தேர்தல் ரவுண்ட் அப்! 2011-அறிமுகம்........!



தமிழ்நாட்டில் அம்மா பதவி ஏற்றுக்  கொண்டுவிட்டார்! புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் என்று இன்னொரு காங்கிரஸ் சிதறல் ஆட்சியைப் பிடித்து, என் ரங்கசாமியும் முதல் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார். கேரளாவில் நூலிழையில் மட்டுமே (வெறும் 0.89% வாக்குகளை மட்டும் அதிகமாக, வெறும் நாலே நாலு சீட் அதிகமாகப் பெற்று) காங்கிரஸ் ஆட்சிக்கு  வருகிறது. உம்மன் சாண்டிதான் முதலமைச்சர் என்று முதலில் சொன்னார்கள், அப்புறம் ரமேஷ் சென்னித்தலா பெயரும் போட்டியில் இருப்பதாக சொல்லப்பட்டது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு, உம்மன்  சாண்டிதான்  என்று முடிவாகி, இனிமேல் தான் பதவியேற்பு!.

 
கேரள தேர்தல்களில், இதுவரை இல்லாத அதிசயமாக, இடதுசாரி முன்னணி ஜெயித்துவிடுகிற சூழ்நிலையை அச்சுதானந்தன் உருவாக்கினார்! சொந்தக் கட்சியே அவர் ஜெயிப்பதை விரும்பவில்லை என்ற சூழ் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் நாற்பத்தைந்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது! காங்கிரசோ வெறும் முப்பத்தேட்டே தொகுதிகளில் தான்! கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை மந்திரி பதவிகள் கொடுக்க முடியும் என்ற பேரம் இன்னும் முடிவாகவில்லை என்ற நிலையில் நாலுபேரை இந்தப்பக்கம் இழுப்பது கடினமானவேலையில்லை என்றாலும் அதை செய்ய விரும்பவில்லை என்று அச்சுதானந்தன்அறிவித்திருக்கிறார்! காங்கிரஸ் மாதிரிப் பதவிப் பித்து.வெறி பிடித்த கட்சியில் எதிர்பார்க்க முடியாத ஒன்று இந்தப் பண்பு!

 
அசாமில்,நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கே திமுக சொல்லிக் கொண்ட மாதிரி, திறமையான அரசு நிர்வாகம், சாதனைகளுக்கு அஸ்ஸாம் மாநில மக்கள் தந்த பரிசு என்று அங்கேயும் சொல்கிறார்கள்! இங்கே பூதாகாரமாகக் கண் முன்னால் தெரிந்த ஊழல் அங்கே இல்லை என்பதனால், 'சாதனை' வெற்றியாகி இருக்கிறது!

 
மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி இடதுசாரிக் கோட்டையைத் தகர்த்தெறிந்த சாதனையாளராகியிருக்கிறார்! ரயில்வே அமைச்சராக இருந்து கொண்டு, தன்னுடைய அமைச்சர் பொறுப்பைக் கூட உதாசீனப் படுத்தி விட்டு, மேற்கு  வங்க அரசியலிலேயே கவனம் செலுத்திக் கொண்டு வந்தவர் மம்தா, மார்க்சிஸ்டுகளைத் தோற்கடிக்க மாவோயிஸ்டுகளுடன் கூட உறவு வைத்துக் கொள்ள அவர் தயங்கவில்லை.

 
அதிருப்தியை  விசிறி விட்டு, மம்தா பானெர்ஜி இந்த வெற்றி--இதை வெற்றி என்று உறுதியாகச்  சொல்ல முடியாது, இடதுசாரிகளின் பலவீனங்களின் மீதேறி, அதன் கோட்டையாகக் கருதப்பட்ட மாநில ஆட்சியை தகர்த்திருக்கிறார்!  அதிருப்தியை உண்டு பண்ணத் தெரிந்தவருக்கு, திருப்தியைக் கொடுக்கும் தெளிவான திட்டம் எதுவுமில்லை என்பதுதான் பரிதாபம்! மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த காலங்களைத்  தவிர, மேற்கு வங்கம் மத்திய அரசின் நிதி உதவிகளைப் பெறுவதில் மாற்றாந்தாய் மனப் பான்மையோடுதான் புறக்கணிக்கப்பட்டு வந்தது என்பதும், இன்றைக்கு, மாநில அரசு இரண்டுலட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறதென்பதும் வெளியே அதிகம் கவனிக்கப்படாத செய்திகள்.

மம்தா தீதி அந்த ஒரு விஷயத்தை மட்டும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்! காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் காட்டிய அதே பிடிவாதம் உதவாது என்பதும், மாநில அரசு கொஞ்ச காலத்துக்காவது பிரச்சினையில்லாமல் ஓட வேண்டுமென்றால், மத்திய அரசின் "தாராளம்" நிறைய வேண்டும் என்பதும் ஒரு சராசரி அரசியல் வாதிக்குக்கூடத் தெரிகிற விஷயம் மம்தா தீதிக்கும்  நன்றாகவே தெரிந்திருக்கிறது!

