கீதை மீது திடீர்க் காதல்!



மூன்று நாட்களுக்கு முன்னால் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மேலாண்மைப் பாடத்தில் பகவத் கீதையைச் சேர்க்கலாமா என்ற விவாத இழையைப் பார்த்தேன். ஏற்கெனெவே மேலாண்மைத் துறை நிபுணர்கள் பலரும் கீதை சொல்லும் கருத்துக்கள், வெறும் புராணக் கதை, மத நம்பிக்கை என்பதற்கும் மேலாக வாழ்வியல் உண்மைகளைப் பிரதிபலிக்கும் சிந்தனையாகவும், சிக்கல்களில் இருந்து விடுபட உதவும் பாடங்களாகவும் இருப்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்பதால் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலுமே, கீதை சொல்லும் படிப்பினைகளை வைத்து, மேலாண்மையைச் சொல்லிக் கொடுப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது என்பது முன்பே தெரிந்த விஷயமாக இருந்ததால், அதைப்பற்றி அப்போது அதிகமாக  யோசிக்கவில்லை. தவிர அந்த விவாத இழையுமே கூட, தினமலரில் வந்த ஒரு செய்தியை வைத்து ஆரம்பித்து, "மதம் சார்ந்த புத்தகங்களிலிருக்கும் கருத்துக்களை பாடத்தில் சேர்த்தால் பிரச்சனைகள் வருமே ?" என்று திரு காமேஷ் என்பவர் கவலைப் பட்டிருக்கிறார்.


கீதை சொல்லும் மிக முக்கியமான கருத்து, அதன் பதினெட்டாம் அத்தியாயத்தில் அறுபத்தாறாவது ஸ்லோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது!
மா சுச:  கவலைப் படாதே! நம்மூரு செக்குலரிசம் என்ன என்னவெல்லாம் செய்யும் என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டு அப்போதைக்குப் பேசாமல் இருந்து விட்டேன். இன்றைக்கு, சேலத்தில் இருந்து நண்பர் என். இளங்கோ ஒரு ஃபார்வர்ட்  மெயிலில் வந்த தகவலை எனக்கும் அனுப்பியிருந்தார். சில நாட்களாகவே, Guest Post என்று சில நண்பர்களை, குறிப்பிட்ட விஷயத்தைத் தொட்டுச் சொல்லும் பதிவுகளாக எழுதச் சொன்னால் என்ன என்ற யோசனை இருந்து கொண்டே இருந்த நேரத்தில், மிகப் பொருத்தமான ஒரு விஷயம், அந்த ஃபார்வர்ட்  மெயிலில் இருந்ததால் முதல் Guest Post தயார்!

நல்லதை நானும் கேட்பேன், என்னுடைய நண்பர்களும் கேட்பார்கள், இந்த நாடுமே கேட்கும் என்ற நிலையை உருவாக்கக் கூடிய நல்ல எண்ணங்களாக, நல்ல செயல்களாக ஆரம்பித்து வைப்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது!

கீதையை காதலிக்கும் அமெரிக்கா

வணிக மேலாண்மையில் மிகப்பிரபலமான ஆசிய புத்தகமாக சன் ட்சூவின் "ஆர்ட் ஆப் வார்"  இருந்து வந்தது."ஆர்ட் ஆப் வார்" தொன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பகவத் கீதை ஆர்ட் ஆப் வாரின் இடத்தை பிடிக்கப் போகிறது
என பிஸினஸ் வீக் பத்திரிக்கை தெரிவிக்கிறது.


அமெரிக்க கம்பனிகள் கீதையின் மேல் காதல் கொள்ள துவங்கியிருப்பதாக தெரிவிக்கும் பிஸினஸ் வீக் அதை பற்றி ஒரு சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது. கீதையில் உள்ள நிர்வாக மற்றும் சுயமுன்னேற்ற கோட்பாடுகள் அமெரிக்க கம்பனிகளை பெரிதும் கவர்வதாக பிஸினஸ் வீக்  குறிப்பிட்டுள்ளது.

ஸ்வாமி பார்த்தசாரதி எனும் வேதாந்த உபன்யாசகர் உலகின் மிகப்புகழ் பெற்ற பிஸினஸ் பல்கலைக்கழகமான வார்ட்டனில் கீதையை பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என மாணவர்களுக்கு வகுப்பெடுத்தாராம். அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீட்டு வணிகர்கள் (வென்சர் காபிடலிஸ்ட்ஸ்) நிரந்தரமாக மன அழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள்.

