அன்னை பிறந்தாள்! எங்கள் அன்னை பிறந்தாள்!

பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா? அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது என்பதை யார் யாரோ சொல்லக் கேட்டதுண்டா?

  
இது ஸ்ரீ அரவிந்தாசிரமத்தின் நுழைவாயில்! தெற்குப் பார்த்த வாசல்! உள்ளே நுழைந்து வலப்பக்கம் பார்த்தால் Service Tree என்றழைக்கப்படுகிற மரத்தின் நிழலில் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை இருவரும் மகா சமாதியில் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்க முடியும். தரிசன நாட்களில் சமாதி அருகே அமர்ந்து கூட்டு தியானம் காலைவேளையில் நடக்கும். ஸ்ரீ அரவிந்தர் மோனத்தவம் செய்த மாடி அறைக்குப்போய் தரிசனம் செய்யமுடியும்! வருடத்தில் இரண்டே நாட்கள் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அறைக்குப்போய் தரிசனம் செய்கிற வாய்ப்பும் கிடைக்கும். அவ்வளவுதானா? வெறும் பிக்னிக் போய் வருகிற மாதிரி பத்தோடு பதினொன்றாகப் போகிறவர்களுக்கு மட்டும் அப்படியிருக்குமோ, எனக்குத் தெரியாது.ஆனால் ஒரு தாயைத் தேடிப்போகிற குழந்தைமாதிரி நினைத்துக் கொண்டு போகிறவர்களுடைய அனுபவமே வேறுதான்! 

தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப் பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக

      
இன்று பிப்ரவரி 21 ஸ்ரீ அரவிந்த அன்னை 
பிறந்தநாள் தரிசனநாள் செய்தி முகப்பு 

 தரிசனநாள் செய்தி 
படத்தைப் பெரிதாக்கி வாசிக்கலாம் 
   
இங்கே வாசிக்க சௌகரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். 

மேலே ஸ்ரீ அரவிந்த அன்னையின் சின்னம் இருந்தது அல்லவா! அதில் மைய வட்டத்தைச் சுற்றி நான்கு இதழ்கள்! அதைச் சுற்றிப் பன்னிரண்டு இதழ்கள்! அவை சொல்வதென்ன? தமிழிலேயே இருப்பதைப் படிக்க முடிகிறதா?


ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும்  பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று பிப்ரவரி 21 

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 

2 comments:

  1. அரவிந்த அன்னைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய சொந்தம் உண்டு. நானும் என் கணவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அங்கு சென்று வணங்கி வருவோம். என் மாமனார் வாய் புற்று நோயால் அவதியுற்ற போது, அன்னைதான் காப்பாற்றினார். என் கணவர் கனவில் அடிக்கடி அன்னை காட்சி தந்து வழி நடத்துவார்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்குகிற குடும்பமாக அறிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அம்மா!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!