இரவு வரும் பகலும் வரும்! கிரகணமும் வரும்! தாயத்து விற்கும் நேரம்!


இப்பத்தான் டீ குடிக்கற கப்புல சுனாமி வருமா வராதான்னு ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்கு! அதுக்குள்ளேயே டீ குடிக்குற கப்புல மட்டுமல்ல,டீன்னு சொன்னாலே சுனாமி  வரலேன்னாலும் , வேற விதமான தோஷம்  வரும், தொந்தரவு வரும், பரிகாரம் பண்ணிக்க நான் சொல்றதை அப்படியே கவனமாக் கேட்டு உருப்போடுங்க, அப்பத்தான் உருப்படுவீங்கன்னு ஜெயா டிவியில ஒருத்தர், எம் வி அனந்த பத்மனாபாசாரியர்னு பேரு, சொல்ல ஆரம்பிச்சிருக்காரு! எத்தனைபேர் அதைப் பாத்தாங்க, கவனமா உருப்போட ஆரம்பிச்சிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது!

டீன்னு சொன்னாக்க உதடு ஒட்டாது, நாக்கு மேலண்ணத்துல  தான் ஓட்டும் சரி! இவர் இப்படி திடீர்னு பீலா உடறது ஏன்?

அடுத்து அடுத்துப் பதினைந்து நாட்களுக்குள்ளேயே இரண்டு கிரகணம் வந்து விட்டதாம்! போன பௌர்ணமிக்கு சந்திர கிரகணம், வருகிற பதினைந்தாம் தேதி சூரிய கிரகணம் வருகிறதாம்! போதாதா, பீதியைக் கிளப்ப!தாயத்து விற்பனை சூடு பிடிப்பது, இப்படிப் பயம் காட்டுவதில் தான்!



கிரகணங்கள், இயற்கையாக நிகழ்பவை. பூமியும் அதைச் சுற்றிவரும் சந்திரனும், சூரியனைச் சுற்றும் வட்டப்பாதையில் ஒரே நேர்க் கோட்டில் வருகிற தருணத்தில், இடையில் வரும்போது நிழல், பூமியிலோ சந்திரனிலோ விழுவதே கிரகணம் என்ற விந்தையாகச் சொல்லப் படுகிறது. எந்த ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டாலும், குறைந்தது நான்கு அல்லது  ஐந்து கிரகணங்கள் ஏற்படுவது சகஜம். பல, முழு அளவு இருப்பதில்லை, அல்லது நீடிக்கும் நேரம் வெகு குறைவாகத் தான் இருக்கும்!

சென்ற ஆண்டு ஜூலை இருபத்திரண்டாம் தேதி நிகழ்ந்த கிரகணம் தான் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடித்த கிரகணம்! அதனால் தானோ என்னவோ, சுனாமி வரப் போகிறது என்ற கூக்குரலும் நிறையவே கேட்டது.

இப்போது சுருதி மாறி  அடுத்தடுத்து இரண்டு கிரகணங்கள்! அதனால் இதை உருப்போடுங்கள் என்று தாயத்து விற்கிற வேலையும் ஆரம்பித்தாயிற்று!

நாசா (அமெரிக்க  விண்வெளி மையம்) வெளியிட்ட இந்த வீடியோவைப் பாருங்கள்! கிரகணத்தின் ஒவ்வொரு படிநிலையையும் கொஞ்சம் புரிந்து கொள்கிற மாதிரி! இடையில் இரண்டு கொக்கிகள் வேறு பக்கத்திற்கு வரச்சொல்லி விளம்பரமாக வரும்! சட்டை பண்ணாமல் பாருங்கள்!


வருகிற 15 ஆம் தேதி, நாளை மறுநாள் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு அருகில் உள்ளவர்கள், இந்த வருடத்தின் முதல் நீண்ட சூரிய க்ராகனம்மான இதில், சூரியனை சந்திரன் மறைக்கும் போது, தீ வளையங்களாக சூரியன் தகதகப்பதைக் கண்டு களிக்கலாம்!


Rings of Fire! சூரியனின் தீ வளையங்கள்! அப்படி என்றால் என்ன?


பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்படி வரும் போது சந்திரன் அளவில் சிறியதாக இருப்பதால், சூரியனை ஒரு அளவுக்குத்தான் மறைக்க முடிகிறது. வெளி விளிம்புகளில் சூரிய ஒளி தீப்பிழம்புகள் போலத் தகதகக்கிறது. இயற்கையின் அற்புதமான விந்தை, அங்கே கிரகணமாக நிகழ்கிறது! இந்த மாதிரி, இந்தியாவிலிருந்து பார்க்க முடிகிறமாதிரி, 22 நவம்பர் 1965 இல் நிகழ்ந்ததற்கு அப்புறம், இப்போது தான், சூரியனின் தீப்பிழம்பு வளையங்களைப் பார்க்கிற வாய்ப்பு, நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னால்நடக்கிறது! 

