.. இருந்த சிசிடீவிகளின் புட்டேஜையும் NIA கைப்பற்றியிருக்கிறது.

மார்ச்16: வஸேவின் இடதுகையான போலீஸ்கார் ரியாஸ் காஸியை வைத்து.. சொசைட்டியின் விடியோ ரிகார்டரையே்தூக்கி.. பிப் 17 முதல் பிப் 24 வரையிலான அத்தனை ஃபுட்டேஜையும் ஒரு கடையில் கொடுத்து அழித்தனர். இதைவிட சூப்பர்.. அந்த இன்னோவா, அப்புறம் அந்த ஸ்கார்ப்பியோ கார்களுக்கான போலிநம்பர் ப்ளேட்டை தயாரித்து கொடுத்தது ஒரு கடை. அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதையும் டெலீட் பண்ணிவிட்டுத்தான் அந்த இடத்தையும் விட்டு இவர்கள் நகர்ந்தனர். 

NIA வின் புலனாய்வில்.. முக்கியமாய் ஒரு விஷயம் சிக்கியது. இந்த ஸ்கார்ப்பியோ காணாமல் போகவே இல்லை. இதை வஸே உபயோகித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். ஆனால் கார் ஒணர்.. தொலைந்து போனதாய் எப்ஐஆர் ரெஜிஸ்தர் பண்ண அழுத்தம் தரப்பட்டார் என்கிறது NIA டீம். அந்த அழுத்தமுமே வஸேவின் அழுத்தமே.மார்ச்17: மிகவும் எக்ஸ்பென்ஸிவான மெர்ஸிடஸ் பென்ஸ் கார் ஒன்றை வஸே என்ற சாதாரண அஸிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உபயோகித்ததை போலீஸிலோ, அரசிலோ ஒற்றை கேள்வி கூட கேட்கவில்லை. அந்த காரை இந்த தினத்தில்.. க்ராஃபோர்ட் மார்கெட் ஏரியாவில் பிடித்தனர். அதில் ஸ்கார்ப்பியோ நம்பர் ப்ளேட், மற்ற நம்பர் ப்ளேட்டுகள், 5 லட்சம் கேஷ், மற்றும் ஒரு நோட் எண்ணும் மெஷினையும் NIA கைப்பற்றினர். 

March 18: NIA இதுவரை 5 லக்ஸூரி கார்களை பறிமுதல் செய்திருக்கிறது. ஒரு ப்ராடோ லான்ட் க்ரூஸர்..கண்பத் போஸ்லே என்கிற ஷிவசேனை எம்எல்ஏவின் கார். இதையும் பிடித்து விட.. மொத்தம் 5 கார்கள் மாட்டி இருக்கிறது. இன்னும் இரண்டு கார்களை NIA தேடுகிறது. ஒரு ப்ளூ மெர்ஸிடஸ் மற்றும் ஒரு ஸ்கோடாவும் தேடப்படுகிறது...March 19: மன்ஸூக்கின் பிரேத பரிசோதனையில், மன்ஸூக்கு பின் தலை மற்றும் கழுத்தில்.. ஊமை மொக்கை அடி விழுந்திருக்கிறது. வெளியில் தெரியாத அடியை பிரேத பரிசோதனை சொல்லிவிடும். அதனால், அந்த ப்ரேத பரிசோதனை நடக்கும் போது.. வஸே அந்த ஆஸ்பத்திரியில் வலம் வந்ததை.. சிசிடிவி படம் பிடித்துவிட்டது. அப்போது வஸே இந்த கேஸில் தலையிடாமல் ஒதுங்கி இருக்க அறிவுறுத்தப்படபோதே இத்தனை பிந்தாஸாக மனுஷன் ஆஸ்பத்திரியில் அலைந்ததை.. டீவிக்கள் வச்சு செய்தன..செய்கின்றன..

