பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!

கடவுள் இருக்கிறாரா அல்லது உண்மையிலேயே இல்லையா?

கடவுள் என்பது சில சுய நலமிகளால் கற்பிக்கப் பட்ட கற்பிதமா அல்லது தவறாகப் புரிந்து கொண்ட கோட்பாடா?

கடவுள் என்பது கற்பிதம் செய்யப் பட்ட மாயையா அல்லது உண்மையா?

இப்படி நிறையக் கேள்விகள், விவாதங்கள், சூடுபறக்க இணையப்பக்கங்களில் அவ்வப்போது நடப்பது தான்.  



சிறு வயதில் பட்டம் விட ஒரு சீசன், அப்புறம் பம்பரம் விட, கோலி விளையாட, நாகரீகம் வளர வளரக் கிட்டிபுல்லாக விளையாடியது கிரிக்கெட்டாகப் பரிணாமம் அடைந்தது, அப்புறம் சீட்டுக் கட்டு ஜமா என்று பல சீசன்கள் வந்து போவது போலவே, தமிழ் வலைப்பதிவுகளிலும், சாரு-ஜெமோ சண்டை ஒரு சீசன்.

அப்புறம் அவர்களை மாதிரியே தங்களையும் கற்பனை செய்துகொண்டு பதிவர்களுக்கு உள்ளேயே நடக்கும் காட்டா குஸ்தி, நீயா-நானா என்று அடித்துக் கொள்வதையெல்லாம் அடித்துக் கொண்டு விட்டு,அப்புறம் 
நீயும்-நானும் நல்ல ஜோடிதான் ரேஞ்சுக்கு டூயெட் பாடுவது இப்படிப் பல சீசன்கள் மாறி மாறி வரும்! கடவுளைப் பற்றிக் கதைப்பதும் ஒரு சீசன் தான்!

இப்படித்தான் நம்ம வால்ஸ் ரொம்பக் காண்டு கஜேந்திரன் கணக்கா, கடவுளைப் பத்திக் கவிதை, செத்த கடவுள், ஆன்மீகப்பயணம், அதுக்கு எதிர் வினை பாகம் ஒண்ணு, ரெண்டுன்னுட்டு
தொடர்ந்து கலக்கிட்டு, இப்ப வேற சப்ஜெக்டுக்குத் தாவியாச்சு! பம்பரம் விடற சீசன் போயி, வேற வெளையாடற மூடு வந்தாச்சு! தருமி ஐயா கடவுள் என்றொரு மாயைன்னுட்டு, உள்ளூர் நாத்திகன் சொல்றதைச் சொன்னா எவன் கேப்பான்னு சந்தேகம் வந்துச்சோ என்னவோ, அதுனால, வெளி நாட்டுல இருந்து இறக்குமதி பண்ணுவோம்னுட்டு ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதி, இப்ப ஓஞ்சுபோன புத்தகம் The God Delusion அதுலேயிருந்து நான் கண்டெடுத்த முத்துக்கள்னு, ஏற்கெனெவே ஏழு இடுகையை பிட்டு பிட்டா எழுதியாச்சு, இப்ப எட்டாவது பிட் எழுதியிருக்கார்.

இறக்குமதி பண்ண நாத்திகத்துலயாவது கொஞ்சம் புது விஷயம் இருக்கான்னு தேடிப்பாத்தாக்க, அங்க ஒண்ணும் காணோம்

.
இந்தப் புத்தகத்தைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னால், தமிழிலேயே, எழுத்தாளர் சுஜாதா "கடவுள் இருக்கிறாரா" என்ற கேள்விக்குக் கொஞ்சம் அறிவியல் கலந்த விடைகளைத் தேடும் விதமாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உண்டு அல்லது இல்லை என்று எந்த கட்சியையும் எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் பார்வையோடு எழுதப் பட்ட புத்தகம் அது. அதைப் படித்து விட்டு வாருங்கள், விவாதத்தைத் தொடரலாம் என்று முந்தைய பதிவு ஒன்றில் முடித்திருந்தேன்.

இப்போதும், ஒரு விஷயத்தைத் தீர்மானமாகப் பேசுவதற்கு முன்னால், அந்தப் புத்தகத்தை, தமிழில் தானே இருக்கிறது, ஒரு தரம் படித்துவிடும் படி மறுபடியும் சிபாரிசு செய்கிறேன்.

கடவுளைப் பற்றிய உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக, கேட்பவருக்குப் புரிய வேண்டுமே என்று குறைபாடுகள் நிறைய இருந்தாலுமே கூட , சின்னச் சின்ன கதைகளாக, உதாரணங்கள் வழியாகக் , கடவுளைப் பற்றி சொல்வதால், கடவுளை இல்லையென்று சொல்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொங்குகிறார்கள், குமுறுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.

