வர்ண ஜாலம்! எண்டமூரி வீரேந்திரநாத்!

வர்ண ஜாலம் இரண்டு பாகங்களாக திருமதி கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் வந்த எண்டமூரி வீரேந்திரநாத்தின் புதினத்தை மீண்டும் இப்போது எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்ததில், இடையில் மூடிவைக்க மனமே வரவில்லை.  



எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு வர்ண ஜாலம் செய்யும் இந்த எழுத்தாளர்  என்னை அந்த அளவுக்கு மயக்கி இருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் ஒரு வித்தியாசமான பார்வை, மனித மனங்களில் வெளிப்படும் உணர்வுகளைக் கூர்ந்து கவனித்துத் தன்னுடைய பாத்திரங்களைப் படைக்கும் எண்டமூரியின் கதை சொல்லும் திறமையை நான் ஒரு இருபது  வருடங்களுக்கு முன்னால் ரசித்த மாதிரியே, இன்றைக்கு மறுவாசிப்பு செய்கிற இந்தத் தருணத்திலும் கூட ரசிக்க முடிகிறது, தொய்வில்லாமல் கதையை நகர்த்திக் கொண்டுபோகிற அவருடைய வேகத்தையும், சம்பவங்களைப் பின்னும் லாவகத்தையும்  இப்போது கூட வியப்புடன் தான் பார்க்கிறேன்.

துளசிதளம், மீண்டும் துளசி இரண்டு கதைகள் தான் ~சாவி வார இதழில்  தொடராக வந்தபோது படித்தது. மற்ற எல்லா நாவல்களையும், புத்தக வடிவில் தான் சேகரம் செய்ய ஆரம்பித்தேன். பெரும்பாலானவை  சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்பில் வெளி வந்தவைதான். எண்டமூரியின் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு, திருமதி கெளரி கிருபானந்தன் எண்டமூரியின் கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்த பிறகு, அதுவும் பெரும்பாலும் பழைய திண்ணை இணைய இதழில் வெளிவந்தவைதான், கிடைத்தது.

வர்ண ஜாலம்! ( தெலுங்கு மூலம் ப்ரியுராலு பிலிசே) இந்தக் கதையை ஒரு romantic thriller என்று வகைப்படுத்தி விடலாம் தான்! ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு இடத்திலிருந்து துவங்குமாம்! உங்கள் மீது ஏற்பட்ட காதல் எப்பொழுது தொடங்கியதோ கண்டுபிடிக்கவேண்டுமென்றால் கடந்த காலத்தின் கதவுகளைத் தான் தட்டவேண்டும் என்று ஆரம்பிக்கிற ஒரு கடிதம்! ஒவ்வொரு கதையும் ஏதொவொரு இடத்தில் தொடங்கும். இந்தக் கதையை ஸ்ரீகல்யாணியிடமிருந்து தொடங்குவது நல்லது என்ற பீடிகையோடு கதையின் நாயகி அறிமுகம் ஆகிறாள்! இப்படி ஆரம்பிக்கிற கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மோடு நேரடியாக உரையாடுகிற மாதிரி, தங்களது எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்திக் கொண்டே போகிறார்கள். எவர் தரப்பில் அதிக நியாயம் என்று யோசிப்பதற்கு வாசகர் தன்னுடனேயே ஓர் உரையாடலைத் தனியாக ஆரம்பிக்கிற விதத்தில் கதை விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.
இப்படி ஒரு உரையாடல் நிகழுமேயானால் கொஞ்சம் தத்துவத் தேடலுக்கும் இடம் இருக்காதா என்ன?கதையின் நாயகி ஸ்ரீகல்யாணி! பெரும் பணக்காரி!  வாழ்க்கையில் பணம் என்னென்ன மாயம், புரட்டு, கொலைபாதகம் செய்யும் என்கிற யதார்த்தம் தெரிந்த தொழில் அதிபரும் கூட!  கதாநாயகன் கார்த்திகேயன் ஏழை! பணமில்லாததால் மருத்துவக் கல்லூரியில் படிப்பை முழுமை செய்யாத, வாழ்க்கையைக் குறித்து நம்பிக்கையிழக்காமல்,சோர்வில்லாத  நகைச்சுவையுணர்வுடன் vibrant ஆக இருப்பவன்! வேடிக்கையாக நாயகன் சொல்கிற ஒரு வார்த்தையில் இருவருக்கிடையிலான முதல் சந்திப்பே ஒரு முட்டல் மோதலில் ஆரம்பித்து,இந்த இரு துருவங்களும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்!

இடையில் அனுஜா என்றொரு மந்திரிமகள்! நாயகனுடைய ஓவியத்திறமை, நேர்மை இத்தியாதி குணங்களால் ஈர்க்கப்பட்டு அறிமுகமாகும்போது ஒரு முக்கோணக் காதல் தெரிவது வழக்கமானதுதானே என்று எளிதில் தள்ளிவிட்டுப் போகமுடியாதபடி எதிரெதிர் நிலையில் இருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும், உறவுச் சிக்கலைப் பற்றி நம்மோடு பேசிக்கொண்டே வருகிறார்கள்! Romance இருக்கிறது சரி, romantic thriller என்று  வகைப்படுத்தலாம் என்று சொன்னீர்களே, அப்படி என்ன தான் thrill இருக்கிறது?  இப்படி நீங்கள் கேட்பதாகவே வைத்துக் கொண்டு, கதை எப்படி ஆரம்பிக்கிறது என்று பார்த்தால், ஏன் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டதை இடையில் கீழே வைக்கவே முடியாது என்று சொன்னேன் என்பதும் புரியும்!

