பிரசாந்த் கிஷோருடைய உத்தி டில்லி தேர்தலில் எடுபடவில்லையா?

நீங்கள் இந்தப்பதிவை வாசிக்கிற நேரம், அநேகமாக டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி இருக்கும். மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்பார் என்பது ஏற்கெனெவே கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்ததுதான்! ஆனால் இன்னமும் பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம், காங்கிரசின் ஷீலா தீட்சித், 1998 இல் இருந்து 2013 வரை  தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த இடத்தில், இப்போது காங்கிரசின் நிலைமை என்ன? காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர்தல்களில் போட்டியிட்டாலும் அது மும்முனைப்போட்டியாகத்தான் இருந்ததா?

பிற்பகல் 12.32 மணி நிலவரம் 

2013 சட்டசபைத்தேர்தலில் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் AAP வெறும் 28 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. 31 இடங்களில் ஜெயித்த பிஜேபியை வரவிடக்கூடாது என்று 11 இடங்களில் மட்டுமே ஜெயித்த காங்கிரஸ் நினைத்தது. காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியை அமைத்த அரவிந்த் கேஜ்ரிவால் 49 நாட்களிலேயே ராஜினாமா செய்ய நேரிட்டது பழைய கதை. அதற்குப் பின்னால் 2015 இல் நடந்த சட்டசபைத்தேர்தலில் 9.7 % வாக்குகளை மட்டுமே பெறமுடிந்த காங்கிரசுக்கு சட்ட சபையில், ஒரு சீட் கூட இல்லை!  அடிவாங்கிக் கொண்டாவது எப்போதும் ஊடகவெளிச்சத்திலேயே இருக்கத்தவித்த அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது டிராமா பார்ட்டியும், காங்கிரஸ் வாக்குவங்கியை முற்றிலுமாகத் தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டுவிட்டார்கள். இப்போதைய நிலவரப்படி காங்கிரசின் வாக்கு சதவீதம் வெறும் 4% தான். ஆனால் பிஜேபியின் வாக்குசதவீதம் 9% வரை அதிகரித்திருக்கிறது. ஜாமியா மில்லியா, ஷாஹீன் பாக் இருக்கிற ஓக்லா தொகுதியில் பிஜேபி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை  முன்னிலை வகிக்கிறது என்ற தகவல்களை கொஞ்சம் பொறுமையாக ஆராய வேண்டும். ரிசல்ட்டுகள், புள்ளிவிவரங்கள்  முழுமையாக வரட்டும்! அதற்குமுன்னால் இரண்டு கேள்விகள்! 

பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்திகள் ஆம் ஆத்மி கட்சிக்கு கைகொடுத்ததா இல்லையா?

இரண்டுமாதங்களாகத் தூண்டிவிடப்பட்ட கலவரங்கள் போராட்டங்கள் உக்கிரமான பிஜேபி எதிர்ப்பு பிரசாரம் டில்லியில் முறியடிக்கப் பட்டு விட்டதா?

மீண்டும் சந்திப்போம்          

10 comments:

  1. ஏன் பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சவாலாக இருக்கின்றார்? எப்படி வெற்றி பெற முடிகின்றது?

    1. கல்வித்துறையை முழுமையாகச் சீரமைத்துள்ளார். எளிய மக்கள் அனைவரும் படிக்க அரசுப் பள்ளிகள் சிறப்பானது என்று தன் செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளார்.

    2. மக்கள் எதிர்பார்க்கும், மக்களுக்கு அவசியமான மின்சாரம் முதல் ரேசன் பொருட்கள் வரைக்கும் ஆம் ஆத்மி நடத்திய நிர்வாகம் ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்திற்கு உதவும்வண்ணம் இருந்தது.

    3. வாயால் வடை சுடுவதில்லை. உச்சக்கட்டமாக அனுமன் தண்டனை கொடுப்பார் போன்ற வார்த்தைகள் வந்தது. தெய்வங்களுக்கும் மக்களுக்கும் நடந்த போட்டியில் மக்கள் தான் வென்றுள்ளார்.

    4. அமித்ஷா டெல்லி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வார்த்தைகள் அனைத்தும் டெல்லி மக்களை முட்டாள் என்பது போலவே தெரிந்தது.

    5. வளர்ச்சி அரசியல் என்பது மக்களுக்குத் தேவையானதைச் செய்து முடித்து விட்டு அதன் சாதக பாதகங்களைப் பற்றிப் பேசுவது என்பதனை இனியாவது பாஜக உணர வேண்டும்.