அவர்களுக்கு ரை, நியூயார்க்கில் ஸ்வாமி பார்த்தசாரதி நடத்திய வகுப்பில் பொருளை தேடி உள்மன அமைதியை தொலைப்பதை பற்றி கீதை சொல்லியிருப்பதை குறிப்பிட்டு பேசினார் என்கிறது பிஸினஸ் வீக்.
லீமன் பிரதர்ஸ் எனும் கம்பனியில் பார்த்தசாரதியிடம் ஒரு இன்வஸ்ட்மண்ட் பாங்கர் தனது சகபணியாளர்கள் உருவாக்கும் அவஸ்தையை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி "அவர்களை உன் மனதிலிருந்து அகற்றிவிடு" "உன் வாழ்வை நீ தான் உருவாக்குகிறாய்" என்று பதில் சொன்னதை குறிப்பிட்டு சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

ஸ்வாமி பார்த்தசாரதியின் உரைகள் ஒரு சாம்பிள் தான் என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்திலும் நூல்களாலும் கவரப்படுகின்றன என்கிறது பிஸினஸ் வீக். அமெரிக்க கம்பனிகள் இந்திய தத்துவத்தை தழுவுகின்றன (American firms embrace Indian philosophy) என்றே சொல்லி சிலாகிக்கிறது பிஸினஸ் வீக்.

பகவத் கீதை என்றில்லை, பல இந்திய தொன்மையான நூல்கள் அமெரிக்க கார்ப்பரேட்களாலும் கன்சல்டன்ட்களாலும் பயன்படுத்தப்படுகின்றனவாம். அமெரிக்காவின் மிகப் பிரபலமான பிஸினஸ் பல்கலைகழகங்கள் மாணவர்களுக்கு "தன்னை அறிதல்" மற்றும் "உள்மன அமைதி" ஆகிய இந்திய தத்துவங்களை போதித்து மானேஜர்களுக்கு தலைமை தாங்கும் பண்புகளை கற்பிக்கின்றன என்கிறது பிஸினஸ் வீக்.

இந்திய நூல்கள் போதாது என்று இந்தியர்கள் புகழ் பெற்ற மானேஜ்மன்ட் குருக்களாகவும் புகழ் பெறுகின்றனராம். சி.கே பிரஹலாத், ராம்சரண், விஜய் கோவிந்தராஜன் போன்ற கன்சல்டன்ட்கள் உலகின் புகழ் பெற்ர பிஸினஸ் குருக்களாக இருக்கின்றனர் என்கிறது பிஸினஸ் வீக்.

"
கெல்லாக், வார்ட்டன், ஹார்வர்ட், டார்மவுத் ஆகிய புகழ் பெற்ற ஐவி லீக் பிஸினஸ் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்கின்றனர்" என கெல்லாக் பிஸினஸ் ஸ்கூலின் டீனான தீபக் ஜெயின் தெரிவிக்கிறார்.

வணிகம் என்பது லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது எனும் இந்திய கொள்கை வெகுவாக வரவேற்பு பெறுவதாக சொல்கிறது பிஸினஸ் வீக். வணிகம் சமூக நலனை தான் முக்கியமாக கருதவேண்டும் எனும் இந்திய கலாச்சார கோட்பாடு வணிக நிர்வாக உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் பிஸினஸ் வீக் கணிக்கிறது.

கீதை வழி நிர்வாகத்தை "இன்க்ளூசிவ் கேபிடலிசம்(Inclusive capitalism)" என்கிறார் சி.கே பிரஹலாத். சமூகநலனையும், லாபத்தையும் கம்பனிகள் ஒருங்கே உருவாக்க வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை.

கீதை வழி நிர்வாகத்தை "கர்மா கேபிடலிஸம்" என்றே அழைக்கிறது பிஸினஸ் வீக். என்ரான், டெக்னாலஜி பப்பிள் என வெறுத்து போயிருக்கும் அமெரிக்கர்கள் கீதையை மனதார காதலிக்கின்றனராம்.. அமெரிக்காவின் தற்போதைய புகழ் பெற்ற கிழக்கின் மானேஜ்மெண்ட் நூல் கீதைதான் என சொல்லுகிறது பிஸினஸ் வீக்.. ஸ்ப்ரிண்ட் நெக்ஸ்டெல் கார்ப்பரேஷனின் மானேஜர் ஒருவர் எழுதிய "Bhagavad Gita on Effective Leadership"
 என்ற நூல் விற்பனையில் சக்கைபோடு போட்டதாம்.