இல்லை, இல்லவே இல்லை என்று மறுக்கிறார்கள். ஆத்திரம், கண்ணையும் அறிவையும் மறைக்கிறது! கதை வழியாச் சொன்னாக்க ஈசியாப் புரியுமேன்னு பாத்தாக்க, இவங்க கதை வழியா என்ன சொல்றாங்கன்றதையே பாக்காம, கதையில அது ஓட்டை, இது உடசல்னு கதையில மட்டுமே நின்னுடறாங்க!

ஆனா, ஆவன்னா என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிக் கொடுப்பது, இவர்களுக்குக் கேலிக்குரியதாக இருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, ஆனா, இம்மன்னா மானா=அம்மா என்று படிக்கவேண்டியது இல்லை தான்! அதற்காக, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு எழுத்தாக எழுத்தைக் கூட்டிப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் மீது கோபம் கொண்டால் அது சரியாக இருக்குமா? எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர், முழுதாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றோ, அவர் சொல்லிக் கொடுப்பதே வீண் என்றோ முடிவு செய்தால் அது சரியாக இருக்குமா?

ஒவ்வொருவருடைய புரிந்துகொள்கிற படித்தரத்திற்குத் தகுந்த ஆசிரியனாக, இறைவனே வந்து அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொடுக்கிறான் என்று இந்தியத் தத்துவ தரிசனம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள் ஒவ்வொன்றுமே நம்முடைய உணர்வின் புரிந்து கொள்ளும் படித்தரத்தைப் பொறுத்தது தான். உணர்வு விரிந்து விழிப்படைய, விழிப்படைய, புரிந்து கொள்வதும்,விரிவடைகிறது.

ஐன்ஸ்டீனுடைய சக்தியைப் பற்றிய சமன்பாட்டை நான்காம் வகுப்பில் இருந்துகொண்டு எனக்குப் புரியவில்லை, என்னுடைய வாத்தியான் ரொம்ப மோசம், வாத்தியானுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? சில கேள்விகள், பாடம் நடத்துகிற வாத்திகளுக்கே புரிவதில்லை, அப்படிச் சிலபேரும் வாத்தித் தொழிலில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பாடம் படிக்கும் பசங்களோடு சேர்ந்து கொண்டு, சிலபஸ் மோசம்! இதைப் போய்ச் சேர்த்தானே, அவன் இதை விட மோசம் என்று இவர்களுமே கூச்சல் போடுகிறார்கள்!

இப்படிக் கூச்சல் போடும்போது, குறைகள் இருந்தாலும், சொல்லப் படுகிற விஷயத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதில் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம், அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி உயரலாம் என்வதை மறந்து விடுகிறார்கள்.


குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அப்படி ஒரு கட்டாயமுமில்லை என்பதைப் பார்க்கத் தவறும்போது, மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதை இவர்கள்உணர்வதில்லை.

Don't re-invent the wheel” என்று சொல்வார்கள். திரும்பத் திரும்ப ஆரம்பித்த இடத்திலேயிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிரவர்களுமே கூட, இப்படி கால விரயம் செய்கிறவர்கள் தான்! வ்வொரு முறை இப்படிக் கால விரயம் செய்யும் போதும், அடுத்த எட்டு என்பது எவ்வளவு நீண்டதாக, பல பிறவிகளுக்கும் அப்பால் என்று தள்ளி வைத்துவிடுகிறது என்பதை மட்டும் இவர்கள் உணரக் கூடுமானால்.......!

நமக்கு முன்னவர்கள் சொல்லி வைத்தது கொஞ்சம் அல்லது நிறையவே குறைகளோடுதான் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட , எந்த அளவுக்கு அதிலிருந்து பாடம் படிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கற்றுக் கொள்ள முடிந்தால், அடுத்த எட்டு எடுத்து வைப்பது, அடுத்த கட்ட வளர்ச்சி, மேலே மேலே உயர்வது என்பது இயல்பானதாகிவிடும். அது தான் பரிணாமத்தின் இயல்பான படிக்கட்டுமே கூட!

"பழைய கட்டுமானங்களை உடைப்பதற்கு முன்னால், அதனுடைய சாரம், படிப்பினைகளைக் கற்றுக் கொண்ட பிறகு செய்!" இப்படி ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை ஏற்கெனெவே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம்.

நாத்திகம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் நண்பர்கள், அடிப்படையான ஒரு விஷயத்தையே மறந்து விட்டு, கூச்சல் போடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நிறையவே பார்த்தாயிற்று! இன்னமும் இப்படி வெற்றுக் கூச்சல் போட, ஆட்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
ஸ்ரீ அரவிந்தர், சுருக்கமாக, நான்கே வரிகளில் சொல்கிற இந்த விஷயத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! போகும் திசை மறந்து போகாது! போய்க்கொண்டிருக்கிற வேகமும் குறையாது!

