இட்லி வடை பொங்கல்! #66 பாகிஸ்தானுக்கு பதிலடி! #அசுரன் இன்னொரு பார்வை! இப்போது வாசிப்பில்!

காஷ்மீரில் கடும்பனி நிலவுவதை பயன்படுத்தி பாகிஸ்தானில் சிறப்புப்பயிற்சி பெற்ற தீவீரவாதிகள் கேரன் செக்டாரில் குப்வாரா பகுதியில் ஊடுருவியதைக்  கண்டுபிடித்த நமது நாணுவத்தின் சிறப்புப்படை கமாண்டோக்கள் ஐந்து தீவீரவாதிகளைக் கொன்றனர். நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணமடைந்தனர் என்ற செய்தியை சென்ற ஞாயிற்றுக்கிழமை வாக்கில் படித்திருக்கலாம். மார்பளவுக்கு உறைபனியில் தீவீரவாதிகளோடு நேருக்குநேர் hand to hand combat வகையிலான மோதல் அது என்பதை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் விவரித்த வீடியோ மற்றும் செய்தியை இரண்டுமூன்று நாட்களுக்கு முன் வாசித்தேன். நமது வீரர்கள் உயிரிழப்புக்குப் பதிலடி தருகிற விதத்தில் நேற்றைக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லியமான பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானிய ஆயுத கிடங்கு, தீவீரவாதிகளைப் பயிற்றுவிக்கிற நிலைகள் தகர்க்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. தாக்குதல்களை drone வழியாகப் படம்பிடித்து இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஊர் உலகம் முழுதும் கொரோனா தொற்றால் அலறிக்  கொண்டிருக்கிற நேரமாக, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஏவுகிற வேலைதான்  மிகவும் முக்கியமாக இருக்கிறது என்பது ஆகப் பெரிய பரிதாபம்! ஒரு 12 நிமிட வீடியோ செய்தித்தொகுப்பு இங்கே 


இங்கே இந்த ட்வீட்டர் செய்தியில் 53 வினாடி வீடியோவைப் பார்க்கலாம். 



 

பாகிஸ்தானிய ISIயின் செய்திப்பிரிவு வேறுவழியில்லாமல் பதிலடி வாங்கிக் கொண்டதை ஒப்புக் கொண்டு தொடர்ச்சியாக 3 ட்வீட்டர் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. திருந்த மாட்டார்கள்! 


உயிர்த்தியாகம்  செய்த  நமது வீரர்களுக்கு அஞ்சலி செய்வோம்! உங்கள் தியாகத்தை தேசம் என்றும் மறவாது.


வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமானதுகூட மறந்துபோய்விட்ட நேரமாகப் பார்த்து இந்தப்படத்தைப்பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை முகநூலில் பார்த்தேன்.

Saravana Kumar பெறுநர் 

அசுரன் படம் பார்த்த உடனே எழுதத் தோன்றியது...

நோட்ஸில் எழுதி வைத்தது. இன்று தான் கண்ணில் பட்டது.

"நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூவா இருந்தா புடிங்கிக்குவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்"

- அசுரன் பட கிளைமாக்ஸ் வசனம்.

இன்றைய சமூகத்தில் யாரெல்லாம் அந்த சிதம்பரம்?

1. ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து கல்வியைக் கொழுகொம்பாய்ப் பற்றி சாதி வெறுப்பைக் கடந்து, நீந்தி அவமானங்களை முதலை போல் ஜீரணம் செய்து, தான் அந்த சமூக சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் 'நானும் மனிதர்களில் ஒருவன், எனக்கான இடம் இங்கே உண்டு, எனக்கு அது வேண்டும், யார் தடுத்தாலும் முடியாது' என்று எதிர்நீச்சல் போட்டு நிலைநாட்டிய எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சாதனையாளர்கள்

2. 'உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா காத்தடிக்குது' என்ற நிலையில், சட்டப்பூர்வமாக எதைச் செய்தும் தொழிலின் மூலமும் அடுத்த நிலைக்கு மேம்பட முடியாத கையறு நிலையில் இருக்கும் பலப்பல இடைசாதி மக்களின் வீடுகளில் இருந்து வந்து அதே கல்வியைக் கொழுகொம்பாகப் பற்றி 'இங்கே எனக்கும் ஒரு பங்குண்டு, அதை நியாயமாக எடுத்துக் கொள்ள உரிமையுண்டு' என்று வாழ்க்கைக் களம் காணும் அவர்களின் பிள்ளைகள்

