மண்டேன்னா ஒண்ணு! வித விதமாய் செய்திகள்!

இந்த ஜூலை மாதத்தின் முதல்நாளில் பக்தர்களுக்குக் காட்சிதர வந்திருக்கும் அத்தி வரதரை மானசீகமாக வணங்கிவிட்டு அதைப்பற்றிய ஒரு வீடியோ செய்தித் தொகுப்பை பார்க்கலாம். நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் என்ற குளத்தின் மைய மண்டபத்தின் கீழே நீருக்கடியில் ஒரு பெட்டகத்தில் இருக்கும் அத்தி மரத்தால் ஆன பெருமாள் திருமேனி, வெளியே கொண்டு வரப்பட்டு எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிற நாள் இன்று ஜூலை 1.


இதைப் பற்றி முகநூலில் நண்பர் VN கேசவபாஷ்யம் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அதே போல ஸ்ரீரங்கம் கோவில் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பகிர்ந்து வரும் விஜயராகவன் கிருஷ்ணனும் கொஞ்சம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வந்தாலும், நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை  வெளியே கொண்டுவருவது ஏன், எப்போது ஆரம்பித்தது என்ற தகவல்கள் முழுமையானதாக இல்லை. 1979 இல் இதே மாதிரி அத்தி வரதர் வெளியே கொண்டுவரப்பட்ட போது இப்போது இருக்கிற கெடுபிடி, பரபரப்பு எதுவுமில்லாமல் தரிசிக்க முடிந்தது என்றும் சொல்கிறார்கள். அறம் இல்லாத இந்துசமய அறநிலையத்துறை, இதை ஒரு வணிகநோக்கிலான விஷயமாக மட்டுமே ஏற்பாடுகளை செய்யும் என்பது தெரிந்த விஷயம் தான்! வருத்தப்படுவதைத்தவிர நம்மால் உடனடியாக வேறென்ன செய்துவிடமுடியும்?


மும்பை வாசிகளைப் பார்த்து நான் வியக்கிற ஒரு விஷயம், என்ன நடந்தாலும் தாங்கிக் கொண்டு  முடிந்தவரை இயல்பு வாழ்க்கையைத் தொடர்வது! கடும் மழை இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருந்தாலும் யாரும் இங்கே தமிழக டுபாக்கூர் போராளிகளைப் போல சமூக வலைத்தளங்களில் ஏ கேடு கெட்ட மாநில அரசே! மழையில் நனைகிற ஜனங்களை வந்து பார்க்காத நரேந்திர மோடியே! என்றெல்லாம் கூவுவதில்லை! இயற்கைக் சீற்றங்களுக்கு அல்லது விபத்தில் எவராவது இறந்துபோனால் ஒரு கோடி ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடு என்று திருமாவளவன் கனிமொழி மாதிரி ஒரு ரேட் fix  பண்ணி அறிக்கைகளில் அக்கப்போர் செய்வதில்லை. சிறுபான்மையினரை இங்கே சில அரசியல் கட்சிகள் தாங்கள்தான் பெரும்பான்மையினரிடமிருந்து காப்பாற்றுகிற மாதிரி சீன் போடுகிறவர்கள் அங்கேயும்தான் இருக்கிறார்கள்! ஆனாலும் தமிழக டுமீல் போராளிகள், அரசியல் கட்சிகள் அளவுக்கு இதிலெல்லாம் கூவுவதில்லை. ஆந்திரா, ஒரிசா மாநிலங்கள் ஒவ்வொரு வருடமும் புயல் மழையால் சந்திக்கிற சேதங்கள் அவஸ்தைகள் ஏராளம்! அங்கெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் மாதிரி மத்திய, மாநில  அரசுகளைக் குறை சொல்வதையே பிழைப்பாக, கட்டப்பஞ்சாயத்து செய்கிற மாதிரி நஷ்டஈடு கேட்டு அறிக்கை விடுகிற நாடகம் எதுவும் இல்லையே! கவனித்து இருக்கிறீர்களா?

                                                             
இசுடாலின் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான பிறகு திமுக சட்டசபைக்குப் போவதே வெளிநடப்புச் செய்வதற்காக மட்டுமே என்பது இன்று மீண்டும் ஒருமுறை அரங்கேறி இருக்கிறது. ப்பூ! இதெல்லாம் ஒரு செய்தியா என்பவர்களுக்கு  இந்த வீடியோவில் வெளிநடப்பு செய்ததற்கு காரணம் என்று ஏதோ சொல்கிறார் பாருங்கள்! ஒப்பந்தப்படி ராஜ்யசபாவுக்கு ஒரு இடம் மதிமுகவுக்கு, மீதம் இரு இடங்களில்  தொமுச கோட்டாவாக  சண்முகமும் வழக்கறிஞர் அணி / கிறித்தவர்கள் கோட்டாவாக  வில்சனும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மன்மோகன் சிங்குக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு  இம்முறை முழுதாய் அடைபட்டுவிட்டது என்பதுதான் இதில் செய்தி. 

  
வைகோ தான் மதிமுக வேட்பாளர் என்று சொல்ல முடியாதா?ஆனாலும் மாவட்ட செயலாளர்கள் (இன்னுமா இருக்கிறார்கள்?) கூடி முடிவெடுக்கிற அளவுக்கு என்ன இருக்கிறதாம்?                                                              
  
மீண்டும் சந்திப்போம்.             
       

