சண்டேன்னா மூணு! #அரசியல் #அராஜகஅரசியல் #காமெடிஅரசியல்

பொதுவாக ஊடக விவாதங்களில் அடிக்காத குறையாக, குரலை மட்டும் உயர்த்திப் பேசுகிற SP  லட்சுமணன் போன்ற ஆசாமிகளை நான் அதிகம் சட்டை செய்ததே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்கிற மாதிரி ஒரு அதிகாரத்தொனியுடன் பேசுகிறவர்களை வேறென்ன தான் செய்வதாம்? ஆனால் இந்த 27 நிமிட வீடியோவில் லட்சுமணன் தன்னுடைய அஜெண்டாவில் இருந்து தமிழக அரசியல் களத்தை எப்படி பார்க்கிறார் என்பதை நன்றாக வெளிப்படுத்திய விதம் இங்கேயும் பகிர வைத்தது. 


முதலாவது, இங்கே இரு கழகங்களும் வலிமையோடு இருக்க வேண்டும், அப்படி  இருந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மாநிலக்கட்சிகளை உயர்த்துப் பிடிக்கிற உளுத்துப்போன ஒரு வாதம்! தேசியக்கட்சிகள் வேண்டாம் என்பது உட்கிடக்கை. அடுத்தது, பாமகவை தாஜா செய்ய வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்ததில் அதிமுக இதர பெரிய சமூகங்களுடைய கடுமையான அதிருப்தி, எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக. தேமுதிக வெளியேறியது டிடிவி தினகரன் தனித்துப்போட்டி இவையெல்லாம் அதிமுக வாக்குகளை பிரிக்கும் என்ற கருத்து இப்படியான விஷயங்களில் கொஞ்சம் தெளிவுடன் பேசுகிற மாதிரி கதம்பமான ஒரு நேர்காணல். மாநிலக்கட்சிகள் உருவாக, வளர்ந்ததற்கான காரணங்கள் எல்லாமே அடிபட்டுப் போனபிறகு, மாநிலக்கட்சிகளுடைய உபயோகம் முடிந்து விட்டதாகவே நான் பார்க்கிறேன். உங்களுடைய கருத்து என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!


கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோதிமணி அரசியல் செய்கிற விதமே தலைகீழாக மாறிப்போய் விட்டது.அம்மணியின் ஆட்டத்தால் சத்தியமூர்த்தி பவனே அதிர்ந்துபோய்க் கிடப்பதில் "கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித் தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கொதித்திருக்கிறார் கோபண்ணா 

ஏற்கெனவே சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக MLA கு க செல்வம் பிஜேபியில் ஐக்கியமான நிலையில் இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக MLA டாக்டர் சரவணனும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் என்கிறது செய்தி. அரசியலில் இந்தமாதிரி காமெடிகள் சகஜம், செந்தில் மாதிரி காமெடியன்களும் அரசியலுக்கு வந்து சேருவது  காமெடிக்கொடுமை. என்னென்ன காமெடிகளை இனிமேலும் பார்க்கப்போகிறோமோ?    

படித்ததில் பிடித்தது: 

இந்தியா டுடேவின் "south conclave"ல் நேற்று (3/13/21) மூன்று நேர்காணல் தொடர்ச்சியாக நேரலையில் காண நேர்ந்தது. மூன்று தமிழர்கள். ஒருவர் திராவிடத்தின் போர்வாள். மற்ற இருவரும் பிஜேபியில் மத்திய அமைச்சர்கள். 

திராவிடத்தின் போர்வாள், உள்ளே வந்ததும் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப் பட்டது. கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் உட்கார வைத்து "அடுத்த முதல்வர் நீங்கள் தான்" என்ற ஏத்திவிட்டனர். அவரும் அது ஏதோ ஒரு தேர்தல் மேடைப் பிரச்சாரம் போல தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார். வழக்கமான "corruption commission collection" என்ற உலகப்புகழ் பெற்ற வாக்கியத்தையும், "நான் ஆதாரத்தோடுதான் பேசுவேன்" என்றும் பேசினார். அதற்கப்புறம் நடந்த கேள்வி பதில்  "காந்தகண்ணழகி, இந்தா இங்கே பூசு" வகை. மூன்றே மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. மூன்றும் "அடுத்த முதல்வர் நீங்கதான். என்ன செய்வீங்க" என்று தும்பைப்பூவால் வருடி விடும் கேள்விகள். 

வலிமையற்ற தோளினாய் போ போ போ, மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ என்று பாடத் தோன்றியது.

அடுத்து வந்தவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். What a change! Night watchman அவுட் ஆகி விட்டு போனபின் சச்சின் டெண்டுல்கர் ஆட வந்தது போல இருந்தது இவர்கள் இருவரும் கேள்விகளை கையாண்டது. அவர்களின் திட்டத்தை எவ்வளவு அழகாக விவரிக்கின்றனர்! திட்டமிடல் at its best. அதை விவரிக்கும் திறன் அதனினும் அருமை.நிர்மலா சீதாராமன், தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும், தொழிற்சாலைகளுக்கான முதலீடு பற்றியும் மற்ற சிக்கலான விஷயங்களையும் அனாயாசமாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.

அடுத்து வந்தவர் வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கர். ப்ப்பா என்ன தெளிவு, என்ன துணிவு. சீனாவுடனான சண்டை பற்றி பேசுகையில் "அவர்கள் கை கொடுத்தா நானும் கை கொடுப்பேன், கை ஓங்கினா கையை எடுப்பேன்" என்பதை ஆங்கிலத்தில் "if you extend your hand I will shake hands . But if you point a gun at me, I will pull my gun. That is logical., isnt" அதிரடியாக சொன்னார். "இந்த நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லைக்கு வெளியில் இருந்து, அவர்கள் வசதிக்காக, சொல்வதை ஒருநாளும் கேட்க மாட்டோம்" என்று சொல்லும்போது பாரதியின் "வெற்றி கொண்ட கையினாய் வா வா வா விநயம் நின்ற நாவினாய் வா வா வா" என்று பாடத்  தோன்றியது.மறுபடியும், இப்படி ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக மோடிக்கு பெரிய நன்றி.What a contrast between the two sets of leaders! 

தந்தை, மகன் பேரன் என்று தலைவர்களை ஒரே முகவரியில் இருந்து கொடுக்கும் கட்சிக்கும், மூலை முடுக்கெல்லாம் நல்ல திறமையைத் தேடி, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் கட்சிக்கும் எத்தனை வித்தியாசம். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். தமிழரின் பெருமை நிர்மலா சீதாராமன் மற்றும் S .ஜெய்ஷங்கர் வகை மட்டுமே. அப்பன் பெயரை சொல்லி பதவிக்கு வருபவர்கள் அல்ல. 

ஒழியட்டும் மன்னராட்சி! நிமிரட்டும் தமிழகம்! என்று முகநூலில் புளகாங்கிதப்பட்டிருக்கிறார் எஸ் சண்முக நாதன்

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!