நெஞ்சில் உரமும்! நேர்மைத் திறமும்!



வெட்கம் கெட்டவர்கள்! சூடு, சுரணை, பொறுப்பு எதுவுமில்லாதவர்கள்!

முதலில்.......... 

மும்பை நகரில் சென்ற வருடம் நடந்த தாக்குதல்களில் மட்டுமேயில்லை, எதிலுமே கூட நம்முடைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்வதுமில்லை, இவர்களை நம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலிலுமே நிரூபித்துக் கொண்டிருந்தும் கூட....

இந்த ஊழல்மயமான, பொறுப்பில்லாத அரசியல் வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டிருக்கும் வாக்காளப் பெருமக்கள் என்றுதேர்தல் நேரங்களில் மட்டுமே அழைக்கப் படுகிற இளிச்சவாயர்கள்!

மும்பை நகரில்  குடிநீர் விநியோகம் 15 சதவீதம் குறைக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டு மும்பைகர்கள் பொங்கி எழுந்தார்களாம்!  அதுவும் நிதிஷ் ரானே என்ற காங்கிரஸ் காரர் தலைமையில்! காங்கிரஸ் என்னவோ மற்ற எல்லா இடங்களிலுமே தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டமாதிரி! போலீஸ் தடியடி! ஒருவர் உயிரிழந்திருக்கிறார்!


விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட, நாட்டின் எந்த ஒரு பகுதியிலுமே கூட, பாதுகாக்கப் பட்ட குடிநீரை வழங்குவதற்கு துப்பில்லை! தடியடி நடத்த மட்டும் தெரிகிறது! 

மாநிலங்களுக்கு இடையில் நீராதாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்! சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவோ, நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றவோ மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருப்பதோடு,  கலவரம்,  பிரச்சினைகள் நீடிப்பதிலேயே கொண்டிருப்பதிலேயே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்கள் உயிரிழந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்தபோது கையாலாகத்தனத்தை வெளிப் படுத்திய R R படேல் தான் மீண்டும் அதே உள்துறையில்! ஏ ஆர் அந்துலே மாதிரி ஊழல் பெருச்சாளிகள், பிரச்சினையைத் திசைதிருப்புகிற மாதிரிப் பேசினபோதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கின, காங்கிரஸ்கட்சித்தலைமை!

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப் பிரமாதமாக நடத்தி, அணிவகுப்பு மரியாதை, கலர்பலூன்களைப் பறக்கவிடுவது இந்த மாதிரி, ஜிகினா வேலைகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியும் என்று தெரிந்த பின்னாலும் கூட, காங்கிரசை நம்புகிறவர்கள்..இவர்களை என்னவென்று சொல்வது!

நிவாரணம், இழப்பீடு தலா மூன்று லட்சம் என்று அறிவித்துமே கூட, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது வெறும் ஐந்து கோடி! காயமடைந்தவர்களுக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் இதையும் சேர்த்தால் எவ்வளவு வந்து விடும்?  ஜனங்களை முட்டாளடித்து மறுபடி வென்றார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில்   துப்பாக்கியோடு நிறையப் பேரைச் சுட்டுக் கொன்ற தீவீரவாதி கசாபைப் பாதுகாக்க மட்டும் அரசு இதுவரை முப்பத்தோரு  கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்!

A Wednesday, உன்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் கேட்ட கேள்வி இந்த நகை முரணைப் பற்றித்தான்!

அடேங்கப்பா! உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது தமிழ் வலைப்பதிவுலகம் என்னமாகக் கொதித்தது! கொந்தளித்தது!

******
இந்தியாவில்,ஒவ்வொரு மூன்று  நிமிடங்களுக்கும்  காச நோயால்  பாதிக்கப்  பட்ட  இருவர் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.. தினசரி ஐயாயிரம் பேர்களுக்குக் காச நோய்த் தொற்று உண்டாவதாகவும், நாடு முழுவதும் முப்பதெட்டு லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், உலகத்திலேயே இங்கு தான் மிக அதிகமான நோய்த் தொற்று விகிதமாகவும் இருப்பதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக  இருக்கிறது.


