கூட்டணி தர்மம்! அழும் கனிமொழி! பொருமும் கருணாநிதி!


நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில், விசாரணை நீதிமன்றத்துக்கு, சிறைக்கு அனுப்ப அதிகாரமில்லை, சட்டப்படி தவறு என்றெல்லாம் வாதங்களுடன் முன்ஜாமீன் கேட்டு கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மே 30 ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டது

நேற்று கார்பரேட் நிர்வாகிகளுடைய ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதும், இதுவரை உடல்நிலையைக் காரணம் காட்டி கைதைத்  தவிர்த்து வந்த பிபாரா, சினியுக் மொரானி இருவருடைய ஆன்டிசிபேடரி பெயில் மனுக்களும் நேற்றைக்கு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

கனிமொழியை, கருணாநிதியும் குடும்பத்தினரும் இன்று மாலை ஐந்தரை மணிக்கு திஹார் சிறையில் கண்ணீர்மொழியுடன்  சந்தித்திருக்கிறார்கள். கனிமொழி சிறையில் இருந்ததென்னவோ சனி, ஞாயிறு, திங்கள் என  மூன்றே நாட்கள் தான்!  அதற்கே  கருணாநிதி கலங்கியிருக்கிறார், கொதித்து ஒன்பது பக்க அறிக்கை விட்டிருக்கிறார். ஐமுகூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, இரண்டு ஆண்டுகளை நித்ய கண்டம் பூர்ணாயுசு என்று சொல்கிற மாதிரி, வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில் நேற்று மாலை டம்மிப்பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் ஒரு விருந்து அளித்ததில், திமுக பங்குகொள்ளவில்லை என்று வெளிப் படையாகச் சொல்லக் கூட முடியாத நிலையில், டி ஆர் பாலுவை மட்டும் அனுப்பிவிட்டு, கருணாநிதி இன்று டில்லி வந்து சேர்ந்திருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நாள் கனிமொழி சிறைவாசம் செய்ய நேரிட்டால், ஏற்கெனெவே கனிமொழி சொல்லியிருந்தது போல "மனம் திறந்து பேச நிறைய இருக்கிறது" என்று எல்லாம் வெளியே வந்துவிடுகிற வாய்ப்பு அதிகம் என்பதால் கூட, கலக்கம் அதிகமாக இருக்கலாம்! ரெண்டு பெண்டாட்டிக் காரன் திண்டாட்டம் எவ்வளவு கொடுமையானது என்பது இப்போதுதான் ஒருவாறாகப் புரிகிறது!

நேற்றைக்கு மன்மோகன் சிங் கொடுத்த விருந்தில் காரம் மணம், சுவை எதுவுமில்லாமல் சப்பென்று இருந்தது என்று சொல்கிறார்கள்! அதைப் பற்றிய விவரங்களை நாளைக்குப் பார்க்கலாம்! சோனியாவும், டி ஆர் பாலுவுக்கு தனது பக்கத்திலேயே இடம் கொடுத்து திமுகவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்.



கனிமொழிக்கு ஜாமீன் அளிக்க மறுத்து, நீதிமன்றக்காவலில் வைத்தது, திஹார் சிறைக்கு அனுப்பியது சட்டப்படி தவறு என்ற வாதத்தை முன் வைத்து இன்றைக்கு டில்லி உயர்நீதி மன்றத்தில் கனிமொழியின் சார்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நீதி மன்றத்துக்கு ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரமில்லை என்ற வாதம் எழுப்பப் பட்டிருக்கிறது. கனிமொழி, இப்போது  நீதிமன்றக் காவலில் மட்டுமே இருக்கிறார்! குற்றத்துக்கு தண்டனைவிதிக்கப்பட்ட கைதியாக அல்ல. கனிமொழியின் மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது.