மார்ச் 20: மிக மிக முக்கியமான திருப்பமாக, மும்பை கமிஷனராக இருந்த பரம்பிர் சிங்கை, ஹோம்கார்டுக்கு மாற்றியது உதவ் தாக்கரே அரசு.. இது சாதாரண ட்ரான்ஸ்பர் இல்லை. இன்னும் உள்ளது உனக்கு என்று பரம்பிர்சிங்தான் இதெற்கெல்லாம் காரணம் என்று.. அவர் தலையை மிஷினில் கொடுக்கும்போது.. பரம்பிர் சிங் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்... அவர் சொன்னது.. மாசம் நூறு கோடி வசூல் பண்ண சொல்லி டார்ச்சர் தருவது. NCP யின் அனில் தேஷ்முக் என்கிற ஷரத் பவார் ஆசி பெற்ற உள்துறை அமைச்சர். இவர் தான் சச்சின் நேரடியாக எனக்கே ரிப்போர்ட் பண்ண வேண்டும்.. 100 கோடிகள் ஹோட்டல்கள், பார்கள், பப்புகளில் இருந்து மாசா மாசம் எனக்கு பைசா வரவேண்டும் என்று வஸேக்கு உத்தரவிட்டதாக பரம்பிர் சிங்  உத்தவ்க்கு நேற்று எழுதிய கடிதத்தில் சொல்லி இருப்பது மஹாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. 

வழக்கம்போல்.. இதற்கு ஆதாரம் என்ன..? பரம்பீர் மேல் வழக்கு பாயும், அரெஸ்ட் ஆகலாம், வேலை போகும், ஜெயில் என்றவுடன், பரம்பீர் இதை வேண்டுமென்றே ஹோம் மினிஸ்டர் மீது போடுகிறார் என்று NCP களமாடுகிறது. ஷரத் பவார் எத்தனை யோக்கியன் என்று பலருக்குமே தெரிந்ததால்.. இந்திய மக்கள் புன்னகைக்கிறார்கள்... இந்த மந்திரி மீது மட்டும் ஏன் பரம்பீர் சிங் குற்றம் சொல்ல வேண்டும்..? உத்தவ் மீதோ அல்லது வேறு யார் மீதோ ஏன் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு இவர்களிடம் விடை இல்லை.. அனில் தேஷ்முக் இந்த கேஸில் சிக்கி முக்குகிறார். தாராளமாய் ஷேர் பண்ணவும் 💕#vazegate பாகம்4/5.  தொடரும்.. 

பாகம்-5

இந்த வாஸே விவகாரத்தை முழுமூச்சாய், இணையத்தில் தேடி எழுத காரணம், நம்முடைய ஜனநாயக தூண்களுக்கு, பணத்தின் மீதான பற்றும், சமூக மதிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து போனதிலும், இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக வணீகரீதியாகிப்போனதும், தேசப்பற்று என்கிற ஒன்று தடாலடியாக உலர்ந்து போனதாலுமே, இதை எழுத முனைந்தேன். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், உள்நாட்டில் சதிசெய்ய காத்திருக்கும் சக்திகளும், அதற்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகளும், அரசுகளும், மதவெறியும், உலக வர்த்தகத்தை மையமாக வைத்து, இந்த தேசத்தை அழிக்க நினைக்கும் மற்ற தேசங்களும் சக்திகளுமே...என்னை எழுத வைத்தது ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

இந்தியா இந்த கோவிட்-19 ஐ தீவிரமாக போராடி, வர்த்தக போட்டி தேசங்கள், இந்தியா சேதமாகும் என்பதில் மண்ணைத்தூவியதிலும், வாக்ஸினை மற்ற தேசங்களுக்கு இலவசமாய் தந்து, உலகரங்கில் நன்மதிப்பை பெற்றதிலும், எல்லைகளில் உதை வாங்கியதிலும், அடைந்த எரிச்சலை, விஸ்ட்ரான் கம்பெனியை எரித்ததிலும், விசாகப்பட்டினத்தில் உள்ள LG கம்பெனியில் நடந்த சேதங்களாலும், பூனே சீரம் இன்ஸ்டிட்யூடில் தீ பரவியதிலும், மும்பை மற்றும் தேசத்தின் பல இடங்களில், மின்சாரத்தை துண்டித்தும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு செய்தியனுப்ப முனைந்தது. இதை தாண்டி, பல இணையங்களை தாக்கியழிக்கவும், விவசாய ப்ரோக்கர்களை, இல்லாத சிஏஏ பயங்களை.. உருவாக்கிவிட்டு, தேசத்தில் அமைதியின்மையையும், ட்ரம்ப் இந்தியாவில் இருந்த தினத்தில், வரலாறு காணாத தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தில்லியை எரிய வைத்த சக்திகள், உள்ளூர் கவுன்ஸிலர் வரை பரவி இருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இதற்கும் இந்த ஆன்டில்லா விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை கீழே விளக்குகிறேன்.