Because thou wert given at first imperfect conceptions about God, now thou ragest and deniest Him. Man, dost thou doubt thy teacher because he gave not thee the whole of knowledge at the beginning? Study rather that imperfect truth and put it in its place, so that thou mayst pass on safely to the wider knowledge that is now opening before thee.”

Sri Aurobindo
Thoughts and Aphorisms, Aphorism 470

"One of the greatest comforts of religion is that you can get hold of God sometimes and give him a satisfactory beating. People mock at the folly of savages who beat their gods when their prayers are not answered; but it is the mockers who are the fools and the savages". 


Sri Aurobindo

Thoughts and Aphorisms - 60

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்! அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

என்றும் 

 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றும் கண்ணதாசனால் பாடத் தான் முடிந்தது.

தன்னைக் கஷ்டப்படும்படி பிறப்பித்த கள்வனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று கறுவின ஒருவனிடத்தில் கண்ணனே முன்வந்து, இதோ வந்து விட்டேன்! உன் ஆசைப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று ஒப்புக் கொடுத்த கதையை -->

 
இரண்டு பகுதிகளாக -- ஒன்று மற்றும் இரண்டு படித்துத் தான் பாருங்களேன்!
அப்படியே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் கொஞ்சம் காதோடு வந்து சொல்லிவிடுங்கள்! தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

7 comments:

  1. //இல்லை, இல்லவே இல்லை என்று மறுக்கிறார்கள். ஆத்திரம், கண்ணையும் அறிவையும் மறைக்கிறது! கதை வழியாச் சொன்னாக்க ஈசியாப் புரியுமேன்னு பாத்தாக்க, இவங்க கதை வழியா என்ன சொல்றாங்கன்றதையே பாக்காம, கதையில அது ஓட்டை, இது உடசல்னு கதையில மட்டுமே நின்னுடறாங்க!//

    கிருஷ்ண மூர்த்தி ஐயா,

    :)

    கதைகளின் தன்மை அப்படி இருக்கிறது. வேறென்ன சொல்ல முடியும். உதாரணத்துக்கு கஜேந்திர மோட்சம் அந்த கதையை எடுத்துக் கொள்ளுங்கள். நாம சிறுவர்களுக்கு கடவுள் தான் அனைத்தையும் படைக்கிறார் என்று சொல்லுகிறோம். அவர்களிடம் போய் முதலையிடம் சிக்கிக் கொண்ட யானையை காப்பாற்ற முதலையின் வாயைக் கிழித்து காப்பாற்றினார், அது தான் கஜேந்திர மோட்சம் என்று சுருக்கமாக சொல்லுவாங்க. முதலையும் கடவுள் படைப்பு தானே, அதுக்கு இரையும் விலங்குகள் தானே, அங்கே குளத்தை தேடிவரும் விலங்கு தானே அதற்கு உணவுன்னு கடவுள் வைத்திருக்கிறார், பிறகு ஏன் முதலையின் வாயைக் கிழித்து யானையைக் காப்பற்றனும் ? என்று குழந்தைகள் கேட்டால் என்ன பதில் சொல்லுவிங்க ?

    யானைக்கு பதிலாக கோழியை பிடித்தது அல்லது ஆட்டை பிடித்து முதலை என்று கதை எழுதினால் சுவாரிசியம் மற்றும் நீதி இருக்காது, ஏனெனில் யானையை யாரும் சாப்பிடுவது இல்லை. அதை பிள்ளையாராக நினைக்கும் வழக்கம் இருப்பதால் முதலை செய்தது பாதக செயலாக கதையில் சொல்லி இருக்காங்க. கோழி என்று சொன்னால் கோழி தான் எல்லோரும் சாப்பிடுவதாச்சே...அதில் என்ன பாதக செயலை குறிப்பிட முடியும் என்கிற கேள்விக்கு பதிலாக அங்கே யானை.

    உண்மையிலேயே உருவ அளவுகளைக் கணக்கில் கொள்ளாவிடில் எறும்பென்றாலும் யானை என்றாலும் உயிர்த்தன்மை என்பது இரண்டுக்கும் ஒன்றே தான்.

    ஆன்மிகம் என்கிற புனிதபூச்சை மட்டும் பாருங்க கதையை கைவிட்டுவிடுங்கன்னு சொல்றிங்க சரியா ?

    :)

    ஆத்திகன் கொஞ்சமாக நாத்திகம் பேசினாலும் அது ஆன்மிகம், நாத்திகன் தத்துவம் பேசினாலும் அது நாத்திகமா ?

