நீ கருப்பு எம்ஜியார்னா, நான் கருப்பு நேரு! தேர்தல் என்றால் காமெடி டைம்!

நீ முதலமைச்சர்னா, நான் பிரதமர்!
 

நீ பிரதமர்னா, நான் ஜனாதிபதி!
நீ ஜனாதிபதின்னா, நான் ஒபாமா!
....................
நீ கருப்பு எம்ஜியார்னா, நான் கருப்பு நேரு!



காங்கிரசுக்குக் கெட்ட நேரம்,நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும், அதான் எனக்குத்  தெரியாதே ரேஞ்சில் பதில் சொல்லிக்கொண்டிருக்கிற டம்மிப் பீஸ் பிரதமரோடு மட்டும் நின்று விடவில்லை!ஏழரை எல்லா ரூபங்களிலும் தொடர்கிறதோ..!


கூட்டணி தர்மத்தில் "பங்காளி" திமுக பிரசாரத்திலும் தொடர்கிறது! பாருங்கள் கைப்புள்ளன்னு நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பவர்  என்னென்ன பேசுகிறார்! முதலமைச்சர்  கனவோடு கட்சியை ஆரம்பிக்கிறவர்களுக்கு இது வேண்டியதுதான்! வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரிப் பேசக்கூடியவர்கள் இல்லையே என்ற திமுகவின் மனக் குறையைக் 'கைப்புள்ள' வடிவேலு தீர்த்து வைத்து விடுவார் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை!

அதுவரை சரி!

ஆனால், நீ அதுன்னா நான் இது என்று பேசுவது நம்மூர் அரசியல் எந்த அளவுக்குத்தரம் தாழ்ந்திருக்கிறது, பேசவிட்டு எவரெல்லாம் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தத்தேர்தலில் உங்களால் ஒரு சரியான முடிவை எடுக்க முடியும், மாற்றத்தை சாதிக்க முடியும்!


உண்மை சுடும், உறுத்தும் என்பது உண்மைதான் போல!
 

முதமைச்சரை உறுத்தியது இந்த செய்தியாக இருக்கக் கூடுமோ?

விலை மதிப்பில்லாத வாக்குகளை விற்காதீர்: தேர்தல் ஆணையம் பிரசாரம்!

சென்னை, மார்ச் 25: "விலை மதிப்பில்லாத வாக்குகளை விற்கக் கூடாது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்' என தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வருகிறது.  வாக்களிக்கப் பணம் அளிக்கப்படுவது தொடர்பான புகார்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. மேலும், பலர் தங்களது வாக்களிக்கும் கடமையில் இருந்து தவறுகின்றனர். 

இதுகுறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசார போஸ்டர்கள், குறுந்தகடுகளை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தக் குறுந்தகடுகள் ஒரு மணி நேரம் வரை ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறுந்தகட்டில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பேசியுள்ளனர்.  பிரசார போஸ்டர்கள்: விழிப்புணர்வுப் பிரசார போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம். சரியாகப் பயன்படுத்துவீர்! 

மனதில் உறுதி வேண்டும்; மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். 

நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும்.

விலை மதிப்பில்லாத உங்கள் வாக்கை பணத்துக்காக விற்பதா?

உங்கள் வாக்கினை சரியாகப் பயன்படுத்துவீர்!


ஆகிய வாசகங்களைக் கொண்டு பிரசார போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன


"இப்போது இருக்கும் தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான தேர்தல் ஆணையம். எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க முற்படும் தேர்தல் ஆணையம். ஏனென்றால், அந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் அப்படி. 

சென்னை உயர் நீதிமன்றமே எச்சரித்திருக்கிறது. கட்சி சாராதவர்களாக, சார்பில்லாத அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும்.
நடுநிலையான அமைப்பால் நடத்தப்படும் தேர்தலில் வெற்றி பெறுவதைத்தான் விரும்புகிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தாவது தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். 

பெரியாரால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு; அண்ணாவால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு. கேரளத்தில் மஹாபலி மன்னன் கொல்லப்பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு ஓணம் பண்டிகையைக் கொண்டாட முற்படுகின்றனர். நான் முதல்வராக வரக் கூடாது என்று கூறுவதற்கு ஒரே காரணம், ஒரு பகுத்தறிவாளன், மறுமலர்ச்சியை விரும்புகிறவன், இன உணர்வு கொண்டவன் முதல்வராக வரக் கூடாது என்பது மட்டும்தான்"


இப்படி நேற்றைக்குத்திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் பேசியிருக்கிறார்! தினமணி செய்தி இங்கே.



தேர்தல் ஆணையம் இதுவரை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பதும்,முறைகேடுகளை  உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தவும்,தவறு செய்தவர்களைத்  தண்டிக்கவும் போதுமான ஆள்வசதி, மன உறுதியோடு இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால்,சின்ன சின்னக் கட்டுப்பாடுகளைக் கூடத்தாங்கிக் கொள்கிற நிலையில்,வலிமையோடு ஆளும் திமுக கூட்டணி இல்லை என்பதைக் காட்டுவதாகத் தான் முதல்வரின் இந்தப்பேச்சை அர்த்தம் செய்து கொள்ள வேண்டி ருக்கிறது.

தேர்தல் வினோதங்களில் அடுத்தடுத்து வரும் காமெடிகளில் ஒன்றாக,
கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றுதான் கூறினேன். ஜெயலலிதா முதல்வராவார் என்று கூறவில்லை  என்று ஈரோட்டில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  நேற்று வைகோ பேசியிருப்பதும் இருக்கிறது!

இவர்கள் இப்படியே தொடர்ந்து காமெடி செய்ய விட்டுக் கொண்டிருந்தால்,நம்முடைய கதை கந்தல்தான் என்பதைப் புரிந்துகொண்டு வருகிற தேர்தல்களில் நம்முடைய வாக்குகளை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!
 

எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததுமில்லை!
 

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்? எப்படி நம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம்?

இப்போதாவது........  

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு........ !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல், எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா! 

காங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தலைஎடுக்க விடாமல், வருகிற தேர்தல்களில் பாடம் புகட்டுவதில் இருந்து அந்த விழிப்பும், முயற்சியும் தொடங்குகிறது!


என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!





 

3 comments:

  1. நீ எழுதியிருக்கிறது ஏதாவது உனக்கே புரியுதா?

    ReplyDelete
  2. லக்ஷு என்ற லக்ஷ்மிநாராயணன்! எம்எஸ்சி. பி எட் முடித்துவிட்டு ஒரு அரசுப்பள்ளியில்,பிடி அசிஸ்டண்டாக வாத்தித் தொழில் செய்வதாக உளுந்தூர்ப்பேட்டை வலைத்தள முகப்பு சொல்கிறது. சரி!

    நான் என்ன எழுதுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டுதான் எழுதுகிறேன்! எழுத்துக் கூட்டிப் படிக்கக் கூட உங்களால் முடியவில்லை என்றால் அது என்னுடைய குற்றமல்ல.

    ReplyDelete
  3. ரொம்பத் தெளிவா இலவசங்களுக்கு மயங்காமல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணிக்கு எதிராக தெளிவாக வாக்களித்தால் மட்டுமே

    நாடும் நாமும் அழிவை நோக்கிச் செல்வதில் இருந்து மீள முடியும் எனச் சொல்லி இருக்கறீர்கள்.

    உங்கள் கருத்துடன் நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!