ஜெனெரல் எலக்ட்ரிக்கின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி எம்மெல்டுக்கு பயிற்சி அளிக்கும் ராம்சரண்  "கடமையை, சுயநலத்தை விட பெரிதாக வலியுறுத்தும் கீதை கார்ப்பர்ரெட் நிர்வாகத்துக்கு அளப்பரிய பொருத்தம் வாய்ந்தது" என்கிறார்.

இந்திய தத்துவமரபு அமெரிக்க கம்பனிகளுக்குக்கு மிகப் பொருத்தமானது என புகழாரம் சூட்டுகிறது பிஸினஸ் வீக். சந்தையியல் துறைக்கும் கீதை பொருத்தமானது, சிறப்பு வாய்ந்தது என சொல்கிறது பிஸினஸ் வீக்.

"எவன் என்னை பிறப்பற்றவன் என்றும் அநாதியானவன் என்றும் உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்றும் அறிகிறானோ அவனே தன்னை அறிந்தவன். என்னை நன்றாக அறிந்த மனிதனே தன்னை நன்றாக அறிந்தவனாகிறான்.அவனே மனச்சாந்தி அடைகிறான்"

- கீதையில் கண்ணன்.

எப்போது ஆரம்பித்தது என்ற விவரம் இல்லை! இந்த ஃபார்வர்ட் இணையத்தில் மெயில் சுற்றிக் கொண்டுவந்து இந்த  நேரம் பார்த்து என்னிடம் வந்துசேர்ந்திருக்கிறது. இதை சங்கிலியாக .ஆரம்பித்துவைத்தவர் திரு குமார ராஜா! அபு தாபியில் ஒரு பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

Mr.Kumara Raja.
Senior Sustainability Engineer,
Masdar Development Project 1,

ETA M&E Division,
Abu Dhabi.
Mobile:+971-50-2218843 என்ற விவரம் மட்டும் கிடைக்கிறது. பிசினெஸ் வீக் பத்திரிகையின் முதல் லிங்க் மூன்று வருடத்துக்கு முந்தைய செய்தி. இரண்டாவது ஒரு வருடத்துக்கு முந்தையது. லெமன் பிரதர்ஸ் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தபோது., வரிசையாக அமெரிக்க வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் கவிழ ஆரம்பித்த தருணத்தைஒட்டியது.

 நிகிதா மீரா!
இதை எனக்கு ஃபார்வர்ட் செய்த நண்பர் திரு இளங்கோ, சேலத்தில் ஒரு பொறியியல்  கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு  எனது நன்றி!
மகள் நிகிதா மீரா மற்றும் வீட்டில் அனைவரும் நலம் தானே இளங்கோ!
******
போன பதிவில் புது வருடத் தீர்மானங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்! பத்த வச்சுட்டியே பரட்டை என்று ஒரு தொடர் சங்கிலி இடுகைக்கு என்னை விதூஷ் என்கிற வித்யா அழைத்திருக்கிறார்! பத்துப் புதுவருடத் தீர்மானங்கள் பற்றி எழுத வேண்டுமாம்! பரட்டைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, பத்தவைப்பது எப்படி என்பது கூட மறந்து போய்..... {வெண்குழல் வேந்தராக இருந்த காலம் ஒன்று உண்டு! மூன்றரை வருடத்திற்கு முன்னால், பைபாஸ் சர்ஜரி பண்ணிக் கொள்ள நேரிட்ட போது,  சிகரெட்டைப் பத்தவைக்கிற, ஊதுகிற பழக்கமும் போயே போயிந்தி!)

விதூஷுக்கு  ரெசொல்யூஷன் என்றால் என்ன தெரியாதாம்! இந்தப் படங்களைக் கொஞ்சம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! எதுவுமே தெரியாதென்றால், சரியான விடை கடைசியில் இருக்கிறது! 



அதே மாதிரி எனக்கும், பரட்டை, பத்தவைப்பது ரெண்டுமே தெரியாது!
இந்த சங்கிலித் தொடர் ஆட்டம் எத்தனை மாதங்கள் நீடிக்கும், இன்னும் எத்தனை பேரைப் பீடிக்கும்  என்று ஒருத்தர் அங்கே கிலியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்! அந்த மாதிரி பயந்த சுபாவம் உள்ள, மென்மையான மக்களுடைய நலம் கருதி, இந்தத் தொடர் ஆட்டத்தையும், தொடர் கதை மாதிரி, அடுத்து வரும் ஒவ்வொரு பதிவிலும், இரண்டு அல்லது மூன்று தீர்மானங்களாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதலாம் என்று ஒரு ஆறுதலான செய்தியைச் சொல்லி விட்டு............


புது வருடத் தீர்மானம் நம்பர் ஒன்று!

