இப்போதைக்கு இது போதும்!-பகுதி 2


இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மெண்டு 1
இப்போதைக்கு இது போதும் - இன்ஸ்டால்மென்டு 2

"ஏதோ வலைப் பதிவுகளைத் திரட்டுற திரட்டிகளைப் பத்திக் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே! அதுக்காக இரண்டு திரட்டிகளில் கூட இணைஞ்ச மாதிரி இருந்ததே? புதிதாக ஏதாவது தெரிஞ்சதா, இல்லை, எல்லோரும் பாடும் பதிவுப் பாட்டுத்தானா?"

புள்ளிராஜா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம், புள்ளி வைத்தவுடனேயோ, வைப்பதற்கு முன்னாலேயோ, புள்ளிக்கே புள்ளி வருமா, எப்பெப்போ என்னென்ன கலர்களில் வரும் என்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கும் நண்பர், இன்றைக்கு என்னவோ நேரடியாகவே, விஷயத்திற்கு வந்து விட்டார்.

"அது என்ன பதிவுப் பாட்டு? பதியாதபாட்டு??" என்றேன் நான். வந்ததும் வராததுமாக புள்ளிவிவரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எதற்கு வம்பு?

"எந்த ஒலகத்துல இருக்கே நீ? சினிமாவெல்லாம்பாக்குறதே இல்லையா?"
நண்பர்
கொஞ்சம் அதிர்ச்சியுடனேயே கேட்ட மாதிரி இருந்தது.அவர் நினைத்த உலகத்தில் இல்லாமல் போய்விட்டால், அப்புறம் யாரிடம் புள்ளிவிவர மூட்டையை அவிழ்த்து விடுவது என்று பயத்துடனேயே கேட்ட மாதிரியும் இருந்தது.

"அதுதான் நிறைய சினிமாவுல கதாநாயகன் குடும்பத்துக்கு மட்டும்னு ஒரு குடும்பப் பாட்டு இருக்கும், காணாமப் போனவுங்க, இங்க ஒத்தர் அண்ணா சாலையில அந்தப் பாட்டபடிச்சாருன்னா, அமெரிக்காவுல இருக்குற இன்னொருத்தர் அதைக் கேட்டு "அண்ணா"ன்னு ஓடிவந்து கட்டிப் புடிச்சுச் சேந்துக்குவாங்களே ....அந்தமாதிரி, ஏதோ ஒரு திரட்டியில, ஒருத்தரோட பதிவுக்கு முக்கியத்துவம் கிடைக்கலைன்னாலும், அல்லது வேறு யாரோட பதிவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கிடைச்சாலும், தன்னோட பதிவுல ஒரு பாட்டுப் படிப்பாங்களே, அது தான் பதிவுப் பாட்டு! இதுகூடத் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பதிவு போடறீங்க, என்னத்த எழுதறீங்க?"

நண்பரை மேலும் பேச விட்டால் நக்கல் கொஞ்சம் அதிகமாகி விடும் என்பது தெரியும், இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? விதி வலியது என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம் என்றால், நண்பர் விடுவதாகவே இல்லை.

லாப்டாப்பை எடுத்துக் கொண்டார். கணக்குப் போட ஆரம்பித்தார். சரி இன்னைக்கும் கிளிஞ்சது கிருஷ்ணகிரின்னு வாயை மூடிக் கொண்டு நண்பர் உதிர்க்கப் போகும் புள்ளி விவரத்தை பயபக்தியுடன் கேட்பது போல பாவனை செய்யக் கஷ்டப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

"அது ஏன் எப்பவுமே கிருஷ்ணகிரியே கிளிஞ்சிட்டிருக்கனும்னு தானே நினைக்கிறே? வேற ஊர் எதுவும் மாட்டலையானும் நினைக்கிற இல்லே?"

எதுவோ முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்னு சொல்வாங்க இல்லையா?அதேமாதிரித் தான், இந்தப் புள்ளி விவர ஆசாமிங்களும்னு தெரியும். வெளியில சொல்லிற முடியுமா? பாருங்க! ஏறின விலைவாசி அப்படியே ஏறினபடிக்கே இருக்கும், ஆனாக்க நம்ம அரசாங்கம் வெளியிடுற புள்ளிவிவரம் பாத்தாக்க, பண வீக்கம் கொறஞ்சுகிட்டே இருக்கும், ஆனாக்க விலைவாசிப் புள்ளி கூடுற மாதிரிக் கூடி, அப்புறம் கொறயும்!

