உள்ளூர் அக்கப்போர் போதும்! கொஞ்சம் உலகப்போர்...!!


ஜெர்மனியில், செக்ஸ் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் செய்கிறமாதிரி, ஹிட்லர், ஸ்டாலின், சதாம் ஹுசேன் படங்களுடன், "எய்ட்ஸ் ஒரு மொத்தமாகக் கொன்று குவிக்கும் கொலையாளி" என்ற வாசகங்களோடு., வீடியோ, போஸ்டர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த அல்லது பயமுறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.

பின்னூட்டத்தில் நம்ம வால்பையன் வந்து, அவருக்குத் தெரிஞ்ச எவருக்கோ பைப் துருப் பிடிச்சுப் போயிடும்னு, வீடியோ போஸ்டர் எதுவுமில்லாமலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தினதாகச் சொல்லியிருக்கிறார்

துருப்பிடிக்கறதுக்கெல்லாம் பயப்படறாங்களா என்ன?! 

எய்ட்ஸ் கொன்று குவிக்கிறதெல்லாம் கிடக்கட்டும்!

வழிசலில் [ஜொள்ளு தான் சாமி!] சாதனை படைத்த அண்ணன் பில் க்ளின்டன், நம்ம ஊர்க் காதல் மன்னன், காதல் இளவரசன், விரல் நீட்டியே பன்ச் டயலாக் சிலம்பும் இவர்களையெல்லாம் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில், வீடியோ கூட வேண்டாம், ஒரு போஸ்டரில் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டார்களே, என்று எனக்கு ரொம்ப வருத்தம்!

இந்த வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், உலகப் பொருளாதாரப் பொதுமன்றம் வெளியிட்டிருக்கும் ஒரு ஆய்வு அறிக்கை, 492 பக்கங்களில் , 133 நாடுகளுடைய பொருளாதாரத்தை அலசி ஆராய்ந்து, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் அசைக்க முடியாத பொருளாதார சக்தியாக இருந்த அமெரிக்காவை இரண்டாமிடத்துக்குத் தள்ளின சேதியைச் சொன்னது.சந்தைப் பொருளாதாரத்தில், நிதித் துறை சேவைகளின் ஆரோக்கியத்தை வைத்து மட்டுமே சுவிட்சர்லாந்து, முதலிடத்துக்கு முந்தியிருக்கிறது
170-171 ஆம் பக்கங்களில், இந்தியாவைப் பற்றிய விவரங்களும் இருக்கிறது. ஆக, மூன்று நாட்களாக, அந்த அறிக்கை, புள்ளி விவரங்களைப் படித்துப் புரிந்து கொள்வதிலேயே நேரம் சரியாக இருந்தது. புள்ளிக்கு அஞ்சாத சிங்கம், புள்ளிவிவரத்தை நேசிக்கும் வங்கியாளனாக இருந்ததில் இது ஒரு occupational hazard! வங்கியை விட்ட பின்னாலும் தொடர்வது, தனியே பேச வேண்டிய சோகக் கதை!

புள்ளி விவரங்களை நானும் படித்தே தீருவேன் என்று அடம்பிடிக்கிறவர்களுக்காக மட்டும் இங்கே இருந்தே பிடிஎப் கோப்பாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

                            1.Switzerland                          5.60
        
                   2. US                                        5.59
                   3 Singapore                              5.55
                  4. Sweden                                 5.51
                  5. Denmark                              5.46
                  6. Finland                                 5.43
                  7. Germany                              5.37
                  8. Japan                                   5.37
                  9. Canada                                5.33
                       
                        10. Netherlands                                    5.32

இந்தியாவைப் பற்றிய விவரங்களில் [பக்கம் 170-171] பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 48 ஆமிடத்தில் இருந்து, 49 ஆமிடத்திற்கு, அவ்வளவுதான்! ஆனால், வேறு சில அளவீடுகள், மிக சுவாரசியமான சேதியைச் சொல்கின்றன. பாடம் கற்றுக்கொள்வாரைத் தான் காணோம்!

வருகிற பதினைந்தாம் தேதியோடு, அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாற ஆரம்பித்து, தான் கெட்டதோடு அல்லாமல், உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளிலும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தி சரியாக ஓராண்டு முடிகிறது. அன்று தான் லேமன் பிரதர்ஸ் என்ற பெரிய நிதி நிறுவனம், நூற்றைம்பது வருடங்களாக நடந்து வந்த ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்க வேண்டி வந்தது.


தொடர்ந்து பல்வேறு வங்கிகள், இன்றைக்கும் கூட வாரம் தவறாமல், சில வங்கிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன, கார் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்படி வரிசையாக, சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட கோட்டை சரிவதைப் போல சரிந்தன. தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமா, இல்லையா என்பது தெரியாது! ஆனால், அமெரிக்காவில் சரிவுகள் தொடரத் தொடர, உலகத்தின், பல்வேறு பகுதிகளிலும் அதன் விளைவுகள், வேலை இழப்புக்கள் என்றுஎதிரொலித்தது.

1929 களில் ஏற்பட்ட பெரும் சரிவுக்குப் பின்னால், கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது. இன்னமும் அமெரிக்கப் பங்குச் சந்தையோ, நிதி நிறுவனங்களோ, முழுமையான பாடங்களைக் கற்றுக்கொண்டதாகச் சொல்ல முடியவில்லை.  


