இருப்பதென்னவோ ஒன்றுதான்! ஆனால் எத்தனை, எத்தனை பார்வைகள்?


கடவுள் என்ன நேற்று முளைத்த காளானா என்று தலைப்பைக் கொஞ்சம் காட்டமாக, அல்லது உசுப்பேத்திவிடுகிற மாதிரி வைத்து, காட்டா குஸ்திக்குக் களம் ரெடி, குஸ்தி போட வாரவுங்கல்லாம் வாங்கன்னு, மட்டக்கிளப்பிலிருந்து யோகராஜா சந்திரகுமார் என்ற சந்ரு எல்லோருக்கும் தனித்தனியா அழைப்பிதழும் கொடுத்து விட்டார்.

அழைக்காமலேயே தேடி வந்து குஸ்தி போடுகிற பதிவுலகத்தில், வெத்திலை பாக்கு வச்சு அழைச்சு, குஸ்தி போடுங்கன்னு சொன்னா, யாராச்சும் விடுவாங்களா? பின்னூட்டத்தில் பின்னிப் பெடலேடுக்கிறது அல்லது பெடலேடுத்துப் பின்றது ரொம்ப அமர்க்களமாகவே ஆகிப் போச்சு! ஒரு கட்டத்துல, இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியாம சந்ரு அடுத்த களத்தை ரெடி பண்ணப் போயிட்டார்! எங்கேயிருந்து, எப்போது, எப்படிக் கழன்று கொள்வது என்பது தெரிந்தால் தான் பதிவுலகத்தில் சர்வைவ் பண்ண முடியும்னு நல்லாவே தெரிஞ்சும் வச்சிருக்காருங்க!

வழக்கம் போல நம்ம வால்ஸ் வந்து போணி பண்ணப்புறம் தான் கோதா விறுவிறுப்பா ஆரம்பிச்சுது! அதிலேயிருந்து கொஞ்சம் ஹைலைட்ஸ்!

நம்ம மதுரைக்கார பேராசிரியர், [அட நெசமாத்தாங்க] அழைப்புக்கு மரியாதை கொடுத்துக் கொஞ்சம் அடக்கியே வாசிச்சுட்டுப் போயிட்டாரு! மிச்சத்தை வால் பையன் பாத்துக்கிடுவார்னோ, வாத்தியாரா இருந்து ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதில் அலுப்பு வந்திட்டதோ என்னவோ, கோதாவுல வாலிபப் பசங்களே இறங்கி ஆடிக்கட்டும், அடிச்சுக்கட்டும்னு இருந்துட்டாருங்க! எதுக்கும் இங்க போயிப் பாத்துட்டு வந்துடுங்க! அதைத் தான் அவரும் சொல்றாருங்க.

தருமி சொன்னது

என் பதில் கேட்டு அழைப்பும் அனுப்பி விட்டீர்கள். நான் என்னங்க சொல்லப் போகிறேன். வால் சொல்வது சரி என்றுதானே சொல்வேனென்று தெரியாதா?

எதுக்கும் இதையும்கொஞ்சம் வாசிங்க பதிலும் சொல்லுங்க. எல்லாம் உங்க கேள்விகள்தான்!

//எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். //

அதோடு சம்பிரதாயங்கள் (வழக்கங்கள்) வாழ்க்கை ஒட்டியவை. எப்போதோ வந்திருக்கலாம். மதங்கள் (வால்ஸ் சொல்றது மாதிரி) ஏதோ ஒரு கால கட்டத்தைச் சார்ந்தது. இந்துமதம் என்பது ஒரு அவியல். அதனாலேயே ஆரம்பம் இல்லை என்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கால கட்டத்தை ஒட்டியதே.

ஒரே விஷயுமுங்க: எதையுமே சாமி பெயரோடு சேர்த்து சொன்னா சட்டுன்னு நீங்க நம்பிடுவீங்கல்ல ... அதான் சம்பிரதாயம்.

கூப்பிட்டிருக்க வேண்டாமேன்னு தோணுமோ .. ?!



கிருஷ்ணமூர்த்தி "கடவுள் நேற்று முளைத்த காளானா..." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

வால்பையன் சொன்னது:
"நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தில் அவன் இயற்கையை கண்டு தேவையில்லாமல் பயந்தான் என்பதை விட வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்!"

உண்மை! தேவையில்லாமல் பயந்தான் என்ற இடத்தில் புரியாததால் பயந்தான் என்று மாற்றிப் பாருங்கள், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கான விடை காணக் கிடைக்கும்.

