#1150 ஒரு புதன் கிழமை! துக்ளக் 50! டொனால்ட் ட்ரம்ப்!

வருகிற 14 ஆம் தேதி துக்ளக் வார இதழின் பொன்விழா ஆண்டு துவங்குகிறது. முழுக்க முழுக்க அரசியல் விமரிசங்களையே, அதுவும் ஆளும் கட்சியை எதிர்த்து எழுதிவந்த முதல் மாதமிருமுறை இதழாகவும் இருந்தது பின்னால் வார இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கும் துக்ளக் இன்றுதான்! காலப்போக்கில் சோவுடைய சில அருமையான தொடர்கள், மகாபாரதம் என்று அரசியல் சம்பந்தமில்லாத விஷயங்களுக்கும் துக்ளக் இடம் கொடுத்தாலும், துக்ளக் இதழை வாசகர்கள் இன்னமும் விரும்பிப்படிப்பதற்கு, முக்கியமான காரணமே, அதில் வெளிவரும்  கூர்மையான அரசியல் விமரிசனங்கள் தான்! ஆசிரியர் சோ ராமசாமியின் நேர்மை மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை துக்ளக் இதழின் மிகப்பெரிய வலிமையாக இன்றும் தொடர்கிறது. இப்போது சோ ராமசாமியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். அவர் மீது பல்வேறு கருத்து வித்தியாசங்கள் இருந்தாலும் அது துக்ளக் இதழின் மீதான நம்பகத்தன்மையைக் கொஞ்சம் கூடக் குறைக்கவில்லை என்பது மிகப்பெரிய வரம், அதிசயம்! பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துக்ளக் வாரஇதழ், அதை நல்லமுறையில் நிர்வகித்துவரும் ஆசிரியர் உள்ளிட்ட குழுவுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டிய தருணம் இது. இதயபூர்வமாக் துக்ளக் இதழை வாழ்த்துவோம்!

          தேர்தல் ஜனநாயகம் என்றால்  இந்தியாவில் ஜனங்களுக்கு எப்போதும் தொந்தரவே!
இந்தவார துக்ளக் அட்டைப்படம் 
   
துக்ளக் அட்டைப்பட சித்திரம் அந்தந்த நேரத்தின் அரசியல் நிலவரத்தைப் பகடி செய்வது போல, சுருங்கச் சொல்வது! இன்று வரை மாறாமல் தொடர்கிறது. இதற்கு முன்னால் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி என்று பல வார இதழ்களெல்லாம் வெள்ளிவிழா, பொன்விழா கொண்டாடவில்லையா? துக்ளக் மட்டும் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? அந்தப்பத்திரிகைகள் எல்லாம் ஆரம்பித்த அதே குறிக்கோளோடு தொடர்ந்து இயங்குகின்றனவா? அல்லது திரிந்து போயினவா? 50 வருடங்களுக்கு முன்னால் ஆர்வத்தோடு வாங்கிப் படித்த வாசகர்கள் போலவே இன்றும் வாசகர்கள் அந்த இதழ்களுக்கு இருக்கிறார்களா? இந்த இரு கேள்விகளுக்கு விடையென்ன என்று பார்த்தாலே துக்ளக் எவ்வளவு வித்தியாசமான முயற்சி என்பது தானாகவே விளங்கும்.  
     