காங்கிரசும் அரசில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதும், சோனியா கொடுக்கும் தேதியில் தான் பதவியேற்பு என்று மம்தா அறிவித்திருப்பதும் ஒருஅரசியல் நாடகத்தின் அசிங்கமான ஆரம்பம் என்பதைத் தவிர, மம்தா பானெர்ஜியால் மேற்குவங்க அரசியலில் உருப்படியான மாற்றம் எதையும் சாதிக்க முடியாது என்று இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம். 

திரு.ராமச்சந்திர குஹா தன்னுடைய புது நூலை அறிமுகம் செய்து கல்கத்தாவில் பேசியபோது, வங்காளம் பிழைத்திருப்பதற்காவது, சிபிஎம் பதவியில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்பே அகற்றப் பட்டிருக்க வேண்டும் என்று சொன்னதைத் தொட்டு கொஞ்சம் விரிவாக எழுத உத்தேசித்திருந்தேன். என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன் என்னென்னவோ விஷயங்கள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்ததில், முடியாமலேயே போய் விட்டது!

இன்றைய தினமணி தலையங்கம்-- மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் கோட்டையைத் தகர்த்து எறிந்துவிட்டதாகக் காங்கிரசும்  அதன் கூட்டாளிகளும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் இனிமேல் தான் இருக்கிறது பிரச்சினையே என்பதை மிக சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


இனிமேல்தான் பிரச்னையே....


மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசுக்கு வாக்களித்திருப்பதன் மூலம், ஆட்சி மாற்றத்தின் மூலம் காட்சி மாற்றம் ஏற்பட்டு விடாதா என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் மேற்கு வங்க வாக்காளர்கள்!

 மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணியினரின் ஆட்சி 1977-ல் அமைத்ததே எதிர்பாராத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.

அவசரநிலைச் சட்டமும் நெருக்கடி நிலைமையும் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும், கோபத்தையும் காங்கிரசு க்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்த நேரம் அது. 1977 பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அப்படி ஒரு கூட்டணி அமையாமல் போனால், வாக்குச்சிதறல் ஏற்பட்டு அது காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகிவிடக் கூடும் என்று பயந்தனர்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில், ஜனதாக் கட்சிக் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் கோரிய இடங்கள் 120 மட்டுமே. ஜனதாக் கட்சி அதற்கு உடன்பட்டிருந்தால் ஒரு வேளை ஜனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் 1977-ல் அமைந்திருக்கக் கூடும். ஆனால், இடதுசாரிக் கட்சிகளுக்கு 120 இடங்கள் ஒதுக்குவதுகூட அதிகம் என்று ஜனதாக் கட்சித் தலைவர்கள் கருதியதால், இடதுசாரிகள் தனி அணி அமைத்து ஜோதிபாசு தலைமையில் போட்டியிட்டனர்.

1977 தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மட்டுமல்ல, ஜனதாக் கட்சிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 20 இடங்களில் மட்டுமே காங்கிரசும், 29 இடங்களில் ஜனதாக் கட்சியும் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர, இடதுசாரிக் கூட்டணி தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

 1977-ல் ஜோதிபாசு தலைமையில் ஆட்சியில் அமர்ந்த இடதுசாரிக் கூட்டணி, 34 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பதவியிலிருந்து அகற்றப் பட்டிருக்கிறது. அதுவும் 56 வயதான மம்தா பானர்ஜி என்கிற பெண்மணியிடம், ஜோதிபாசு, பிரமோத் தாஸ்குப்தா, ஹரேகிருஷ்ண கோனார், பினாய் சௌதரி, சித்தா பாசு, திரிதீப் சௌத்தரி, இந்திரஜித் குப்தா, பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி போன்ற மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்களால் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்ட கோட்டை தகர்க்கப் பட்டிருக்கிறது.

இடதுசாரிக் கூட்டணியின் வெற்றிக்கு எதெல்லாம் அன்று காரணிகளாக இருந்தனவோ அவையெல்லாம் அந்தக் கூட்டணியின் வீழ்ச்சிக்கும் காரணிகளாக அமைந்திருப்பதுதான் வேடிக்கை. இடது சாரிக் கூட்டணியின் செல்வாக்குக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவை முதலில் நிலச்சீர்திருத்தம்! இரண்டாவதாக, பஞ்சாயத்து அமைப்புகள்!

பெரு நிலச்சுவான்தார்களின் கைகளில் இருந்த விளைநிலங்களை, "உழுபவனுக்கே நிலம்' என்கிற சட்டத்தின் மூலம் பகிர்ந்தளித்து, கிராமப்புற விவசாயிகளின் வாழ்வில் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆரம்ப காலங்களில் ஒளியேற்றியது. நாளாவட்டத்தில், சிறு சிறு விவசாயிகளால் முறையாக விவசாயம் செய்ய முடியாமலும், விவசாயம் லாபகரமாக இல்லாமல் போனதால் அவர்கள் வாழவும் முடியாமல் விவசாயத்தைக் கைவிடவும் முடியாமல் போனது. அது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிக் கூட்டணியின்மீதான வெறுப்புக்குக் காரணமாகி இருக்கிறது.