இப்போதெல்லாம் ஜனங்களை ஏமாளியாக்கும் வேலைகள், காப்பீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

எதை எடுத்தாலும் அதில் சம்பாத்தியம் பண்ணத் தெரிந்த புற்றுநோய்க் கிருமிகள் மாதிரி, பெருகிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் காப்பீட்டுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

******
வில்லங்கம், விவகாரங்களைக் கிளப்புவதில், இடதுசாரிகளுக்கு இணையாக வேறு எவரையும் சொல்லிவிட முடியாது என்பதைத் தோழர் பிருந்தா காரத் மறுபடி பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கிறார்! பிரச்சினையை கிளப்பினால் மட்டும் போதும், அதற்குத்  தீர்வு சொல்ல வேண்டும் அல்லது ஒத்துழைப்பையாவது தரவேண்டும் என்ற முனைப்பும் அவசியமில்லை, தேவையுமில்லை என்றே இத்தனை நாள் இருந்ததால் தான், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்ட அந்தக் கொடுமையான தருணங்களுக்குப் பழி தீர்க்கிற மாதிரி, மன்மோகன் சிங்குமே கூடக் கொஞ்சம் தைரியமாக, முந்திய ஆட்சிக் காலத்தில் இடது சாரிகள் எவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அமெரிக்காவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்தார்.

ஆனாலும், வில்லங்கம் வீராசாமிகளாகவே  இருந்துவிடுவது என்ற பழக்கத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக நடந்துவிடுகிற அரசியல் அதிசயமா என்ன! இந்தத் தடவை இடதுசாரிகளிடம்   மாட்டிக் கொண்டது கூகிள்! கூகிள் விளம்பரங்கள் சிலவற்றைக் காட்டி, ஏன் கூகிள்   இந்தியா நிர்வாகியைக் கைது செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்! நிறுத்தி நிதானமாக பள்ளிக் கூட வாத்தியார் மாதிரித் துண்டைப் போர்த்திக் கொண்டு கிளாஸ் எடுக்கிற மாதிரிப் பதில் சொல்கிற பானா சீனா கூட அம்மணி எழுப்பிய கேள்விக்குப் பொறுமை இழந்து கோபப்பட்டதும் இதற்கு முந்தையசெய்தி!

******
எதற்கெடுத்தாலும் வெள்ளிவிழா, பொன் விழா என்று காங்கிரஸ் மாதிரி சொரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுப்  பேச முடியாத விஷயங்கள்! ஒன்றல்ல, மூன்று துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி முடிந்து விட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது  முதலாவது!

அடுத்து,  இந்திரா காந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க, சீக்கியர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்த சம்பவமும் தொடர்ந்தது. சற்றேறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் டெல்லி வீதிகளில் வேட்டையாடப்பட்டார்கள். முன்னின்று நடத்திய டைட்லர், சஜ்ஜன் குமார் இருவருக்கும் மந்திரிப் பதவிகள் தொடர்ந்தன. அடுத்துப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்தப் படுகொலைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசியதை, சீக்கிய சமூகம், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சீக்கியக் குழுக்கள் இன்னமும் மறக்கவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரனின் கொடுமையாகச் சித்தரிக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் தான்!

இதே டிசம்பர் மூன்றாம் தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தும், இன்னும் பல துயரங்களுக்கு ஆளான துயரமும் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டு நிறைவாகி இருக்கிறது. ஆண்டுகள் தான் ஓடி நிறைந்தனவே தவிர, இவற்றில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பது பெரும் குறையாகவேஇருக்கிறது.

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட, முறையான நிவாரணம், உறுதியான சட்ட நடவடிக்கைகள், எதுவுமில்லாமல், போபால் விஷவாயு சம்பவத்தால் மூவாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். இருபதாயிரம் பேருக்குமேல், மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார்கள். பாதரச நஞ்சு கலந்த தொழிற்சாலைப் பகுதி இன்னமும் சுத்தப் படுத்தப் படாமல், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. மன்மோகன் சிங் என்னவோ இந்த வருடம், பாதிக்கப் பட்ட மக்களுக்காக கொஞ்சம் அனுதாபமாகப் பேசியிருக்கிறார்.

பேச்சோடு நின்று விடுமா, இல்லை அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்குமா?





2 comments:

  1. தீர்க்க முடியாத நோய்கள் வந்தால் அதில் வரும் நிதி அதில் குளிப்பவர்களுக்கு நிரந்தர வருவாய். வருடா வருடம் போட்ட சாலையையே போடும் டெக்னிக்தான் சம்பாதிப்பதில்....

    மக்கள் தொடர்ந்து எப்படிதான் ஏமாறுகிறார்களோ என்று சொல்லி விட்டுக் கடைசி வரிகளில் நீங்களே தெரிவித்திருக்கும் நம்பிக்கைதான் காலம் காலமாக மக்களை நடத்துவது....

    ReplyDelete
  2. நம்பிக்கை தான் உயிரோடு இருப்பதன் அடையாளம்! உயிரின் ஒரு மூலக் கூறு! போக வேண்டிய திசையைக் கணித்துச் சொல்லும் ராடார்!அதையும் இழந்து விட்டால் எப்படி?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!