பிறக்கிற புது வருஷத்திலாவது, இப்படி எழுதிக் குவிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற யோசனையைக் கூட, புத்தாண்டுத் தீர்மானமாக அறிவித்துவிடலாமா என்று தோன்றுகிறது!

எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தடுமாற வேண்டாம்! நேத்தைக்கு எழுதினது தான் இது!

புது வருடத் தீர்மானம் நம்பர் ரெண்டு!

எத்தனையோ புத்தகங்கள், செய்திகளைப் படிக்கிறோம்! ஆனால், தமிழில் படித்ததைப் பற்றி, தங்களுடைய விமரிசனமாக, கருத்துக்களாக எழுதும் பதிவுகள் மிஞ்சிப் போனால் ஒரு ஏழு அல்லது எட்டு இருக்குமா? இந்தப் பக்கங்களில், பெரும்பாலானவை, படித்ததில்  என்னைத் தொட்ட விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் மேலோட்டமாகச் சொல்லிக் கொண்டு போனாலும், படித்த புத்தகங்களில் ஒவ்வொன்றாக ஒரு முழுமையான விமரிசனமாக அல்லது எனக்குள் ஏற்படுத்திய தாக்கமாக, வாரம் ஒரு பதிவாவது எழுத வேண்டும். இந்தப்பக்கங்களில் எனக்குள் இருக்கும் வாசகனும் வெளிப்பட வேண்டும்இல்லையா! 

புது வருடத் தீர்மானம் நம்பர் மூன்று!

வருகிற புது வருடத்திலாவது, இப்படித் தொடரும், சங்கிலிப் பதிவுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது! இந்த வருடத்தில் இது மூன்றாவது சங்கிலித் தொடர்! முதலில் கோவி கண்ணன் அழைத்தார்! அப்புறம் வால் பையன்! இப்போது விதூஷ்! என்னால் முடிந்த நல்ல காரியம், எவரையும் குறிப்பிட்டு, தொடர் ஆட்டத்திற்கு  வாருங்கள் என்று வம்பில் சிக்க வைப்பது இல்லை!

ஏன் இந்த மாதிரி ஆட்டத்தில் அப்புறம் சிக்கிக் கொண்டேன் என்கிறீர்களா?  




6 comments:

  1. :)) arumaiyo arumaiyaana resolutions.
    btw, innum oru vaaraththil resolutionna ennannu therinjuppeenga.

    ReplyDelete
  2. உங்க ரெசொல்யூஷன்ஸ் தான் சார் என்னுதும்.

    ReplyDelete
  3. நவாஸுதீன்!

    என்னென்ன ரெசொல்யூஷன்னு இன்னமும் சொல்லி முடிக்கவே இல்லையே!

    இப்பத் தான் அறிவிக்க ஆரம்பிச்சிருக்கேன், இன்னமும் செயற்குழு, பொதுக் குழு எல்லாம் கூட்டி, எல்லோரும் தலையாட்டி அப்புறமாத் தானே, குப்பைத்தொட்டிக்குள் கடாசப்போறோம்!

    அதுக்குள்ளேயே, என்னதும் அதுதான்னு .............இவ்வளவு வேகம் கூடாது :-))

    ReplyDelete
  4. கடைசி போட்டோல இருக்கு பாருங்க. நோ ரெஷெல்யூசன்ஸ் இஸ் மை ரெஷெல்யூசன்ஸ் அதுதான் என்னுது பாஸ்

    ReplyDelete
  5. நான் சொல்ல வந்ததே கடைசி 'கட்டத்'தில் நீங்களே சொல்லி உள்ளீர்கள்...

    புதுவருடத் தீர்மானங்கள் எதுவும் போடக் கூடாது என்பதுதான் புதுவருடத் தீர்மானமாக இருக்க வேண்டும் என்றுதான் நானும் சொல்ல வந்தேன்...(போன பதிவிலேயே...)

    ReplyDelete
  6. அதென்ன ரெண்டுபேரும் ஒண்ணாச் சேந்து ஒரே மாதிரித் தீர்மானம் போட்டிருக்கீங்க!

    வச்சாக் குடுமி, சரைச்சா மொட்டைன்னு ஒரு வார்த்தை சொல்ற மாதிரி, தீர்மானங்களாக் குவிச்சுத் தள்ளுவேன், அல்லாங்காட்டி ஒண்ணுமே தீர்மானிக்க மாட்டேன்னு சொல்றதே ஒரு தீர்மானமாப் படுதே எனக்கு!

    அப்புறம் எப்படி நோ ரெசொல்யூஷன்ன்னு சொல்லுவீங்களாம் :-))

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!