இந்தியா உலக ஃபார்மஸியானதில் பல தேசங்கள் கடுப்பானது.கார்மைக்கேல் ரோடு, மும்பை என்பது மும்பையின் இருதய பகுதி. அங்கு ஆன்டில்லா டவரில் அம்பானி இருப்பதால் அங்கு மிரட்டல் விட ஒரு போலீஸ் அதிகாரி குண்டு வைத்தது தெளிவாகிவிட்டது. அந்த அதிகாரி, PPE சூட் மாதிரி ஒன்றை போட்டிருப்பது வீடியோவில் தெரிந்தாலும்.. அது PPE சூட் இல்லை, வெடிகளை அல்லது மிக வலுவான இரசாயனங்களிடம் இருந்து பாதுகாப்பவை மாதிரியும் இருப்பதால்.. இதில் பல கேள்விகள் எழுகின்றது. என்ன..? அம்பானிகளிடம் கட்சி தலைமை பேசினாலே, 20-50 கோடிகளை நன்கொடையாக தரும் ஒரு பிஸினஸ்மேன். காரணம், அடிப்படையாகவே அம்பானிகள் பிஸினஸ்மேன்கள். இந்த மாதிரியான லைம்லைட்டில் இருக்காது நகர்ந்து போகவே விரும்புபவர்கள். சரி... அப்படியென்றால் இந்த குண்டுகள் யாரை குறிவைத்தன..? யார் கட்டளைகளால் ?  எந்த நாட்டிலிருந்து..? 

இப்படியான முடிச்சுகள், ஒவ்வொன்றாய் அவிழ்கிறது. ஆன்டில்லா மாளிகைக்கு அருகில், இந்தியாவின் டாப் அணு விஞ்ஞானிகள் கெனீல்வொர்த் எனும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே.. மிக மிக மிக முக்கியமானவர்கள். இவர்களை அரசு தன் நிழலில் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான்.. எதிரி நாடுகளும் முழுநேரம் இவர்களை கண்காணிக்கிறார்கள். இவர்கள் கூட இலக்காய் இருக்கலாம் என்கிறது ஆய்வு.இதை பாகிஸ்தான் அல்லது சீனா தாராளமாய் செய்யும் தயங்கவே தயங்காது. எங்கேயோ வாங்கிய அடியை இங்கு திருப்பி தரவும் இருக்கலாம்..

Maroon barrette: இந்தியாவின் மீதான பல்முனை போரை பாகிஸ்தான் தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தானில் மரூன் பெரே எனும் யூனிட் இருக்கிறது. இந்த யூனிட்டில், ஒரு ப்யூன் கூட DGISI கையெழுத்து போட்டால்தான் பணிநியமனமே வழங்க முடியும். மிகவும், மோடிவேட் செய்யப்பட்ட ராணுவ நிழல் பிரிவு இது. இவர்கள் பேச்சு வார்த்தை என்கிற பெயரில் இந்தியாவோடு நடக்கும்போது.. குண்டு வைப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள். 2006 RSS அலுவலகம் மீதான தாக்குதல், இந்தியா பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. அதே இந்தியாவில் தில்லியில் பேச்சுவார்த்தை நடக்கும்போது.. லால் மஸஜித் தாக்குதல்கள் 2007இல்.. அதேபோல்.. 26/11 பேச்சுவார்த்தை சமயத்தில் மும்பை தாக்குதல்கள்.. ஏன் லாகூர் பஸ் விடும்போது கார்கில் தாக்குதல் என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகும்... சரி.. இவர்களின் கட்டளைகளுக்கு, இந்திய அரசியல் மற்றும் போலீஸ் துறைகள் அடிபணிந்து.. இந்த தேசத்தின் மீதே தாக்குதல் நடத்த முனைவது.. நம் அரசியல் மற்றும் போலீஸ் அமைப்புகளை இப்படியான கரையான்கள் எப்படி அரித்துவிட்டது என்பதை புலப்படுத்திவிட்டது.