எல்லாம் அந்தப் புள்ளிவிவரத்தோட மகிமை அது!
புள்ளிவிவரமும் கூடக் கடவுள் மாதிரி! மணியாட்டிக் கற்பூரம் காட்டி இருக்குங்கிற மாதிரியும் காட்டலாம்! இல்லேன்னாக்கப் பகுத்தறிவுப் பகலவனாகி, கிளிப்பிள்ளை மாதிரி இல்லை இல்லைன்னு சொல்லிக் கிட்டே இருந்தாக்க, இல்லைன்னும் ஆக்கிப்புடலாம்!!


இதுனாலதான், புள்ளிராஜா வங்கியில, தினப்படி, வாராந்திர, மாதாந்திர, அப்புறம் நிமிஷத்துக்கொரு தரம் ஸ்டேட்மென்ட் போடற வேலையை அவ்வளவு பயபக்தியோட, எவ்வளவு தப்பாச் செய்ய முடியுமோ அவ்வளவு தப்போட இன்னிக்கும் செஞ்சுகிட்டிருக்காங்க போல!

நண்பர் நல்ல மூடில் இருந்தார் என்பது, ஜோசியம் பார்க்கிற மாதிரிக் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கணக்குப் போடுவது போல ஒரு பாவனையில் சுகமாக இருப்பதிலேயே தெரிந்தது.

"எல்லாஞ்சரிதான் அண்ணாச்சி, சொல்ல வந்ததைச் சொல்லிப்புடுங்க! அதுக்கு ஏன் குடும்பப் பாட்டு, பதிவுப் பாட்டுன்னு பாட்டுப் பாடிப் பயமுறுத்தறீங்க?" என்றேன். என்னுடைய திடீர் தைரியத்தைக் கண்டு நண்பர் கொஞ்சம் அசந்துபோயிருக்க வேண்டும்!

"சமீப காலமாத் தமிழ்ப் பதிவர்கள் ஒலகத்துல, ஹிட்ஸ் பத்தின கணக்கு, அது சும்மா கள்ளக் கணக்குல்லேன்னு அதன் மேல கமென்ட், அப்புறம், இந்தத் திரட்டி இன்னாருக்குச் சார்பாவே போயிட்டிருக்கு, இல்லே எனக்கு எதிரா சதிபண்ணுது , இப்படிப் பரபரப்பா எத்தையாவது கிளப்பிக் கொண்டே இருக்கறது தான் ஃபேஷன், தெரியுமா ஒனக்கு?"

"அத்தைத் தெரிஞ்சு நான் என்ன செய்யப்போறேன் அண்ணாச்சி, நீங்க என்ன சொல்ல வாரீங்கங்கறதை மட்டும் பேசுங்க." என்னுடைய தைரியத்தைக் கண்டு, இப்ப எனக்கே ஆச்சரியம் வந்திட்டது!

"இப்ப ஒன்னோட பதிவையே எடுத்துக்குவமே! போன ஜூன் மாசத்தில நடுவுல தான் ஒன்னோட பதிவத் திரட்டிகளில் இணைச்சிருக்கே இல்லையா?"

லாப்டாப்பைத் திறந்து, அண்ணாச்சி தேட ஆரம்பித்தார். நான் பேசாமல் இருந்தேன்.

"ஜூன் மாசம் திரட்டிகளில் இணைக்கிறதுக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒம்போது மாசம், அறுபது பதிவுகள்னு எழுதியிருந்தும் கூட ஹிட்ஸ் பாத்தா வெறும் மூவாயிரம் தான் இல்லியா? அதுலயும், நீ வந்து பாத்தது, கமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா பதில் சொல்ல வந்தது இப்படி அப்படின்னு ஒரு 25 பெர் சென்ட் கழிச்சாக் கூட, ஒரு ரெண்டாயிரம், ரெண்டாயிரத்து இருநூறுன்னுதான் தேறும் இல்லியா?"

"சரிதான். அதுக்கென்ன இப்போ?"

"ஜூலை மாசம் 15 ஆம் தேதி வேணும்னே ஒரு தலைப்பை வச்சு விளையாட ஆரம்பிச்ச பொறவுதானே சூடு பிடிக்க ஆரம்பிச்சுது இல்லியா?"

"இப்படி இன்னும் எத்தனை தடவ இல்லியா, இல்லியான்னே கேட்டுகிட்டே இருக்கப் போறீங்க அண்ணாச்சி? புள்ளிவிவரம் இந்தச் சின்னக் கணக்குப் பாக்கிறதுக்குத் தானா? இல்ல, வேற உருப்படியான சோலி எதுனாச்சும் இருந்தாப் பாப்பமா?" என்றேன்.