எட்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாகக் கிடந்த நாயகியின் தாய்  மாமன்  இறந்துபோகிறார். இறப்பதற்கு முன்னால் ஸ்ரீகல்யாணியை அழைத்துத் தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக, அவளுடைய அப்பா விட்டுச்  சொத்துக்களை அவள் பெயருக்கே மாற்றி எழுதிவிட்டதாக, தன் மகன் சத்யனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தழதழக்கிறார். 

இந்தத்தருணத்திலாவது ஒரு உண்மையைச் சொல்லுங்கள் என்று ஸ்ரீகல்யாணி தாய்மாமனைக் கேட்பதில் " உங்க அப்பாவைக் கொலை செய்தது நான்தானம்மா"  என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார். "சச்சிதானந்தா சாமி சத்தியமாக எல்லா சொத்துக்களையும் உன்பேருக்கே உன்பேருக்கே மாற்றி எழுதிவிட்டேன். சத்யனுக்காகக் கூட எதையும் மிச்சம் !வைக்கவில்லை"  என்று திக்கித் திணறுகிறவரை ஸ்ரீகல்யாணி இன்னும் கூர்மையான கேள்விகளால் துளைக்கிறாள்.
தெய்வத்தின் பெயரால் பயத்தை உண்டாக்கி, சச்சிதானந்த சுவாமிகளுக்குப் பணத்தாசை காட்டி, அபகரித்த சொத்தைத் திரும்ப எழுதி வாங்கிய நாடகத்தை அரங்கேற்றியதே தான் தான் என்கிறாள் ஸ்ரீகல்யாணி! மாமன் விக்கித்துப்போய் அவளை பார்த்துக் கொண்டே உயிரை விடுகிறார்!

அச்சச்சோ! வில்லனை ஆரம்பத்திலேயே இப்படிக்கு க்ளோஸ் பண்ணிவிட்டால் அப்புறம் thrill எங்கே இருக்குமாம்?

பதறாதீர்கள்! பிள்ளைப்பூச்சியாக அறிமுகமாகும் மாமன் மகன் சத்யன் எதற்கு இருக்கிறான்?

ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிற, மொழிபெயர்க்கப் பட்ட நாவல் என்கிற சுவடே தெரியாமல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்திருக்கிற கதை இது! விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை!  

அப்புறமென்ன ? படித்துப் பார்க்க வேண்டியதுதானே!

நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?

"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்...................திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "


8 comments:

  1. Replies
    1. வாருங்கள் பாபு நடராஜன்! பணம் நாவலைப் பற்றி பிறிதொரு பதிவில் எழுதலாம் என்றிருந்தேன்.காந்தி. ஹாரிகா இருவரும் மனக்கண்முன் வந்து நிற்கிறார்கள்

      Delete
  2. முதலில் நீங்கள் சொல்லியிருந்த அந்த எண்டமூரி கதையை (ராஜமுத்திரை) நேற்றுதான் படித்து முடித்தேன். இந்தக் கதையும் அந்தத் தொகுப்பில் இருக்கிறதா என்று பார்க்கிறேன். இங்கேயே லிங்க் கொடுத்திருந்தால்கூட சௌகர்யமாக இருந்திருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. அங்கே இருக்காது ஸ்ரீராம்! கொஞ்சம் தேடினால் எங்காவது கிடைக்கலாம்! இப்போது அச்சுப் பதிப்பு கிடைக்கிறதோ என்னவோ?

      Delete
    2. ராஜமுத்திரை நாவல் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியது இல்லை. பல நாவல்கள் அவர் பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டிருந்தாலும், அவற்றை தெலுங்கில் எழுதிய எழுத்தாளர்கள் வேறு யாரோ.

      Delete
    3. தகவலுக்கு நன்றி அம்மா! என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் இந்தப்பகிர்வை மீள்பதிவாக இன்று பதிவிட்டு உங்களுடைய பின்னூட்டத் தகவலையும் சேர்த்திருக்கிறேன். முன்னர் என்னுடைய பக்கங்களுக்கு வந்து முள்பாதை ஒரிஜினலாக யத்தன்னபுடி சுலோசனாராணி எழுதியது எண்டமூரியுடையது ஆலா என்ற தகவலையும் மீண்டும் ஒருமுறை அங்கே பகிர்ந்திருக்கிறேன்.
      https://suvasikkapporenga.blogspot.com/2019/04/blog-post_23.html

      Delete
  3. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் காலச்சக்கரம் நரசிம்மா கதைகள் படித்திருக்கிறீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்ரீராம்! இவர் ஹிந்து நாளிதழில் வேலை செய்தவர், சரித்திரக்கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார் என்கிறஅளவுக்கு மட்டும் தகவல் தெரியும்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!