இன்று திங்கட்கிழமை ஊழலில் ஆதாயம் அடைந்த மூன்று நிறுவனங்களின் நிர்வாகிகள் ஜாமீன் மீதான விசாரணை முடிந்து அவர்களுக்கும் ஜாமீன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மறுக்கப் பட்டிருக்கிறது. இந்த ஐந்துபேரில், பிபரா என்ற ஒருத்தர் மட்டுமே வெளியில், அவரும் இப்போது திஹாருக்குப் போகவேண்டும்!சினியுக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மொரானி, இதுவரை மருத்துவக் காரணங்களைச்  சொல்லி முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பத்து இதுவரை வெளியே இருந்தார். சிபிஐ நீதிமன்றத்தில் இன்றைக்கு அதுவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மொரானி திஹார் சிறையில் இருந்தபடியே சிகிச்சையைத் தொடர்ந்து பெறலாம் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.


கருணாநிதி கனிமொழியை சந்தித்திருக்கிறார்.இதில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை! ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து சால்வை அழகர்  கண்டனூர் பானா சீனா கருணாநிதியைப் போய் சந்தித்திருக்கிறார்! நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் காங்கிரசுக்கு நிறையவே அனுபவம் உண்டு என்பதால் என்ன பேசினார்கள் என்பது கூட முக்கியமில்லை! கருணாநிதி சிதம்பரம் சந்தித்ததை முக்கியமானது என்று சொன்னதோடு, இரவு எட்டு மணிக்கே சென்னைக்கு விமானத்தில் புறப்படுவதாக இருந்ததை ரத்து செய்துவிட்டாராம்!

நிரா ராடியாவுடன் இரண்டுவருடங்களுக்கு முன்னால் கனிமொழியின் தாயார் ராசாத்தி என்ற தர்மாம்பாள் பேசிய ஒளிப்பதிவை இந்தச் சுட்டியில் கேட்பதோடு அதன் ட்ரான்ஸ்க்ரிப்ஷனையும் இந்தச் சுட்டியில், சும்மா ஒரு ஞாபகத்துக்காக!


சத்தமே இல்லாமல், வோல்டாஸ் நிலத்தை ராசாத்தி பினாமி பெயரில் வாங்கினார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ , அப்படி சொல்லப்படுவதில் சாரமில்லை என்று மூடிவிட்டதைப் பார்த்தால், இரவுக்கு ஆயிரம் கண்கள்........!

அப்படித்தான் சொல்ல வேண்டுமோ?

காலையில் விக்கிலீக்ஸ்! மாலையில் வக்கீல் நோடீஸ்! இந்தக் கூத்தையும் பார்த்து சிரிச்சுடுங்க...!

இந்து மன்னிப்பு கேட்க வேண்டும்: தயாநிதி
திமுக பற்றி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தான் கூறியதாக தெரிவிக்கப் படும் விக்கிலீக்ஸ் செய்திகளை பிரசுரித்தமைக்கு ஆங்கில நாளேடான இந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். 
தயாநிதி மாறன்
இல்லையெனில் 5 கோடி ரூபாய் கேட்டு தான் மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 


இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இந்தியா தலையிடாவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக நேரிடும் என்று கூறும் 2008 அனைத்துக் கட்சித் தீர்மானம் அன்றைய முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடகம், மற்றும் திமுகவில் ஊழல் மலிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றெல்லாம் தயாநிதி மாறன் 2008 நவம்பரில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக 

விக்கிலீக்ஸ் இந்து நாளேடு இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அது குறித்து தன் வழக்கறிஞர் மூலம் அனுப்பியுள்ள தாக்கீதில் தயாநிதி மாறன் அச்செய்தி பற்றி தன்னிடம் விளக்கம் கேட்காமலும், எதையும் உறுதிப்படுத்தாமலும் வெளியிடப்பட்டிருக்கும் அக்கட்டுரைகள் பொதுமக்கள் மத்தியில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், எனவே வருத்தம் தெரிவிக்காவிட்டால் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 


நவம்பர் 2008ல் அமெரிக்க தூதரக அதிகாரியான கான்சல் ஜெனரல் ஆண்ட்ரூ சிம்கின்னை சந்தித்துப் பேசியபோது திமுக தலைவர் கருணாநிதியின் மருமகன் மறைந்த முரசொலிமாறனின் மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. 


இந்து நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்று, நவம்பர் 2008ல் கான்சல் ஜென்ரல் ஆண்ட்ரூ சிம்கின்னை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியது பற்றிய விக்கிலீக்ஸ் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. 


