முடிவுக்கு வராத (தி) மு.க. கலாட்டா!


ஆனந்த விகடன் செய்திக் கட்டுரை கொஞ்சம் நாசூக்காக நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் நடந்ததைச் சொல்கிறது!

விகடனுக்கு நன்றியுடன்!
 



ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டாவுக்கு இன்று வயது 15!

கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

 'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக்கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின்.

னால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!

கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார்கள்!

செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சு வார்த்தைகூட இல்லை.

'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டினார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். 

ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தியும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.
''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட்பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார்.

னால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.   'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.

''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூல தனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள்.

நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.

உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன.


இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்!

அப்டேட்ஸ்: தகுதியில்லாத சோளக்காட்டு பொம்மைகள் தங்களை மனுநீதிச் சோழனின் பரம்பரையாக நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டதற்கு அட்டாக் மேல் அட்டாக்!  அழகிரியின் "அட்டாக்"  பாண்டி இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்! "அட்டாக் பாண்டியை வெறும் லொடுக்குப் பாண்டியாக்கி விட்டார்களே" என்று கோழிக் குஞ்சுக்குப் படபடக்கிற மாதிரி அஞ்சும் நெஞ்சோடு அ'னா! போலீஸ் கேள்விகளை எப்படி எதிர் கொள்வது என்று, வீரபாண்டி ஆறுமுகத்திடம் நேற்றைக்கு ட்ரைனிங் எடுக்கிற மாதிரி ஆகி விட்டதே!

சிலநாட்களுக்கு முன்னால் ஜெயதேவ தாஸ் என்ற நண்பர் இந்தப் பக்கங்களுக்கு எழுதிய பின்னூட்டங்களில் தலைவர்கள் பிறக்கிறார்கள், உருவாவதில்லை என்ற ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்று இந்தப் பக்கங்களில் எழுதிய பதிவுகளில், நடப்பு அரசியலையும் சேர்த்தே கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா?

திமுகவின் பொதுக் குழு விவகாரத்தை மறுபடி ஒருதரம் படித்துப் பார்த்துவிட்டு, தலைவர்கள் பிறக்கிறார்களா, உருவாக்கப் படுகிறார்களா, உள்நாட்டுக் குழப்பங்களில் உருக்குலைந்து போய் விடுகிறார்களா என்பதைக் கண்டு கொள்ள முடிகிறதா பாருங்களேன்!

தனிப்பட்ட முறையில் திமுகவுக்குள் நடக்கும் அதிகாரப்போட்டி, வெட்டு குத்து எதிலும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. இனத் தலைவர், தானைத்தலைவர் என்று தங்களைத்  தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்டவர்கள் கதை இப்போது கந்தலாகிக் கொண்டிருப்பதில், என்ன பாடம் கற்றுக் கொள்ள முடிகிறது என்பதைத்  தாண்டி, இவர்கள் அக்கப்போரில் எந்த அக்கறையுமில்லை.

இந்திய சூழ்நிலைகளில் தலைவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தகுதியில்லாதவர்களும், பொருத்தமில்லாதவர்களும் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைப் பண்பு என்பது வெற்று வசனமாக மட்டுமே இருக்கிறது. அதனால்தான் என்னவோ, கூத்துக்கு வசனம் எழுதுகிறவன் எல்லாம் இங்கே தலைவனாகி விட முடிகிறது!முதுகெலும்பு இல்லாத கோழைகள், தங்கள் கவர்ச்சியினால் தலைவர்களாகி விட முடிகிறது!

உதாரணத்துக்கு ஜனங்களுடைய நல்லெண்ணம் நம்பிக்கை, முழுமையான ஆதரவு, நேருவுக்கு இருந்தது மாதிரி வேறெந்த அரசியல் தலைவருக்கும் சுதந்திர இந்தியாவில் கிடைத்த
து ல்லை!ஆனால் என்ன நடந்தது?. உண்மையை மூடி மறைத்துக் காங்கிரஸ் கட்சி நேரு இமேஜைக் காப்பாற்ற முனைந்தாலும், தலைமைக்குரிய பண்பு எதுவும் இல்லாத நேரு, அத்தனையையும் வீணாக்கினார் என்று தான் வரலாறு சொல்கிறது.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!







