கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!

தினமணி நாளிதழில் வெளியான சிந்திக்க வைக்கும் கட்டுரை

அ.நாராயணன்

First Published : 02 Mar 2011 02:27:43 AM IST










2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், ஊழல் ராஜாக்களும், ராணிகளும் பெற்ற ஆதாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்காக அரசு வழங்கும் மானியங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

கூட்டணிக்கட்சி அமைச்சரும் கூட்டாளிகளும் வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று கூறி திருதராஷ்டிரர் அவதாரம் எடுக்கிறார் அவர்.

மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும், வரலாறு காணாத இலவசப் போலிக் கவர்ச்சி ஜிகினா திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகனோ, அரசின் தவறுகளை மறைத்துவிட்டு, ""தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று ஒரு புரட்டான பொருளாதாரப் பாடம் எடுக்கிறார். தமிழக முதல்வரோ, ""ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி, தமிழக ஆண்மகனின் ஆடையை உருவிவிட்டு, கோமணத்தைக்கட்டி, கையில் ஒரு திருவோட்டையும் கொடுத்துக் கேவலப்படுத்துகிறார். தடித்த தோலுடனும், நரம்பில்லா நாக்குடனும் வளைய வரும் நம் இன்றைய தலைவர்கள், பொது வாழ்வில் ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துவதற்கும், மக்களை முட்டாள்களாகக் கருதி மமதையுடன் நடந்து கொள்வதற்கும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சொத்து சேர்த்துக் கொள்வதற்கும் எப்படி முடிகிறது?

இவையெல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறப்படும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை, கட்சியை, நாட்டின் வளங்களைத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பிடியில் வெளிப்படையாகவே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் துணிவு, இந்த மக்களாட்சியில் இவர்களுக்கு எப்படிச் சாத்தியப் படுகிறது? வாரிசுகளால், வாரிசுகளுக்காக, வாரிசுகளைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சிமுறையை ஓட்டு அரசியல் மூலம் இன்றைக்கு எப்படி இவர்களால் சாதிக்க முடிகிறது? சிறிதும் கூச்சமின்றி, மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று கொண்டே, ஓட்டுகளையும் எப்படிப் பெற முடிகிறது?


இவற்றுக்கெல்லாம் காரணம் பெரும்பாலான இந்திய மக்களிடம் ஜனநாயகம் பற்றிய உண்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தவே இல்லை என்பதுதான். நீண்டகாலமாக மன்னர்களின் கீழும், ஜமீன்களின் கீழும், உயர்ஜாதிகளின் கீழும், பின்னர் வெள்ளையர்களின் கீழும், அடிபணிந்து வாழப்பழகியவர்கள் நம் மக்கள். அரசியல் விடுதலை கிடைத்துவிட்டாலும், பிரதிநிதித்துவ அரசியல் தத்துவத்தை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. ஆதலால், அதிகாரம் என்பது மீண்டும் ஆதிக்க சக்திகளிடமே சிறைப்படுவதும், அதிகாரத்துக்கு வருபவர்கள் ஆதிக்க சக்திகளாக மாறுவதுமேதான் நடைமுறையானது.