இந்த எல்லையற்ற பிரபஞ்சத்திலே, நான் தனி இல்லை, தனித்து விடப் படவில்லை, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் என்னுடன் இடையறாத தொடர்பு இருக்கிறது என்பதை உணரத்தலைப்பட்ட நேரமே, பயமில்லாமல், புரிந்துகொள்ள ஆரம்பித்ததன் தொடக்கம்.

புரிந்துகொண்ட விதமே கூட அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்து தான் நின்றது.

ஒன்று, இதைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும், படைப்பிற்குள்ளும், வெளியிலும் பரந்து விரிந்திருக்க வேண்டும்! அதாவது நான் இருக்கிறேன் என்றால், என்னைப் பெற்ற தாயொருத்தி இருக்கிறாள், அவள் என்னுள்ளும் வெளியிலுமாக இருக்கிறாள் என்று சொல்வது, என்னிடமிருப்பதெல்லாம், அவளிடமிருந்து பெறப்பட்டதே, ஆனாலும் அவள் தனியாகவும் [வெளியிலும்] இருக்கிறாள் என்று உணர்வதைப் போலத் தான்.
உடனே ஒரு கேள்வி வரும், என்தாயை எனக்குத் தெரியுமே, நான் பார்த்திருக்கிறேனே என்று! இங்கும் கூட தெரிந்து கொள்ள முடியும், பார்க்க முடியும்!

இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சமே ஒரு விபத்து. இதில் எந்தத் திட்டமிடுதலோ, ஒழுங்கோ இல்லை. அதே மாதிரி உயிர் என்பது கூட ரசாயனச் சேர்க்கையில் ஏற்பட்ட ஒரு தற்செயலான விபத்து தான்! ஏதோ ஒரு கட்டத்தில் தன்னைத்தானே mutate இருகூறாகப் பிளந்து கொள்கிற தன்மையுடன் ஒரு செல் உருவாக்கி, வளர்ந்து, வளர்ந்து, மாற்றங்களை அடைந்து, பரிணாம வளர்ச்சியில், இப்போதுள்ள மனிதன் ஈறாக உருவாகியிருக்கிறது. சில அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, உயிர் தோன்றியதே தற்செயலான விபத்து என்று சொல்லும் போது, எல்லாம் ஒரு இயற்கையான தேர்வால் natural selection என்று இருக்கும்போது, அங்கே கடவுள் என்று ஒன்று இல்லை,அது படைப்பது, காப்பது அழிப்பதான வேலைகளைச் செய்வதாக நினைப்பதெல்லாம் சும்மா ஒரு புருடா என்ற ரீதியில் இந்த சிந்தனையோட்டம் போகும்.

இந்த இரண்டு முரண்பாடான சிந்தனைகளுமே கூட ஓரிடத்தில் சந்திக்க நேரிடும் போது,

"நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை"
என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா?

அங்கே வந்து ஆதிசங்கரர் நிறுவியதாகச் சொல்லப் படும் அத்வைதக் கோட்பாடு "ப்ரஹ்ம சத்யா ஜகன் மித்யா-பிரம்மமே உண்மையானது காணுகின்ற தோற்றமெல்லாம் பொய்யானது" என்று ஒரு தரப்பும், "கண்டதே காட்சி, அது உண்மை! அதைப் படைத்ததாகச் சொல்லப் படும் கடவுள் மாயை" என்று அதையே உல்டா அடித்துச் சொல்கிற இன்னொரு தரப்பும் முட்டிக் கொண்டு நிற்கத் தான் செய்யும்! இது நேற்றும் நடந்தது, இன்றும் நிகழ்கிறது, நாளையும் நடக்கும்!

சரி, வாதம், எதிர்வாதம் என்று மட்டுமே இருந்தால் எப்படி, அதன் முடிவு என்ன, எங்கே என்று கேட்கிறீர்களா?

தொடர்ந்து பேசுவோம்!


கிருஷ்ணமூர்த்தி "கடவுள் நேற்று முளைத்த காளானா..." என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

supersubra சொன்னது:
/மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு உருவகப்படுத்தும் விதமாகத்தான் கடவுளை அறிய வேண்டும். இதில் வால்பையனும் அடக்கம்/

ஐயா வாங்க! நேத்து ராத்திரி தான் நம்ம வால்சுக்கு, சிறந்த சரவெடிப் பதிவர் விருது கொடுத்து ஒரு பதிவு போட்டேன்! அந்தப் பதிவுல, நீங்க வால்பையனை அருமையா ரசித்துக் கொண்டிருக்கும் படமும் இருக்கிறது.