  பதிவு பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால்,அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

5 comments:

  1. கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே போகுதே, எப்பத்தான் ரிசல்ட் தெரியும்,,,,,

    ReplyDelete
  2. //கன்னித்தீவு போல இந்த முடிவு இழுத்துக்கிட்டே.........//

    மனிதர்களால் முடிக்க முடியாததைக் காலம் முடித்துவிடுகிற போது எதற்காக இவ்வளவு அலுப்பு நண்பரே ?

    ReplyDelete
  3. enaku ennamo DMK has no future nu thonuthu


    your lovingly gonzalez

    http://funny-indian-pics.blogspot.com

    ReplyDelete
  4. நண்பரே, இந்த நாற்காலி பிரச்சனை ஸ்டாலினுக்கும், அழகிரிக்குமான பிரச்சனை இல்லை. கலைஞருக்கும், அவரது நாற்காலிக்குமான பிரச்சனை. அதனால்தான் கருணாநிதியே அழிகிரியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். கருணாநிதிக்கு நாற்காலி ஆசை இல்லையென்றால் எப்பொழுதோ தமிழகம் திசைக்கொன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். (இதே கட்டுரை என்பதால் பின்னூட்டத்தை வேறொரு இடத்திலும் இட்டுள்ளேன்)

    ReplyDelete
  5. Gonzalez!

    மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத, ஸ்டேடஸ் கோ என்று இருக்கிற விரிசலுடனேயே காலம் தள்ளுகிறேனென்று இருக்கும் தனிநபர், இயக்கம்,நிறுவனம் எதுவானாலும் சரிந்துவிழுவதில் இருந்து தப்ப முடியாது. திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

    ஏர்டெல் பிராட் பற்றிய உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தேன், 2009 இற்குப் பிறகு ஏர்டெல் நிறுவனம் மோசடி செய்யவே இல்லையா?
    :-))))

    திரு வான்முகிலன்!

    கமென்ட் பெட்டிக்கு மேலேயே, ப்ரொபைல் விவரங்களை ஒரு அளவுக்காவது வெளிப்படுத்தாதவர்களுக்கும் அனானிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.இந்தப்பதிவில் உள்ள ஒருபகுதி, சி பி செந்தில் குமார் பதிவிலும் வந்திருப்பதால் அங்கேயும் இங்கேயும் ஒரே பின்னூட்டம் இரண்டு பதிவிலும் என்று சொல்லியிருப்பதால், அதைத் தெளிவு படுத்துவதற்காக மட்டும் அனுமதிக்கிறேன்.

    இன்று வெளியான ஆனந்த விகடனில் வெளியான பாலமுருகனின் செய்திக் கட்டுரைதான் இது. அது பதிவின் முகப்பிலும், முடிவிலும் மிகத் தெளிவாகவே நன்றி தெரிவித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த செய்திக் கட்டுரையின் அடிப்படையில், தலைமை, தலைவனுக்கான பண்பு குறித்து, இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப் பட்டதையும் தொட்டு இந்தப்பதிவு விரிந்திருக்கிறது.அந்தப்பகுதியை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    கட் அண்ட் பேஸ்ட் பதிவர் நானில்லை என்பதை சொல்கிற அதே நேரத்தில், இங்கே. சில விஷயங்கள் அப்படியே எடுத்தாளப்படுவது, அந்த விஷயங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே!அப்படி வெளியில் இருந்து ரெபரென்ஸ் எடுத்தாளப்படும் இடங்களுக்கான சுட்டி, நன்றியுடன் தெரிவிக்காமல் இருந்ததில்லை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!