இட்லி வடை பொங்கல்! #81 #அரசியல் #தேர்தல்அரசியல் #கொரோனாஅரசியல்

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்து வெற்றி பெற்ற கட்சிகள் பதவியேற்பும் அனேகமாக நடந்து விட்டது. தேர்தல் களச்சூடு தணிந்து, ஆட்சி செய்வதில் வென்ற கட்சிகள் கவனம் செலுத்துகிற நேரத்தில், எங்குமே போணியாகாத சோனியா காங்கிரஸ் கட்சி மட்டும் மோடி வெறுப்பு அஜெண்டாவில் செயல்பட்டு வருவதை இந்து தமிழ்திசை செய்தியில் பார்த்தபோது சிரிப்புத்தான் வருகுதையா! அதேபோல காமெடி செய்து சிவசேனாவும் சோனியா காங்கிரசுக்குச் சமமான இடத்தைப் பெற்றிருக்கிறது.  


மூன்று மாநிலங்களில் தோற்றதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்யவேண்டும் என்று அறிக்கைவிட்ட அதிமேதாவி திருமாவளவன் கூட, தனது பல்லவியை மாற்றிக் கொண்டதாக இந்து தமிழ்திசை கார்டூன் நையாண்டி செய்திருக்கிறது.

ஆனாலும் கூட சிவசேனா கட்சிப்  பத்திரிகை சாம்னா தலையங்கத்தில் இன்றைக்கு சோனியா காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிற விதமே அலாதி! நேரு -காந்தி (இந்திரா&வாரிசுகள்) ஏற்படுத்தி விட்டுப் போன அமைப்பின் மீதுதான் இன்று இந்தியாவே பிழைத்திருக்கிறதாம்! இந்தியா டுடே தளம் செய்தி  சொல்கிறது  "In clear terms, India is surviving on the system created by Nehru-Gandhi. Many poor countries are offering help to India. Earlier, countries like Pakistan, Rwanda and Congo used to get help from others. But due to the wrong policies of today's rulers, India is going through that situation now," உடனே சிவசேனாவுக்கு சோனியா காங்கிரஸ் மீது பாசம் பொங்கிவழிவதாக தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்! தன்னுடைய கையாலாகாத்தனம், திறமையின்மை, ஊழல், கட்டுக்குள் கொண்டுவர முடியாத கொரோனா,  இப்படி வரிசையாகப் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சிவசேனாவுக்கு, மராத்தா மக்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதில் விரக்தியின் விளிம்புக்கே போனவர்கள் தங்களது ஏலாமையை இப்படித்தான்  உபதேசம் செய்து வெளிப் படுத்துவார்கள்! மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியும் தேர்தல் வன்முறைகளில் உயிர்ப்பலி விவகாரத்தில் மத்திய அரசின் குழு  அனுப்பப்பட்டிருப்பதில், குழு ஆய்வு செய்ய வேண்டாம், என்னை வேலைசெய்ய விடுங்கள் என்று வசனம் பேசியதோடு கப்சிப்.

அதிமுக வெற்றிபெற்றால் மந்திரியாகிவிடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய அதிமுக எம்பிக்கள் வைத்தி லிங்கம், கே பி முனுசாமி இருவரும் எம்பி பதவியை ராஜினாமா செய்வார்களா? அல்லது சட்டசபையில் மவுசே இல்லாமல் சமஉ ஆக இருப்பதைத் தேர்ந்து எடுப்பார்களா? சரியாக ஊகித்துப் பின்னூட்டத்தில் சொல்பவர்களுக்கு  பரிசெல்லாம் கிடையாது. ஆனால் தமிழக அரசியலை நன்றாகப்புரிந்து வைத்திருக்கிற பெருமையோடு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்! 


அதிமுகவில் எதிர்க்கட்சித்தலைவராக வரப்போகிறவர் யார்? EPS  அல்லது  OPS இந்தக்கேள்விக்கும் கூட அந்தக் கட்சியால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை! 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கலைந்து விட்டார்கள்! உங்கள் ஊகம் என்ன?


கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்கள்  முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. சோனியா காங்கிரஸ், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே போல சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும், மாநில அரசைப்பொறுப்பாக்கக் கூடாதென்று ஆகாத கதை பேசாமல், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக முதல்வர் முழு ஊரடங்கை அறிவித்திருப்பதற்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்!

ஆளும்கட்சி திமுக அரசியலை விமரிசிப்பதற்கான தருணம் இதுவல்ல. திமுக அரசை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு விமரிசிப்பதான எண்ணம் இல்லை. ஆக்கபூர்வமான செயல்பாடு இருந்தால் மனப்பூர்வமான ஆதரவு நிச்சயம் உண்டு. 

மீண்டும் சந்திப்போம்.              

4 comments:

  1. மூன்று மாதம் விமர்சிக்க மாட்டேன் என்பது சரி. பார்க்கலாம்.

    காங்கிரசை பொறுத்தவரை அதை ஊத்தி மூடாமல் ஓய்வதில்லை என்று சோனியா / ராகுல் வகையறாக்கள் சபதம் எடுத்தது போல தோன்றுகிறது. ஏதோ, நல்லது நடந்தால் சரி!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெருந்தொற்றை சமாளிக்கவேண்டிய தருணத்தில் குறுகிய அரசியல் அதன்மீதான விமரிசனங்கள் வேண்டாமே என்று நான் நினைப்பது அப்படி1 ஆனால் உபிக்கள் இருக்க விடுவார்களா என்பது தான் இங்கே முக்கியம், பந்து! .

      ராமசந்திர குஹா ஒருமுறை வெறுத்துப்போய் இபின் கால்தூன் என்கிற 14 ஆம் நூற்றாண்டு பெர்ஷிய ஆசாமியை மேற்கோள் காட்டி நாலாவது தலைமுறை வாரிசு தத்தியாகத்தான் இருக்கும் என்று கண்டுபிடித்து எழுகியதை இந்தப்பக்கங்களிலேயே எழுதியிருக்கிறேன்! அதென்னவோ நேருவிய விசுவாசிகளுக்கு எப்போதுமே கைப்புண்ணுக்குக் கூட கண்ணாடி, வெளிசாட்சியங்கள் வேண்டியிருக்கிறது.

      காங்கிரஸ் ஒவ்வொருகாலகட்டத்திலும் ஒவ்வொருவிதமாகத்தான் இருந்திருக்கிறது.
      ஒருவேளை காங்கிரசை சோனியாவும் ராகுலும் தூக்கிநிறுத்த முயற்சித்தாலும் அது வீணே!

      இப்போதிருக்கிற சூழலில் காங்கிரசை சுத்தமாக ஒழிப்பது ஒரு பிரச்சினையே இல்லை! ஒரு மாற்று அரசியல் சக்தி உருவாகாதபடி'காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் சிதிலங்கள் இடிபாடுகள் தடையாக இருப்பதுதான் பிரச்சினை.

      பிஜேபி ஒரு வலதுசாரி சக்தியாக வளர்ந்து வருவதை சமன் செய்ய இடதுசாரி சக்தி ஒன்று வேண்டும். நம்மூர் இடதுசாரிகள் சர்வதேசியம் பேசியே ஒரு நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுவிட்டார்கள்.

      Delete
  2. வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் தாங்கள் என்ன செய்வதென்று அவர்களே முடிவெடுத்திருக்க மாட்டார்கள்.  அவ்வளவு குழப்பம்.

    ஒன்று எதிர்க்கட்சித் தலைவர், இலைன்னா கொள்கைப் பரப்பு செயலாளர்...  சண்டை சூடு பிடித்திருக்கிறது.  திமுக உற்சாகத்துடன் இந்த சண்டையை வேடிக்கை பார்க்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருப்பதோ கழுதை மேய்க்க என்கிற வழக்குச் சொல்தான் அதிமுகவில் நிறையப்பேருக்குப் பொருத்தமாக இருக்கிறது.

      பிரச்சினையைத் தூண்டிவிடுவதே திமுகதான் என்றொரு பேச்சும் இருக்கிறதே ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!