ஆட்டுத்தலை+மனித உடல்! = காங்கிரஸ்+ JD(S) கூட்டணி!

கர்நாடக அரசியல் குழப்பங்களில் சபாநாயகருக்கு எந்த விதமான உத்தரவையோ வழிகாட்டுதலையோ காலக் கெடுவையோ விதிக்க  முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று நேற்றே ஒரு கோடிகாட்டப் பட்டிருந்ததையும் கவனித்தால், அதிருப்தி MLAக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் ஒரு  முடிவை எடுக்கட்டும், அதன் பிறகு அது சரிதானா இல்லையா என்பதை நீதிமன்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை தான்!  நாளை அறிவிக்கப்பட்டபடி நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படட்டும். ஆனால்  அதிருப்தி MLAக்கள் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை என்றும் சொல்லியிருப்பது  வேறு பல சுவாரசியமான ஊகங்களைக் கிளப்பியிருக்கிறது.


இங்கே அதிருப்தி MLAக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  முகுந்த் ரோஹ்தகி உச்சநீதிமன்றத்  தீர்ப்பை விள்க்குகிறார்.இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் என்றும் அவர்களை கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. ஆக ஆட்டம் கர்நாடக சபாநாயகருக்கே மறுபடி திருப்பப்பட்டிருப்பதில் சில சுவாரசியமான கேள்விகள் எழுகின்றன.

 

கர்நாடக சபாநாயகர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி மிகவும் பவ்வியமாக, அதாவது மிகுந்த கவனத்தோடு சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று நாளை அநேகமாக இந்த நேரத்துக்குள் தெரிய வரும் என்றே  நினைக்க வேண்டியிருக்கிறது.

  • DK Shivakumar, Congress on SC's verdict on Karnataka rebel MLAs case: This landmark judgement has given strength to democratic process. Some BJP friends are trying to misguide that whip is not valid but the party can issue a whip & take necessary action as per anti-defection law.
     1:12 PM · Jul 17, 2019 · Twitter Web Client    

    இது காங்கிரசின் காசுக்கார MLA  DK சிவகுமாருடைய வாதம். கட்சித்தாவல் தடைச் சட்டமே இங்கே கேலிக்குரிய ஒன்றாக ஆகிக் கொண்டிருப்பதில், இவருடைய வாதம், சட்டஞானம் எடுபடுமா என்பது முதல் சந்தேகம். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்குள் சபாநாயகர் ராஜிநாமாக்கள் மீது வடிவெடுத்து விடுவாரா? அதற்குப் பிறகல்லவா தகுதிநீக்கம் மீது தனியாக முடிவெடுக்க வேண்டும்? இது அடுத்த சந்தேகம்.

    இந்த இரண்டும் தனி டராக்கில்! நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை அறிவித்தபடி காலை 11 மணிக்கே எடுத்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது தள்ளிப்போடுவதற்கு கால அவகாசம் எந்த வழியிலாவது தேடப் போகிறார்களா? ANI செய்திக்கு வந்த பதில்களில் இது ஒன்று முக்கியமானது, அப்படி ஒரு சாத்தியம் இருப்பதையும் சொல்வதாக


  • Replying to
    Read the judgement, those MLAs are not requir ed to attend assembly, hence no violation of whip. I don't know why are not thinking to give no confidence motion on speaker, if no-confidence motion on CM is getting delayed.
    1:18 PM · Jul 17, 2019 · Twitter for Android

    இப்போதுள்ள சூழலில் அதிருப்தி MLAக்களில் சரிபாதிப் பேராவது மனம்மாறி சட்டசபைக்கு வந்து நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் மட்டுமே குமாரசாமி தலை தப்பும்! இப்போது அவர்களிடம் இருக்கிற எண்ணிக்கை வெறும் 101 மட்டுமே! எதிர்த்து வாக்களிக்க பிஜேபிக்கு 105+2 என்று 107 எண்ணிக்கை இருக்கிறது.  

    ஆயா ராம் கயா ராம்   என்று இதுமாதிரி நிறத்தை மாற்றிக் கொள்கிற வேலையை ஆரம்பித்து வைத்தது ராஜஸ்தானில் தான் என்றாலும், அதை secular காங்கிரசும் செகுலர் ஜனதா தளமும் சேர்ந்து கர்நாடகாவில் அமைத்த கூட்டணி, கட்சித் தாவலை விட இன்னமும் பெரிய அசிங்கம். நாளைக்கு என்ன நடந்தாலும் அதிக அளவில் சேதப்படப்போவது  காங்கிரஸ் கட்சி மட்டுமே!

    ஆட்டுத்தலையை மனித உடலில் ஒட்டின கதை புராணத்தில் வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் அதேமாதிரி எதிரிகளாகக் களம் இறங்கிய தேவே கவுடாவின் JD(S)  கூட்டணியும் stable ஆக இருக்கும் என்று நம்புவதுஎந்த அளவு தவறாக  இருக்கும் என்பதைக் கடந்த 14 நாத ஆட்சியே சொன்னது!