நீங்க சொல்கிற ஸமுஸ்கிருதமெல்லாம் நம்ம வால்பையனிடம் எடுபடாது. ஏனென்றால், அவர் தன்னைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே "வாலொடு" முன்தோன்றிய மூத்த குடியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்:-)

அவர் லாஜிக்கே தனி!
சாம்பிளுக்கு,
/இந்து மதம் ஆதியும், அந்தமும் அற்ற ஒன்றா? அப்போ மற்ற மதங்களும் அப்படி தானே இருக்க வேண்டும்!

கிருஸ்துவம் 2000 வருடம்
இஸ்லξம் 1700 வருடம்

இதுமட்டும் எப்படி!? /

இந்து மதம் என்று பரவலாக அழைக்கப் படுகிற தத்துவ தரிசனம், நாத்திகம் பேசும் சாங்கியம் உட்பட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இவை என்று பிறந்தவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், மிகத் தொன்மையானவை.இவை காட்டும் இறைத்தன்மையைத் தான் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்பட்டதே தவிர, இந்தத் தத்துவ மரபில் வந்த ஆசிரியர்கள், அவர்களைப் பின்பற்றி எழுந்த சமயங்களையும் ஆதி அந்தமில்லாததாக சொல்லவில்லை.அப்படி அவருக்கு யாராவது சொல்லியிருந்தால், அல்லது அப்படி வால்பையனாகப் புரிந்து கொண்டிருந்தால், அது முழுத் தவறு.

கிறித்தவம், இஸ்லாம் முதலான மதங்கள், வரலாற்றின் மிக சமீபத்தில் எழுந்தவை, அதுவும் கூட யூதர்களின் பழைமையான நூலாகிய பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சில பொதுமைத் தன்மைகளை, முன்னவர்களைக் கொண்ட ஆப்ரகாமைட் மதங்கள் என்று ஒரே சொல்லால் குறிக்கப் படுபவை.

ஒரு கருத்தை மறுப்பதற்கும், நிராகரிப்பதற்கும் எவருக்குமே உரிமை உண்டு. மறுப்பதற்கு முன்னால், தான் மறுக்கும் கருத்து என்ன என்பதைப் பற்றிய தெளிவு, அதில் எந்த இடத்தை, எதனால் மறுக்கிறேன், மாறுபடுகிறேன் என்பதையும் விளக்கிச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில், பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகிற மறுப்புக்களைப் பார்த்தால், வேடிக்கையாகவும் விநோதமாகவும் தான் இருக்கிறது!

நம்பிக்கை என்பது உணர்வின் வெகு ஆழத்தில் இருந்து வெளிப்படுவது. மேலோட்டமாகத் தெரிவதில் பார்த்து முடிவு செய்கிற அறிவால், நம்பிக்கையைப் புரிந்து கொள்ள முடியாது. நம்பிக்கை என்பது எவ்வளவு வலிமையானது என்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

"வீர சுதந்திரம் வேண்டி நின்றார்-பின்னர்
வேறொன்று கொள்வாரோ"
என்று ஆவேசத்துடன் விடுதலையை வேண்டிப் போராடிய தியாகிகளை நினைத்து வணங்க வேண்டிய தருணம் இது.

தியாகிகளை வணங்காவிட்டால் கூடப் பரவாயில்லை, இழிவுபடுத்தாமல் இருந்தாலே போதும் என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்து போன காலம் இதுவாகிப் போனதே!




“Break the moulds of the past, but keep safe its gains and its spirit, or else thou hast no future. “
Sri Aurobindo
Thoughts and Aphorisms- Aphorism 237


"The sceptic mind doubts always because it cannot understand, but the faith of the God-lover persists in knowing although it cannot understand. Both are necessary to our darkness, but there can be no doubt which is the mightier. What I cannot understand now, I shall some day master, but if I lose faith and love, I fall utterly from the goal which God has set before me."
Sri Aurobindo
Thoughts and Aphorisms-Aphorism 468


1 comment:

  1. \\இவை காட்டும் இறைத்தன்மையைத் தான் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்பட்டதே தவிர, இந்தத் தத்துவ மரபில் வந்த ஆசிரியர்கள், அவர்களைப் பின்பற்றி எழுந்த சமயங்களையும் ஆதி அந்தமில்லாததாக சொல்லவில்லை.\\

    சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!