உள்ளூர எனக்கு அழுகை அழுகையாக வந்தது. பிரபலப் பதிவர், பரபரப்பான பதிவர் ஆகுற யோக்கியதை, எனக்கில்லே, சொக்கா, எனக்கில்லேன்னு திருவிளையாடல் நாகேஷ் மாதிரியோ, வேற வீராவேசமான பதிவருங்க மாதிரியோ கோவில் பிரகாரம், பார்க், பீச்சுன்னு திரிய முடியுமா?பத்தாக்குறைக்கு, பார்க்,பீச்செல்லாம் கூடத் தமிழ் நாட்டுல இட ஒதுக்கீட்டின் கீழ் வந்து விட்டதாக பதிவர் டோண்டு ராகவன் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருக்கார்! பைனான்ஸ் கம்பனியில எமாந்தவங்களுக்குப் பனகல் பார்க், இப்படி அப்படின்னு!

நண்பருக்கு உள்ளே நான் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தது தெரிந்திருக்க வேண்டும். பொம்பளை அழுதா இரக்கப் படுவாங்க. ஆம்பளை அழுதா, அடச்சீ, நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா, இப்படி மூசுமூசுன்னு அழுதுகிட்டு என்று திட்டுவாங்க.

பதிவு எழுதறவன் அழுதா......நண்பர் மாதிரி ஊரே கூடி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுடாதா? அதுவும் புள்ளி விவரம்லாம் பாக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நக்கலாகிப்போய் விடாதா?

அழுகை கோபமாக மாறி, நண்பரைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டே, "சரி அண்ணாச்சி, உண்மைதான், பதிவ ஆரம்பிச்ச முதல் ஒம்போது மாசங்கள்ல வந்ததை விட ஜுலை 15 இற்கும் இப்பத்தைக்கும் வந்தவுங்க எண்ணிக்கை தான் அதிகம். அதுக்கு என்ன இப்போ?" என்றேன்.

என்னுடைய கோபம் நண்பருக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.

"முன்னாடியே பேசினது தான் நண்பா! அப்பப் பேசினது அப்போதைக்குப் போதும்னு சொன்னேன். இப்ப மிச்சத்தையும் பாத்துடலாமில்லியா?"

"பேசவேண்டாமின்னு சொன்னாக் கேக்கவா போறீங்க அண்ணாச்சி! பேசணும்னு தானே முடிவெடுத்து வந்திருக்கீங்க, பேசிடுங்க!" என்றேன். வேறென்னத்தச் சொல்ல?

"நண்பா! இந்தப் பதிவுலக நுண்ணரசியல், நுணுக்கமான அரசியல்னு சொல்றாங்க பாரு, அது ஒண்ணுமே இல்லை! உரிக்க உரிக்கக் காணாமப் போயிடும் வெங்காயம்! அவ்ளோதான்!"

"என்ன தத்துவமா? வெங்காயமெல்லாம் உரிக்கறீங்க?" வெங்காயம்னு சொன்ன உடனேயே ஒரு தெம்பு வருது பாருங்க, அத அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்!

"கொஞ்சம் வெங்காயத் தொலிய ஓரங்கட்டி வச்சுட்டு, சொல்றதைக் கேளு! பதிவு எளுத ஆரம்பிக்கிற எல்லாருமே, தன்னை அடையாளம் காட்டிக்கத் தான் எளுதறாங்கன்னு சொன்னேன் இல்லியா? அப்படி ஆரம்பிக்கும்போது அங்கே இங்கே மத்தவுங்க எழுதறதைப் பாத்துட்டு, தன்னோட சொந்த அடையாளத்தை மறந்துடறாங்க! இது தான் ஒரிஜினல் பிரச்சினை!"

"யாருக்காகவோ எழுதணும்னு நெனைக்கிறதை விட்டுட்டு, தனக்காகவே எழுதணும்னு நெனைச்சிருந்தாங்கன்னா, திருவிழாக் கூட்டத்துல தொலஞ்சுபோற பிள்ளைமாதிரி ஆகாம இருக்கலாம். நீ கூட, திருவிழாவுல தொலைஞ்சுபோன பிள்ளை மாதிரி ஃபீல் பண்ணி ஒரு பதிவு எழுதியிருந்தே, இல்லியா? தனக்காக, தான் ரசிக்கிறதுக்காகவுன்னே எளுத ஆரம்பிச்சா, உன்னையும் இந்த உலகம் தேடி வந்து ரசிக்கும்! நெசம்! தனக்குன்னு எளுதும்போது, கொஞ்சம் வக்கணையா, பொய்க் கலப்பு இல்லாம, ருசியா இருக்கணும்னு நினைப்போமில்லியா, அதுதான் சூட்சுமம்!"