    6. டெல்லி முழுக்க 400 கிளினிக் கேஜ்ரிவால் தொடங்கி இலவசமாக மருத்துவ வசதியை உருவாக்கினார். குடிநீர் வசதிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    7. பிரச்சாரக்கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கவே இல்லை. பத்திரிக்கையாளர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் மட்டுமே அது குறித்து தன் கருத்து என்ன? என்பதனைப் பற்றிப் பேசினார். பிரச்சாரக் கூட்டத்தில் மக்களிடம் நான் இவற்றை எல்லாம் இதுவரையிலும் செய்துள்ளேன்? இன்னும் என்ன செய்ய வேண்டும்?உங்கள் தேவைகள் என்ன? என்பதனை மட்டுமே கேட்டார். அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்திப் பேசி வாக்காளர்களின் நம்பிக்கையை எளிதாகப் பெற்றார்.

    8. மக்களுக்குத் தேவையான வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தினால் போதும். பாஜக பொருட்டல்ல என்ற நிலைக்கு மக்கள் வரக்கூடும். ஆனால் கேஜ்ரிவால், பட்நாயக் தவிரக் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகின்றது.

    9. சோனியா காங்கிரஸை கேஜ்ரிவால் அவர்களிடம் ஒப்படைத்து விடுவது சிறப்பானது. ஒரே ஒரு கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார். உடல்நலக் கோளாறு காரணமாக சோனியா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    10. பாஜக ஓட்டு எந்திரம் மூலம் வெல்கின்றது என்ற போராளிக்கூட்டம் சிறிது காலத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பத்துப் புள்ளிகளில் அரவிந்த் கேஜ்ரிவாலை ,மிகச்சிறந்த தலைவர், நிர்வாகி என்று நீங்கள் நம்ப விரும்பினால் நான் அதற்குக் குறுக்கே வரப்போவதில்லை!

      ஆனால், டில்லியில் நடக்கிற கதை வேறுவிதம் என்பதைச் கொள்வதற்காகத்தான் கேஜ்ரிவால் நவம்பர் 2013 இல் தன்னுடைய நாடாக்க கம்பெனியை ஆரம்பித்து டிசம்பர் தேர்தலில் நின்று 28 சீட் ஜெயித்து, காங்கிரசின் ஆதரவோடு 49 நாட்கள் முதல்வராக இருந்த பழையகதையை இங்கே சுருக்கமாக நினைவுபடுத்தி இருந்தேன்.

      கேஜ்ரிவாலுடைய ஏழைப்பங்காளர் வேஷம் முதற்கொண்டு இலவசங்கள் வரை எல்லாமே அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் ஷீலா தீட்சித் பயன்படுத்தியவைதான்! காங்கிரசுக்கு இருந்த வாக்குவங்கியை அப்படியே கேஜ்ரிவால் விழுங்கிவிட்டார் என்பது இன்னமும் காங்கிரஸ்காரன் எவனுக்கும் உறைக்கவில்லை!

      பிஜேபியிடம் இருக்கும் குறைபாடு ஒன்றே ஒன்றுதான்! மாநில அளவில் பிஜேபியின் முகமாகப் பரவலாக அறியப்பட்டவர் என்று எவருமில்லை. கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் பிஜேபி முந்தைய தேர்தலில் செம அடிவாங்கியது. டாக்டர் ஹர்ஷவர்தன் மிக கண்ணியமான தலைவர் என்றாலும் அவரை டில்லியில் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்காமல் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதும் ஒரு உபகாரணம்.

      மாநில அளவில் உள்ளூர்ப் பிரச்சினைகள்தான் முன்வந்துநிற்கும். அதைப்பேசுவதற்கு ஒரு பாப்புலர் முகம் டில்லி பிஜேபியில் இல்லை. பிரதமரோ அமித்ஷாவோ உள்ளூர்ப்பிரச்சினைகளைப் பேச முடியாது அப்படியும் கூட பிஜேபி தனது வாக்குகளை 9-10% வரை அதிகமாக்கிக் கொண்டிருப்பது இதைச் சுட்டுகிறது என்று நினைக்கிறீர்கள்?

      Delete
    2. EVM போராளிகளாக ஆம் ஆத்மிக் கட்சிக்காரர்கள் கூடத் தான் அதிகமாக்க கூவிக் கொண்டிருந்தார்கள்!