 இதைத்தாண்டி வாஸேக்கு தாவூத்திடம் நெருக்கம் என்று வேறு செய்திகள். அவரின் பாதி என்கவுன்டர்கள், தாவூத் போடச்சொன்ன எதிரிகளோ.. அல்லது போடச் சொல்லாத எதிரிகளையோதான்.. இப்படியான ஆசாமியை சிபாரிசு செய்த ஷிவசேனாவின் பாகிஸ்தான் கூச்சல் வெறும் உதட்டளவுதான் என்பது சத்தமில்லாமல் நிருபணமாகிறது. இறுதி பாகம் சற்று நேரத்தில்...#vazegate பாகம்5/5.                       தொடரும்.....            

 இறுதி பாகம்...

கீழே சொல்லப்பட்டவை, கோவா க்ரானிகிள் என்கிற பத்திரிக்கை, தன்னுடைய தெற்காசிய தீவிரவாதம், மற்றும் தீவிரவாத தடுப்பு இன்டெல்லிஜன்ஸ் விங் மூலமாக, பாகிஸ்தானிலிருந்து, மும்பை போலீஸ் ஒருவருக்கு 2020 இல் போன் வந்தது என்று அலறியது. அதோடு மீடியாவில் பலருக்கும், இந்த நம்பரில் இருந்து கால் வந்ததாகவும் எழுதியது. அதற்கான காரணம் அர்னபை அமைதியாக்கவும், வேறு சில நிழல் நடவடிக்கைகளுக்காவும் என்று எழுதியது. இது எத்தனை தூரம் உண்மை என்பது தெரியவில்லையென்றாலும்.. அந்த ஃபோன் நம்பர் இதுதான் 0092306####310 என்றும் எழுதியது.

இதை மேலும் ஆராய ஆரம்பித்தது கோவா க்ரானிகிள். இந்த நம்பர், ஸ்பெஷல் ஸ்குவாட் மெரூன் பெரட்டின் இஷ்க் என்கிற அதிகாரியின் காதோடு போய் நின்றது. அங்கிருந்து இங்கு எந்த போலீஸ் அதிகாரிக்கு கால் வந்தது என்பதை கண்டறியமுடியவில்லை என்றது. இது வாஸேவா என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது, என்றும் சொன்னது. ஆனால், நடந்தவைகளை பார்க்கும்போது.. வாஸேவின் அர்னப் கைது, ஹ்ரிதிக்-கங்கணா.. போன்ற ஹை ப்ரொஃபைல் கேஸ்களால்.. இது வாஸேவாக இருக்கலாம் என்கிறது. இது போலீஸ் கமிஷனர் பரம்பீரின் மூக்குக்கு கீழே நடந்ததால்.. இவர்களைத்தவிர பல வேறு அதிகாரிகளுமே சம்பந்தப்பட்டிருக்கலாமோ.? என்றும் ஹேஷ்யம் சொல்கிறது. இந்த ஆன்டில்லா கூட, பணம் பிடுங்குவது, அழிப்பது.. அல்லது கெனில்வொர்த் அதிகாரிகளை அழிப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பதறுகிறது.

இது கான்ஸ்பிரஸி தியரி போல இருந்தாலும் NIA வாஸே, பரம்பீரின் தொடர்புகளை தூண்டி துருவி விசாரிக்கிறது. இதைத்தாண்டி அரசியல்வாதிகளை அதுவும் வாயும், புத்தியும் கோணலுமான சிலரை எப்படி தண்டிக்கிறது என்று பார்ப்போம்.#vazegate முடிந்தது.  ஜெய் ஹிந்த்            .

கொஞ்சம் நீளமான பதிவுதான்! ஆனால் விஷயத்தைப் புரிந்துகொள்ள, மொத்தமாக ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க, ஒரு reference ஆக பிரகாஷ் ராமஸ்வாமிக்கு நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.             .... 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!