என்னதான் மூச்சடக்கி, கஷ்டப்பட்டு முத்துக் குளிச்சாலும், நல்ல வெலை கெடைக்க ஒரு செட்டியார் தயவு வேணுமில்லியா?

அங்கே தான், இந்தத் திரட்டிகளுடைய அவசியமே வருது!

திரட்டிங்க பண்றதெல்லாம், ஷோக்கா டிபார்ட்மென்ட் ஸ்டோரில் டிஸ்ப்ளேல, சரக்குகளை வெளிச்சம் போட்டு வச்சிருப்பாங்கள்ள, அதே மாதிரித்தான்! நீ அவங்க கிட்டஇணைஞ்சப்புரம் பதிவுகளை சமர்ப்பிக்கும்போது, வாசகர் பரிந்துரைன்கிற பேர்ல கொஞ்சம் ஓட்டுக் கிடைக்கும்! யாருடா, நம்மையும் மதிச்சு ஓட்டுப் போட வந்தவுங்கன்னு பாத்தா, அதுக்குன்னே சில பேர் இருப்பாங்க. பெரும்பாலும் இவங்க அடையாளத்துக்கும், இவங்க எழுதற பதிவுக்கும் முடிச்சே இல்லாத மாதிரித் தான் மேலோட்டமாத் தெரியும்.

ஏதோ ஒரு அளவுகோல் வச்சு, குறிப்பிட்ட சரக்குகளை மட்டும் கொஞ்சம் கூடுதலா வெளிச்சம் போட்டு, இது தான் சூடான பதிவு, அதிகம் பரிந்துரைக்கப் பட்ட பதிவுன்னு காமிப்பாங்க.

இப்பப் புதுசு புதுசாத் திரட்டிகள் வந்துட்டதால, ஏற்கெனெவே மணம் பரப்பிக் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு திரட்டி, வலியவே போய், உங்களோட பதிவை எங்கள் திரட்டியில் 4000, 4500, 5000, 5500, 6000 ஆவது பதிவாக இணைத்திருக்கிறோம் என்று பரிவட்டம் கட்டி ஆளை இழுத்து வருகிற வேலையை ஆரம்பித்ததும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் பின்னூட்டம் இடுகிற சந்தடி சாக்கில், உங்கள் பதிவை எங்கள் வளையத்தில், எலி வலைக்குள் சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததில், ஒரு அறிவிக்காத யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி வெளிச்சம் போட்டுக் காமிக்கிரதுல சில பதிவுகளும், பெரும்பாலான நேரங்களில் பதிவர்களுமே பிரபலமாகிப் போவது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட் அவ்வளவுதான்! இதுல வேறு மோடி வித்தை, சூட்சுமம் எதுவுமே இல்ல. இப்படி அதிகம் வெளிச்சம் பட்ட பதிவர்கள் எல்லாருமே சரக்கோட எப்பவுமே எழுதறதும் இல்ல. இதையும் மனசுல வச்சுக்கோ.

உன்கிட்ட இருக்கிறது நத்தைக் கூடா, நல்ல முத்தான்னு தேடரவுங்களுக்குத் தெரியாதுல்ல! நல்ல முத்தைப் பிரிச்சுத் தாரேன்னு தான் ஒவ்வொரு திரட்டியை உருவாக்கி நடத்துறவங்களும் சொல்றாங்க. ஒரு அளவுக்கு, அதே மாதிரி பிரிச்சும் தராங்க!ஆனாக்க ஒரு அளவுக்கு மேல போனப்புறம், திரட்டிஙகறது புரட்டுன்னு ஆகிப் போவதை, அவ்வப்போது நடக்கும் சர்ச்சைகள், சூடான வம்பு, சூடான இடுகை, சூடான வாக்குவாதம், சூடான கண்ணீர்னு வரிசையாக் காட்டிக் கொடுத்துடுது!

திரட்டிகளில் சேருவது என்பது உன்னோட பதிவை வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதுல இருக்கிற பல வழிகளில் ஒரு வழி, அவ்வளவுதான்! இதைக் கொஞ்சம் மனசுல வச்சுக்கோ."

மூச்சு விடாமல் நண்பர் சொல்லிக் கொண்டே போனதில் நான் தான் அதிகக் களைப்பாகிப் போனேன்.

இப்போதைக்கு இது போதும்!

புள்ளிவிவரச் சிங்கமே, மனமுவந்து மிச்சத்தை அடுத்த இன்ஸ்டால்மென்டுல பாத்துக்கிடலாம்னு பெருந்தன்மையா நிறுத்திக் கொண்டார்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!