எது பொருளோ அதைப்பேசுவோம்! அரசியல் இன்று!

எல்லாப் புகழுமே இசுடாலினுக்குத்தானா? அட போங்கப்பா ! இப்படி எழுதியதை மெய்ப்பிக்கிற மாதிரியே நேற்று உதயநிதி தன்னுடைய பேச்சைக்கேட்டு (?) வாக்களித்த ஜனங்களுக்கு நன்றி சொன்ன காமெடியைப் பார்க்காமல் எப்படி, என்ன அரசியல் பேச ஆரம்பிப்பது?  


,

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கூட்டத்தில் இருந்து எழுகிற குரல்களை ரசித்து  இடையில் நிறுத்தி நிறுத்திச் சிரிக்கிறார் பாருங்கள், நடிகர் உதயநிதிக்கு நடிப்பு வரவில்லை என்றாலும் standup comedy நன்றாகவே இந்த உரையில் வந்து பொருந்தியிருக்கிறது! 

 
எனக்கு வெறும் காமெடியாக மட்டுமே தெரிந்த இந்தப் பேச்சில் சர்ச்சை ஏதாவது இருந்ததா என்ன? புதிய தலைமுறை சேனலுக்கு மட்டும் அது தெரிந்து, மனுஷ்ய புத்திரனை அழைத்து புதுப்புது அர்த்தமெல்லாம் சொல்ல வைத்திருக்கிறார்கள் என்பது சேனல்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறதோ என்ற கேள்வியின் அடையாளம்! நியாயமாக திருநாவுக்கரசரை அல்லவா அழைத்து நாங்குநேரி தொகுதியை விட்டுக் கொடுப்பது பற்றி உதயநிதி பேசியதற்கு விளக்கம், விவாதம் நடத்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதே அதிகப்படி. 

முக ஸ்டாலின் எனும் நான் என்று முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்கிற கனவை  உதயநிதி பேசினாலும் பாமக நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு முகநூலில் நக்கலாக இப்படி ஒரு உரையாடலில் கேலி செய்திருக்கிறார்.  
 
Dr. S. Ramadoss 18 மணி நேரம் 
சீதா பாட்டி, ராதாப்பாட்டி (10.06.2019)

‘‘இளமை எல்லாம் வெறும் கனவு மயம் - இதில் 
மறைந்தது சில காலம் மயங்குது எதிர் காலம்’’

ராதா பாட்டி: மாலைப்பொழுதின் மயக்கத்திலே ஒரு கனவு கண்டேன் தோழி...

சீதா பாட்டி: என்னடி... பாட்டெல்லாம் பயங்கரமா இருக்கு?

ராதா பாட்டி: அட நீ வேற அக்கா. பாட்டெல்லாம் இனிமையான பாட்டு தான். ஆனால், நான் கண்ட கனவில் வந்த விஷயம் தான் பயங்கரமானது.

சீதா பாட்டி: என்ன ராதா உளறி கொட்டுற. அப்படி என்ன பயங்கரம் கனவில் வந்தது. ஏதாவது பூகம்பம், சுனாமி வர்றது போன்று கனவு கண்டியா?

ராதா பாட்டி: இல்லை அக்கா. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது போலவும், அதில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது போலவும் கனவு கண்டேன்க்கா.

சீதா பாட்டி: அடப்போடி பைத்தியக்காரி. இது பயங்கரமான கனவு இல்லேடி. பயங்கரமான காமெடி.

ராதா பாட்டி: என்னக்கா சொல்ற...

சீதா பாட்டி: ஆமான்டி... கனவு என்பதே நிஜத்தில் நடக்காதது தான்டி. அதிலும் பார்த்துக்க நீ மாலைப்பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை ஸ்டாலின் பகலில் கண்டாரு, பின்னர் இரவில் கண்டாரு, இப்போது 24 மணி நேரமா கண்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, அவருக்கு அவரே கண்ட கனவே பலிக்கல. இப்போது நீ கனவு கண்டா பலிக்கப் போகிறது. அப்படி ஒரு கொடுமை தமிழகத்தில் நடந்துடாது. பயப்படாதே.

ராதா பாட்டி: இல்லக்கா.... அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போறதா அவங்க கட்சி ஆளுங்களே சொல்லிட்டு திரியுறாங்களே.

சீதா பாட்டி: அட நீ ஒருத்திடி. அவங்க இதை மட்டும் தானா சொன்னாங்க. நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிச்சி ராகுல்காந்தி பிரதமர் ஆகிட்டாருன்னா, ஸ்டாலின் துணை பிரதமர் ஆவாரு, ஒருவேளை ராகுல் பிரதமராக மறுத்து விட்டால் ஸ்டாலினே பிரதமர் ஆகிடுவாருன்னே சொன்னாங்களே. அதையெல்லாம் கேட்டுக் கொண்டே நாங்க ஸ்டடியா இருக்கோம். நீ சாதாரண முதலமைச்சர் கனவை கண்டுவிட்டு இப்படி அலறுகிறாயே!

ராதா பாட்டி: அக்கா.... அப்படின்னா அந்த துயரம் நடந்துடாதே?