பண்டைய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸின் சீடரான ப்ளேட்டோ, ""மக்களாட்சி சீருடன் நடைபெற, அதற்கு முயற்சியும், தன்னொழுக்கமும், ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது, அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும்'' என்கிறார். தமிழக அரசால் தொடர்ந்து மிகமோசமாக நிர்வகிக்கப்படும் ஆதிதிராவிடப் பள்ளிகளில் படிக்கும் சராசரி மாணவர், தரமான கல்வி கிடைக்காமல், பாடங்கள் பற்றிய குறைந்த அளவு புரிதல்கூட இல்லாமலேயே, தேர்வில் மட்டும் எப்படித் தேர்ச்சிபெற்று விடுகிறாரோ, அந்த அளவுக்குத்தான் வாக்குச்சாவடியை மக்கள் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான், ஜாதியையும், நோட்டையும், பிரியாணியையும், சாராயத்தையும் பயன்படுத்தி மோசமான அரசியல்வாதிகளால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. தேர்தல் அரசியலை, கிரிக்கெட் சூதாட்டம் போன்று மாற்ற முடிகிறது. அதிலும், தமிழக அரசியல், இன்று உலக அரங்கில் மிகுந்த கேலிக்கு ஆளாகியுள்ளது. பிகாரில்கூட, சிறப்பான முறையில் தேர்தலை நடத்திவிட்டோம். ஆனால், ஏப்ரலில் நடை பெறவிருக்கும் தமிழகத் தேர்தலை நினைத்தால் தான் கதி கலங்குகிறது, இதுதான் தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்றால் மிகையில்லை. ஏற்கெனவே திருமங்கலம் ஃபார்முலா, பென்னாகரம் ஃபார்முலா என்று புதிய இலக்கணங்கள் வகுத்துள்ள தமிழக அரசியல்வாதிகள், இன்னும் என்னவெல்லாம் அஸ்திரங்களை ஏவி, தேர்தல் ஆணையத்தை திக்குமுக்காடச் செய்து, ஓட்டுகளை களவாடி, ஓட்டுகளைப் பொறுக்கி, ஓட்டுகளைப் பிரித்து, அதிகார நாற்காலியைப் பிடித்துக் கொள்வார்களோ என்ற கிலி ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாத வெக்கையை அதிகரிக்கும் விதத்தில் ஏசியும் பேசியும், கோடிக்கணக்கான கள்ளப்பணத்தைத் திருட்டுத்தனமாக விநியோகித்தும், ஆயிரக் கணக்கான கிடாய்களைப் பலி கொடுத்து, பிரியாணி விருந்து கொடுத்தும், சாராயத்தை ஆறாக ஓடவிட்டும், பத்தடிக்கு ஒன்று வீதம் ஆபத்தான பிவிசி ஃபிளக்ஸ் விளம்பரப்பதாகைகளால் கண்களைத் துன்புறுத்தி, டையாக்சின் நச்சுக்காற்றைப் பரப்பியும், தேர்தலைப் போர்க்களமாக மாற்றி விடுவார்கள் என்று அஞ்சத் தோன்றுகிறது. பின்தங்கிய மாநிலம் எனப்படும் பிகாரில் தேர்தல் ஆரோக்கியமாக நடந்ததெப்படி?

ஏனென்றால், அங்கு நிதீஷ்குமார் எனும் தொலைநோக்குப்பார்வையுள்ள தலைவர் தோன்றி, மக்களைக் கண்ணியமான ஜனநாயகத்துக்குத் தயார் செய்தார். மக்களுக்கு ஆசானாக, முன்னுதாரணமாக இருக்கிறார். கவர்ச்சி ஜிகினா ஃபார்முலாக்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயலவில்லை. ஆடம்பர அரசியல், அடாவடி அரசியல், ஜாதி அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவற்றைக் கடந்து செல்ல முயன்றார். நாளையும் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது, தோற்றுவிடலாம். ஆனாலும், அவரது அணுகுமுறை மிகுந்த பாராட்டுக்கு உரியது, மற்ற அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டியது.

ஆனால், தமிழகத்தில் இருப்பவர்களோ, தலைவர்கள் அல்ல, தரகர்கள். ஜனநாயகத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் ஒரு விலை வைத்து, அதைப் பணநாயகமாக மாற்றி விட்டவர்கள். தாங்களும் சாக்கடையில் குளித்து, மக்களையும் புதைகுழியில் தள்ளத்தயாராகி விட்டவர்கள். தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதாக மாய்மாலம் காட்டுபவர்கள். தமிழ்ச் சமூகத்தில் இன்று ஏற்பட்டிருப்பவை வளர்ச்சித்தசைகள் அல்ல, புற்றுநோய்க் கட்டிகள்.

இதன் விளைவாக தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், மன நலம், பொது அமைதி, தனிநபர் ஒழுக்கம், மண்ணின் விழுமியக் கூறுகள் என்று எல்லாமுமே நசிந்து வருகின்றன. ""பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ, நியாயமாக ஒரு சமுதாயத்தை வழி நடத்த முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச்சிறந்த மனங்களை அந்தச் சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்'' என்கிறார் ப்ளேட்டோ.

ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் நடப்பதென்ன?

