வைகோ....! ஒரு அரசியல் தற்கொலையின் பின்னணி!



தினமணி நாளிதழில் இன்று வெளியாகி இருக்கும் அஜாத சத்ரு என்ற பெயரில் எழுதி வெளியாகி இருக்கும் கட்டுரை.

தென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். "உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்'' என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரசும், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரசுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. - ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.  ÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. "கட்சின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெரு வாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை. 

"பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப் பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது?'' - பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.  சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம்.
1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது. 

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.

"தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள்?

12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்? தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.  வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.  35 இல்லா விட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம்  அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகு தான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்? 

ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக் கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். வைகோவால் பாதிக்கப் பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன் வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப் பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

"ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சி வசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்'' என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர். வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். "அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப் படுத்துவது தவறு'' என்று மூத்த தலைவர்களே கூட அங்கலாய்க்கிறார்கள். 

"தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள்? விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும் கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்'' என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர். 

அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடது சாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

"அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகார பூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்'' - இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர். 


1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப் பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்து விடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள். 

மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 



அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால்?

தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி. ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்?

மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினமணி நாளிதழில் இன்று காலை இந்த செய்திக் கட்டுரையைப் படித்தபிறகு, நிறையக் கேள்விகள் எழுகின்றன.

அதிமுக தன்னிச்சையாகத்தான் போட்டியிடப்போகும் இடங்களை அறிவித்ததும்,அதைத்தொடர்ந்து அதிருப்தியுடன், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைப்பதைப் பற்றிய பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்ததும், இரண்டிலும் சேர்ந்துகொள்ள முடியாமல் மதிமுக அந்தரத்தில் தொங்கிக் கொண்டு, அனேகமாக மதிமுக தேர்தலில் போட்டியிடாது என்பதை நாஞ்சில் சம்பத், பத்தொன்பதாம் தேதி கூடி முடிவெடுப்பதற்கு முன்பாகவே உளறிக் கொட்டியதும்,ஜெயலலிதா மீது ஊடகங்களுக்கு இருக்கும் ஒருவிதமான முன்கூட்டிய முடிவை மறுபடி ஊது ஊதென்று ஊதித்தள்ள ஒரு வாய்ப்பைக் கொடுத்ததே தவிர,அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதாக இருக்கவில்லை. திமுகவுக்கு ஒரு சாதகமான பிரசார உத்தி, அழகிரி கூட, வைகோ மீது பரிதாபப்பட்டு, வைகோ ஒன்றும் கூட்டணியை விட்டு விலகவில்லை, அதிமுக தான் அவரைத் தள்ளி வைத்தது என்று பேசியதும், திமுக தலைவர், மதிமுகவை ('இதயத்தில் இடம் கொடுத்தாவது') கூட்டணியில் சேர்த்துக் கொள்கிற உத்தேசம் இல்லை என்று அறிவித்ததும் ஆக ஜெயலலிதாவை ஆணவக்காரி என்று சித்தரிப்பதோடு மட்டும் நின்று போனது.

ஆனால், தாத்தாவின் கட்சியும் காங்கிரசுக்கு இதே வேலையைத் தான் செய்தது, அப்போதெல்லாம் தாத்தா அகந்தை பிடித்தவராக எவருக்கும் தோன்றவில்லை, ஊடகங்கள் ஊதவில்லை என்பது தமிழக அரசியலில் எப்போதுமுள்ள வினோதம்!எல்லோரையும் அரவணைத்துப் போகிறவராக திமுக தலைவருக்கு இருக்கும் இமேஜ் எவ்வளவு போலித்தனமானது என்பதைக் கண்ணதாசன் முதற் கொண்டு இன்று வரை நிறையப்பேர் தங்களுடைய நேரடி அனுபவமாகவே உணர்ந்திருக்கிறார்கள், வெளிப்படையாகவே வைகோ மாதிரி கட்சியில் இருந்து  வெளியேற்றப்பட்டு, குமுறிக் குமுறி அழுது கூட சொல்லியிருக்கிறார்கள். பாரதக் கதையில் திருதராஷ்ட்ரன் அணைத்துக் கொள்வதுபோலத்தான் தாத்தா எல்லோரையும் அரவணைப்பது என்பது கூட்டாளிகளுக்கே நன்றாகத்  தெரிந்த ஒன்று!
 
ஜனங்களுக்கும், மதிமுக தொண்டர்களுக்கும் இந்த நிகழ்வால் வைகோ மீது ஏற்பட்டிருப்பதாக நம்பப்படும் அனுதாபம், இன்னும் நான்கு நாளுக்காவது நீடிக்குமா என்பதும் சந்தேகமே! அப்புறம் தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு செய்யும்போது எப்படி இது ஒரு பிரச்சினையாக எடுபடும் என்று கூட எவருக்கும் தெரியாது!