3. "நீ கலக்கலைன்னா உங்க தாத்தன் கலக்கியிருப்பான்" என்ற ஆடு - ஓநாய் கதை போல அரசியல் நோக்குடன் வார்த்தெடுக்கப்படும் சாதி பழிவாங்கல் வன்மத்தால் பாப்பான் பாப்பாத்தி என்று சில முன்னோரின் தவறுகளுக்காக வசை பாடப்பட்டு பல அக்ரஹாரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கல்வி ஒன்றே கொழுகொம்பென்று பற்றி பிறந்த மண்ணில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமக்கான வாழ்க்கைப் பாதையை மாற்றியமத்துக்கொண்ட ஒவ்வொரு பாப்பானும் பாப்பாத்தியும் அம்பியும்

மேலே சொல்லப்பட்ட அசுரன் பட வசனத்தில் மூன்றாம் வரியை பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எல்லா பெற்றோரும் சொல்வது தான். முதல் இரண்டு வரிகள் எல்லோர் கண் முன்னே இருந்த, உணர்ந்த உண்மைதான்.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளில் கண் முன்னே இருந்தும் யாரும் பேசாத கவனிக்காத விஷயங்களை பகுத்து உண்மையை வெளிக்கொணர்வது போல வெற்றிமாறன் முதல் இரண்டு வரிகளையும் படத்தில் அழகாக வடித்துள்ளார்.

மேலே எழுதியதைப் படித்ததும் 'ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதாகவும் ஒடுக்குவோர் ஒடுக்கிக் கொண்டே இருப்பதாகவும்' நினைப்போருக்கு எட்டிக்காய் அல்லது பச்சைமிளகாய் கடித்தது போலிருக்கலாம். நான் பொறுப்பல்ல...

Paulo Freire — 'The oppressed , instead of striving for liberation, tend themselves to become oppressors.' - இதுதான் இன்றைய நிதர்சனம்.

தமிழாக்கம்: பாவ்லோ ஃப்ரெய்ரே - ஒடுக்கப்பட்டோர் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்கு முனையாமல் தாங்களே ஒடுக்குவோராய் மாற எத்தனிக்கிறார்கள்

இது உண்மையில்லை என்று ராமசாமியைத் தூக்கிக் கொண்டு வருவோருக்கு - முடிந்தால் இது தவறென்று சான்றுகளுடன் 'பகுத்தறிவு'க்கு எட்டும் வகையில் நிரூபிக்கவும். 

இந்த அடிப்படையான விஷயம் புரிவதற்கே இத்தனை நாட்களாயிற்றா? இதுதான்  என்னுடைய ஆச்சரியம், கேள்வி! கம்யூனிஸ்டுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன்! பொதுநலம் பேசுவார்கள், போராட வாருங்கள் என்றழைப்பார்கள், கலகத்தைத் தூண்டிவிடுவார்கள்! ஆட்சி கைக்கு வந்தால் என்னென்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் தன்னுடைய விலங்குப்பண்ணை நாவலில் (1945) இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாரே! "எல்லாப்பன்றிகளும் சமம்! ஆனால் சில பன்றிகள் மற்றவைகளைவிட அதிகசமம்!" இங்கே ஆண்டஜாதி குறித்த சர்ச்சைகளை கூகிளில் தேடினீர்களானால் நிறையவே காறித்துப்பும்.

 

கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்ப் படுத்திக் கொண்டிருப்பதை மேலே போகன் சங்கர் பகடி செய்வதாக எழுதிக்கலக்கிக் கொண்டிருப்பதே சாட்சி. இந்த வாசிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்போன்றவர்கள் பாடு உண்மையிலேயே திண்டாட்டம் தான்! இன்று மீள்வாசிப்பாக எடுத்துக் கொண்டபுதினம் ORIGIN டான் ப்ரவுன் எழுதியது. மேவி என்கிற விஸ்வநாத் தியாகராஜன் இந்தப்புத்தகம் வெளிவந்த தருணத்தில் வாங்கியாச்சு என்று கூகிள் பிளஸ்சில் பகிர்ந்ததைப் பார்த்து விட்டுப் போட்டிக்காக புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாசித்துவிட்டு, வாசித்து முடித்தாகிவிட்டது என்று 
பதில் பிளஸ்சில் சொன்ன 2017 ஆம் வருட ஞாபகங்களுடன்!

   
  மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!