இடதுசாரிக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றபோது இந்தியாவின் மொத்த தொழில் உற்பத்தியில் 10% மேற்கு வங்கத்தின் பங்காக இருந்ததுபோக, இப்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு அது 5%-க்கும் குறைவாகி இருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற விரும்பிய முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, சிங்கூரிலும், நந்தி கிராமிலும் தொழிற்சாலைகள் அமைக்க நிலங்களைக் கையகப் படுத்த முயற்சித்தபோது, விவசாயிகள் வெகுண்டெழுந்தனர். எந்த விவசாயிகளுக்கு நிலச்சீர்திருத்தத்தின் மூலம் இடதுசாரிக் கூட்டணி மரியாதை தேடிக் கொடுத்ததோ, அதே விவசாயிகள் இப்போது இடதுசாரிகளுக்கு எதிராக வாக்களித்திருக்கும் அவலம் அரங்கேறி இருக்கிறது.

 பஞ்சாயத்துகளை இடதுசாரிக் கூட்டணி அரசு வலுப்படுத்தியது. அதிகாரப் பகிர்ந்தளிப்பு நிஜமாகவே மேற்கு வங்கத்தில் உறுதி செய்யப் பட்டது. முதல் பத்து ஆண்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறையாக, ஏன், சிறப்பாகவே செயல்பட்டன. அதற்குப் பிறகுதான் சோதனைக்காலம் தொடங்கியது.

உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அமைச்சரவைவரை மார்க்சிஸ்ட் கட்சியின் இரும்புப் பிடி இறுகியது. போதாக்குறைக்கு, நிர்வாகம், காவல் துறை என்று எல்லா தளங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி அனுதாபிகளும் நியமிக்கப்பட்டபோது, சாதாரண பொதுஜனம் எரிச்சலடைந்தனர். ரேஷன் கடையிலிருந்து, காவல் நிலையத்திலிருந்து எங்கு பார்த்தாலும் கட்சித் தொண்டர்களின் பிடியில் எனும்போது, அவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கவோ, பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணவோ யாருமில்லாத நிலைமை.

இப்படிப்பட்ட சூழலில்தான், இடதுசாரிக் கூட்டணியைப் பதவியிலிருந்து இறக்குவதுதான் தனது ஒரே குறிக்கோள் என்று மம்தா பானர்ஜி கிளம்பிய போது, மக்கள் மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்து அவரை ஆட்சிக் கட்டில் அமர்த்தி இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் ஏழாவது முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் மம்தா பானர்ஜியை எதிர்நோக்கும் சவால்கள் ஏராளம். புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது சாரிக் கூட்டணி அரசைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது என்பதைத் தனது அரசியல் வியூகமாக்கித் தேர்தலில் வெற்றியும் பெற்று ஆட்சியையும் கைப்பற்றி இருக்கிறார் அவர். இடதுசாரிகளுக்கு ஏற்பட்டதுபோலவே, அவருக்கு வெற்றி தேடித் தந்த அதே காரணிகள் வருங்காலத்தில் அவருக்குச் சவாலாகவும் மாறக்கூடும்.

சிங்கூரிலும், நந்திகிராமிலும் போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜியை நம்பித் தொழிலதிபர்கள் மேற்கு வங்கத்துக்கு வர முற்படுவார்களா? அப்படியே வந்தாலும் மம்தாவால் விவசாயிகளை நிலம் கையகப் படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா?

மாவோயிஸ்ட்டுகளுடனான அவரது தொடர்பு, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட மம்தாவுக்குத் தடையாக இருக்காதா? இப்படிப்பட்ட சூழலில் மம்தா பானர்ஜி எப்படி மேற்கு வங்கத்தில் பொருளாதார வளர்ச்சியை உறுதிப் படுத்தப் போகிறார்?


இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி விட்டார், சரி.



இனிமேல் தான் மம்தா பானர்ஜிக்குத் தலைவலியே தொடங்கப் போகிறது.........

அப்படியே இந்த செய்தியையும் படித்து விட்டு  மம்தா பானெர்ஜி என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்!

"மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. மே.வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 294 எம்எல்ஏக்களில் 102 பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதிலும் 75 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், திருட்டு வழக்குகளில் கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.  திரிணாமுல் கட்சியில் மொத்தம் உள்ள 183 எம்எல்ஏக்களில் 69 பேர், காங்கிரசில் 17 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

காங்கிரசுக்கு  இந்த மாதிரியான கூட்டாளிகள் தான் கிடைப்பார்கள்!



...விரட்டும் மாடு காங்கிரஸ் பக்கமும் திரும்புமா?

கேரள உம்மன் சாண்டியும் அஸ்ஸாம் தருண் கோகாய் இருவரும்  புதன்கிழமை பதவியேற்க, மம்தா பானெர்ஜி, காங்கிரசுக்கு மஞ்சள் தண்ணீர் தெளித்து,  அரசிலும் பங்கேற்க சம்மதம் வாங்கி, சோனியா கொடுத்த 21 ஆம் தேதியும் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் அப்டேட்   





 

 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!