    ReplyDelete
  2. //நாத்திகம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் நண்பர்கள், அடிப்படையான ஒரு விஷயத்தையே மறந்து விட்டு, கூச்சல் போடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நிறையவே பார்த்தாயிற்று!//

    உண்மைதான்னுங்க..நறைய பேர் விதண்டாவாதம் பண்ணுவதையே விரும்கிறார்கள்..சொல்ல வருவதை கேட்க மனம் வருவதில்லை..ரொம்ப நல்லா எழுதறீங்க..

    அன்புடன்,
    அம்மு.

    ReplyDelete
  3. கோவிகண்ணன் கதையை மட்டும் புடிச்சுகிட்டுச் சொன்னது:

    / உண்மையிலேயே உருவ அளவுகளைக் கணக்கில் கொள்ளாவிடில் எறும்பென்றாலும் யானை என்றாலும் உயிர்த்தன்மை என்பது இரண்டுக்கும் ஒன்றே தான்.
    ஆன்மிகம் என்கிற புனிதபூச்சை மட்டும் பாருங்க கதையை கைவிட்டுவிடுங்கன்னு சொல்றிங்க சரியா ?

    :)
    ஆத்திகன் கொஞ்சமாக நாத்திகம் பேசினாலும் அது ஆன்மிகம், நாத்திகன் தத்துவம் பேசினாலும் அது நாத்திகமா ?/

    நியாயமான கேள்வி! மிக நல்ல கேள்வியும் கூட!

    எல்லா உயிர்க்கும் ஒரு நிறை தான்! அனுபவங்கள் மட்டும் வேறு வேறு! அறிந்து கொள்ளும் நிலைக்கேற்ப அடுத்தடுத்த அனுபவங்கள், அதற்கான சூழ்நிலையும் சேர்ந்து வரும். கதைகள் சொல்ல வந்தது இதைத்தான்.

    ஸ்ரீ அரவிந்தர் சுருக்கமா நாலே வரிகளில் சொல்லியிருப்பதையும் படிச்சுட்டு, யோசனை பண்ணிட்டுக் கேட்டிங்கன்னா , நீங்க தேர்த்தட்டில் அமர்ந்து உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணன், நான் உங்கள் காலடியில் இருந்து கேட்டுக்கொள்ளும் பார்த்தன்!

    நான் கொஞ்சமா இல்ல, நிறையவே நாத்திகம் பேசினவன்! பேசறதெல்லாம் ஆன்மீகம்னு எந்தக் காலத்துலேயும் சொன்னது இல்லை! எவர் என்ன சொன்னாலும் கேள்வியே கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதில் அல்ல, நிறையக் கேள்விகள் கேட்டு, சொல்வது என் அனுபவத்திலும் உண்மையே என்று தெளிந்து, மெய்ப்பொருள் காண்பதறிவு அது தான் என்பதில் தெளிவாக இருப்பவன்!

    என் செயலாவதொன்றுமில்லை என்பது எனக்குப் பெரியவர்கள், நன்றாக உரைக்கும்படி சொல்லிவைத்திருக்கிறார்கள்!

    ReplyDelete
  4. அம்மு மாது சொன்னது:

    /உண்மைதான்னுங்க..நிறையப் பேர் விதண்டாவாதம் பண்ணுவதையே விரும்கிறார்கள்..சொல்ல வருவதை கேட்க மனம் வருவதில்லை./

    உண்மைதானம்மா! நானே கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் அப்படித்தான் இருந்தேன்!

    ReplyDelete
  5. பொழுதுபோக தான் நாத்திகம் என்றால் உலகில் எல்லா விசயமும் நாத்திகம் போலத்தான்!
    அதையே மென்று கொண்டிருந்தால் நல்லாயிருக்காதுன்னு தான் கொஞ்சம் பிரேக்!

    ReplyDelete
  6. இதை, இதைத் தான் எங்க வால்சிடமிருந்து எதிர்பார்த்தேன்!

    நாத்திகம் பலருக்குப் பொழுதுபோக்காகவும், சிலருக்குப் பிழைப்பாகவும் இருக்கிறது!
    எல்லா விஷயங்களுமே, நாத்திகம் பேசுவது போல வரட்டுத்தனமாக ஒன்றைப் பிடித்துக் கொண்டே தொங்குவதும் இல்லை!

    விவாதங்கள், பீடா அல்ல, மென்று துப்புவதற்கு! அல்லது சூயிங்கமும் இல்லை, தாடை வலிக்கிற வரை மென்று விட்டு,கொஞ்சம் கேப் விட்டு, மறுபடியும் மெல்வதற்கு!

    ReplyDelete
  7. நண்பரே!
    நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
    கருத்துகளும், அதை வெளிப்படுத்தும் விதமும்
    எனக்குப் பிடித்திருக்கிறது.
    வாழ்க, வளர்க!
    அன்புடன்
    கௌதமன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!