மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #7

பொதுவாக தமிழ் சேனல் விவாதங்களை உடனுக்குடன் பார்க்க எனக்கு நேரம் வாய்ப்பதில்லை. ஆங்கில சேனல் செய்திகளில் நடப்புநிலவரங்களைப்  பார்த்துக் கொண்டு, அவ்வப்போது யூட்யூப்   தளத்தில் தமிழ் சேனல்களில் கொஞ்சம் தேறுகிற மாதிரி செய்திகள், விவாதங்கள் இருக்கிறதா என்று பார்ப்பது தான்  காரணம். எந்த ஒரு செய்தியையும்  புறக்கணிப்பதில்லை. அப்படிப் பார்த்ததில் இன்று கண்ணில் பட்ட ஒரு நல்ல விவாதம் இது.



பழைய பழ. கருப்பையாவாக, இந்த வியூகம் நிகழ்ச்சியில், அவர் பேசுவதைக் கேட்பதில் வியப்பு மட்டுமல்ல, அவருடைய அரசியலைக் கூர்ந்து கவனிக்கிற விதம் வெளிப்பட்ட பேட்டி இது. குறிப்பாக மனிதர் கரூர் செந்தில்பாலாஜியை கணித்து அதை வெளிப்படையாகச் சொல்வதும் மிகவும் வித்தியாசமான எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாத பேட்டி இது. கவனத்தில் கொள்ள வேண்டிய  நேர்காணல்  இது. 

பழ. கருப்பையா சொல்வதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வலுவான எதிர்க்கட்சி என்பது வெறும் எண்ணிக்கையில் இல்லை, ஒருவரோ பலரோ, விஷயஞானத்துடன் நாடாளுமன்ற நடைமுறைகளில் பங்கு எடுத்துக் கொள்ளக்கூடியவர்களைப் பொறுத்தே இருக்கிறது என்பது முந்தைய காலங்களில் கம்யூனிஸ்டுகளும், சுதந்திரா கட்சியினரும், சோஷலிஸ்டுகளும் நிரூபித்திருக்கிறார்கள் ஆனால் இப்போதுள்ளவர்களுக்கு  அப்படி ஜனநாயகக் கடமை ஆற்றுகிற எண்ணமோ தகுதியோ இல்லை. ஸ்ட்ரைட்டாக ஆட்சி அதிகாரம், மந்திரிபதவி சம்பாத்தியங்கள் என்று மட்டுமே இருக்கையில், இவ்வளவு செலவழித்து  37 எம்பி ஜெயித்தும் ஏமாற்றம்தான் என்றால் ....?


லண்டனுக்கோ இத்தாலிக்கோ போய்விட்டதாகச் சொல்லப் பட்ட ராகுல் காண்டி இந்தியாவுக்குத் திரும்பி விட்டாராம்! வந்தவுடன் கர்நாடகா உள்ளிட்டு காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்கவிருக்கிறார் என்று செய்தி சொல்வதில் அர்த்தம் ஏதாவது விளங்குகிறதா?

பலத்த கரகோஷத்துடன் ஸ்ம்ருதி ஈரானி பதவியேற்பு
காரணம் புரியாதா என்ன? 

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவராக அனேகமாக மனீஷ் திவாரியே தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் பலமாக  எழுந்துகொண்டிருக்கின்றன. கேரளாவிலிருந்து சசிதரூர், சுரேஷ் இவருடைய பெயர்களும் முதலில் அடிபட்டாலும், ஹிந்தியில் சரளமாகப் பேசத்  தெரியாது என்ற குறையில் தள்ளுபடி செய்யப்படலாம் என்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் எம்பிக்கள் எவருக்குமே அந்தமாதிரி அபிலாஷைகள் தகுதிகள்  இல்லை போல இருக்கிறது.


நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ராகுல் காண்டிக்கு கையெழுத்திட மறந்துபோய்விட்டதாம்! 2 நிமிட வீடியோதான்! கவனித்துப்பாருங்கள்!   

        
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அஜெண்டா என்னவாக இருக்குமென்பது பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ஒருவாறாகப் புலப்பட்டிருக்கிறது. ஒரு ஆக்கபூர்வமான விவாதம், ஒத்துழைப்பு என்றில்லாமல் அவைநடவடிக்கைகளை முடிவே இல்லாத சர்ச்சைகளில் முடக்க நினைக்கும் போக்கே தெரிகிறது. பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது?     

அஞ்சறைப்பெட்டி நிரம்பி விட்டதோ?

மீண்டும் சந்திப்போம்.
  

    

4 comments:

  1. பழ கருப்பையா இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. அதிமுகவிலிருந்து மறுபடியும் திமுகவுக்குப் போனார். போன இடத்தில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையோ என்னவோ, இப்படிப்பேசியாவது அவர்களாக வெளியேற்றுவார்களா என்று நினைக்கிறார் போல!

      Delete
  2. பழ கருப்பையா நன்றாகப் பேசக்கூடியவர். நிறைய படித்தவர். இப்போ திமுகவில் இருப்பதால் அவர் அடக்கிவாசிக்கவேண்டியிருக்கிறது (திமுக சம்பந்தப்பட்டதை). அவர் கட்சியைவிட்டு வெளியில் வந்து 'திராவிடன்/தமிழன்' என்று பேசினால் அது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்! நீங்கள் சொன்னதற்குப் பதில் மேலேயே இருக்கிறதே! கவனிக்கவில்லையா? என்ன இருந்தாலும் செட்டியார் பழைய காமராஜ் விசுவாசி, இப்படித்தான் நடப்பு அரசியலில் ஒட்டமுடியாமல் கிடந்து அல்லாடுகிறார்! ஆனால் மகன் கரு.பழனியப்பன் பிழைக்கிற வழியைப் பிடித்துக் கொண்டுவிட்டார்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!