"நாடகம்" ஒருவழியாக முடிந்தது! கரு "நாடகம்"

கர்நாடக அரசியல் குழப்பங்களுக்கு ஒருவழியாக இன்று ஒரு 9முடிவு எட்டப்பட்டு விட்டது என்பதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தபோது, இது எத்தனை நாளைக்கு என்றொரு கேள்வியும் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்பார்த்தபடியே தோற்று விட்டது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிர்த்து 105 வாக்குகளும் பதிவாகி, ஆளுநரிடம் குமாரசாமி தன்னுடைய ராஜினாமாவை சமர்ப்பிப்பதற்காக, புறப்பட்டுக் கொண்டு இருப்பதையும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 
20 சமஉ க்கள் சபைக்கு வரவில்லை. மரபுப்படி சபாநாயகர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 


14 மாதங்களாக முட்டலும் மோதலுமாகத் தொடர்ந்த JDS -- காங்கிரஸ் பொருந்தாக்கூட்டணி ஒருவிதமாக முடிவுக்கு வந்துவிட்டாலும், இப்போது எடியூரப்பா தன்னுடைய அரசை எப்படி அமைக்கப்போகிறார், என்னென்ன சமரசங்களுக்கு BJP தன்னை உட்படுத்திக் கொள்ளப்போகிறது என்றெல்லாம் ஆட்டக்களம் அப்படியே மாறுகிறது. இந்தப் பதிவில் சொன்ன மாதிரி  கர்நாடக அரசியலில் இதுவரை நாலே நாலு பேர்கள் தான் முழுமையாக 5 ஆண்டுகள்+ என்று ஆண்டிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்லப்போனால், அதிலும் தேவராஜ் அர்ஸ், சித்தராமையா இந்த இருவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முழுதாக ஆட்சி செய்திருக்கிறார்கள். மற்ற இருவரும் பிட்டுப்பிட்டாக 5 ஆண்டுகளைத் தாண்டியவர்கள். கர்நாடக அரசியலை ஒக்கலிகர், லிங்காயத்துக்களே மாறிமாறி டாமினேட் செய்து வந்ததை சித்தராமையா வேறொரு சாதீயக்  கணக்கில் மாற்றிக் காட்டியிருந்தார். 


பெங்களூரு தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி தொழில்வளர்ச்சி கர்நாடகாவில் வேறெங்கும் இல்லை என்பது, எடியூரப்பா இன்று விவசாயிகளுக்கு ஆதரவான அரசை அமைப்பேன் என்று சொன்னதில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆக, ஆசைப்பட்டபடி, எடியூரப்பா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும், அது முள்படுக்கை மீது அமர்ந்திருக்கிற மாதிரித்தான்! ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுக்கிறாரா என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெளிவாகிவிடும். 

மீண்டும் சந்திப்போம்.
     
             

2 comments:

  1. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விட சொத்து சேர்ப்பதில் படு பயங்கர கில்லாடிகள் அங்குள்ள ஒவ்வொருவரும். கட்சி பராபட்சமில்லை. 500 கோடி 1000 கோடி என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள். டி சிவகுமார் பிடித்து உலுக்கினால் போதும் பணமாக கொட்டும் போல. குமாரசாமி பசை போலவே ஒட்டிக் கொண்டு என்னவொரு பிடிவாதம். இப்போது பாஜக வை விட சித்தராமையா தான் மனதிற்குள் புன்முறுவலுடன் இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி! யார் யார் சாமர்த்தியத்தையோ பாராட்டுகிறீர்கள், சரி! அது ஏன் நம்மூர் பானாசீனா சாமர்த்தியத்தை பாராட்ட உங்களுக்கு மனமே வரமாட்டேன் என்கிறது? :-)))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!