    கட்சித்தாவலைத் தடுக்கமுடியாத  கட்சித்தாவல் தடைச் சட்டம்  இருந்தால் என்ன? போனால் என்ன? இந்தக் கேணத்தனமான சட்டத்தை ரத்துசெய்து விடுவது இப்போதைக்குத் தெரிகிற ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்! 
      
    ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் முதலில் இந்தக் கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட கதை, பின்னணியைத் தெரிந்து கொண்டு பேச வரலாம்!

    மீண்டும் சந்திப்போம்.
                     

    6 comments:

    1. கட்சித் தாவல் தடை சட்டம் சிறந்த ஒன்று. இல்லையென்றால் எம்.எல்.ஏக்கள் சுலபமாக விலைக்கு வாங்கப்படலாம். நிறைய மாநிலங்களில், அரிதிற் பெரும்பான்மை வருவதில்லை. அதனால் 3ல் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் நினைத்தால் கட்சி மாறலாம் என்று சொல்லியிருப்பது சரிதான்.

      கர்நாடகாவில் ஏன் முதல்வர் கவலைப்படணும், அழணும் என்றெல்லாம் புரியலை. 'நீ ஆதரிக்கலைனா போடா' என்று சொன்னால், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைதியாக இருப்பார்கள்.

      இதில் பாஜகவின் கை உண்டு என்று எனக்குத் தோன்றுகிறது. பாஜகவும் காங்கிரஸும் இந்த விஷயத்தில் (விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பதில்) ஒன்றுதான். இருவருக்கும் மாரல் கிடையாது.

      ReplyDelete
      Replies
      1. விஷயத்தை இப்படிப் பாருங்களேன் நெ.த.!

        ஒரு கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளர் நின்று ஜெயிக்கிறார் என்றால் அங்கே கட்சிதான் ஜெயித்ததா? அல்லது வேட்பாளரா? இரண்டையும் பிரித்துப் பார்க்கிற குழப்பம் நம்முடைய தேர்தல் முறையில் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதை விட்டு விட்டு, கட்சித்தாவல் தடைச்சட்டம் தனியாக ஒரு கட்டப்பஞ்சாயத்து செய்கிறதா இல்லையா? இதற்குத் தேர்தல் விதிகளிலேயே தகுந்த திருத்தம் செய்தால், ஒரு கட்சி வேட்பாளர் இறந்தாலோ, கட்சிதாவினாலோ ராஜினாமா செய்தாலோ அந்த இடத்தில் வேறொருவரைக் கட்சியே நியமனம் செய்து கொள்ளலாம் என்றாக்கி விடலாமே! கட்சித்தாவல் தடைச்சட்டம் தனியாக எதற்கு? சொல்லுங்கள்!

        நான் இங்கே ஒரு தூண்டிலைப் போட்டு இங்கே உட்கார்ந்திருப்பதே நாட்டுக்கு என்னென்ன மாதிரி தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடி அவசியமாக இருக்கிறது என்ற விவாதத்தைத் தொடங்குவதற்காகத்தான்!

        பிஜேபி இன்னொரு காங்கிரஸ் கட்சிமாதிரி ஆனால் இப்போது காங்கிரஸ்கட்சிக்கு நேர்ந்திருக்கும் மானக்கேட்டைச் சந்திக்க வேண்டியதுதான் என்பதில் எனக்கு மாற்றுக கருத்தே இல்லை. ஆனால் பிஜேபியை எதிர்ப்பதற்கு பொருந்தாக்கூட்டணியான தேவே கவுடா காங்கிரஸ் கூட்டணிதானா வேண்டும்? ஆளுநர் இந்தக் காம்பினேஷனை அரசமைக்க அழைத்திருக்கவே கூடாது என்பது என் கருத்து.

        இப்போதும் கூட ஏற்கெனெவே ஆட்சியமைக்க முடியாத எடியூரப்பாவுக்கும் எண்ணிக்கையை இழந்த குமாரசாமிக்கும் இன்னொரு வாய்ப்பளிக்கக் கூடாது, ஜனங்கள் தெளிவடையும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால் என்ன குறைந்துவிடும்?

        Delete
      2. உதாரணம் சொல்றேன்.
        செந்தில் பாலாஜி இப்போ திமுக. அவர் இப்போ எம்.எல்.ஏ. அவர் 100 வாக்குகள் வாங்கியிருந்தார்னா அதில் 70 அவருடையது, 30 திமுகவோடது. ஆனா அவர் நின்னது திமுக சின்னத்துல. அதுனால அவர் கட்சி தாவ அனுமதிக்கக்கூடாது. அவர் எம்.எல்.ஏ டெர்ம் இருக்கும்போது, வேற கட்சிக்குப் போனா, நீங்க சொல்றது, திமுக இன்னொருவரை செந்தில் பாலாஜி இடத்தில் எம்.எல்.ஏவாக நியமிக்கணும் (தேர்தல் இல்லாம). அது எப்படி சரி? செந்தில் பாலாஜி களத்துலயே இல்லைனா, அதிமுகதான் ஜெயித்திருக்கும்.