      என்னுடைய கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே ஜோதிஜி!

      பிரசாந்த் கிஷோர் இந்தத் தேர்தலில் கேஜ்ரிவாலுக்கு உபயோகப்பட்டாரா இல்லையா?

      மாணவர்கள் போராட்டம் அது இது என்று இரண்டுமாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் கலவரங்களின் சூடுதணியாமல் பார்த்துக் கொண்ட பிறகும் கூட பிஜேபி அதிக வாக்குகள் வங்கியிருக்கிறதே! எப்படி?

      ஷாஹீன் பாக் ஜாமியா மில்லியா பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியிலேயே பிஜேபிக்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கிறதே, எப்படி?

      Delete
    3. நான் சொல்ல விரும்புவது பாஜக விடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். இந்தியாவிற்கு மேல்தட்டு அரசியல் வேண்டாம். செயலாக்கம் தேவை தான். சீர்திருத்தம் தேவைதான். அவர்கள் கொள்கை ரீதியான செயல்பாடுகள் கூட சரியென்று என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால் மக்களை மக்களின் தேவையை கொஞ்சம் கூட எடுத்துக் கொள்ள விரும்புவதே இல்லையே. ஒரு சாதாரண கேஜ்ரிவால் செய்த சாதனைகளை மக்களின் தேவைகளை பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக கொண்டு வந்தாலே போதுமானது. எதற்கெடுத்தால் தேசபக்தி என்று வாயால் வடை சுடுவதை நிறுத்தச் சொல்லுங்க யுவர் ஆனர்.

      Delete
    4. மாற்றம் வலிகளோடு கூடியது. மாற்றத்துக்குத் தயாராக இல்லாதவர்கள் அந்தவலியைக் கடுமையாக அனுபவித்தே ஆகவேண்டும். மாற்றத்துக்குத் தயாராக்குவது ஒரு நல்ல அரசின், ஒரு நல்ல தலைவனின் கடமை! பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விட்டுப்போகிறேனே என்றிருப்பவர்களை ஏமாற்ற அதிக சிரமம் வேண்டாம் என்பதை இங்கே மாநிலக்கட்சிகள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன என்பது அனுபவம்.

      Delete
    5. //வாயால் வடை சுடுவதை நிறுத்தச் சொல்லுங்க யுவர் ஆனர்.//

      நீங்களும் நானும் சொன்னால் நிறுத்திக்கொண்டு விடுவார்களா ))

      Delete
    6. அறக்கட்டளை வைத்திருப்பவர்களை நோண்டச் சொன்னால் போது இந்தியக் கடன் பாதி தீர்ந்து விடும் யுவர் ஆனர். திமுக வில் மட்டும் 1 லட்சம் கோடி என்கிறார்கள். திக இதை விட தாண்டும்.

      Delete
    7. நம்மூரில் நீதிமன்றங்கள், நிர்வாகத்தில் இருப்பவர்கள் என்று இரட்டைச்சுமையைச் சுமந்துகொண்டு மாற்றங்களை எந்தக் கொம்பன் ஆனாலும் நீங்கள் நினைக்கிற வேகத்தில் நடத்தமுடியாதே ஜோதிஜி!

      Delete
  2. தேசிய கட்சி vs மாநில கட்சி யாகத்தான் இந்த தேர்தலை பார்க்கிறேன். என்னதான் பிஜேபி தன் வாக்கு வங்கியை உயர்த்தினால், யார் முதலமைச்சர் என்று யாரையும் முன்னிறுத்தாமல் தேர்தலை சந்தித்ததும் மோடியையும் அமித் ஷா வையும் மட்டும் முன்னுக்கு தள்ளி வாக்கு கேட்டதும் தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

    தாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று பிஜேபி ஒத்துக்கொள்வது தான் சரி. சதவிகித கணக்கு எல்லாம் தோல்வியை சமாளிக்கும் உத்தி.

    இந்த தேர்தலில் முக்கியமான விஷயம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது தான்.

    தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போனதே என்ற சந்தோஷப்படும் சிதம்பரம் போன்றவர்கள் இதில் பெரிய காமெடி பீஸ்கள்!