கூலிப்படைத்தலைவர்களும், பெரு நிறுவன முதலாளிகளும் நேரடித் தேர்தல் அரசியலில் இறங்கி விட்டார்கள். மீன் இறந்தவுடன் தலையில் இருந்து அழுகத் தொடங்கும். பின்னர், அதன் உடலும் அழுகும். அதுபோன்று தமிழக அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் அழுகிவிட்டதனால், அது தமிழ்ச் சமுதாயத்தின் பின்னடைவுக்கும் காரணமாகி வருகிறது. ஆதலால், பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, வருகிற தேர்தல் ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சீரமைக்கப்படுவதற்கும், அதன் தாக்கம் தேசிய அளவில் பிரதிபலிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு உரம் சேர்க்கும் வகையில், சமூக ஆர்வலர்கள், பெண்களுக்கான அமைப்புகள், சிறு சிறு தன்னார்வ இயக்கங்கள், ஓய்வுபெற்ற நேர்மையான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகிய பலர் இணைந்து கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அரங்கக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கியுள்ளனர். தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துச் செயல்பட்டால், தேர்தலின் கண்ணியத்துக்கு இவ்வமைப்பால் உதவ இயலும். நுகர்வுக்குள் சிக்கிக்கொண்டு ஓட்டுப்போட மறுக்கும் மேல்தட்டு மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

ஊழல், விலைவாசி, ஏமாற்றுத் திட்டங்கள், வன்முறை ஆகியவற்றால் விரக்தி அடைந்து தேர்தலைப் புறக்கணிக்க நினைப்பவர்களிடம் வாக்குகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை அளிக்க வேண்டியுள்ளது. வாக்குகள் விற்பனைக்கல்ல, தன்மானம் இழப்பதற்கல்ல, ஊழல், மக்களின் உயிரைக் குடிக்க வல்லது. லஞ்சம், அடுத்த தலைமுறையை அழித்து வருகிறது போன்ற கோஷங்களை உரக்கப் பேச வேண்டியுள்ளது.

மிக முக்கியமாக, பரபரப்பான செய்திகளையும் மசாலாத்தனமான கதைகளையும் தாண்டி, மக்களிடமும், பொதுவில் இருப்பவர்களிடமும், தேர்தலைக் கண்ணியமாக நடத்துவதற்கான பரப்புரை செய்வது மட்டுமல்லாமல், மக்களின் மனசாட்சியாக நடந்து கொள்ளும் கடமையும் இன்று ஊடகங்களுக்கு உள்ளது. நியாயத்தின் பக்கம் இருக்கும் ஊடகங்களும், சிறு பத்திரிகைகளும், சமூக அக்கறை உள்ள நிருபர்களும் தங்கள் பங்கைத் திறம்பட ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது. தமிழகத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் மக்களுக்கு அதிகபட்ச நன்மை செய்வதற்கே தங்களது பதவி என்று உணர்ந்து, நேர்மையாகச் செயல்பட வேண்டிய கடமை காத்துக்கொண்டிருக்கிறது.

ஆக மொத்தம், அடுத்த 42 நாள்களுக்கு தமிழ்ச் சமுதாயத்தின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள் எல்லோரும், பணநாயகத்துக்கு எதிராகவும், தசைப பலத்துக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஃபார்முலாவையும், பென்னாகரம் ஃபார்முலாவையும் தமிழகம் முழுவதற்குமான ஃபார்முலாவாக மாற்றும் முயற்சி நடந்தால், அதனை முறியடிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் தமிழகம், அழிவு ஃபார்முலா எனும் ஒரு வழிப்பாதைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் காத்திருக்கிறது.

கண்ணியமான தேர்தலுக்கான அவசியம் பற்றி ஓயாமல் பேசுவதும், எழுதுவதும் செயல்படுவதும் நமது கடமை, பணி, சமூக சேவை என்று தவறாக நினைக்க வேண்டாம். அதுதான் நமது எதிர்காலத் தலையெழுத்தையே இனிமேல் தீர்மானிக்க இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல் வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, ஆன்மாவற்ற, ஆண்மையற்ற மக்களாட்சியாக மாறிவிட்டது.

இந்த ஜனநாயகத்தை மீட்டு அர்த்தமுள்ளதாக்கும்வரை தூக்கத்தையே தொலைத்துவிட்டு தளராமல் வீரியத்துடன் செயல்பட வேண்டிய கடமை நம்மில் பலருக்கு உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் எல்லோரும் கண்ணியமான தமிழகத் தேர்தலை வலியுறுத்தி களப்பணியாற்றுவோம்!"