        ஜனநாயகம் என்பது கட்சியை வைத்து என்பதால் கட்சிக்கு முக்கியத்துவம். அதுக்காக கட்சித் தலைவர் அன்ரீசனபிளாக இருக்கக்கூடாது என்பதற்காக 3ல் ஒரு பகுதி என்ற விதி.

        ஒரு அரசு ஃபார்ம் பண்ணின பிறகு, எந்தக் கூத்து நடந்தாலும் ஜனாதிபதி ஆட்சிதான் என்று சொன்னாலும், அது தவறாகிடும். உதாரணமா, 1 சீட்டில் மெஜாரிட்டி பெற்ற கூட்டணி எப்போ வேணும்னாலும் கவுந்துடும்.

        இருக்கும் சட்டமே ஓகே. இதைவிட முக்கியமான சட்டம், 2 முறைக்கு மேல் யாரும் எந்தப் பதவியிலும் இருக்க முடியாது என்ற சட்டம்தான் வேணும். அதாவது எம்.எல்.ஏ ஆக 2 தடவை, எம்.பி. ஆக 2 தடவை, பிரதமராக 2 தடவை, மு.அமைச்சராக 2 தடவை, ஒரே நபர் இருக்கலாம். ஆனால் எம்.எல்.ஏவாக 3 தடவை இருக்க முடியாது. அதேபோல, ஒரு குடும்பத்திலிருந்து என்று கொண்டுவந்தால் நல்லா இருக்கும். ஆனால் அது நடக்காது.

        Delete
      3. நெ.த! செந்தில் பாலாஜியை விடுங்கள்! அவரை மாதிரி சொந்தக் செல்வாக்கில் ஜெயிக்கிறவர்கள் மிகவும் குறைவு! அமெரிக்க ஜனநாயகத்தில் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த செனேட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்குத் தலையாட்ட வேண்டிய அவசியமில்லை, அவரை எதிர்த்தும் வாக்களிக்கலாம் என்பது ஒருவகையான செக் அண்ட் பாலன்ஸ்! அதை அப்படியே இங்கே எதிர்பார்க்க முடியாது. ஒரு கட்சி என்பதை காங்கிரஸ், திமுக மாதிரி பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்று மட்டும் பார்த்தால் உங்கள் கேள்வி நியாயமானதுதான்! multi party system என்பதே இங்கே வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் முறை அல்லது கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகள் என்பதிலிருந்து விடுபட தேர்தல் ஆணையம் கொஞ்சம் அதிகாரமுள்ள அமைப்பாக லாக்கப் பட வேண்டும்.

        ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் என்று நான் சொல்வதில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதில் இருந்து ஆரம்பித்து பொதுச்சேவைக்கு வருகிறவர்களுக்கு அரசியல் சாசனக் கல்வி, நாடாளுமன்ற நடைமுறைகளில் அறிமுகப்பயிற்சி என்று குறைந்தபட்ச அறிவு இருந்தால் மட்டுமே போட்டியிடுகின்ற தகுதி, கேபினெட் சீனியர்களுக்கு டெர்ம் லிமிடேஷன் 3 முறை எனவும் பிரதமர், முதல்வர் என்பதில் 2 முறை எனவும் வரையறை, எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக அரசின் உயர்பொறுப்புக்களில் 65 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது, கட்சிப்பொறுப்புக்களிலும் அதே மாதிரி ரிட்டையர்மென்ட் என்று நிறைய இருக்கிறது.

        Right to recall என்பது முக்கியமான அடுத்தபடி. இப்போது செய்தால் அராஜகம் மட்டுமே மிஞ்சும். எந்த ஒரு அரசியல்வாதி கட்சியாவது இதற்கெல்லாம் தயாராக இருப்பார்களென்றா நினைக்கிறீர்கள்?

        Delete
      4. //தேர்தல் ஆணையம் கொஞ்சம் அதிகாரமுள்ள அமைப்பாக லாக்கப் பட வேண்டும்// என்கிற முதல் பாராவின் கடைசி வரியை தேர்தல் ஆணையம் கொஞ்சம் அதிகாரமுள்ள அமைப்பாக ஆக்கப் பட வேண்டும்.என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.



        Delete
    2. //ஒரு குடும்பத்திலிருந்து என்று கொண்டுவந்தால் நல்லா இருக்கும். ஆனால் அது நடக்காது.//

      :))

      ReplyDelete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!