அச்சந்திப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில் அக்டோபர் 14 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட எம்.பிக்கள் பதவி விலகுவதாக எச்சரிக்கும் தீர்மானமே, மாநிலத்தில் எழுந்திருந்த கடும் மின்சாரப் பற்றாக் குறையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை திசைதிருப்ப நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம்தான், ஆனால் மத்திய அரசை மிரட்ட அவ்வாறு முயன்றது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்று தயாநிதி மாறன் கூறியதாக சிமிகின்னின் கேபிள் தெரிவிக்கிறது. 


அனைத்துக் கட்சித் தீர்மானம் அக்டோபர் 28க்குள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் எனக்கோரியிருந்தது. ஆனால் அக்டோபர் 26 அன்று சென்னை வந்து கருணாநிதியை அன்றைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து ஒரு சில முன்முயற்சிகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தவுடன் கருணாநிதி பதவி விலகல் முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 40 ஆண்டுகாலப் பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிடமுடியாது என்றும் கருணாநிதி கூறினாரெனவும் சிம்கின்னின் கேபிள் குறிப்பிடுகிறது. 


ஆனாலும்கூட அனைத்துக் கட்சி தீர்மானத்தால் எழுந்த கோபத்தின் விளைவாய்தான் சோனியா காந்தி கருணாநிதியின் மகள் கனிமொழியை அப்போது சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் மாறன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தக்க தருணத்தில் காங்கிரஸ் திமுகவிற்கு பதிலடிகொடுக்க்க்கூடும் என்று மாறன் அஞ்சியதாகவும் அக்கேபிள் தெரிவிக்கிறது.


தவிரவும் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு முடிவுகட்டவேண்டும் என்று நினைப்பதாகவும், அத்தகைய சிந்த்னை காங்கிரசிற்கும் திமுகவிற்குமிடையே மோதலை ஏற்படுத்தியதாகவும் மாறன் மேலும் விளக்கியிருந்ததாக அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.   

நன்றி!  பிபிசி செய்திகள்....இணையதளம்




2 comments:

  1. தயாநிதி மாறன் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டார் போல தெரிகிறது. அவர் மனைவி தி ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்ற வகையில், அவரே இந்த செய்தியை வெளியிட செய்திருப்பார் என்பதற்கு வாய்ப்பு உண்டு!

    ReplyDelete
  2. தாமிரபரணி என்ற பெயரில் வெட்டிப் பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்கும் நண்பருக்கு,

    கமென்ட் பெட்டி மேலேயே, தங்களை ஒரு அளவுக்காவது அடையாளம் காட்டிக் கொள்ள தைரியம் இல்லாதவர்கள் பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் என்ற வரி இருக்கிறது.வேறு உருப்படியான வேலை இருந்தால் அதைப் பாருங்கள்.

    திரு.பந்து!

    ஏற்கெனெவே தெரிந்த விஷயம் தான்

    கேடி சகோதரர்கள் வியாபாரிகள் மட்டுமே! அரசியல்வாதிகள் இல்லை. அரசியலை தங்களுடைய வியாபாரத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பயன்படுத்த எந்தவிதமான வழிமுறையையும் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்கள் என்பது கடந்த காலங்களில் பலமுறை மிகக் கொடூரமாகவே நிரூபிக்கப்பட்ட விஷயம். இப்போது கூட, ஒருவார காலமாக, கேடி சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவிவிடுவார்கள் என்ற செய்தி பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

    http://www.dnaindia.com/bangalore/report_marans-may-further-fracture-family-rift-split-dmk-join-congress_1544160

    ஆனால் அது இப்போதைக்கு, வெறும் தம்பட்டம் தான் என்று எனக்குப் படுகிறது.நிஜமாகிவிடலாம் என்று கருணாநிதி குடும்பத்தை check இல் வைக்க செய்யப்படும் முயற்சியாகக் கூட இருக்கலாம்! காலையில், விக்கிலீக்ஸ் மாலையில் மான நட்ட வழக்கு என்று வக்கீல் நோடீஸ் எல்லாம் கொஞ்சம் வேடிக்கையான விஷயமாகத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!