கட்டுரையாளர் சொல்வதுபோலப் பாம்பின் கால் பாம்பு அறியும், தேர்தலன்று வாக்குச்  சாவடிகளில் திமுக செய்யும் அடாவடித் தனத்தைத்தட்டிக் கேட்க மதிமுக, இடதுசாரிகளால் மட்டுமே முடியும் என்பது தவறென்பது சென்ற தேர்தல்களிலேயே, அவர்கள் அதற்கு சக்தியற்றவர்கள் என்பதை நிரூபித்தும் காட்டப்பட்டிருக்கிறது. இப்போது உள்ள தேர்தல் முறைகள், அயோக்கியர்களுக்கு மட்டுமே துணை போவதாக இருக்கிறது, தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் வராமல், இதை மாற்ற முடியாது என்பதை இந்தப் பக்கங்களில் பல முறை பேசப்பட்டிருக்கிறது.

பிரசார பீரங்கியாக வைகோ இருந்தார், இப்போது எவர் இருக்கிறார்கள் என்று அதிமுகவினரே கவலைப்படுவதாகக் கட்டுரையாளர் சொல்வதும் கொஞ்சமல்ல,நிறையவே மிகைப்படுத்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியைக் கவனிக்கிற எவருக்கும், திக, திமுக, அதிமுக எல்லாமே பரப்புரை இயக்கங்களாகப் பரிணமித்தவைதான், பேச்சாளர்களின் பரப்புரையில் வளர்ந்தவைதான் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், தொலைக் காட்சிகள் நம்முடைய இல்லங்களுக்குள் ஊடுருவி, அசைக்க முடியாத ஒன்றாக ஆனபிறகு, இந்த மாதிரிப் புயல்வேகத்தில், சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து, உணர்ச்சி பொங்க வீர உரையாற்றுகிற வேலைக்கே இடமில்லாமல் போய்விட்டதை, சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்.

இப்போது என்ன நடக்கும்?

மதிமுகவில் பிடிப்பு உள்ள பலபேர் திமுகவிற்குத் தாவி விடுவார்கள். சரக்கு உள்ள சிலரைத் திமுக வாங்கிவிடும் என்பதைத் தவிர, மதிமுக தலைவர் மேல் ஜனங்களுக்கு ஏற்பட்ட அனுதாபம், திமுகவிற்குச் சாதகமான ஓட்டுக்களாக மாறிவிடும் என்பது அதீதக் கற்பனை!இந்தத்தேர்தலில் அலை எதையும் காணோமே என்று சில நாட்களுக்கு முன்னால் திரு கௌதமன் கேட்டிருந்தார்.

வைகோ மீது ஜனங்களுக்கு இருப்பதாகக் கற்பிக்கப்படும் அனுதாப அலை நம்பர் ஒன்! இது வைகை நதியில் வெள்ளம் வந்து வயலேறிப் பாய்வதற்கு முன்னாலேயே, வந்த வெள்ளம் காணாமல் போவதைப் போலத்தான்!

வேறு அலையே இல்லையா? திமுக தேர்தல் அறிக்கையிலேயே நிறைய இலவச அலைகள் இருக்கிறதே!

இலவசங்கள் என்ற மாயையில் இருந்து விடுபட்டாக வேண்டிய தருணம் இது!

இப்போது அடிக்கவேண்டிய அலை, இலவசங்கள் என்ற மாயையில் இருந்து விடுபடுவோம்! காங்கிரசையும், அதன் கூட்டாளிகளையும், வருகிற தேர்தல்களில் மீண்டும் தலையெடுக்க விடாமல் செய்வோம் என்கிற உணர்வு அலைதான்!


என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

4 comments:

  1. தோ வந்துட்டாருட ஜெயா டிவி ரவி பெர்னார்ட்

    ReplyDelete
  2. திரு இளையராஜா!

    நான் ரபி பெர்னார்ட் இல்லை. இன்னொருவரைக் காப்பியடிக்கும் அவசியமும் இல்லை. பதிவில் சொல்லப்பட்ட விஷயத்துக்கு மாறுபட்ட கருத்தை உங்களால் சொல்ல முடியவில்லை என்பது என் குற்றமா?

    ReplyDelete
  3. வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
    அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
    தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
    அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
    "தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
    அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
    தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
    ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
    அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
    கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.

    வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??

    என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.

    ReplyDelete
  4. வைகோ அரசியலில் ஒரு தெளிவான நிலை எடுத்ததில்லை, ஊசலாடிக் கொண்டே இருந்தார், இருக்கிறார் என்பது அவருடைய மிகப்பெரிய பலவீனம்! அதற்காக அவரை மருத்துவர் ஐயாவுடன் ஒப்பிடுவதெல்லாம் அதீதம்! மருத்துவர் ஐயா,அப்பட்டமான சந்தர்ப்பவாதி!

    இப்போது இந்தத் தேர்தலில் எது முக்கியமானதோ அதை விட்டுவிட்டு வேறுபக்கம் ஜனங்கள் கவனம் திசைதிரும்ப வைகோ ஒரு காரணியாகி இருக்கிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அவரால் செய்யவும் முடியாது. அதீத உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அதிகமாகத்தவருகளைச் செய்கிறார்கள் என்பதற்கு வைகோ ஒரு நல்ல உதாரணம்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!