ஆனாலும், ரிசர்வ் நிதியில் இருந்தும், வரிப்பணத்தில் இருந்தும்,ஏழாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை அள்ளிவீசி, சரிவு ஓரளவுக்குத்தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செப்டம்பருடன் முடியும் காலாண்டுடன், நிலைமை சீராகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்..

அமெரிக்க நிதிச் செயலாளர் [நம்ம ஊரில் நிதி மந்திரி] டிமோத்தி கேய்த்னர் சென்ற வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, " நம்முடைய அமைப்பில் இருக்கும் கோளாறுகள் இதே மாதிரி இன்னொரு சரிவைத் தூண்டிவிடாமல் இருப்பதற்கான வழி முறைகளைக் கண்டாக வேண்டியது, ஒரு தேசமாக நாம் சந்திக்க வேண்டியது அவசியம்." என்று சொல்லியிருக்கிறார். எதற்கெடுத்தாலும், அமெரிக்காவைக் காப்பியடிக்கும் நம்மூர் அரசியல் வாதிகள், ஏனோ, அங்கே இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வதில்லை!

இன்னொரு சுவையான கட்டுரையும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் செப்டம்பர் இரண்டாம் தேதி பொருளாதார மேதைகளைக்குக் கண் முன்னாலேயே சுழல்காற்றாய்உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவித்த இந்தப் பிரச்சினையைக் கொஞ்சமும் கணிக்க முடியவில்லை. பொருளாதார மேதைகளின் பொற்காலம் முடிந்து விட்டது போல என்று சுவாரசியமாக ஆரம்பித்து, இந்தப் பிரச்சினையை விரிவாக அலசியிருக்கிறது. உள்ளூர் அக்கப்போர்களில் இருந்து விடுபட்டுக் கொஞ்சம் உலக அக்கப்போரையும் தான் தெரிந்து கொள்வோமே என்று ஆசைப் படுபவர்களுக்காக இங்கே
 
பங்குச்சந்தைக் குறியீடு உயர்ந்துகொண்டே இருந்தால், அது பொருளாதாரம், சரியான பாதையில், வலுவான அடித்தளத்தில் இருப்பதாக, இந்தப் பொருளாதார மேதைகள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். என்னவோ, பங்குச் சந்தையில், பங்குகளின் விலை ரொம்ப சரியாகவே, எந்தவிதத் தில்லுமுல்லும் இல்லாமல் இருக்கும் என்ற ஒரு கணக்கு.
கணக்குகள் தவறாகி, அதலபாதாளத்திற்குப் போன பின்னால் கூட, இன்னமும் காரணம் என்ன என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை!

ஒரு பிரச்சினை, இவ்வளவு பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருப்பதை முன்கூட்டியே அறிய முடியாத ஒரு அமைப்பிடம், [நம்மூர் ரிசர்வ் வங்கி மாதிரி அங்கே பெடரல் ரிசர்வ்] அதற்குத் தீர்வு சொல்கிற அதிகாரம் இருக்கக் கூடாது என்ற விமரிசனமும், கருத்தும் அங்கே வலுப் பெற்றுக் 
கொண்டிருக்கிறது.

இந்தியாவில், பங்குச்சந்தையில், அதே தவறான தோற்றம், கணக்குத் தான் இப்போது இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்!

இங்கே, அரசியல்வாதி என்றால் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்! அதிகாரிகள், சம்ச்சா அடித்தே அவர்களுடைய கல்லாவையும்  நிரப்பிக் கொள்வார்கள் ! இங்கே இந்தியாவிலோ, இலவசங்களுக்கு மேல் இலவசம் என்று அறிவித்துக் கொண்டு, அதிலேயே ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி,'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று மேடைகளில் ஏதோ பேச்சுக்காகச் சொல்வதிலேயே குளிர்ந்து போய் விடுகிற மகா ஜனங்களாகிய நாமும் கொஞ்சம் கூடக் கவலைப் படுவது இல்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் ஒரு கதைசொல்வார்:


"தானியங்களை மூட்டை மூட்டையாகச் சேமித்து வைக்கும் கிட்டங்கிகளில். எளிகளுக்காகக் கொஞ்சம் வெல்லப் பொரியைத் தினமும் தூவி வைப்பார்களாம்! எலிகளும், வெளியே கஷ்டப்படாமல் கிடைக்கிற பொறிகளை மட்டும் தின்று விட்டு, மூட்டைகளைக் கடிக்காதாம்!"


இங்கே இலவச வெல்லப் பொரிகளில் ஏமாந்து, உள்ளது அத்தனையையும் இழந்து,தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து மெகா சீரியல்களில் இருக்கும் கொஞ்ச நஞ்சம் சிந்திக்கும் திறனையும் இழந்து.......
தேர்தல் வந்தால் ஓட்டுப்போட போவதற்கே சோம்பல் கொள்பவர்கள், நம்முடைய ஓட்டையும் மொத்தமாக யாரோ எவரோ போட்டு விட்டுப்போக, நமக்கென்ன என்றிருப்பவர்கள், அப்படியே ஓட்டுப்போடப்போனாலும் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டுப் பழகியவர்கள் ........

சொன்னால் விரோதம் வரும் தான்! சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது!


இன்னும் சொல்லுவேன்

1 comment:

  1. //இன்னும் சொல்லுவேன்! //

    சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் சொல்கிறீர்கள்..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!