இந்தியப் பெருங்கடல் பகுதியின் மீது விழும் இந்த கிரகண நிழல், அதிகபட்சமாக தெற்கே தனுஷ்கோடி மற்றும் பக்கத்தில் உள்ள இடங்களில், கிரகணம் பத்து நிமிடங்களுக்கு மேலாக நீடிக்கிறது. கிரகணத்தின்  மொத்த கால அளவு பதினோரு நிமிடம் எட்டு வினாடிகள். இந்த ஆண்டு ஏற்படும் கிரகணங்களில் , அதிக நேரம் நீடிப்பது இது தான் என்பதால், இதுவே இந்த ஆண்டின் மிகப் பெரிய கிரகணமாகவும் கால அளவில் சொல்லப் படுகிறது.



வடக்கே தில்லி, பக்கத்தில் உள்ள பகுதிகளில் இது பாதி நேரமாகத் தான் இருக்கிறது. முழு அளவிலான கிரகணமும்  அங்கே இல்லை.


காலை பத்துமணி நாற்பத்துநான்கு நிமிடங்களுக்குச் சந்திரனின் நிழல் ஆப்பிரிக்காவின் மீது படிய ஆரம்பித்து, அப்படியே  சாட், மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ,  உகாண்டா, கென்யா சோமாலியா என்று பரவி இந்தியப் பெருங்கடலில் படிக்கிறது. கிரகண பாதை அப்படியே இந்தியாவின் தென்கோடி, வங்காளதேசம், மியான்மார் என்று சீனா வரை விரிகிறது. இந்தப் பாதையின் மத்தியில், இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் ஓரளவேயான  கிரகணமாக பார்க்க முடியும்!

விஞ்ஞானத்தை வளக்கப் போறேண்டி! இது கலைவாணர் ஏன் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையோடு, கொஞ்சம் சிந்திக்கவும் தூண்டுகிற விதத்தில் பாடிய பாட்டு!

அதோடு சரி! கிரகணம் வந்தாலும் சரி, பல்லி கத்தினாலும் சரி சில பேர் தாயத்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்! வேறு சிலபேர் ஜெபகோபுரங்கள் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்! பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் புத்தகம் விற்கிறார்கள்! என்றோ எதையோ தொட்டுப் பேசியது, இன்றைக்குப் பொருத்தமாக இருக்குமா அல்லது அறிவைத்தான்  வளர்க்குமா என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லை! இங்கே எவரும் எதையும் புதிதாக முயற்சிப்பதில்லை. பழைய விஷயங்களே, கல்லாக் கட்டப் போதுமானவையாய்இருக்கின்றன!

விஞ்ஞானம், தானே வளர்ந்தால் தான் உண்டு! அப்படித்தானே!
 

டிஸ்கி ஒன்று: வால்பையன் சுட்டிக் காட்டிய மாதிரி ப்ளாக்கர் நான் பதிவு எழுதுகிறேன், இதையும் அவர் சொல்கிற இடத்தில் சேர்த்துப் படிக்கவும்:-)) 





 

3 comments:

  1. //கிரகணம் வந்தாலும் சரி, பல்லி கத்தினாலும் சரி சில பேர் தாயத்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்! வேறு சிலபேர் ஜெபகோபுரங்கள் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்! பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் புத்தகம் விற்கிறார்கள்!//

    ப்ளாக்கர்கள் பதிவு போடுகிறார்கள் என்பதையும் சேர்த்திருக்கலாம்!

    ReplyDelete
  2. நல்ல காணொளிப் பகிர்வு சார்.

    ////விஞ்ஞானம், தானே வளர்ந்தால் தான் உண்டு! அப்படித்தானே////

    ஹா ஹா ஹா. சலிச்சுக்காதீங்க சார்.

    ////அதோடு சரி! கிரகணம் வந்தாலும் சரி, பல்லி கத்தினாலும் சரி சில பேர் தாயத்து விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்! வேறு சிலபேர் ஜெபகோபுரங்கள் கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்! பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் புத்தகம் விற்கிறார்கள்! ////

    இவர்களின் சதவிகிதம் அதிகம்தான் என்றாலும் குறைந்த சதவிகிதத்தினர் போதும் இவர்களை சமாளிக்க, விஞ்ஞானமும் வளர்க்க.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. தொடரட்டும் அறிவியல் பதிவுகள்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!