சீதா பாட்டி: அட... எவடி இவ. எடப்பாடி பழனிச்சாமி அரசை ஸ்டாலின் கவிழ்த்து விடுவார் என்றால் அதை ஸ்டாலினே நம்ப மாட்டாரே. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட 29 மாதங்களில் 29 முறையாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், நாம முதலமைச்சராக வேண்டும்னு ஸ்டாலின் துடிச்சிருப்பாரு. ஆனால், பாருங்க அவரது யோசனையை அவரு கூட எப்போதும் இருக்கும் துரைமுருகனே ஆதரிச்சதில்லையாம்.

ராதா பாட்டி: ஏன்க்கா.

சீதா பாட்டி: என்னடி... இது கூடவா உனக்கு தெரியாது. திமுக எம்.எல்.ஏக்கள் எல்லாம் குலுக்கல் சீட்டில் வெற்றி பெற்றா எம்.எல்.ஏ ஆனார்கள்? 2016ல் திமுக ஆட்சிக்கு வந்து விடும். எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிட்டால் அமைச்சர் பதவி/வாரியத்தலைவர் பதவி வாங்கி கோடிகளை குவிக்கலாம் என்ற எண்ணத்தில் பல கோடி செலவு செய்து வெற்றி பெற்றவர்கள் தான் திமுகவினர். ஆனால், திமுகவால் ஆட்சிக்கு வர முடியாத நிலையில், முழு பதவிக்காலமும் எம்.எல்.ஏ ஆகவாவது இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆட்சியைக் கலைக்க நினைத்து சட்டமன்றமே கலைக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற பீதியில் தான் அவர்களே இருக்கிறார்கள். அவங்க எப்படிடி ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்வாங்க?

ராதா பாட்டி: அப்ப இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாதா அக்கா?

சீதா பாட்டி: அடியே... அவருக்கு குடியரசு நாளும் தெரியல.... சுதந்திர நாளும் தெரியல. எந்த நாள் எந்த மாதத்தில் வரும் என்பதும் தெரியல. பழமொழியை சரியாக சொல்லத் தெரியல. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டம் அவரிடம் வந்து ‘‘தளபதி... அடுத்த மாதம் நீங்க தான் முதலமைச்சர்’’ என்று சொன்னால் அதை அப்படியே நம்புறவர் தான் ஸ்டாலின். புரிஞ்சுதா?

ராதா பாட்டி: அடக்கடவுளே.... இப்படிப்பட்ட ஒருவர் ரசிகர் மன்றத்துக்கே தலைவராக இருக்க முடியாதே? 50 வருஷமா கலைஞர் தலைவராக இருந்த திமுகவுக்கு இவரா தலைவர்? என்ன கொடுமை இராதாக்கா?

சீதா பாட்டி: அதுக்கு நாம என்னடி செய்ய முடியும். அது திமுககாரங்க தலையெழுத்து. வரலாறு தெரிந்தவன் இதை நினைத்து வருந்துறான். பொழைக்கத் தெரிந்தவன் தளபதி நீங்க தான் அடுத்த முதல்வர்னு சொல்லி காரியம் சாதிச்சிகிறான்.

ராதா பாட்டி: திமுகவை நினைச்சா பாவமாத் தான் அக்கா இருக்கு

சீதா பாட்டி: சரி... அது இருக்கட்டும். முதல்வர் கனவை வைத்து பாட்டு பாடி தான் இந்த உரையாடலை தொடங்கினோம். இப்ப ஸ்டாலினின் உண்மையான நிலையை விளக்கும் வகையில் அதே பாடலில் உள்ள கடைசி வரியை பாடு. நாம் கலைந்து செல்வோம்.

ராதா பாட்டி: இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம்!  

கனவு காண்பதற்கெல்லாமா தடை விதிக்க முடியும்? 


இன்றைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்தி இதுதான்! வருமானவரித்துறையில் மட்டுமல்ல, ஜம்மு கஷ்மீர் வங்கியில் அரசியல்வாதிகள் ஆசியுடன் நடந்த ஊழல் முறைகேடுகளின் மீதும் நடவடிக்கை சென்ற வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்னும் தொடர்கிறது.  

எது பொருளோ அதைப்பேசுவதைவிட்டுவிட்டு எங்கெங்கோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றிலிருந்தே நமக்கும் விடிவுகாலம் என்பதை  எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.
   

2 comments:

  1. அடடா...உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்கவிட்டுட்டேனே..இல்லைனா அவர் சொன்னபடியே அவர் கைகாட்டும் ஆளுக்கு வாக்களித்திருக்கலாமே...ஹாஹா...

    ஸ்டாலின் வரும் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளரை நிறுத்தி, வெற்றி பெற்று, கடைசியாக இன்னும் ஒருவர் இருந்தால் 'முதலமைச்சர்' நாற்காலியில் உட்கார்ந்துவிடலாம் என்று நினைக்கும்போது, சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அதற்குள், அதிமுகவுக்கு சசிகலா தலைமை வந்துவிடுமோ?

    ReplyDelete
    Replies
    1. உதயநிதி பேச்சைத்தான் வீடியோவாகத் தந்திருக்கிறேனே நெல்லை! கொஞ்சம் உசரத்துக்கு மிஞ்சின பேச்சா இல்லையா என்பதுதான் புதியதலைமுறை விவாதம்!

      சசிகலா தலைமையில் அதிமுக வருவதற்கு, முழுசாய் அழிந்துபோவதே மேல்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!