வாசிப்பது என்பது மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவதா?

ஐந்துநாட்களுக்கு முன்னால் நா.பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் புத்தகத்துக்கு ஒரு அறிமுகக் குறிப்பாக அவரே எழுதிய எழுதியவன் கதை முன்னோட்டத்தைக் மட்டும் கொடுத்திருந்தது நினைவிருக்கிறதா? அந்தப் புத்தகத்தை வாசித்த ஒருவர் என்ன இது, தத்துவ மூட்டையாக இருக்கிறதே! வரலாற்றுத் தரவுகளே இல்லாமல் ஒரு வரலாற்றுக் கதையா என்று புலம்பி இருந்ததை ஒரு குழுமத்தில் பார்த்தேன். கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இதுமாதிரி வேடிக்கைக்காகவே சாண்டில்யன் எழுதிய கோழைச்சோழன், மூங்கில் கோட்டை இரண்டு கதைகளுக்கான வரலாற்றுத்தரவு ஒன்றிரண்டு பழந்தமிழ் இலக்கியப்பாடல்களே என்பதையும், அப்படிக் குறைவான தரவுகளையும் வைத்துக்  கதை பின்னத் தெரிந்தவனே ஒரு திறமையான எழுத்தாளன் என்பதான என்னுடைய கருத்தையும் பதிவு செய்து இருக்கிறேன். இப்படியாகத் தமிழில் சரித்திரக்கதை எழுதி வாசகனையும் திருப்தி செய்வது மெத்தக்கடினம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் வரலாற்றின் பக்கமே எட்டிப் பார்ப்பது இல்லை!


நா.பா. என்கிற தீபம் நா.பார்த்தசாரதியின் அழகான தமிழ் எழுத்துநடைக்காகவே பள்ளிநாட்களில் அவரது தீவீர வாசகனானவன் நான்! களப்பிரர் காலத்து தமிழகத்தைப் பற்றி சாண்டில்யன் எழுதிய நீலரதியைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதிய பிறகு. நா.பா.வின் நித்திலவல்லி கூட களப்பிரர் காலத்து தமிழகத்தைத் தொட்டு எழுதப்பட்டதுதானே என்று மறுவாசிப்புக்காக எடுத்துக் கொண்டு ஒரேமூச்சில் படித்து முடித்தேன். 504 பக்கங்கள் என்பது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை என்னும் படியான ஒரு எழுத்து நடை. ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த சூட்டிலேயே புத்தகமாகவும் வந்துவிட்டது.

நீலரதிக்கு அறிமுகக்குறிப்பாக எழுதியிருந்ததைப் போலவே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்பது இருண்டகாலம் என்றே அழைக்கப்படுகிறது. யாரிந்தக் களப்பிரர் என்ற கேள்விக்கு தெளிவான வரலாற்றுத் தரவுகள் இல்லை. வடுக கருநாடகர் என்றே பழைய பாடல்களில் காணக்கிடைக்கிறது. நீலரதி கிபி முதல் நூற்றாண்டில் மூவேந்தர்களையும் வென்று தமிழகத்தை ஆட்சிசெய்த அச்சுத விக்கண்டன் எனும் வரலாற்றுப்பாத்திரத்தை வைத்து எழுதப்பட்ட கதை என்றால், நித்திலவல்லி களப்பிரர் காலம் முடிகிற தருணத்தில் புனையப்பட்ட கதை. கிபி ஆறாம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலம் என்பதாக வரையறை செய்து இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் என்றால் எங்கிருந்தோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். பாலி மொழி பேசிய பவுத்தர்களை ஆதரித்தார்கள், நாத்திக மதமான சமயத்தையும் ஆதரித்தார்கள் என்பது ஒரு புறம். அவர்கள் வெளியிட்ட காசுகளில் ப்ராக்ருதமும் தமிழும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் தமிழை வெறுக்கவோ ஆதரிக்கவோ முயலவே இல்லை. ஒருசில களப்பிரர் நாணயங்களில் தமிழும் முருகனும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும் தற்சமயம் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் முடிவுகள்.        

இந்தப் புதினம் உட்பட நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள்  முழுவதுமே தமிழ் இணைய நூலகத்திலேயே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது என்பதால் கதையை விவரித்துச் சொல்லவோ, முழுநீள விமரிசனமாகவோ எழுதப்போவதில்லை. ஆனாலும் புத்தகத்துக்கு முன்னுரையாக நா.பார்த்தசாரதி எழுதியிருக்கிற சில விஷயங்கள் இதுவரை இந்தப்புதினத்தை வாசிக்காமல் இருப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும். முன்னமே வாசித்தவர்களுக்கும் கூட புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தூண்டுதலாகவும் இருக்கும் என்றே நம்புவதால் அந்த முன்னுரையை இங்கே சற்றே சுருக்கித் தந்திருக்கிறேன்.

முன்னுரை   
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன்.

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு அதன் பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில் விகடன் காரியலத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும் இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான் நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளையும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

 கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

     "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

     வேலை சூழ்ந்த வியலிடத்துக்
     கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
     செங்கோல் ஓச்சி வெண்குடை நிழற்
     றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
     பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித்
     தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
     மானம் போர்த்த தானை வேந்தன்
     ஓடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த
     கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்."
..........

.............ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிட முடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலை தான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளையநம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திர போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை.

இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி

இன்னும் ஐந்துமாதங்களில் நித்திலவல்லி தொடராக வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது என்பது ஒரு கூடுதல் தகவல். 
ப்போது பதிவின் தலைப்புக்கும்,  இங்கே குறிப்பிடப் பட்ட  மூன்று புத்தகங்களுக்கும் என்ன சம்பந்தம்.? வாசிப்பு என்பதை என்னவாக நாம் புரிந்து கொண்டு இருக்கிறோம்? மேம்போக்காக, சும்மா பொழுதுபோக்க வாசிக்கிறோமா? வாசித்ததில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய விஷயம் ஏதேனும் இருந்ததா இல்லையா என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்கிறோமா?

பனுவல் வாசிப்பு என்கிறார்களே, அதைப்பற்றி நமக்கு ஏதாவது பரிச்சயம் இருக்கிறதா?  தேர்ந்தெடுத்து வாசிப்பது நமக்குக் கைவந்திருக்கிறதா?

வாசிப்பதென்பது லேசான விஷயம் இல்லை. வாசிப்பு அனுபவம் என்பது ரசனை சார்ந்த விஷயம். வாசிப்பது, வாசிப்பு அனுபவம் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         

                    
       

1 comment:

  1. வாசிப்பது என்பது மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவதல்ல; முழுமையாக வாசிப்பதுடன் நிறைவடைய வேண்டும். நிறைவு தரும் நூல்களை வாசிக்கத் தொடங்கினால் தின்னாமல் குடியாமல் வாசிக்கத் தூண்டும்.

    www.ypvnpubs.com

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!