    கேஜ்ரிவால் ஆட்சி பற்றி அறியாததால் அது பற்றி கருத்து இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      //பிஜேபியிடம் இருக்கும் குறைபாடு ஒன்றே ஒன்றுதான்! மாநில அளவில் பிஜேபியின் முகமாகப் பரவலாக அறியப்பட்டவர் என்று எவருமில்லை. கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் பிஜேபி முந்தைய தேர்தலில் செம அடிவாங்கியது. டாக்டர் ஹர்ஷவர்தன் மிக கண்ணியமான தலைவர் என்றாலும் அவரை டில்லியில் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்காமல் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதும் ஒரு உபகாரணம்// இப்படி ஜோதிஜிக்கு எழுதிய பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறேனே! நரேந்திர மோடி அமித் ஷா இருவரும் டில்லித் தேர்தல்களை விட ஷாஹீன் பாக் போராட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசியதில் தவறேதுமில்லை. ஆனால் வாக்காளர்களுக்கு மாநிலத்தேர்தலில் மாநிலப்பிரச்சினை தான் பெரிது! இல்லையா? .


      டில்லித் தேர்தல் முடிவுகளை தேசியக்கட்சி வெர்சஸ் மாநிலக்கட்சி என்று குறுக்கிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னென்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டால், நடப்பு அரசியலின் கோளாறுகளை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கொஞ்சம் பார்க்கலாமா? 1962களில் தேசியப்பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை காட்டிய நேரு மாதிரியே மாநிலங்களிலும் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசுகளும் செயல்பட்டதற்கான எதிர்வினையாக மாநிலக் கட்சிகள் உருவாகி வளர்ந்தன. ஆக மாநிலக்கட்சிகள் ஒரு தேசியப்பார்வை இல்லாமலேயே வளர்ந்தன என்று பொதுமைப்படுத்தலாம். தேசியக்கட்சிகள் , மாநிலக்கட்சிகளுடைய வருகைக்குப் பின்னராவது மாநிலப் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தினவா என்றால் இல்லை. இந்திரா காலத்தில், மாநிலத்தில் நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குத் தோள்கொடு என்பதாகக் குறுகிப் போனது. 1977 இல் இந்திராவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜனதா கட்சி என்று ஒன்றிணைந்த மாநிலக் கட்சிகள், ஒரு சரியான தேசியப்பார்வை இல்லாத ஒரே காரணத்தால் சிதறி, 1980 இல் மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வர உதவுகிற மாதிரி ஜனதா கட்சி பரிசோதனை தோல்வியடைந்தது.

      அப்புறம் மாநிலக்கட்சியாக ஆட்சியைப் பிடித்தவை என்ன சாதித்தன என்பதைக் கொஞ்சம் பட்டியலிட்டால், சாதனைகள் கொஞ்சம்! வேதனைகள் நிறைய என்று பார்க்க வேண்டும்! உதாரணத்துக்கு, இங்கே இலவசங்களை வாரியிறைப்பதற்கு முன்னால் அதற்கான நிதியாதாரங்களை எப்படித் திரட்டுகிறார்கள் என்பதைப்பற்றி, அவர்களும் கவலைப்படுவதில்லை, இலவசங்களில் மயங்குகிற ஜனங்களும் கவலைப்படுவதில்லை. கருணாநிதி 3000-3500 பெறுமானமுள்ள இலவச டிவி கொடுத்தார். சுமங்கலி கேபிள் விஷன் வழியாக மாறன் குடும்பத்தினர் வருடாவருடம் 2400 வரை கேபிள் கட்டணமாக சம்பாதித்துக் கொண்டார்களே! அதற்கு பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித்தர எந்தமாநிலக்கட்சியாவது யோசித்ததுண்டா? இலவசங்களுக்கு பதிலாக கிராமத்தில் சோலார் மின்விளக்கு, பொதுக் கழிப்பிடங்கள், குடிநீர்வசதி இவைகளைப் படிப்படியாகச் செய்திருக்கலாமே!, செய்தார்களா? இப்படி யோசித்துப் பாருங்களேன்!

      இலவச மின்சாரம் கொடுத்தார் கேஜ்ரிவால்! சந்தோஷம்! ஆனால் மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதில்லையே! யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ஜனங்களைத் தயார்ப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. கேஜ்ரிவால் அதைச் செய்தாரா? ஒரு மாநிலக் கட்சியாக இருப்பது, பொறுப்பில்லாத்தனத்துக்கு கொடுக்கப்படும் லைசன்சாகவே இந்தியச்சூழலில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறதா?

      கொஞ்சம் விரிவாகப்பேச வேண்டிய விஷயம் இது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!