#கண்டுகொள்வோம்கழகங்களை மாற்று அரசியலை யோசிக்க வேண்டிய தருணம் இது!

இன்றைக்கு எங்கே திரும்பினாலும் அம்மாபுராணம், அம்மா பெயரால் சூளுரைகள் என்றே காதைக்கிழிக்கும் அளவுக்குத் தம்பட்டங்கள் இருக்கும் என்பதால் காலை முதல் உள்ளூர் சேனல் எதன்பக்கமும் போகாமல் தவிர்த்து வந்தேன். இதற்கு முன்னாலும் கூட மாநில அரசின் இடைக்கால பட்ஜெட் செய்திகளையும் தவிர்த்தேன். மாநில அரசின் பட்ஜெட் வெறும் காகித அறிக்கையாக மட்டுமே இருக்கும் என்பதே காரணம். 


ஆனால் இன்று வெளிநடப்பு செய்யும் நாங்கள் அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் மீண்டும் இந்த சபைக்குள் நுழைவோம் என்று திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் தெரிவித்ததாக இந்துதமிழ் திசை செய்தியைப்பார்த்ததும்  சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. வெளிநடப்புக்கு முன்னால் என்ன நடந்ததாம்? பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்கிறது அதே நாளிதழில் இன்னொரு செய்தி. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நிதியமைச்சரை சபாநாயகர் அழைத்தபிறகு, நாங்கள் தான் முதலில் பேசுவோம் என்று வாக்குவாதம் செய்வது என்ன நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை? வெளிநடப்பு செய்வதற்கென்றே சபைக்கு வருகிற திமுகவினருக்கு தாங்கள் முதலில் பேச அனுமதிக்கப்படவேண்டும் என்று அமளி செய்ததெல்லாம் வெறும் சால்ஜாப்பு மட்டுமே.  .

என்னுடைய கேள்வியெல்லாம், இப்படி சவடாலாக வெளிநடப்பு செய்கிறோமென்று பெஞ்சைத் தேய்த்து விட்டு வரும் திமுகவினருக்கு சட்டசபைக்குள் மறுபடி நுழைகிற வாய்ப்பைத் தந்தே ஆகவேண்டுமென்கிற தலையெழுத்து வாக்காளர்களுக்கு இருக்கிறதா?  

அதேபோல இலவசங்கள் என்கிற மாயையிலேயே மக்களை வைத்திருப்பதற்குக் கடன்சுமையை ஏற்றிக் கொண்டே வருகிற அதிமுகவுக்கும் கூட இன்னொரு வாய்ப்பைத் தந்தேயாகவேண்டுமென்கிற அவலம், தலையெழுத்து வாக்காளர்களுக்கு இருக்கிறதா? 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பாமக இதற்கு ஆட்சேபணையைத் தெரிவித்தாலும்,அதைத்தாண்டி எதையும் செய்யமுடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. முகத்தையும் காப்பாற்றிக் கொண்டு, அதிக சீட்டும் அதிமுகவிடம் கேட்கலாம் என்கிற மருத்துவரின் நினைப்பிலும் மண்விழுந்து விடும்போல இருக்கிறது.  


பாண்டிச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்து வரலாறு படைத்த நாராயணசாமி திமுகவுடன் சேர்ந்து கெட்டது போதாதென்று இப்போது விசிகவின் திருமாவுடன் வேறு சேர்ந்து போராட்டம் நடத்துகிறாராம்! வேடிக்கை தான்! 

இப்படிக் கழகங்களுடன் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டு காசுபார்ப்பதற்காகவே கட்சி நடத்தும் பாமக, விசிக, இடதுசாரிகள் முதலான உதிரிகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டியது முன்னெப்போதையும் விட இப்போது அவசரமும் அவசியமுமாகி இருப்பது புரிகிறதா? இப்படி எல்லோரையும் நிராகரித்து விட்டு யாரைத்தான் தேர்ந்தெடுப்பதாம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

தாராளமாகக் கேளுங்கள்! இதுவரை உருப்படியாக எதுவுமே செய்திராத கட்சிகள், வேட்பாளர்களை முழுதாய் நிராகரிப்பதிலிருந்து, ஒரு மாற்று அரசியலைத் தேடி முன்னெடுப்போம். சேர்ந்தே செய்வோமா?

மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. தன ஜாதியை தூக்கி பிடிக்கணும்னா பதவியில் இல்லாத செத்த கட்சிகளான காங்கிரஸையோ அல்லது துண்டு சீட்டை பத்தியோ தினசரி வாய்க்கு வந்த படி பிதற்ற வேண்டியதுதான் ஓய்வு பெற்ற ஆளின் கடமை போல . பொருளாதார அறிவு இருந்தால் இப்போ நாட்டை நாசம் செய்யும் பிஜேபி ஆட்சியை பற்றி கொஞ்சமாவது எழுதி இருப்பீர்

    ReplyDelete
    Replies
    1. அ.ரா என்கிற அனாமதேயம்!

      இங்கே வந்து நன் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தூ சொல்வதற்குப் பதிலாக பிஜேபியைப் பற்றி, பொருளாதாரம் பற்றி ஒரு blog தொடங்கி அதில் எழுதிப் பார்க்க வேண்டியதுதானே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!