10 comments:

  1. //இதை ஒரு வணிகநோக்கிலான விஷயமாக மட்டுமே ஏற்பாடுகளை செய்யும் // - சார்... சமீப காலங்களில் கோவிலுக்குச் செல்வதே ஒர் யாத்திரை போல ஆகிவிட்டது. அளவுக்கு அதிகமான கூட்டம் பல சமயங்களில் இருக்கிறது. அதனை ஒழுங்குபடுத்துவது, குடிநீர் மற்ற வசதிகள் செய்வது என்று நிறைய செலவுகள் இருக்கின்றன. அறநிலையத்துறை, கோவில் வரவுகளில் பணியாளர்களுக்கு எவ்வளவு % ஒதுக்குகிறது என்றும் பார்க்கணும். அதனால் இந்தச் செலவுகளுக்காக, சர்வ தரிசனம், 50 ரூ தரிசனம், தினம் 500 பேருக்கு 500 ரூபாய் தரிசனம் என்று கட்டணம் சொல்லியிருக்கிறார்கள். அதில் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

    மதிமுக கட்சி இன்னும் இருக்கா? சொந்த சின்னமே இல்லாததெல்லாம் ஒரு கட்சியா? அடுத்த கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, இப்போ மதிமுக என்று ஒரு கட்சி என எப்படித்தால் வைகோவால் சொல்லமுடிகிறதோ. அரசியல் மேக்கப்மேன் ஜோக்கர் நல்லாத்தான் கூட்டினார் கூட்டத்தை.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன்! அத்தி வரதர் என்றவுடன் ஓடிவந்து விட்டீர்களே!

      முகநூலிலும் தனிப்பட்ட தகவலாகவும் நண்பர்கள் சொல்கிற பல விஷயங்கள் HR & CE ஆசாமிகளுடைய நடத்தை மற்றும் அரசியல் சமாசாரங்கள் அவர்கள் மீதான நம்பிக்கையை சுத்தமாகவே தகர்த்து விட்டது. கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களைப் போலவே நம்முடைய வழிபாட்டுத்தலங்களும் அரசின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும் என்றே விரும்புகிறேன்.

      Delete
  2. வாட்ஸாப், செய்தித்தாள், தொலைகாட்சி எல்லா இடங்களிலும் அத்திவரதர்தான்!புதுசா ரிலீஸ் ஆனா படம் பார்க்கும் ஆர்வம் மக்களிடம்.. "நீங்க எப்போ போறீங்க? நான் நாளை மறுநாள் போறேன்" டைப் டயலாக்ஸ் எங்கெங்கும்!

    ReplyDelete
    Replies
    1. இதுவரை கேள்விப்பட்டிராத விஷயம் என்பதால் ஒரு ஆர்வம் வருவது இயற்கைதானே ஸ்ரீராம்! ஒரு நல்ல விஷயம் என்பதால் இன்று போகிறேன் அல்லது நாளைக்குப்போவேன் என்பதும் கூட மகிழ்ச்சியான ஒன்றுதான்!

      Delete
  3. மும்பை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு அவர்கள் வேலையை கவனிக்கவே நேரமில்லை. இந்த அக்கப்போர்களைப் பார்க்க மாட்டார்கள் என்று அந்த ஊர் அரசியவியாதிகளுக்குத் தெரியும் போல!

    ReplyDelete
    Replies
    1. மும்பைகர்கள் ஒருவிதத்தில் கல்லுளிமங்கர்கள் என்று கூட நான் முன்னாட்களில் நினைத்ததுண்டு ஸ்ரீராம்! குடும்பச்சுமை அவர்களுக்குப் பிரதானமாக இருப்பதால், தங்களாலெதுவும் செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் சகித்துக் கொண்டு பாராமுகமாக இருப்பது போலக் கடந்து சென்று விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

      Delete
  4. சபைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விஷயத்தை வெளியில் வந்து பகிரங்கப்படுத்துவது உரிமைமீறல் பிரச்னையாகாதா? எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்பு செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம்!

    ReplyDelete
  5. திமுகவைப் பொறுத்தவரை தங்கள் செய்வது சொல்வதுமட்டும்தான் செல்லுபடியாகவேண்டும் என்று அடாவடித்தனம் செய்கிற கட்சி! உரிமைமீறல் அது இது என்றால் எடுபடுமா?

    ReplyDelete
  6. உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்பு நல்லா சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரத மேடைக்கு வருவதுபோல, வேற ஏதேனும் முக்கிய வேலைகள் இருந்தால், ஸ்டாலின் சட்டசபைல வெளிநடப்பு செய்துவிடுகிறார் போலிருக்கு. பிரச்சனை என்னன்னா, சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் ஸ்டாலினுக்கு வெளி வேலை இருப்பதால் தினமும் வெளிநடப்பு செய்யவேண்டி வந்துவிடுகிறது. ஒருவேளை போட்டிருக்கும் சட்டை ராசியில்லை என்று நினைத்தால், அதனைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்து வெளிநடப்பு செய்கிறார். பாவம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வரியில் சொல்வதானால் வேறு வேலைவெட்டி இல்லாத நேரங்களில் மட்டுமே இசுடாலின் சட்டசபைக்கு வருகிறார்! அப்படித்தானே? :-)))))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!