டொனால்ட் ட்ரம்ப்புடைய தேர்தல் வருட சாகசங்கள் உலக அமைதியை எந்த அளவுக்குக் குலைக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், இன்று  அதிகாலை ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் சொல்லிவைத்து ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அமெரிக்கப்படைத்தளங்களுக்குக் காவல் இருக்கும் ஈராக்கியப்படைகள் ஒரு கிலோமீட்டர் தள்ளியே இருக்கவேண்டும் என்ற ஈரான் எச்சரிக்கை, ஈராக்கை விட்டு அமெரிக்கப்படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக்கியர்கள் சொன்னது, மாட்டோம் என்று  அமெரிக்கத்தரப்பில் ஒரு மிரட்டலாக வெளிவந்த மறுப்பு எல்லாவற்றையும் சேர்த்துப்பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. Collateral damage ஆக சவூதி இளவரசரின் கனவான Aramco பங்கு விற்பனை முதல் கட்டத்துக்குப் பிறகு 20000 கோடி டாலர்கள் மதிப்பை இழந்திருக்கிறது. எண்ணெய் அரசியலின் மிகவும் சிக்கலான தருணம் மட்டுமல்ல இது. அமெரிக்கா இனிவரும் காலங்களிலும் முந்தைய நாட்களைப்போல் நம்பிக்கை நட்சித்திரமாக இருக்கமுடியுமா? உலகநாடுகளின் நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிற ஒரு நாடு என்னவாகும் என்ற கேள்விகளையும் எழுப்புகிற தருணமாகவும் இருக்கிறது. ஒபாமா மாதிரியே டொனால்ட் ட்ரம்ப்பும் தனது முட்டாள் தனங்களால் சீனாவுக்கு உலகின் நட்டநடுநாயகம் (Tianxia)  என்றமாதிரித் தலைமை இடத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து விடப்போகிறாரா?

மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்! உலக அமைதிக்கு வில்லனாகிறார்!  


புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என்றால் கேள்விகளின் கிழமைகளாகவே இந்தப்பக்கங்களில் இருக்கின்றன. கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்வாரைத்தான் நானும் நீண்டகாலமாகத் தேடிக்கொண்டே பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.            

2 comments:

  1. மற்ற நாடுகளின் நம்பிக்கையினால் எதையும் வாங்க முடியாது. காசே கடவுள். உலக பொது கரன்சியாக டாலர் இருக்கும் வரை அமெரிக்காவின் தேவை இருந்து கொண்டே இருக்கும். சீனாவை நாடு நாயகமாக்கப் பார்த்தால் அவர்கள் pearl chain in the sea என்று ஆரம்பிக்கிறார்கள். ஹாங்காங்கில் இருக்கும் (கிளம்பியிருக்கும்?) பிரச்சினைகளினாலும் tariff கலாட்டாவினாலும் சீனா அடக்கி வாசிக்கிறார்கள்

    இன்றைய தேதியில் அமெரிக்கா மிகப்பெரிய consumer. பல நாடுகளுக்கு அமெரிக்காவிற்கு ஏதாவது விற்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா தங்கள் கரன்சி உலக பொது கரன்சியாக இருக்கும் வரை தங்களுக்கு பிரச்சனை இல்லை என்பதால் அது மாறாமல் இருக்க எல்லா தகிடு தத்தமும் செய்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      ஒருவகையில் நீங்கள் சொல்வது சரியாகத்தோன்றினாலும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் செல்வாக்கு ஆதிக்கம் எல்லாமே குலைந்தும் வருகிறது. அமெரிக்காவின் ராணுவக்கூட்டில் இருக்கும் நாடுகள் அத்தனையும் அமெரிக்க செலவுசெய்து கொண்டிருந்த வரையில் ஒரு மாதிரியாகவும், ட்ரம்ப் வந்தபிறகு செலவினங்களை கூட்டாளிகளும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தபிறகு வேறொரு மாதிரியாகவும் நடந்து கொள்வதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

      சால்வடோர் பாபோன்ஸ் American Tianxia என்று அமெரிக்காவின் செல்வாக்கு கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருக்கிறது என்று இந்தநேரத்தில் ஒரு புத்தகம் எழுதினாரோ, அமெரிக்.காவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்துகொண்டேதான் வருகிறது. உடனடியாக சீனா அந்த இடத்துக்கு வந்துவிடும் என்று அவர்களே சொல்லவில்லை, ஆனால் 2049 ஆம் ஆண்டுக்குள் அந்த இடத்தைப் பிடித்துவிடுவோம் என்று தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள். அடுத்துவரும் முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா அடாவடிகளைக் குறைத்துக் கொண்டு எப்படி இதறநாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்பதில் தான் அமேரிக்கா தாக்குப்பிடிக்குமா என்பது தெரியவரும்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!