நன்றி: தினமணி நாளிதழ்

கலர் கலராக் காருவரும்! கலர் டிவி கூட வரும்!
மானாட மயிலாட சினிமாக்காரக் கூட்டம் வரும்
மானங்கெட்ட பேர்வழிகள் மானமிகு விகுதியுடன்
கலர் கலராய்ப் பிலிம் காட்ட வருகிற நேரமிது!

தேர்தல் வந்தால் எவர்சில்வர் குடங்கள் வரும்
மூக்குத்தி, கவருடனே எது எதற்கோ டோக்கன் வரும்
காதுகுத்தத்தோதாக வாக்குறுதி நிறைய வரும்
அம்மா அண்ணே தம்பி என்று  பாசத்தோடு வேஷம் கட்டும்

இன்றைக்கு வருகிறவன் என்றைக்கும் வருவானா?
ஜெயித்துவிட்டால் அப்புறமாய் பார்ப்பது தான் எளிதாமோ?
இலவசங்கள் அறிவித்து வாக்குகளை வாங்கியவன்
தரிசனம் வேண்டுமென்றால் கப்பம் கட்ட வேண்டாமோ?

இலவசங்கள் என்ற மாயைக்குள் இன்னும் ஏமாந்துவிடப்போகிறீர்களா?

 

என்ன செய்யப்போகிறீர்கள்?


2 comments:

  1. நிறைய எழுதத் தோன்றினாலும் ஒவ்வொரு வாக்காளரிடமும் விழிப்புணர்வு தோன்றவில்லை என்றால் கஷ்டம்தான் என்ற ஒரு வரியில் முடித்துக் கொள்கிறேன்! நீதிமன்ற கெடுபிடியால் நடத்தப் படும் விசாரணைகள், நீதிமன்றத்துக்காக செய்யப் படும் கண் துடைப்பா என்றும் சந்தேகப் பட வைக்கும் அளவில்தான் நடப்பதாக சந்தேகங்கள், கூச்சமின்றி பயமின்றி செய்யப் படும் ஊழல்கள்...எங்கே மக்கள் பெரிய அளவில் ஊழல் செய்பவர்கள்தான் பெரிய, வலிமை மிக்க மனிதர்கள் என்று எண்ணி விடுவார்களோ என்று எண்ண வைக்கும் காலம்...என்னமோ போங்க...மே பதிமூணுல தெரியும்!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்!

    மே 13 இல் என்ன தெரிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கூட்டணி அல்லது அந்தக் கூட்டணி என்று எதுவந்தாலும் ஜனங்களுக்கு விடிவு வரப்போவதில்லை. அதற்குக் காரணம், ஒரு தவறு நடக்கும்போது அதைத்தட்டிக் கேட்கிற தைரியம் இல்லாத ஊமைச் சனங்களாகவே நாம் குறுகிப் போய்க் கிடப்பதுதான்!

    வாக்காளர்களிடம் விழிப்புணர்வு! முதலில் வாக்குச் சீட்டு என்பது மூணு சீட்டு மாதிரியோ, குறைந்தபட்சம் லாட்டரிச்சீட்டு மாதிரியோ கூட இல்லை அதற்கென்று சில கடமைகளும் பொறுப்புணர்வும் தேவைப்படுகிற ஒன்று என்ற அளவிலாவது புரிந்துகொண்டிருக்கிறோமா? ஜனநாயக்காவலர் நேரு முதற்கொண்டு எந்தத்தலைவராவது ஜனங்களை ஜனநாயகத்துக்குத் தயார் செய்திருக்கிறார்களா?

    தலைவர்கள் தான் சரியில்லை, போய்த்தொலையட்டும், தன் கையே தனக்குதவி அல்லது நமக்கு நாமே என்று ஜனங்களாவது தங்கள் பொறுப்பை உணரத் தலைப்பட்டிருக்கிறார்களா? சினிமாவாகட்டும், நடப்பு வாழ்வாகட்டும், எதிலும் யாரோ ஒரு ஹீரோ வந்து தான் இவர்கள் வீட்டில் சேர்கிற குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தால் எப்படி?

    சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே! குறைந்தபட்சம் இந்த செய்தியையாவது ஜனங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டாமா?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!